Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நமக்காக வாழ்வோம் வா

நமக்காக வாழ்வோம் வா♥️1

அத்தியாயம் -1

எனக்கு பிடிக்கலைனா விடுங்களேன்…. சிடுசிடுத்தாள்.

ஏன் பிடிக்கல?

போன வாரம் ஒருத்தன் வந்து மிளகாய் பஜ்ஜி சேமியா கேசரி சாப்பிட்டு என்னை பிடிக்கலைன்னு சொன்னானே அவனை கேட்டீங்களா ஏன் பிடிக்கலைன்னு? பதிலுக்கு பதில் நொடி நேரம் கூட தாமதிக்காமல் வந்து விழுந்தது.



Advertisement

சுப்பு முதலில் வாயை குறை… அதட்டினாள் தேவிகா.

அக்கா ப்ளீஸ் கோடி முறை சொல்லிட்டேன் சுப்புன்னு கூப்பிடாத சுப்ரஜான்னு கூப்பிடு!

ரொம்ப முக்கியம்.   தேவிகா நொடித்துக் கொண்டாள்.

Advertisement

“இல்லையா பின்ன… ” பதிலுக்கு சடைத்துக் கொண்டாள் சுப்ரஜா.

Advertisement

சுபி இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அப்பா வந்து கேட்கப்போறாரு கண்டிப்பு காட்டினாள் அண்ணி சுகன்யா.

அப்போவும் பிடிக்கலைன்னு தான் சொல்வேன். சாதாரணமாய் உதடு சுழித்தாள்.

பையனுக்கு என்ன குறை? சுகன்யாவிற்கு கோபம் வந்துவிட்டது.

Advertisement

அதுதான் நீங்களே சொல்லிடீங்களே பையன்னு.

சுபி அடி வாங்க போற! அதட்டினாள் தேவிகா.

என்ன மிரட்டுற…. உன் புருஷன் காலேஜ் புரபஸர்.

அடியேய் நானும் தான் லக்சரர் தங்கையிடம் பாய்ந்தாள்.

இருந்துட்டு போ… எனக்கு போலீஸ் மாப்பிள்ளை வேண்டாம்.

சுபி நல்ல குடும்பம்,நல்ல மனுஷங்களா தெரியறாங்க. புரியவைக்க முயன்று போராடிக் கொண்டிருந்தாள் சுகன்யா.

அண்ணி எங்க அண்ணன் cognisant எம்பிளாயி எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சென்னையில் வாழறீங்க.

நான் TCS எம்ப்ளாயி அதை மறந்துடாதே… சுகன்யாவிற்கு கோபமான கோபம் நாத்தனார் மீது.

எனக்கு மூனு வேளை கஞ்சி ஊத்த முடியாதுன்னா இந்த மாப்பிள்ளைக்கு இப்படி அவசரமா தள்ளிவிட பார்க்கறீங்க? சுரீர் என்று கேட்டாள்.

இப்படி பேசிட்டே இரு அம்மா வந்து கோணி தைக்கிற ஊசி வச்சு உன் வாயை தைக்கப்போறாங்க. கடுப்பாகி விட்டாள் தேவிகா.

மாப்பிள்ளை தனுஷ் மாதிரி இருக்காரு தெரியுமா? தங்கையை கரைக்க முயன்றாள் தேவிகா.

ஆமா ஆமாம் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி இருக்காரு…. பல்லை கடித்தாள்.

அடி எவடி இவ இப்போ ராயன் தனுஷ் கூட அப்படியே தான் இருக்காரு.

அக்கா தயவுசெய்து ஜோக்குங்கற பேருல இப்படி மொக்க போடாத… கையெடுத்து கும்பிட்டாள்.

பாப்பா…. குரல் கொடுத்துக் கொண்டே வந்தார் நவமணி. தேவிகா,சுப்ரஜாவை பெற்றெடுத்த ராஜமாதா.

உங்கம்மா வந்தாச்சு! குரல் உள்ளே போய்விட்டது சுகன்யாவிற்கு.

என்ன சொல்லுறா? குரலை உயர்த்தினார்.

ஒன்னும் இல்லம்மா… தேவிகா சமாளித்தாள்.

ஏன் மகாராணி முகம் இருண்டு கிடக்கு? சின்ன மகளை கண்டுகொண்டார்.

போலீஸ் மாப்பிள்ளை…. சுகன்யா இழுத்தாள்.

