Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் ரட்சகா

காதல் ரட்சகா 20

மாயா உண்மைதான் என்பது போல் தலையாட்டினாள்.

கழுத்தை சுற்றி இருந்த அவளின் கரம் கீழே இறங்கியது. அவனின் நெஞ்சின் மீது கையை வைத்தவள் “எனக்கு உன்னை லவ் பண்ணனும்ன்னு ஆசை. ஆனா எப்படின்னு தெரியல..” என்றாள்.



Advertisement

“உன் பக்கத்துல இருந்தா என்னோட கஷ்டங்கள் எல்லாம் கரைஞ்சி காணாம போயிடுது. உன்னோட மூச்சுக்காத்து என் மேல மோதும் போதெல்லாம் மரணத்தை விட்டு தப்பிச்சி வந்தது போல தோணுது. நீ என்னை என்னவோ பண்ற..” என்று சொன்னவளுக்கு விழிகள் கலங்கியது.

“நான் இதை எதிர்பார்க்கல விக்கி. என் அப்பா இறந்ததும் என்னோட வாழ்க்கை மொத்தமும் போயிடுச்சி, இனிமே என் வாழ்க்கையில் சந்தோஷமே இருக்காதுன்னு நினைச்சேன். இப்ப என்கிட்ட இருப்பது சந்தோஷம் கிடையாது. நிம்மதி. சந்தோஷத்தை விடவும் நிம்மதி ரொம்ப காஸ்ட்லி தெரியுமா?” என்று கேட்டாள்.

Advertisement

Advertisement

அவளின் பதறும் இதயம் தன் அருகில் மென்மையாக துடித்தால் அவனுக்கு அது போதும். பட்டாசு போல் சிதறி கொண்டிருக்கும் அவளின் எண்ணங்கள் தன் அருகில் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் அவனுக்கு அது போதும்.

நடந்ததை அவனால் மாற்ற முடியாது. தன்னை நம்பி வந்தவளுக்கு தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்து விட வேண்டும் என்று மட்டும் ஆசைப்பட்டான்‌.

Advertisement

அவளின் முகத்தை அள்ளினான். “லவ்ன்னா கூகுள்ல சர்ச் பண்ணி அதுல உள்ள ரூல்ஸ்படி நடப்பது கிடையாது. புத்தகங்கள் வாங்கி மக்கர் பண்ணி அதை பிராக்டிகலா மாத்துவது கிடையாது. உன் மனசுல இருப்பதை செய்வதுதான் காதல். உனக்கு என்னவெல்லாம் பேச தோணுதோ அதை எல்லாம் என்னோடு பேசணும். உனக்கு எங்கே எல்லாம் போக தோணுதோ அங்கே எல்லாம் என்னோடு போகணும். உனக்கு என்னவெல்லாம் செய்ய தோணுதோ அதையெல்லாம் என்னோடு செய்யணும். அவ்வளவுதான் ரொம்ப சிம்பிள்..” என்றான்.

“அப்படின்னா நான் உன்னோட காதை கொஞ்சமா கடிச்சிக்கிட்டா? நீ என்கிட்ட சண்டை போட மாட்டியா?” என்று கேட்டாள்.

அவளின் பச்சை பிள்ளை முகத்தில் விழுந்து விட்டான்.

“மாட்டேன்.” என்று தலையாட்டியவன் அவள் பக்கம் திரும்பி தன் செவியை காட்டினான்.

எக்கி நின்றாள். அவனின் கழுத்தை கட்டி அணைத்தவள் காதை கவ்வினாள்.

அவள் கடிப்பாள் என்றுதான் எதிர்பார்த்தான். ஆனால் அவள் கடிக்கவில்லை. சில நொடிகள் தொடர்ந்து முத்தத்தை கொடுத்தவள் அவனின் கழுத்தில் முகம் புதைத்தாள்.

“எனக்கு அழணும் போல தோணுது..” என்றாள் கரகரத்த குரலில்.

அவளின் முதுகை சுற்றி வளைத்தது இவனின் கரங்கள்.

“அழ தோணினா அழுதுடு. எவ்வளவு அழணுமோ அழுதுடு. உன் கண்ணீரை துடைக்க என் கைகள் இருக்கு. உன் கண்ணீரை ஏந்த என் உடைகள் இருக்கு..” என்றான்.

“அப்பா பாவம். என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம அப்படி பண்ணிட்டாரு..” என்று விம்மினாள்.

அவளை அணைத்தபடி தூக்கினான்.

“எல்லாம் என் தப்புதான்..” என்றாள்.

