Skip to content
Post Views: 3,741
அவன் சாப்பிடுவதை கண்டு அவள் மிரண்டு விட்டாள்.
என்ன அப்படி பார்க்கிற? நான் டிபன் அதிகம் சாப்பிடமாட்டேன். சோறு,குழம்பு, ரசம்,பொரியல் எல்லாம் வயனமா இருந்தா சாப்பாடு நல்லா சாப்பிடுவேன்.
“சாப்பாட்டு ராமன்” உள்ளுக்குள் புகைந்தாள்.
உனக்கு சமைக்க தெரியுமா? கேட்டுக்கொண்டே அப்பளத்தை வத்தக்குழம்பில் நொறுக்கி விட்டான்.
Advertisement
அவளுக்கு புரையேறிவிட்டது.
குக்கா? கோமாளியா? அவன் சட்டென்று கேட்க அவள் திருதிருவென்று விழித்தாள்.
கெட்டித்தயிரை விட்டு பிசைந்து நடுவில் சின்னதாய் குழியை பறித்து வத்தக்குழம்பு ஊற்றி இரண்டையும் பக்குவமாய் கலந்து ரசித்து சாப்பிட்டான்.
Advertisement
தின்னு கெட்டவன்! உள்ளுக்குள் நடுங்கி விட்டாள்.
Advertisement
என்ன கொரிச்சுட்டு இருக்க? அதட்டினான்.
அவ்வளவு தான் சாப்பிடமுடியும்…. நெளிந்தாள்.
அவ்வளவு தான் போதுமா? முருங்கைக்காய் மாங்காய் போட்ட சாம்பார் நல்ல வாசமா இருக்கு. கொஞ்சம் சோத்தை போட்டு சாப்பிடு! கீரையை ஏன் வேஸ்ட் பண்ற?
Advertisement
இல்ல போதும்… அவள் தவித்து போனாள்.
அவள் இலையில் இருந்த கீரையை எடுத்துக்கொண்டான். பே என்று பார்த்துக் கொண்டிருந்தாள்
இந்த ஜவ்வரிசி பாயசமாவது குடி!
எனக்கு பிடிக்காது! தடுமாறினாள்.
என்னதான் உனக்கு பிடிக்குமோ? அலுத்துக் கொண்டான்.
உன்னை தான் பிடிக்காது என்று உள்ளுக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
திருப்தியாய் சாப்பிட்டவன் கை கழுவிவிட்டு வந்தான்.
ஐஸ்க்ரீம் வரவே….சாப்பிடு என்று தனக்கு வந்ததையும் அவளுக்கு கொடுத்தான்.
அவள் கண்களில் அவ்வளவு சந்தோஷம். அவ்வளவு சீக்கிரமாய் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடித்தாள்.
கிளம்பலாமா? என்றவன் டிஷ்யு எடுத்து நீட்டினான்.
அவள் கேள்வியாய் பார்க்க… ஐஸ்க்ரீம் ஒட்டிட்டு இருக்கு என்றான்.
அவசரமாய் துடைத்துக் கொண்டவளுக்கு முகம் சிவந்து விட்டது.
முன்னே சென்றவன் சற்று நின்று அவளுடன் இணைந்து நடந்தான்.
அவனை பார்ப்பதும் குனிந்து நடப்பதுமாக இருந்தாள்.
என்ன கேட்கணும் என்றான் கரகரப்பான குரலில்.
நீங்க காப்பு போட மாட்டிங்களா என்றாள்.
காப்பு?
ம்ம்ம்ம்… கையில… வலது கையை காட்டினாள்.
குற்றவாளி கையில் தான் போடுவேன்!
அதில்ல… உங்க கையில்… முகம் சுருங்கினாள்.
போடணுமா? தலை சாய்த்து கேட்டான்.
இல்ல… போலீஸ்னா போட்டிருப்பாங்களே…
போட்டா தான் போலீசா? சிரித்து விட்டான்.
சு… சும்மா தான் கேட்டேன்.
உனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்குன்னு நினைக்கிறேன். நான் மேக்கப் போட்டுட்டு டேக் ஆக்ஷன் சொன்னா நடிக்கிற சினிமா போலீஸ் இல்லம்மா. நிஜ போலீஸ்.
எனக்கு துப்பாக்கி எல்லாம் இல்லை. லத்தி மட்டும் தான். அவன் அழுத்தமாய் சொல்லவே அவள் சங்கடமாய் பார்த்தாள். நிழல் வேற நிஜம் வேற என்றான்.