ஏன்…? போலீஸ் மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? முறைப்பாய் கேட்டார்.

இவ்வளவு நேரம் சவடால் விட்டுக் கொண்டிருந்த சுப்ரஜா இப்போது கப்சிப்.

விசாரித்த வரைக்கும் தங்கமான புள்ளைன்னு சொல்றாங்க. நவமணி பாராட்டு பத்திரம் வாசித்தார்.

ஆளும் பேரும்…. சத்தமாகவே முனுமுனுத்தாள்.

ஏன் பேருக்கு என்ன? மன்னர் மன்னன் எவ்வளவு அழகா இருக்கு. புலகாங்கிதம் அடைந்தார்.

ரொம்ப தான்… கொணட்டினாள்.

சுபிம்மா…. மென்மையாய் அழைத்துக் கொண்டே கிருஷ்ணா வந்தான்.

ஆன்… அண்ணா…. கலக்கமாய் பார்த்தாள்.

அவங்க சைடு ஓகே சொல்லிட்டாங்க! நீ என்னம்மா சொல்ற?

அட எவன்டா இவன்… இவகிட்ட கருத்து கேட்டுகிட்டு. கொஞ்சம் குழஞ்சு பேசினா உன் தலையில் மிளகா அரைச்சுடுவா. மகனை அதட்டினார்.

மகளை பெற்ற மகாராசிக்கு தெரியாதா அவள் ஆள் எப்படி பேச்சு எப்படி என்று.

அக்கா உன்னை மாமா கூப்பிடறாங்க பாரு… நவமணியை ஒரு பெண் அழைக்க,பெரியவங்க நாங்களே பேசி முடிவு பண்ணுறோம் நீ பதவிசா இரு!  ஏதாவது கலாட்டா பண்ணி வைச்ச தோசைக் கரண்டியை பழுக்க காய்ச்சி வாயில் வச்சிடுவேன்!மிரட்டிவிட்டு அவர் உள்ளே போய்விட்டார்.

என்ன தேவி சொல்றா? கிருஷ்ணா கவலை கொண்டான்.

அண்ணா அந்தாளு நிஜமாவே போலீஸ் தானா?  அண்ணனிடம் கேட்டே விட்டாள்.

ஏய்… வாயாடி! என்ன பேச்சு இது ஆளு கீளுன்னு…கண்டனமாய் முறைத்தாள் தேவிகா.

அம்பது கிலோ இருப்பாருங்கிற? முக்கிய சந்தேகத்தை கேட்டாள்.

நீ அம்பத்து நாலா? தேவிகா அடக்கமாட்டாமல் சிரித்து விட்டாள்.

நல்லா சிரிச்சுக்கோ உனக்கு மட்டும் தோரணையா ஆறடி உயரத்துல கவர்மெண்ட் காலேஜ் புரபசர் மாப்பிள்ளை.

அறிவு கொழுந்து நீ B. Com பர்ஸ்ட் இயர் அரியரை மூனு  வருஷம் முக்கி திணறி இப்போ தான் கம்ப்ளீட் பண்ணிட்டு எவ்வளவு வாய் பேசுற.

நீ படிச்ச மாதிரி நான் ஒன்னும் ஈஸியான மேத்ஸ் படிக்கல.

B. Com financial account, Business law எல்லாம் படித்திருந்தா உனக்கு கஷ்டம் தெரியும். மூச்சு முட்ட வரிந்து கட்டிக்கொண்டு பேசினாள்.

இன்ட்ரஸ்டிங்… மீசையை நீவி அழகாய் சிரித்துக் கொண்டான் மன்னர் மன்னன்.

ஆம் பெண் பார்க்க வந்த போலீஸ் மாப்பிள்ளை மன்னர் மன்னன்.

தோட்டத்து எலுமிச்சை மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தவன் இவ்வளவு நேரம் இங்கு நடந்த அலப்பறை களை கேட்டுக் கொண்டிருந்தான்.

கூடத்தில் அமர்ந்திருந்தவனுக்கு போன் கால் வரவே சிக்னல் கிடைக்கவில்லை.

என்ன சிம்? பெண் வீட்டுக்கு சொந்தக்கார வாலிபன் கேட்டான்.

“ஜியோ “

ஜியோ இங்கே சரியா சிக்னல் கிடைக்காது… வெளியில் போய் பேசிப்பாருங்க என்றான்.