ஒரே காரணத்துக்காக அவள் ஓராயிரம் முறை அழுதாலும் இவனுக்கு சம்மதமே. அந்த அழுகைதான் அவளின் மன வலியை தீர்க்கும் என்றால் அவள் அழுவதை கூட இவன் விரும்ப தயாராக இருந்தான்.

பத்து நிமிடங்களுக்கு தொடர்ந்து அழுதாள். இவனும் அங்கேயும் இங்கேயும் நடந்தான்.

அவளுக்கு நாம் சின்ன குழந்தையாக மாறி தந்தையின் தோளில் இருப்பது போல தோன்றியது.

அவனின் கரம் அவளின் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. “இட்ஸ் ஓகே. உன்மேல எந்த தப்பும் இல்ல..” என்று அவனின் உதடுகள் இவளுக்கு ஆறுதலை சொல்லிக் கொண்டே இருந்தது.

பத்து நிமிடத்திற்கு பிறகு அவளின் அழுகை கொஞ்சம் ஓய்ந்தது.

அவளைக் கீழே இறக்கி நிறுத்தினான். கண்ணீரை துடைத்து விட்டவன் “நான் இருக்கேன் அம்மு..” என்று சொன்னான்.

இரவு உணவுக்கு அனைவரும் கூடி அமர்ந்தார்கள்.

பொன்னம்மா சமையலை செய்து இருந்தாள்.

“நிஜமா நீங்கதானே சமைச்சிங்க?” என்று கேட்டு உறுதிப்படுத்தினாள் மாயா.

“ஆமா பாப்பா. நானேதான் சமைச்சேன். ஈவ்னிங் ரேவதி வேலைக்கு வரல..” என்றாள்.

மாயாவுக்கு நிம்மதி.

அவளிடம் உண்டான மாற்றத்தை கண்ட கனகவதி ‘இவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது, என்ன அது?’ என்று குழம்பினாள்.

“அந்த கைலாஸூக்கும் உங்கம்மாவுக்கும் நடுவுல அப்படி என்ன பிரச்சனை மாமா?”, என்று தருணிடம் கேட்டாள் மாயா.

தாயை பார்த்துவிட்டு இவள் புறம் திரும்பிய தருண் “எனக்கு தெரியல மாயா. ஒரு வேளை இரண்டு பேரும் முன்னாள் காதலர்களோ என்னவோ? யாரோ ஒருவர் ஏமாத்திட்டதால இன்னொருத்தர் பழி வாங்கிட்டு இருக்காங்களோ?” என்று தனது யூகத்தை சொன்னாள்.

கனகவதி பற்களை கடித்தாள். “சண்டையா இருந்தாவே அது காதலா மட்டும்தான் இருக்கணுமா?” என்று கேட்டாள்.

“அப்படின்னா அது வேற என்ன சண்டை? நீங்களே உங்க வாயை திறந்து சொல்லலாமே!” என்றாள் மாயா.

கைலாஷூம் இவளும் மாறி மாறி என்ன மாதிரியான விஷயங்களை சொன்னாலும் சரி. தங்கள் பக்கத்து தவறுகளை நியாயப்படுத்தினாலும் சரி. இருவரையும் மாயா அமைதியாக விடப் போவதில்லை. விக்னேஷின் முகம் பார்க்கும்போது மாமியாரை மன்னித்து விட்டு விடலாம் என்று தோன்றும். ஆனால் அதே மனதுக்குள்தான் விக்னேஷுக்கு தெரியாமல் மாமியாரை கொன்று விடலாம் என்றும் எண்ணங்கள் உண்டானது.

கனகவதி மௌனம் காக்க, “கைலாஷோட அம்மா அப்பாவை உங்க அம்மா விஷம் வச்சி கொன்னுட்டாங்களாம். உங்கம்மா தன் அம்மாவோடு ஒரு பிச்சைக்காரியா கைலாஷோட வீட்டுக்கு போயிருக்காங்க. அவங்களும் வாழ்க்கை கொடுத்தாங்களாம். ஆனா வாழ வச்ச தெய்வங்களையே உங்க அம்மா கொன்னுட்டாங்க..” என்றாள்.

இதைப் பற்றி இவளுக்கு எப்படி தெரியும் என்று தர்மேந்திரன் அதிர்ந்தார்.

