Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என்னுள்ளே💞5

அத்தியாயம் _5

“கிராமத்து விருந்து ” இந்த தீமை எப்படி இம்ப்ளிமென்ட் பண்ண போகிறாள் …

என்னென்ன செய்ய போகிறாள் என்று பிரபா , பாலாஜி இருவருக்கும் விளக்கி கொண்டிருந்தாள்.



Advertisement

அவள் யோசனை …அதை அவள் விளக்கும் முக பாவம் …அவள் குரலில் வழிந்த நம்பிக்கை ….

எண்ணியதை வெற்றிகரமாக செயல் படுத்தி விட வேண்டும் என்ற துடிப்பு …பிரபா அவளை மெச்சுதலாய் மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தான் .

ஸ்வாதியையே ….கரு விழி அசையாது பார்த்து கொண்டிருக்கும் பிரபாவையே பார்த்து கொண்டிருந்தான் பாலாஜி .

Advertisement

இந்த பிரபா புதுசு ….!பெண்களிடம் பேசுவதை தவிர்ப்பவன் பிரபா. அவனா இவன்?

Advertisement

மாது அவள் முகத்தையே கள் அருந்திய மங்கி போல் மயங்கி ரசித்தது …அவன் கண்மணிகள் இரண்டும் .

இது அநாகரிகம் என்று அவன் ஏழாம் அறிவு எச்சரித்தும்

அவனால் சடுதியில் பார்வையை விலக்கி கொள்ள முடியவில்லை .

Advertisement

பிரபாவின் விழிவீச்சு தாக்குதலில் ….” மடை திறந்த வெள்ளமாய் பேசி கொண்டிருந்தவளுக்கு …

வார்த்தைகள் வஞ்சித்தது .”

அவளும் கண்டுகொண்டாள் அவன் விழி வீச்சின் வெந்தணலை…

இருபத்து நான்காம் அகவையில் இருக்கும் அவள் இது வரை எந்த ஆண்மகனின்  விழி வீச்சிலும் சலனப்பட்டதில்லை .

நண்பனின் தடுமாற்றம் கண்டு பாலாஜிக்கு மன நிறைவாய் இருந்தது .

ஸ்வாதியின் புதுமைகளை மனம் திறந்து பாராட்டினான் பாலாஜி .

தன் பொறுப்பில் இருக்கும் திருவான்மியூர் ஹோட்டலிலும் அவள் ஐடியாவை பின் பற்ற தொடங்கி இருப்பதாக பெருமிதமாய் சொன்னான் பாலாஜி .

சேலத்தில் இருந்து கொள்முதல் செய்யும் மளிகை பொருட்களின் மூலம் நல்ல வருமானம் வருவதாக பிரபா நன்றி கூறினான் .

தன் கையால் செய்த முசுமுசுக்கை வடையும் கருப்பட்டி காபியும் கொண்டு வந்து உபசரித்தாள் .

முசுமுசுக்கை உடம்பிற்கு ரொம்பவே நல்லது …நீண்ட நாள் சளியை கூட முசுமுசுக்கை கரைத்து வெளியேற்றும் என்றாள் .

சூடாய் சாப்பிட வித்தியாசமாகவும் , சுவையாகவும் இருந்தது .

பாலாஜி தன் மகள் ரேஷ்மி பிறந்தநாள் விழாவிற்கு அவசியம் வர வேண்டும் என்று …ஸ்வாதிக்கு அழைப்பு விடுத்தான் .

கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பி போனான் பிரபா

இதுவரை மலர்ந்திருந்த பிரபாவின் முகம் …சடுதியில் வெறுமை கொண்டது .

பிரபா ஸ்வாதியை பத்தி நீ என்ன நினைக்கிற …? பாலாஜியின் திடீர் கேள்வியில் ஆடிப்போனான் பிரபா

என்னடா திடீர்னு ஸ்வாதி பத்தி …? நாக்கு பின்னி பிதற்றியது அவனுக்கு. என்ன பேச? ஏது பேச? நாக்கு எழவில்லை .

சும்மா தான் கேட்டேன் ….!

