Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 10 1

꧁☆☬  லயம் – 10  ☬☆꧂

இருள் கவிழ காத்திருக்கும் சூரியனும், ஒளி கொடுக்க மேலேழும் நிலவும் ஒன்றாய் சந்திக்கும் அந்தி வேளை. தன் வாழ்வின் இருண்ட காலத்தில் இருந்து மீண்டு, வெளிச்சம் நோக்கி நடை போட்ட இளாவின் வீடு என்றும் போல் அமைதியாய் இல்லாமல் மெல்லிய பாட்டோலி கேட்டு கொண்டிருந்தது. இருளில் மூழ்கி இருக்கும் வீடு வெளிச்சத்தின் சாரலை தூவி கொண்டிருக்க, வழக்கமாய் பணி முடித்து முதலாய் வரும் மாணிக்கம் மகன் கார் தனக்கு முன்னே வந்து நிற்பதை பார்த்து ஆச்சரியத்தோடு வண்டியை பார்க் செய்து விட்டு உள் நுழைந்தார்.



Advertisement

” இன்னைக்கு தம்பி ஏன் சீக்கிரம் வந்துட்டான். தமயந்தி வேற போன் அட்டென் பண்ணலன்னு ஆபிஸ்ல கேட்டா, சாரோட வெளியே போயிட்டாங்கன்னு சொன்னாங்க. இவனும் இங்கேயே இருக்கான். அவளுக்கு எதுவும் முடியலையா ” சட்டென பதட்டம் சூழ வேகமாய் தங்கள் அறைக்கு சென்றார்.

Advertisement

அங்கோ மாறாவின் மடியில் தலை வைத்து நிம்மதியாய் உறக்கம் கொண்டிருந்தார் தமயந்தி. ” என்னடா ஆச்சு… ஏன் தூங்கியிருக்கா… ” மனைவி நெற்றி தொட முயன்றவரை, கை நீட்டி தடுத்தவன் “அம்மாவை டிஸ்டர்ப் பண்ணாதப்பா, நல்லா தூங்கி இருக்காங்க. ‘”

Advertisement

” அம்மாவா…” அதிர்ந்து விழி விரித்து அவன் முகத்தை பார்க்க, சிரித்தபடி கண் சிமிட்டினான் குறும்பாய்.

Advertisement

” எப்படா இதெல்லாம் நடந்துச்சு…..”

தன் மடியில் இருந்த தாயை மெதுவே கட்டிலில் படுக்க வைத்தவன், அவரை இழுத்து கொண்டு ஹாலுக்கு வந்தான்.

” ப்ப்பா… ” ஒன்றுமே கூறாமல் அவரை கட்டி அணைத்தவன், கன்னத்தில் வேறு அழுத்தி முத்தம் கொடுக்க, அவன் சொல்லாமலே அவன் மகிழ்ச்சியை அவரிடம் அது கடத்தி விட்டது. அவன் தோளை தட்டி கொடுத்தவர் ” ரெண்டு பேரும் சேர்ந்தாச்சா…. இனி உன் லூட்டி தாங்க  முடியாதே ” என்றார் கிண்டலாய்.

” ப்பா… ” என பொய்யாய் முறைத்தவனோ, ” தேங்க்ஸ்ப்பா ” என்றான் அடுத்த நொடியே சிரித்து கொண்டே. இடிந்து போய் அவன் ஒடுங்கி அமர்ந்திருக்க, அன்று அவர் மட்டும் அவனுக்கு உத்வேகமாக பேசி, மீட்டு இருக்கா விட்டால் அவன் வெற்றி சாத்தியமில்லையே.

” உன் அம்மா சொன்னதை நிஜமாக்க  போறீயா? என்றப்படி அவன் அருகே அமர, கோபத்தில் கொதித்து போய் பார்த்தான்.

” அவங்க சொன்னா என் அம்மா இல்லைனு ஆகிடுமா? எப்பவும் நான் அவங்க பையன் தான்… ” அழுத்தம் திருத்தமாய் அழுத்தி சொல்ல.

” உனக்கே புரியும் போது அப்புறம் ஏன் கோபப்படுற? நான் ஒன்னும் புத்தி பிசகி போய் நிற்கல, கெத்தா நின்னு ஜெயிச்சு காட்டி, உங்க பையன்னு உங்க வாயிலேயே பெருமையா பேச வைப்பேன்னு நிரூபிச்சு காட்டு. இடிஞ்சு போய் உட்கார்ந்தா, நீ தமயந்தி  பையன் இல்லை.

உன் அம்மாவுக்கு நம்பிக்கை  எல்லாம் இல்லாம இல்லை. அவளுக்கு அப்புறம் அவ கஷ்டப்பட்டு உருவாக்குன ஆடிட் ஆபீஸ்சை நீ தான் எடுத்து நடத்தனும்னு பல வருஷ ஆசை. உனக்கும் அது நல்லா தெரியும்.