பேசிக் கொண்டே வீட்டு பக்கத்தில் இருந்த சந்தில் நுழைந்தவன் பின்னால் இதமாய் வீசிய தென்னை  மரக்காற்றின் இதத்தில் அங்கே சென்று நின்றான்.

அடர்ந்த எலுமிச்சை மரத்தின் வாசத்தை நுகர்ந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தவன் பெண்களின் சலசலப்பு கேட்டு  அமைதியாக நின்றுவிட்டான்.

ஒட்டுகேட்கும் சின்னபுத்தி எல்லாம் அவனுக்கு இல்லை.

பேச்சு மொத்தம் அவனை மையப்படுத்தியே இருந்ததால்ஆர்வமாய் நின்றுவிட்டான்.

ப்பா…என்ன பேச்சு பேசுறா…? மலைத்து விட்டான். கொஞ்சம் சிரித்தும் விட்டான்.

அண்ணி விட்டா இவ பேசி புலம்பிட்டே இருப்பா உள்ளே கூட்டிட்டு வாங்க. தேவிகாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சுகன்யா உள்ளே போய் விட்டாள்

உள்ள போய் பேசலாம் எழுந்திரு! கை பிடித்து தங்கையை அழைத்துக் கொண்டு இல்லை இல்லை இழுத்துக்கொண்டு புழக்கடை வாசலை மூடிவிட்டு உள்ளே சென்றாள் தேவிகா.

“——————–“

என்னடா கிங்கு இந்த பொண்ணாவது அமையுமா? நண்பன் சசிதரன் அக்கறையாய் கேட்டான்.

அமைந்தால் நல்லா இருக்கும் என்றான் மென் சிரிப்புடன்.

பதிமூனாவது பொண்ணுடா. பொதுவா பதிமூணு அன்லக்கின்னு சொல்வாங்க.

எனக்கு லக்கியா இருக்கும்னு நினைக்கிறேன்… தலையை கோதி சுகமாய் தென்றல் காற்றை உள்ளிழுத்தான்.

பாரேன் மச்சிக்கு பேச்செல்லாம் ஒரு தினுசா வருது! சிரித்தான் சசிதரன்.

சசி நிஜமாவே எனக்கு பிடிச்சிருக்குடா  அவங்க சைடு ஓகே சொன்னா பேசி முடிக்கிற ஐடியா தான்.

பொண்ணு நல்ல அழகோ?

ம்கூம் நல்ல முக லட்சணமா இருக்காங்க?

அதை தானேடா நானும் கேட்டேன்?சசி சந்தேகம் கேட்டான்.

ம்க்கூம் நீ கேட்டது வேற! லட்சணமா இருந்தா தான் அழகா இருக்காங்கன்னு அர்த்தம்.கண்மூடி சிரித்தான்.

அடேய் என்னடா பொண்ணு பார்த்த உடனே கோனார் தமிழுரை நோட்ஸ் போடற…. சிரித்து விட்டான் சசி.

சும்மா…. வெட்கம் வந்து தடுமாறி நின்றுவிட்டான்.

கிங்கு… நீயாடா இது? சாய்க்க முடியாத மலைன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் நீ மொத்தமா சரிஞ்சு கிடக்குற.

போடா….! வேறு வார்த்தை அவனுக்கு வரவில்லை. மனம் முழுதும் ஒரு குறுகுறுப்பு. நண்பனின் கேலி பேச்சு அவனை அவ்வளவு சிலிர்க்க வைத்தது.

சரிடா நான் போய் ஆக வேண்டிய வேலையை பார்க்குறேன்.

என்னடா வேலை? புரியாமல் நின்றான் மன்னர் மன்னன்.

என்ன போலீசோ நீ! நான் துணை மாப்பிள்ளைடா எனக்கு சபாரி கோட் சூட்னு வாங்கி தைக்க கொடுக்கணுமில்ல அதை சொன்னேன்.

நண்பனின் அதிகப்படியான கேலியில் சிலிர்த்து விட்டான் மன்னர் மன்னன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் என்ற கிராமத்தை சார்ந்த பூமாலை, பாப்பாத்தி தம்பதிகளுக்கு நான்கு ஆண் வாரிசுகள். ஜெயராமன், சரவணன்,எழிலரசன், மன்னர் மன்னன்.