ரொம்ப திறமையான பொண்ணு ….பக்குவமான பொண்ணும் கூட ….அடி மன ஆழத்தில் இருந்து வந்தது வார்த்தைகள் .

“நம்ம காலேஜ்மேட் உதய் இருக்கானே ….அவன் தம்பி ஆதவனுக்கு ஸ்வாதி பொருத்தமா இருப்பா இல்லை …!”

என்னடா சொல்ற ….? ஸ்டியரிங் பிடித்திருந்த பிரபாவின் கைகள் தட தடத்தது .

உதய் என்கிட்ட சொல்லி இருந்தான் . அவன் தம்பிக்கு பெண் தேடிட்டு இருக்கிறதா ..!

ஆதவன் TNPSC செகண்ட் க்ரூப் பாஸ் பண்ணி RI யா ட்ரெயினிங் பீரியடில் இருக்கானாம் .

ஸ்வாதிக்கு ஒரு இருபத்தைந்து வயசு இருக்குமா …?

பதில் சொல்லும் மன நிலையில் பிரபா இல்லை.

டேய் …பித்தா …உன்னை தான் கேட்கிறேன் …சத்தமாய் கத்தினான் பாலா .

என்ன கேட்ட …? தடுமாறினான் பிரபா .

சரியா போச்சு …!

ஸ்வாதிக்கு இருபத்தைந்து வயசு இருக்குமான்னு கேட்டேன் .

இருபத்து நாலுன்னு நினைக்கிறேன் என்றான் …விட்டேத்தியாக .

ஏன்னா ஆதவனுக்கு இருபத்தெட்டு ஆகுதாம் . அது தான் கேட்டேன் .

பிரபா எதுவும் பேசவில்லை.

ஆதவன் தான் ஸ்வாதிக்கு சரி .. அவளுக்கு இருபத்துநான்கு , அவனுக்கு இருபத்தெட்டு …பொருத்தம் சரியாய் இருக்கும் .

தனக்குள் சொல்லி கொண்டவனால் எளிதில் ஜீரணிக்க தான் முடியவில்லை .

நண்பனின் முக மாற்றத்தையே உன்னிப்பாய் கவனித்து கொண்டிருந்தான் பாலாஜி .

“———-“

இரவு ஏசியில் படுத்தவனின் மன புழுக்கம் பாடாய் படுத்தி  எடுத்தது …

ஸ்வாதியின் குடும்பம் பற்றி அவனுக்கு சரியாக தெரியவில்லை .

திருவண்ணாமலை பக்கத்தில் ஒரு கிராமம் என்று சொல்ல கேட்டிருக்கிறான் .

கஷ்டமான குடும்ப பின்னணியாக இருக்க கூடும் அதனால் தான் B.com முடித்தவுடன் வேலை தேடி வந்தாள் .

நல்ல பெண் ….அவள் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணினான் .

ஸ்வாதிக்குமே உறக்கம் டிமிக்கி கொடுத்து கொண்டிருந்தது .

பிரபா சார் ….ஏன் இன்னைக்கு துளைக்கும் பார்வை பார்க்க வேண்டும் …? குழம்பி போனாள் .

கம்பீரம் கொண்ட அவன் பார்வை அவள் கண்முன் படமாய் ஓடியது .

” கிராமத்து விருந்து ” தீமை முன்னோட்டம் பார்க்க தொடங்கினாள் ஸ்வாதி .

கிராமிய காய்கறிகள் பயன்படுத்தி மர செக்கு எண்ணெயில் சமைத்து …கைக்குத்தல் அரிசியில் சாதம் வைத்து …மண்பாண்டத்தில் சமைத்து பரிமாறினார்கள் .

பேக்கேஜ் ரேட் …எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் .

துளசி , தூதுவளை, ஓமவல்லி , வெற்றிலை போட்ட   மூலிகை ரசம் , பிரண்டை துவையல்  சுத்தமான நல்லெண்ணெய்  , பூண்டு பொடி  …என பார்த்து பார்த்து தயார் செய்த காம்போ ….அமோக ஆதரவை பெற்றது .

மிகுந்த உற்சாகத்தில் இருந்தாள் ஸ்வாதி .

