Skip to content
Post Views: 2,726
கருவின் குரல்
அத்தியாயம் 6
தேவா முதலில் எப்படி உறுதியாக இருந்தானோ, அப்படியே இருந்திருந்தால் சக்கரவர்த்தியும் ஜானகியை ஏற்றுக்கொண்டிருப்பார். ஏனெனில் அவர் எதிர்பார்த்ததுமே அதுதான்.
ஆனால் தேவா எதிர்காலத்தை நினைத்து சற்று பயந்து விட்டான். நிறைய யோசனைகளுக்குப் பிறகு, தன்னால் ஜானகியையே சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை; இதில் எப்படி கருவில் இருக்கும் குழந்தையை பார்த்துக்கொள்ளப் போகிறோம் என்றெல்லாம் குழம்பினான்.
ஜானகிதான் வேண்டும் என்றால் அவன் அம்மா, அப்பா, உடன்பிறந்தவன், அவன் வாழ்ந்த சொகுசு வாழ்வு அனைத்தையும் இழக்க வேண்டும்.
அதற்கு, ஜானகியை இழந்தால் பரவாயில்லை என்ற முடிவை எடுத்தான்.
இரவு வீடு திரும்பினான்.
ஜானகி இருந்த பொருட்களை கொண்டு அவனுக்காக சமைத்து வைத்திருந்தாள்.
அவன் உள்ளே நுழைந்ததும், புன்னகை முகமாக வரவேற்று, சாப்பிட எடுத்து வைத்தாள்.
தேவா அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன?” என ஜானகி கேட்க, அவளை அமர வைத்து, “நாம் பிரிந்து விடலாம். இந்த திருமண வாழ்வு ஒத்துவராது,” என்றான்.
அவன் கூறியதை உள்வாங்கவே அவளுக்கு சற்று நேரம் எடுத்தது.
Advertisement
திடப்படுத்திக் கொண்டு, “மீண்டும் என்ன?” என்றாள்.
“ஜானு, நம் திருமணத்தால் நம் பெற்றோரின் கௌரவம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் கூட அவ்வளவாக தெரியவில்லை, ஆனால் என் குடும்பம் அப்படியல்ல. என் அப்பா ஊரில் செல்வாக்கு மிக்கவர். இன்று என்னால் தலைகுனிந்துள்ளார்.
அதுமட்டுமல்ல, என் ஒருவனின் சம்பாத்தியத்தால் நம் இருவரும் நிச்சயமாக வாழ்வில் முன்னேற முடியாது. என்னாலும் என் சொந்த பந்தம், நான் வாழ்ந்த வீடு இவற்றையெல்லாம் விட்டு வர முடியாது.
நிதர்சனத்தை புரிந்துகொள், நாம் இருவரும் பிரிந்து, அவரவர் வீட்டில் தேர்ந்தெடுத்து தரும் வாழ்வை ஏற்றுக்கொள்ளலாம்,” என்றான்.
“அப்போ நம்ம குழந்தை?” என்றாள் ஜானகி.
“அதை கலைத்துவிடு,” என்று சாதாரணமாகக் கூறினான்.
ஜானகி அவன் சட்டையை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டாள். “நீ சொல்வது எல்லாம் பொய் என்று சொல்!” எனக் கத்தினாள்.
அவனிடம் அமைதி மட்டுமே.
Advertisement
“உனக்கு இந்த முடிவு கஷ்டம்தான் என்று எனக்குப் புரிகிறது. ஆனாலும் என் நிலையை யோசித்துப் பார்.
நான் உன்னை அப்படியே விட்டு விட மாட்டேன். கருவை கழிக்கும் மொத்த செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்றான்.
Advertisement
ஜானகி அதற்கு மேல் எதுவும் பேசாமல், அமைதியாக மூலையில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.
தேவா தனது துணிமணிகளைப் பேக் செய்து எடுத்துச் சென்று விட்டான்.