அதுக்காக கோல்ட் மெடல் வாங்கி காட்டுரேன்னு ராத்திரி பகலும் படிச்சவன், எக்ஸாம் நெருங்கி வர்ற  இந்த நேரத்துல எவனையோ நம்பி திருட்டு கல்யாணம்ன்னு போய் நின்னா, அடிக்காம கொஞ்சவா செய்வாங்க. அந்த நேர கோபம் திட்டிட்டா, உன்னை திட்டிட்டு அவ மட்டும் என்ன சந்தோசமா இருக்காளா? அவளோட மொத்த சந்தோசம் நீ மட்டும் தான்டா. உனக்காக என்கிட்ட எத்தனை சண்டை போட்ருப்பா.

நான் சொன்னதையும்  கேக்காம பிரண்டை நம்பி ஏமாந்துட்ட, ராஜா கூட சொன்னான், அவன் கூட சேராதே, அவன் நல்லவனில்லை. பணத்துக்காக தான் பழகுறான்னு கேட்டியா  ., அவன் கிட்டயும் சண்டை போட்ட.

இந்த வயசுல யாரை  நம்புறது, நம்ப கூடாதுன்னு உங்களுக்கு தெரியாது, உன் பிரண்டை வச்சு தான் உன் வாழ்க்கை பாதை மாறும். இப்போ நடந்ததை ஒரு பாடமா எடுத்துக்கோ. யார்கிட்ட எப்படி, எந்த மாதிரி பழகனும்னு தெரிஞ்சிக்கோ,  விளையாட்டு பிள்ளையா சுத்திட்டு இருந்தது போதும், உனக்குன்னு ஒரு பெயரை உருவாக்கு, அதுல ராஜாவா நில்லு. எங்க சந்தோசம் அதான்.

இன்னும் ரெண்டு நாள்ல எக்ஸாம். இப்படியே இருந்தா என்னவாகும் யோசிச்சு பாரு. கோபத்துல உட்கார்ந்து உன் லைப் வீணடிக்க போறியா.,? உருவாக்க போறியா.., ? உங்க ரெண்டு பேர் கனவையும்  சிதைச்ச எல்லாதையும் தூக்கி போடு. கஷ்டத்துல நின்னு ஜெயிக்கிறவன் தான் புத்திசாலி, நீ புத்திசாலியா, முட்டாளா யோசிச்சு முடிவெடு…,” நீண்ட உரையை முடித்து விட்டு அவனை நோக்க, சற்றே தெளிந்து அமர்ந்திருந்தான்.

அதன் பின் ஓட்டம் தான். எங்கும் நிற்கவில்லை. எதற்கும் சளைக்க வில்லை. தான் தமயந்தி பையன் என்பதை நிரூபித்து விட்டு தான் அடங்கி  அமர்ந்தான். ஆனால் முன்பு போல் சலசலத்து பேசாது, யோசித்து , தேவைக்கு பேச கற்று கொண்டான். ” பழசை நினைச்சு மறுகி நிற்காம, ஜெயிச்சு காட்டு ” தகப்பன் வழிகாட்டலில் இன்று நிமிர்ந்து நிற்கிறான்.

தம்பியின் வீடியோ கால் அழைப்பு வர ஆன் செய்து பேச, ” மால்ஸ், என்ன பண்ணுற “

” இந்த நேரம் வேறென்ன பண்ணுவாங்க, என் வாலுகளுக்கு சப்பாத்தி ஊட்டிகிட்டு இருக்கேன்டா. நீ சாப்பிட்டியா “

” சுட சுட தோசை ஊட்டி விட உள்ளே போயிக்கிட்டே இருக்கு.. “

” உனக்கு யாருடா ஊட்டி விடுறது. ” என்பதாய் விழிகள் சுருங்க அவனை பார்க்க, அவள் பார்வையில் தாயின் புறம் காட்டினான். நீண்ட நாளுக்கு பின் மகனுக்கு ஊட்டி கொண்டிருந்தார் பாசமோடு தமயந்தி.

பார்த்தவள் கண்கள் உடனே கலங்கி விட்டது. எட்டி பார்த்த முரளியோ ” அடேய்! ஷாக்கு மேல ஷாக்கா கொடுக்காதடா. பிஞ்சு நெஞ்சு படபடன்னு அடிச்சுக்குது ” என்றான் கிண்டலாய்.

” அத்தை! .., தெளசண்ட் வாட்ஸ் பல்பு மாறி பிரைட் ஆகிட்டீங்க ஒரே நாள்ல ..,” கிண்டலாய் சொல்ல, இதழ் முடி சிரித்தார். மருமகன் என முரளி தள்ளி நிற்கவில்லை. இன்னொரு மகனாய் தானே நிற்கிறார் அவரோடு. அன்று அவரிடம் பேசியவை மனதில் வந்து போனது.