அவளுக்கு கண்கள் குளம் கட்டிவிட்டது. எப்படி முகத்திலறைந்த மாதிரி பேசுகிறான். ஏனடா இவன்கிட்ட பேசினோம் என்பது போல உணர்ந்தாள்.
எப்படி இவனுடன் வாழ்க்கை பயணம் இருக்கும்? இவனை பெத்த அம்மாவே தயங்கி தயங்கி பேசுறாங்க. பயம் மனதை கவ்வியது.
வேற ஏதாவது வேணுமா? என்றான்.
வேண்டாம் என்பதாய் தலை அசைத்தாள்.
காலை உணவை தவிர்க்காம கண்டிப்பா சாப்பிடணும் என்றான்.
ம்ம்ம்ம் என்றாள்.
அதன்பிறகு அவனும் பேசவில்லை அவளும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
“————————“
மாப்பிள்ளைக்கு நாங்க நகை, துணி எல்லாம் வாங்கணும் என்றார் பூவராகன்.
அம்மா நான் போய் பார்க்கிறேன். நீங்க இங்கே என்னென்ன வாங்கணும்னு பாருங்க என்றான்.
கோட் சூட்டா, சபாரியா என்றார் பூவராகன்.
இல்லை பேண்ட்,ஷர்ட் பார்ப்போம் என்றான்.
என்ன தம்பி நீங்க? இப்போல்லாம் கோட் சூட் தான் போடறாங்க என்றார்.
இல்ல மாமா எனக்கு பேண்ட் ஷர்ட் போதும் என்றவனை ஒரு தினுசாக பார்த்து வைத்தாள் சுப்ரஜா.
மிக குறைந்த விலையிலும் இல்லாமல் பெரிய பிராண்ட் என்றும் போகாமல் அழகிய இளம் நீள வண்ணத்தில் மெல்லிய கருப்பு கோடு போட்ட முழுக்கை சட்டை தெரிவு செய்து அதற்கு எற்றார் போல் கருநீலத்தில் பேண்ட் வாங்கிக் கொண்டான். மூவயிரத்து எழுநூறுக்குள் முடித்துக் கொண்டான்.
வேற ஏதாவது பாருங்களேன் என்றாள் தேவிகா.
அது தான் வாங்கிட்டேனே என்றான்.
என்ன ஜுவல் வாங்கப் போறீங்க என்றான் வருங்கால மாமனாரிடம்.
கழுத்துக்கு ரெண்டு பவுன் செயின் கைக்கு நாலு பவுன் பிரெஸ்லலெட் வாங்கணும் என்றார்.
கழுத்துக்கு நாலு பவுன் லாங் செயினா வாங்கிடுங்க. ரெண்டு பவுன்ல பிரெஸ்லெட் வாங்கிடுங்க என்று அங்கே பேசிவிட்டான்.
என்ன மனுஷன் இவன் என்று நொந்து விட்டாள் சுப்ரஜா.
உனக்கு என்ன நகை வாங்கணும் என்றான் சுபியிடம்.
அவள் பதில் சொல்லாது நிற்க… உங்க இஷ்டம் தம்பி என்றார் நவமணி.
வளையல், நெக்லஸ், செயின் என்ன வாங்கட்டும் என்றான் மறுபடி அவளை பார்த்து.
நீங்களா பார்த்து ஏதாவது வாங்கிடுங்க என்றார் பூவராகன்.
சரி நான் பார்த்துக்கிறேன் என்றவன் அவன் வீட்டு மனிதர்களோடு சென்று ஐக்கியம் ஆகிவிட்டான்.
“—————————“
துணிமணிகள் வாங்கி முடியவே இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது.
ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு அப்படியே நிச்சயத்துக்கு நகை வாங்கிடலாம் என்றாள் அஞ்சலி.
நிச்சயத்துக்கு நான் பார்த்துக்கிறேன். தாலி சரடு வாங்கும் போது ஏழு பவுனுக்கு வாங்கிடுங்க என்றான் தந்தையை பார்த்து மன்னர் மன்னன்.
அஞ்சலி கொழுந்தனை அழுத்தமாய் பார்த்தாள். அவன் கண்டு கொள்ளவில்லை.
மூத்த மருமகள் மூவருக்கும் நிச்சயம் செய்ய இரண்டு பவுன் செயின் போட்டனர். தாலி பிரித்து கோர்க்கும் போது ஐந்து பவுன் தாலி செயின் போட்டனர். அதை யோசித்து தான் மொத்தமாய் ஏழு பவுனுக்கு தாலி செயினா போடுங்க நிச்சயத்திற்கு நான் வாங்கி கொள்கிறேன் என்றான்.