இரண்டு நாட்கள், என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டே அந்த வீட்டில் கரைந்தாள்.
இனி அவன் திரும்பி வரப்போவதில்லை. வயிற்றில் இருக்கும் கருவை அழிக்கவும் விரும்பவில்லை. எதிர்காலம் இருண்டதாகவும் பயமுறுத்துவதாகவும் தோன்றியது.
வேறு வழியில்லாமல், மருதாசலத்திற்கு அழைத்தாள்.
தாய், தந்தை இருவரும் தலையில் அடித்து அழுதுகொண்டே வந்தனர்.
Advertisement
தலைவிரிகோலமாக அமர்ந்திருந்த உடன்பிறந்தவளைப் பார்த்தும், தேவாவை வெட்டி கொன்று விடும் ஆவேசம் கோகுலுக்கு.
ஏற்கனவே உடைந்து இருப்பவளை மேலும் காயப்படுத்த வேண்டாம் என, மகளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் மருதாசலம்.
ஜானகியை ஏற்றுக்கொண்ட அவர்களால், அவள் வயிற்றில் வளரும் கருவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதை அழிக்கும் முடிவை எடுத்தனர்.
ஜெயந்தி மெதுவாக ஜானகியிடம் எடுத்துக்கூறினாள்:
“இந்த குழந்தை வேண்டாம் ஜானு. தேவா திரும்ப வரப்போவதில்லை. இதை அழித்துவிட்டு எல்லாம் மறந்துவிடு. ஒரு வருடம் சென்ற பின் நல்ல மாப்பிள்ளை பார்த்து உனக்கு திருமணம் செய்து வைக்கிறோம்,” என்றாள்.
ஜானகி எதுவும் பேசவில்லை.
ஒருமுறை தேவாவை பார்த்து பேசலாம்; நிலைமை மாறும் என எண்ணினாள்.
அவனுக்கு போன் செய்தாள் சுவிட்ச் ஆப் என வந்தது.
அவன் வீட்டிற்கு சென்றாள்.வீட்டின் முன்பு பந்தல் போட்டு வாழைக்கன்று ,மாவிலை தோரணம் கட்டப்பட்டு இருந்தது.
கல்யாண கலை கட்டி இருந்தது அந்த வீடு.
நேரே சக்கரவர்த்தியிடம் சென்று அழ ஆரம்பித்தாள் “எனக்கு தேவா வேண்டும்!” என.
கருணா ஏதோ கேவலமான புழுவைப் பார்ப்பது போல் அவளைப் பார்த்து, “என் மகனுக்கு வரும் புதன் கிழமை கல்யாணம்!” எனப் பத்ரிக்கையை நீட்டினார்.
“இனிமேல் இங்கே வரும் வேலையை வைத்துக்கொள்ளாதே. என் மகனை பார்க்க நினைக்காதே!” என்றாள்.
சக்கரவர்த்தி மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டார்; அத்தோடு பண உதவி செய்வதாகக் கூறினார்.
ஜானகி, “எனக்கு பணம் வேண்டாம். தேவாதான் வேணும்,” என்றாள்.
கருணா, “அறிவு! அவளை வெளியில் இழுத்து தள்ளு!” என்றாள்.
அறிவழகன் ஜானகியின் கையைப் பிடித்து வெளியே தரதரவென இழுத்துச் சென்றான்.
நல்ல வெயில்… வழி முழுவதும் அழுதுகொண்டே வீடு சென்றாள்.
அவள் வந்த கோலத்தைப் பார்த்த ஈஸ்வரி மகளை அணைத்துக்கொண்டாள்.
அம்மாவை பிடித்து அவளும் கதறி அழுதாள்.
வீட்டில் இருப்பவர்கள் அழுத்தம் தர, மனதை கல்லாக்கிக்கொண்டு, கருவை அழிக்கும் முடிவை எடுத்தாள்.
💔 கருவின் குரல் ஒலிக்கும்…💔
error: Content is protected !!