கனகவதி கோபத்தில் பொங்கினாள். “உனக்கு ஒன்னும் தெரியாது. கைலாஷோட அப்பாதான் எனக்கும் அப்பா. ஒரு நாள் எங்களை அவரோட வீட்டுக்கு கூட்டி போனார். இரண்டு பேமிலியும் ஒண்ணா வாழலாம்ன்னு சொன்னாரு. ஆனா கைலாசோட அம்மா கொஞ்ச நாளிலேயே எங்கம்மாவுக்கு விஷத்தை கொடுத்து கொன்னுட்டாங்க. நான் அதை அப்படியே விடணுமா? அதனால்தான் காத்திருந்தேன். ஒருநாள் எனக்கு வாய்ப்பு கிடைச்சதும் அவங்க ரெண்டு பேருக்கும் விஷத்தை வச்சுட்டேன்..” என்று சொன்னாள்.

“அப்படின்னா என் அப்பாவை கொன்ன உங்களுக்கு நானும் விஷத்தை வைக்கலாமா?” என்று கேட்டாள் மாயா.

“நான் ஒன்னும் உங்க அப்பாவை கொல்லல. அந்த ஆளு ஒரு பொட்டை. அதனாலதான் பணத்தை ரெடி பண்ண முடியாம சூசைட் பண்ணிட்டு செத்துட்டான்..” என்று கர்ஜித்தாள்.

கைகளை இறுக்கினாள் மாயா.

சாதாரண நேரமாக இருந்திருந்தால் கண்டிப்பாக கனகவதியின் தலை முடியை பிடித்து இழுத்து முகத்தில் நான்கு குத்துகளை கொடுத்திருப்பாள்.

ஆனால் இன்று மனதுக்குள் அவ்வளவு வன்மம் தோன்றினாலும் நிஜத்தில் எதையும் செய்யவில்லை.

“ஓகே என்னோட அப்பாவை நீங்க டைரக்டா கொல்லல. ஆனா என் தங்கச்சியை கொல்லப் பார்த்திங்க. அதுக்காக நான் உங்களை கொல்லலாமா?” என்று ரதி குறுக்கு கேள்வி கேட்டாள்.

அவளின் கேள்வியில் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

மாயா ஒரு ஊசி பட்டாசு என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ரதியிடமும் கூட பழிவாங்கும் குணம் இருக்கும் என்று இவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

“உன் தங்கச்சி ஒன்னும் செத்து போகல. உன் கண்ணு முன்னாடி சிலை போலதானே உட்கார்ந்திருக்கா?” என்று அலட்சியமாக கேட்டாள் கனகவதி.

“பேச்சை திசை திருப்ப வேணாம்..” என்ற தருண் “சோ கைலாஷ் அங்கிளும் நீங்களும் பிரதர் அண்ட் சிஸ்டர்.‌ உங்க அம்மாவை அவங்க கொன்னுட்டாங்க. அவங்க அம்மாவை நீங்க கொன்னுட்டீங்க..” என்றான்.

“அவனை அங்கிள்னு கூப்பிடாத..” என்று கனகவதி கர்ஜிக்க “நாங்க உங்களையே அம்மாவா ஏத்துக்காதபோது அவரை ஏன் அங்கிள்ன்னு ஏத்துக்க போறோம். இது சும்மா குறிப்பிடுவதற்காக கூப்பிடுவது..” என்றான் விக்னேஷ்

கனகவதி அவன் சொன்னது புரியாமல் பார்த்தாள்.

தந்தை புறம் திரும்பிய தருண் “எங்களுக்கு எங்க அம்மாவை பிடிக்கல டாடி. நீங்க இவங்களை டைவர்ஸ் பண்ண வேணாம். ஆனா அதுக்கு பதிலா நாங்க இவங்களை டைவர்ஸ் பண்றோம். பொன்னம்மா அம்மாவை எங்களோட அம்மாவா ஏத்துக்கலாம்ன்னு இருக்கோம். அப்படி பொன்னம்மா அம்மா எங்களை பிள்ளைகளா ஏத்துக்கலன்னா ஏதாவது ஒரு அனாதை ஆசிரமம் போய் அங்கிருந்து ஒருத்தரை கூட்டி வரலாம்ன்னு இருக்கோம்..” என்று சொன்னான்.

தர்மேந்திரனுக்கு தலை சுற்றியது. இன்னும் இவர்கள் என்னென்ன அக்கப்போர்களை செய்யப் போகிறார்களோ? மனைவி தேவையில்லாத வேலைகளை செய்ய ஆரம்பித்தபோதே தெரியும் இந்த பாதையும் சரியில்லை, இனிமேல் நடக்கப் போவதும் எதுவும் உருப்படியாக இருக்கப் போவதில்லை என்று.