நவமணி கணவரை நிமிர்ந்து பார்க்க அழுத்தமாய் கண்களை மூடி திறந்தார் பூவராகன்.
அவர்கள் குடும்பத்தின் பேச்சு வார்த்தை நமக்கு எதற்கு என்பதாய் இருந்தது அவர் கண்டிப்பு.
கடைசியா பிறந்த உங்க தம்பி எவ்வளவு விபரம் பார்த்தீங்களா? சோத்தோடு சேர்த்து அவனையும் மென்று கொண்டிருந்தாள் அஞ்சலி.
இப்போ என்னடி உனக்கு பிரச்சனை? கடுகடுத்து விட்டான் சரவணன்.
வரப்போற பொண்டாட்டிக்காக எவ்வளவு யோசிக்கிறாரு பாருங்க!
பொறுமையா பேசு! பக்கத்து டேபிளில் அமர்ந்திருக்கும் மற்றவர்களுக்கு கேட்டு விடுமோ என்ற பயம் அவனுக்கு.
ரொம்ப பண்றாரு உங்க தங்ககம்பி… நொடித்துக் கொண்டாள்.
இப்போ நான் உனக்கு என்ன பண்ணல? மாசம் ரெண்டு சீட்டு GRT ல் கட்டுற? நாலு மாசத்துக்கு முன்னாடி தானே எட்டு பவுனுக்கு வளையல் வாங்கி கொடுத்தேன்.
இல்லைன்னு யாரு சொன்னா? கல்யாணத்துக்கு முன்னாடியே எப்படி யோசிக்கிறாரு பாருங்க அதை சொன்னேன். என்றாள் நொடிப்புடன்.
கல்பாக்கம் அணுமின்னிலையத்தில் நல்ல பணியில் இருக்கிறான் சரவணன். ஒன்றரை லட்சம் கிட்டத்தட்ட சம்பளம். அவன் மனைவிக்கு மனம் அடித்துக் கொள்வது தான் ஆச்சரியம்.
வீட்டுக்கு எப்போது போய் மற்ற இரு ஓர்படிகளுக்கு இதை எல்லாம் சொல்வோம் என்று காத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
மேடம் ஜூஸ் என்று சுபிக்கு முன் கொண்டு வந்து வைத்தார் பேரர்.
ஜூஸா? அவள் சுற்றிலும் பார்க்க நான்கு டேபிள் தள்ளி தன் பெற்றோருடன் அமர்ந்திருந்தவன் குடி என்பதாய் கண்ணால் பேசினான்.
சாப்பிட்டதே செரிக்கலை… இது வேறயா… புலம்பிக் கொண்டே குடித்தாள்.
எல்லாரும் கிளம்பி பேசிக் கொண்டிருக்க அவள் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை திணித்து விட்டு அவன் பில் பே பண்ண போய்விட்டான்.
எவ்வளவு திமிரு பாரு! இவனை கட்டிக்க போறேன் இல்ல எனக்கு இது தேவைதான் .இவன் படுத்துற பாட்டுல மண்டை சூடாகி இதை தேய்ச்சு தான் குளிக்கணும் என்று சிடுசிடுத்தவள் அந்த
எலுமிச்சையை கைப்பைக்குள் போட்டுக் கொண்டாள்.
விடைபெற்றுக் கொண்டு இருவீட்டாரும் கிளம்பி விட்டனர்.
தன்னை பார்க்கிறானா என்று ஓர விழியால் பார்த்தாள். அவன் கண்டுகொள்ளாது வேனில் ஏறிவிட்டான்.
அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. முதல் ஆளாக வேனில் ஏறிக் கொண்டாள்.பாரமான இதயத்துடன் ஜன்னல் கம்பியில் தலைசாய்த்து கண்மூடினாள்.
மாப்பிள்ளை கொஞ்சம் கரார் போல என்றார் நவமணி.
தங்கமான பிள்ளை என்று உணர்ந்து கூறினார் பூவராகன். மூத்த மகள் தேவிகா நிச்சயத்தின் போது பதினைந்தாயிரத்துக்கு கோட் சூட் வாங்கியதே திருப்தியாக இல்லை அவளின் மாமியாருக்கு.
பெண் வீட்டாரின் பணம் தானே என்று எண்ணாமல் இயல்பாய் எளிமையாய் இருக்கும் மாப்பிள்ளையை எந்த மாமனாருக்கு தான் பிடிக்காது?