மூத்தவன் ஜெயராமன் மென்பொருள் துறையில் பணி புரிகிறான். அவன் மனைவி சங்கீதா,ஆண் ஒன்று பெண் ஒன்று என அழகான வாழ்க்கை. குடும்பத்துடன் பெங்களுரில் வசிக்கிறான்.

அடுத்த மகன் சரவணன். கல்பாக்கம் அணுமின்னிலையத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான். அவன் மனைவி அஞ்சலி, ஒரு ஆண் குழந்தை அவர்களுக்கு.

அடுத்து எழிலரசன் கோவையில் தோட்டக்கலை துறையில் பணிபுரிகிறான். அவன் மனைவி தீபா. அவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது இன்னும் வாரிசு வரவில்லை.

கடைசி மகன் தான் மன்னர் மன்னன் காவல்துறையில் கான்ஸ்டபிள்.

மன்னனர் மன்னனுக்கு பெண் பார்க்க பெரம்பலூர் மாவட்டம் குரும்பூர் என்ற ஊருக்கு வந்திருக்கின்றனர்.

இங்கே பூவராகன் நவமணி தம்பதிகளுக்கு மூன்று வாரிசுகள். மூத்தப் பெண் தேவிகா.M. SC,Mphil படித்தவள் அவளுக்கு அமைந்த கணவன் சௌந்தர் ராஜன் அரசு கலைகல்லூரியில் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர். தேவிகாவும் திருச்சி காவிரி கலைகல்லூரியில் விரிவுரையாளர்.  தனியார் கல்லூரி என்றாலும் நல்ல ஊதியம் பெறுகிறாள்.

அடுத்து கிருஷ்ணா. அவன் MCA பட்டதாரி.கேம்பஸ் இண்டர்வியுவில் பிளேஸ்மெண்ட் கிடைத்து சென்னைக்கு சென்றான். ஒன்றுவிட்ட அத்தை மகள் சுகன்யாவை அவனுக்கு மணமுடித்தனர். சுகன்யாவும் BE படித்தவள் TCS ல் வேலை பார்க்கிறாள்.

குக்கிராமம்,விவசாய குடும்பம் என்றாலும் பூவராகன் பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அவர் எவ்வளவு கவனம் செலுத்தியும் சுப்பரஜாவிற்கு மட்டும் படிப்பு கொஞ்சம் சண்டிதனம் செய்தது.

பெரம்பலூரில் உள்ள புகழ் பெற்ற விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் தான் படிக்க வைத்தார். படிப்பில் அவள் சுமார் கூட இல்லை அதுக்கு கீழே….

சுப்ரஜா நெட்டையும் அல்லாத குட்டையும் அல்லாத திட்டமான உயரம். ஒல்லியும் அல்லாத பூசணிக்காயும் அல்லாத திட்டமான உடல்வாகு கொண்டவள். பளிச்சென்ற நிறம். அவள் அழகுக்கு முக்கிய காரணமே கண்கள் தான். அவ்வளவு அழகிய கண்கள். நெளி நெளியான அடர்ந்த கேசம் கூடுதல் அழகு.

புரோக்கர் மூலம் வந்த வரன் தான் சுப்ரஜா.

போட்டோ பார்த்த உடனே மன்னர் மன்னனுக்கு கொஞ்சம் தயக்கம் தான். பொண்ணு அழகா இருக்கா நம்மை ஓகே சொல்வாளா?

மன்னர் மன்னன் மாநிறம். கொஞ்சம் ஒல்லி போல தெரிவான்.

பிடித்தால் ஓகே சொல்லட்டும் இல்லை என்றால் வேறு இடம் பார்க்கலாம் என்று திடமாகதான் வந்தான் இங்கே அவள் பேசிய பேச்சில் அவளை அவ்வளவு பிடித்துவிட்டது.

இப்போது அவள் ஓகே சொல்ல வேண்டுமே என்ற தவிப்பு.

——–தொடரும்——–

வணக்கம் தோழமைகளே எல்லோரும் நலம் என்று நம்புகிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி 💕💞

இது ஒரு ஃபீல் குட் கதை. எளிய கதை யதார்த்த நடை. ரொம்ப சின்ன கதை.படித்து பாருங்க ஏதாவது மிஸ் ஆனா உங்களின் மேலான கருத்தை எனக்கு மறக்காம சொல்லுங்க 💞💕 உங்களின் ஊக்கமே எனக்கு வெகுமதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!