” சொல்றதை கூட கேட்காம ஏன் அத்தை அவனை அடிச்சீங்க? அவன் மேலே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அவனை பத்தி உங்களுக்கு தெரியாதா? முரளி கோபத்தை அடக்க முடியாமல் தமயந்தியிடம் கேட்க.

ஒன்றுமே சொல்லாமல் மௌனமாய் நின்றார்.

” எங்கம்மா எல்லாம் தப்பு பண்ணா அடிப்பாங்க. நானும் வாங்கி இருக்கேன், இல்லைனு சொல்லல. ஆனால் நாலு சுவத்துக்குள்ள தான் திட்டுவாங்க, அடிப்பாங்க, வெளியே யாராவது எங்கள பத்தி  தப்பா சொன்னா மொத திட்டு அவங்ககிட்ட இருந்து தான் வரும். எப்படி என் பையனை நீ பேசுவன்னு? எகிறிட்டு போவாங்க. நீங்க என்னன்னா …, ” வார்தையை முடிக்காமல் அவன் நிறுத்த., கண் கொண்டு காண முடியாமல் இமைகளை இறுக முடி கொண்டார் தமயந்தி.

” இதுவரை ஒரு அடி ,  திட்டனு  கூட செய்யாம செல்லமா வளர்த்துட்டு, அன்னைக்கு மட்டும் உங்களுக்கு ஏன் அத்தனை கோபம் வந்துச்சு? அவன் நொறுங்கி போய் நிற்கிறான். பார்க்கவே முடியல,, அமைதியா இல்லாம மனசுல உள்ளதை சொல்லுங்க அத்தை. எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் தெரியணும்… ” முரளியின் ஆதங்க பேச்சில்,

கண்களை மூடி அமைதியாக அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தவர் ஆழ்ந்த பெருமூச்சை விட்டு ” நான் பண்ண பெரிய தப்பே அது தான். என் பையன் தப்பு பண்ண மாட்டானு அவ்வளவு நம்பிக்கையில இருந்தேன். அதை சுக்கு நூறா உடைச்சிட்டான். அந்த பொண்ணு சொன்னதை ஏன் என்கிட்ட மறைச்சான். நான் கொடுத்த பிரீடத்தை தப்பா யூஸ் பண்ணுறான். சொல்லிருந்தா இத்தனை பேர் முன்னாடி தலைகுனிஞ்சு நிற்க வேண்டிய அவசியம் இல்லையே. எக்ஸாம் நேரத்துல படிக்கிறத விட்டுட்டு இவன் வெட்டி வேலை பார்க்க போவான். அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இவன் யாரு, பெத்தவங்களை ஒரு நிமிஷம் யோசிச்சு பார்க்காம தப்புக்கு துணை போவான், நான் கூட வந்து நிற்கனுமா? அங்க ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு பேச்சு.  யாரோ ஒருத்தன்னு நினைச்சா இவன் வந்து நிற்கிறான். இதை எல்லாம் பார்க்குறதுக்கு செத்து போயிரலாம்னு தோணுச்சு. அவ்வளவு வலி. அந்த கோபத்துல தான் அடிச்சேன். இத்தனை நாள் மனதில் எண்ணியே புழுங்கி கொண்டிருந்தவர் மருமகனிடம் மனம் திறந்து பேசினார். தாயாய் அவர் வலி அவருக்கு., கண் முன்னே மகனை தப்பாக பேசுவதை அவரால் சகித்து கொள்ளவே முடியவில்லை. அவரும் நட்பாக, அன்பாக தானே பழகினார். என்னிடம் சொல்வதற்கு என்ன? என்ற கோபமே கொழுந்து விட்டு எரிந்தது. முரளி பேசி சமாதானப்படுத்த கொஞ்சமே மனம் இறங்கினார். ஆனால் வடு மறையாமல் வாட்டி வதைக்க பேச மறுத்து விட்டார்.

இன்றோ அனைத்தும் மறந்து சந்தோசமே உருவாக இருக்கும் இருவரையும் பார்க்க மாலாவிற்கோ தலை கால் புரியவில்லை. மாறிவிடுவான் என்ற நம்பிக்கை நேற்றே வந்திருந்தது. இன்றோ தாயிடம் சகஜம் காட்டும் மாறாவை கண்டு உள்ளம் களிப்புற, பேச்சிலோ சந்தோசம் கரைபுரண்டது. நாளையே வீட்டுக்கு வருவதாக சொல்ல, பேச்சும் சிரிப்புமாய் பொழுது கழிய, நெடு நாட்களுக்கு பின்னர் நிம்மதி சாமரம் வீச அவனும் ஆழ்ந்து உறங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!