விழுப்புரம் வரை நண்பனை பார்க்க சென்ற பிரபா ….வரும் வழியில் ஹோட்டலுக்கு சென்றான் .

வாடிக்கையாளர்கள்  கருத்து கேட்டு குறிப்பெழுதி கொண்டிருந்தாள் ஸ்வாதி .

கர்மசிரத்தையோடு பணியை செய்யும் அவளை எப்படி பாராட்ட ….? யோசித்து அமர்ந்தான் .

இந்த சின்ன வயதில் எவ்வளவு ஆர்வம் அர்ப்பணிப்பு…. மெய் சிலிர்த்துவிட்டான்.

அந்த வாரத்திற்கான வரவு செலவு பதிவேட்டை காண்பித்தாள்.

அவன் விழி விரித்து விட்டான்.

அவன் பொறுப்பில் சிட்டிக்குள் இருக்கும்  ரெசிடென்ஷியல் ஹோட்டலின் வருமானத்தை விட …அவள் ஈட்டி கொடுத்தது அதிகம் .

ஸ்வாதி வாங்களேன் உங்களை வடபழனியில் டிராப் பண்றேன் என்றான் .

சற்று தயங்கியவள் …பின் சம்மதம் தெரிவித்தாள் .

முன் சீட்டில் அவளை அமர்த்தி காரை ஸ்டார்ட் பண்ணும் போது …அவன் மனநிலையை விவரிக்க முடியவில்லை .

அவளுடனான பயணம் வடபழனி வரை என்றில்லாமல் வாழ்க்கை முழுமைக்குமாய் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஆழ்மனம் ஏங்கியது .

இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை . மௌனமே போதுமாய் இருந்தது இருவருக்கும் .

அவனுடன் இது வரை தனியாக எங்கும் சென்றதில்லை . அவன் முகத்தை அருகமர்ந்து …நேர் கொண்டு பார்க்க மங்கை அவள் நாணி போனாள் .

இருவரும் கலகலத்து பேசியதில்லை. அவனோடு அருகமர்ந்து பயணம் செய்வது அவளுக்கு கொஞ்சம் அவஸ்தையாக தான் இருந்தது.

மௌனத்தை கலைய இருவருமே முனையவில்லை. ஏசி காற்றுககு இன்னும் எடையை ஏற்றிக் கொண்டிருந்தது அந்த மௌனம்.

நெடு நேர மௌனத்தை உடைத்தான் பிரபா.

ஸ்வாதி …நாளைக்கு பாலாஜி பொண்ணு ரேஷ்மி பர்த்டே …..ஏதாவது கிஃப்ட் வாங்கணும் என்றான் .

டாய் ஷாப் போகலாம் சார் என்றாள் .

இல்லை ஸ்வாதி ….அவன் என்னோட பிரண்ட் மட்டும் இல்லை பிசினஸ் பார்ட்னர் கூட ….அதுமட்டுமில்லாம ரேஷ்மி டால் என் செல்ல குட்டி. அவளுக்கு கோல்ட் ஏதாவது வாங்குவோமா ?

ஐடியா போல் இல்லாமல் அனுமதி போல் கேட்டான் .

உங்க விருப்பம் போல் செய்யுங்க சார் என்றாள் .

குரோம்பேட்டை GRT போய் குழந்தை கைக்கு வளையல் பார்த்தான் .

ஸ்வாதி ஒரு பவுன் வர மாதிரி பேபி பேங்கில் பாருங்க ….இதோ வரேன் …அவன் எழுந்து போய் விட்டான் .

ஸ்வாதி எனாமல் கோட்டிங் கொடுத்த காப்பு போன்ற டிசைன் கொண்ட  கெட்டியான வளையலை தேர்ந்தெடுத்தாள் .

சற்று நேரத்தில் வந்தவன் பில் போட்டு கிளம்பினான் .

சார் …நான் ஏதாவது டாய்ஸ் வாங்கிட்டு வரேன் …நீங்க இங்கே இருங்க என்றாள் .

இல்லை ஸ்வாதி நானும் வரேன் என்றான் .