என் மனசுக்கு படறது சொல்றேன். நீ வேணா பாரு நம்ம பொண்ணுக்கு இதை விட பொருத்தமா ஒருத்தர் கிடைக்க மாட்டாருன்னு நம்ம பூரிக்குற மாதிரி நடந்துக்குவாரு என்றார்.
என்னவோ சொல்றீங்க… உங்க அனுபவத்துல சொல்றது நல்ல வார்த்தையா இருந்தா போதும் என்றார் நவமணி.
அண்ணன் சொல்றது சரிதான் அலட்டல் இல்லாத பையனா இருக்காரு அண்ணி என்றார் உடன் வந்த உறவுக்கார பெண்மணி.
சுபி இது உனக்கு மாப்பிள்ளை கொடுக்க சொன்னார் என்று பையை அவளிடம் சேர்ப்பித்து விட்டு கீழே இறங்கிக் கொண்டாள் தேவிகா.
அவளுக்கு இங்கே திருச்சியில் தில்லை நகரில் தான் வீடு.
என்னவாக இருக்கும் என்று ஆர்வமாக பையை பிரித்தாள். அவள் ஆசையாய் பார்த்திருந்த பீச் வண்ண மென்பட்டு.
அய்யய….இதெல்லாம் என்ன கலரு? இதை போய் பார்க்கிறீங்க என்று அஞ்சலி கேலி செய்ததினால் வைத்து விட்டாள்.
பதினொராயிரம் ரூபாய் கொண்ட அந்த புடவையை அவன் வாங்கி தேவிகாவிடம் கொடுத்தனுப்பி இருக்கிறான்.
சுப்ரஜாவிற்கு எப்படி உணரவேண்டும் என்று கூட தோன்றவில்லை. பையை மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் கண்மூடிக் கொண்டாள்.
வேன் கிளம்பி திருச்சியை கடந்து நாலு கிலோமீட்டர் கூட வரவில்லை. டோல் கேட் வருவதற்குள் குடலை புரட்டியது.
அசௌகரியமாய் கண்ணாடி ஜன்னலை திறக்கும் மகளை கண்டு கொண்ட நவமணி வாந்தி வருதா சுபி என்றார்.
ம்ம்ம்ம்ம் என்றாள் சுரந்த உமிழ் நீரை வெளியில் துப்பியபடி.
ஒரு எலுமிச்சம்பழம் இருந்தா மோந்துக்க சுபி என்றார் உறவுக்கார அத்தை.
சட்டென்று நினைவு வந்தவள் கைப்பையில் இருக்கும் எலுமிச்சையை எடுத்து முகர்ந்து கொண்டாள்.
சற்று நேரம் மௌனித்து கண்மூடி இருந்தவளுக்கு லேசாய் சிரிப்பு எட்டி பார்த்தது.
“——————–“
வீடு வந்த உடனே அஞ்சலி மூத்த ஓர்ப்படி சங்கீதாவிற்கும் இளைய ஓர்படி தீபாவிற்கும் கான்பிரன்ஸ் காலில் அழைத்து விட்டாள்.
அக்கா உன் புருஷன் எம்புருஷன் எல்லாம் தெண்டம். சின்னவனை அடிச்சிக்கவே முடியாது வினையம் புடிச்சவன் என்றாள்.
என்னாச்சு?என்று ஆர்வமாகி விட்டனர் மற்றைய இருவரும். சுள்ளான் மாதிரி இருந்துகிட்டு எப்படி யோசிக்கிறான். பொம்பள தோத்தா போ என்றாள்.
என்னாச்சு இப்படி புலம்புற? ஆவல் அதிகமாகிவிட்டது சங்கீதாவிற்கு
பொண்டாட்டிக்கு ஏழு பவுனில் தாலி சரடு போட்டுவிடுங்க நான் நிச்சயத்திற்கு நகை வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டான்.
பொண்ணு வீட்டுகாரிங்க எவ்வளவு விபரங்கிற. நாப்பதாயிரம் அம்பதாயிரத்துக்கு புடவை பார்க்குறாளுங்க.
அப்புறம்… தீபாவிற்கு அடக்க முடியாத ஆர்வம்.
விடுவேனா நானு… எங்களுக்கெல்லாம் இருபத்தஞ்சாயிரத்துக்குள்ள தானே வாங்குனீங்கன்னு கேட்டு விட்டேன்.