ஆனால் இன்று அனுபவிக்கும் போது இன்னும் மோசமாக இருந்தது. இந்த சிக்கல்களை எல்லாம் சுலபமாக சரி செய்ய யாராலாவது முடிந்தால் நலமாக இருக்கும் என்று தோன்றியது.

ஆனால் இந்த பிரச்சனை பெரிய ரத்த காவு வாங்காமல் போகாது என்று அவரின் மனசாட்சி எச்சரித்தது.

“அது மட்டும் இல்ல டாடி. எங்களோட சொத்துக்களை பிரிச்சிக் கொடுத்திங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். நாங்க ரெண்டு பேரும் மாடு போல உழைக்கிறோம். ஆனா உங்க மனைவி வீட்லயும் ஒரு வேலை பண்ண மாட்டாங்க. ஆபீஸ்லயும் ஒரு வேலை பண்ண மாட்டாங்க. பிள்ளைகளையும் கவனிச்சிக்க மாட்டாங்க. மருமகள்களை திட்டாமலும் இருக்க மாட்டாங்க. அத்தனை வில்லங்கத்தையும் செய்ற அவங்களுக்காக நாங்க ஏன் உழைக்கணும்?” என்று கேட்டான் விக்னேஷ்.

பிள்ளைகள் பெரிதாய் ஏதோ முடிவு எடுத்துவிட்டார்கள் என்று தர்மேந்திரனுக்கு புரிந்தது.

“தப்பு பண்ணாதிங்கடா. அவ உங்களைப் பெத்தவ..”

அவர் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லியது போல் தோன்றியது மாயாவுக்கு.

இது போன்ற ஒரு பெண்மணியிடம் யாராலும் முழு நிம்மதியோடு வாழ முடியாது. அதை இவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

“பெத்தவங்க போல ஒருத்தர் நடந்துக்காத போது நாங்க மட்டும் ஏன் பிள்ளைகளை போல நடந்துக்கணும்? சாரி டாடி. எங்களை இந்த உலகம் எவ்வளவு கேவலமா பார்த்தாலும் சரி. நாங்க இப்படியே இருக்கோம்..” என்றான் தருண்.

“நான் யோசிக்கிறேன். சொத்து முழுக்க உங்களுக்குதான். இப்பவே பிரிச்சி தருவதான்னுதான் குழப்பம். நான் சீக்கிரம் நல்ல முடிவா சொல்றேன்..” என்றார்.

அன்றிரவு அவர் உறங்க வந்தபோது கட்டிலில் ஓரமாக அமர்ந்திருந்த கனகவதி “அவங்களுக்கு சொத்தை எழுதி தராதிங்க..” என்றாள்.

“அவங்க நம்ம பிள்ளைங்க. உழைச்சதே அவங்களுக்காகதானே?” எனக் கேட்டார் இவர்.

“உங்களுக்கு அவங்களை பத்தி தெரியல. சொத்து கிடைச்சதும் நம்ம இரண்டு பேரையும் வீட்டை விட்டு துரத்திடுவாங்க.‌ அவங்க பொண்டாட்டிங்க யாரும் நல்லவங்க இல்ல. உங்களுக்கு நடு ரோட்டுல நிற்க ஆசையா?” எனக் கேட்டாள்.

பிள்ளைகள் தன்னை அப்படி நிறுத்த மாட்டார்கள், ஆனால் இவளை அப்படி நிறுத்த கொஞ்சமும் கவலைப்பட மாட்டார்கள் என்று இவரால் யூகிக்க முடிந்தது.

“நாம வாழ்ந்து முடிச்சிட்டோம் கனகா‌. அவங்களுக்கு வாழ வேண்டிய வயசு. சாதிக்க வேண்டிய நேரம். இப்ப தடை போட முடியுமா?” எனக் கேட்டார்.

இவளுக்கு முகம் மாறி விட்டது. “சோ நீங்களும் அவங்களுக்கு ஆதரவா மாறிட்டிங்க. அப்படிதானே?” எனக் கேட்டாள்.

“இல்லடி. நீ என் வொய்ப். என் உயிர் போகும் வரையிலும் உன்னை நான் நல்லா பார்த்துப்பேன்..” என்றார்.

“பணம்தான் என்னை நல்லா பார்த்துக்கும். நீங்க இல்ல..” என்றவள் அவர் தன்னை வெறித்து பார்ப்பதை கண்டும் மனம் இறங்கி வரவில்லை.

போனோடு பால்கனிக்கு சென்றவள் “எனக்கு டைவர்ஸ் வேணும்..” என்று தனக்கு தெரிந்த வக்கீலிடம் சொன்னாள்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!