இருவருமாய் கிட்ஸ் வேர்ல்ட் என்னும் கடையில் நுழைந்தனர் . பிங்க் வண்ண டெடி பியர் வாங்கினாள் . பிரபா பர்ஸ் எடுக்க ….சார் ப்ளீஸ் …இது என்னோட கிஃப்ட் என்று அவளே பணம் செலுத்தினாள் .

பக்கத்தில் ஐஸ்க்ரீம் பார்லர் கண்டவன் அங்கு நுழைந்தான் …வேறு வழியில்லாமல் அவளும் பின் தொடர்ந்தாள் .

எனக்கு எப்போதும் வெனிலா தான் என்றாள்.எனக்கும் என்றான் இதழ் பிரியா புன்னகையுடன்.ஐஸ்க்ரீம் சாப்பிடும் அவள் அழகை இமை கொட்டாமல் ரசித்தான் .

அவன் பார்வை தாளாது …ஐஸ்க்ரீம் சாப்பிட இயலாமல்  ஸ்பூனால் நிரண்டி கொண்டிருந்தாள் .

ஐஸ்க்ரீமோடு அவன் இதயமும் கரைந்து உருகி ஓடியது .

அவளை வடபழனியில் டிராப் பண்ணியவன் …நாளை வேலைக்கு போக வேண்டாம் . பர்த்டே பார்ட்டிக்கு வந்தால் போதும் . நம்முடைய திருவான்மியூர் ஹோட்டலில் தான் பார்ட்டி என்று சொல்லிவிட்டு போனான் .

அவள் இறங்கி சென்றவுடன் வெற்றிடமாக இருந்தது ….

கார் சீட் மட்டுமில்லை அவன் இதயமும் தான் .

அவளை விட்டு ஒதுங்க  வேண்டும் என்று எடுக்கும் உறுதிமொழி யாவும் …அவள் கயல்விழியின் படபடப்பில் தொலைந்து போகிறது .

சற்று நேரம் ஸ்டியரிங்கில் தலை சாய்த்து கண்மூடினான். அவ்வளவு சோர்வு! அவன் காயப்பட்ட மனதிற்கு மயிலறகு ஒத்தடம் கிடைக்குமா என்ற ஏக்கம்.

“———“

கட்டிலின் மீது வைத்திருந்த சந்தன வண்ண மைசூர் சில்க் புடவையும் , நேற்று பிரபா பரிசளித்த இரட்டை சரம் கொண்ட  முத்து மாலையும்  அவளை பார்த்து சிரித்தது .

ஆம் …நேற்று பிரபா ..ரேஷ்மிக்கு வளையல்வாங்கும்போது ….

ஸ்வாதிக்கு இரண்டு பவுனில் முத்து மாலை வாங்கியிருந்தான் .

சார் …ப்ளீஸ் …இதெல்லாம் எனக்கு வேண்டாமே ….அவள் கெஞ்சினாள் .

எங்காவது பிசகு நிகழ்ந்து விட்டால்? மீண்டும் ஒரு அவமானம். இம்முறை அவளுக்கு தாங்கும் சக்தியில்லை நிச்சயம் மறித்து போவாள்.

ஸ்வாதி …உங்களுக்கு தவறான எண்ணத்தில் இதை வாங்கி கொடுக்கல .

உங்க மூளையை பயன்படுத்தி என் பிசினஸில் பணம் பார்க்கிறேன் . அதற்கு ஒரு சின்ன காம்ப்ளிமென்ட் … அவளால் மறுக்க முடியாதபடி …ஆணித்தரமாக கூறி …அவள் கையில் திணித்தான் .

அவளால் மறுக்க முடியாதபடி மடக்கிவிட்டான்.

இதை போட்டு கொள்வதா வேண்டாமா ? அவள் மனம் ஊசலாடியது.

உன் திறமைக்கு கிடைத்த சன்மானம் தானே என்றது ஒரு மனம் . ஒரு முறை பட்டும் நீ  திருந்தவில்லையே  என்று திராவகத்தை ஊற்றியது மறு மனம் .

தவித்து தத்தளித்து துவண்டு போனாள்.

நல்லவர்களுக்கு இது தான் பிரச்னை. நாலையும் யோசித்து குழப்பி குழம்பி…. அது ஒரு தனி ரகம்.

——–தொடரும் ——–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!