என்ன கோபம் வருது தெரியுமா இந்த மன்னாருக்கு… எல்லாருக்கும் வாங்கின
மாதிரியே வாங்குங்க போதுங்கிறான்.
அந்த பொண்ணை கூட்டிட்டு போய் சாப்பிட வாங்கி கொடுக்குறான். ஜூஸ் வாங்கி கொடுக்குறான்.
அட ஏங்கா நீ வேற… அவன் ஒரு சிடுமூஞ்சி. பத்து லட்சம் கொடுத்தாலும் பத்து வார்த்தை பேச மாட்டான் என்றாள் தீபா.
இத்தனைக்கும் தீபா பூமாலையின் ஒன்றுவிட்ட தங்கை மகள்.
புது பொண்டாட்டி ஜோருல நாலு வார்த்தை பேசுவானா இருக்கும் என்றாள்.
இரவு போன் செய்து பேசுவான் குறைந்த பட்சம் மெசேஜ் அனுப்புவான் என்று எதிர்பார்த்தாள் சுப்ரஜா.
ஏமாற்றமா என்று அவளுக்கு உணர தெரியவில்லை. அடிக்கடி போன் எடுத்து பார்த்தவள் அயர்ந்து உறங்கி விட்டாள்.
காலையில் காபி குடிக்கும் போது பூவராகன் சொன்னார் சின்ன மாப்பிள்ளை நைட் போன் பண்ணினாரு பத்திரமா வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டோமான்னு கேட்டார்.
அப்பாக்கு அழைத்திருக்கிறான் என்று எண்ணிகொண்டவள் அமைதியாய் போய் டிவி பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
சுபி டிபன் சாப்பிட்டு பெரம்பலூர் போய் உன் பிரண்டோட சித்தி நல்ல மாடலா ஜாக்கெட் தைப்பாங்கன்னு சொல்வியே அங்கே போய் தைக்க கொடு என்றார் நவமணி.
ம்ம்ம்ம் என்றாள்.
இன்னும் மூனு நாளில் வேணும்னு விபரமா சொல்லி கொடு என்றார்.
ம்ம்ம்ம்ம் என்றாள்.
“—————–“
என்னடி புது பொண்ணே அடிக்கடி ட்ரீம் மோடுக்கு போயிடற… கேலி பேசி சிரித்தாள் தோழி மீனாட்சி.
அவள் சித்தியிடம் தான் ஜாக்கெட் தைக்க வந்திருக்கிறாள்.
அதெல்லாம் ஒண்ணுமில்ல என்று சிரித்தாள்.
மாப்பிள்ளை எப்படி இருக்காரு? போட்டோ இருந்தா காட்டேன் என்றாள் மீனாட்சி.
போட்டோ இல்லையே மீனு என்றாள்.
பொய் சொல்லாதடி அவர் எனக்கு ப்ரோ தான் நம்பி காட்டு என்றாள் விடாப்பிடியாய்.
நிஜமா போட்டோ இல்லை மீனு என்று உதடு பிதுக்கினாள்.
நம்புற மாதிரி இல்லையே…. மீனு கேலியாய் சிரித்தாள்.
நம்பாட்டி போ!
சுபி உனக்கு மாப்பிளை ஓகே தானே…? தோழியை கூர்ந்து பார்த்தாள்.
ம்ம்ம்ம் என்றாள் பெருமூச்சுடன்.
உனக்கு உண்மையிலே பிடிச்சிருக்கா சுபி?
பிடிச்சிருக்கோ இல்லையோ ஏத்துக்கணும். நாளை மறுநாள் நிச்சயதார்த்தம்.
என்னடி இப்படி சொல்ற…? கவலை ஆகிவிட்டாள் மீனு.
மாப்பிள்ளை போலீஸ் தானே?
ஹ்ம்ம்… கள்ளக்குறிச்சி ஸ்டேஷனில் கான்ஸ்டபிள்.
நல்ல ஜைஜான்டிக்கா பாடி பில்டர் மாதிரி இருக்காரா?
இல்லை என்பதாய் உதடு பிதுக்கியவள் சுமாரா இருக்காரு என்றாள்.
அவளுக்கு மனம் ஒப்பவில்லை. தான் எதிர்பார்த்த வாழ்க்கை இதுவல்ல என்ற வருத்தம்.
தன் தகுதிக்கு தான் இந்த வாழ்க்கை. நன்றாக படித்திருந்தால் நல்ல வாழ்க்கை அமைந்திருக்கும் என்ற வருத்தம் அவளை அதிகம் வாட்டியது.
error: Content is protected !!