கருணாம்பிகை, வில்வா, பாரி மூவரும் டெல்லிக்கு குடி பெயர்ந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
Advertisement
ஒரு அப்பார்ட்மென்டில் ஒன் பி.ஹெச்.கே வீட்டை வாடகைக்கு பிடித்திருந்தார்கள். கருணாவிற்கு இருந்த ஒரு படுக்கை அறையை கொடுத்து விட்டு நண்பர்கள் இருவரும் ஹாலை எடுத்து கொண்டார்கள்.
இவர்கள் இருக்கும் வீடு ஒரு பெரிய அடுக்கு மாடி குடி இருப்பில் இருந்தது. அங்கிருந்து கருணாவின் கிளாஸ் நடந்து செல்லும் தொலைவிலே இருந்தது.
Advertisement
Advertisement
புதிய ஊர், புதிய சூழ்நிலை, பல தரப்பட்ட மக்கள் என்று இந்தியாவின் தலை நகரம் பாரியையும் வில்வாவையும் பெரிதாக கவர்ந்தது.
இருவரும் சேர்ந்து பைக் ஒன்றை வாங்கிகொண்டார்கள். அதிலே தினமும் வேலைக்கு சென்று வருவார்கள். சில சமயம் நோயாளிகள் வீடுகளுக்கு சென்று பயிற்சி கொடுக்கும் படி இருக்கும். சில சமயம் மருத்துவமனையிலே டியூட்டி இருக்கும். சென்னையில் செய்வதை போல ஒரே இடத்தில இருவருக்கும் டியூட்டி அமையாது. அதனால் சில நேரங்களில் இருவரும் தனி தனியே செல்ல வேண்டி வரும்.
Advertisement
முதலில் சற்றே வருத்தமாக இருந்தாலும், போக போக இருவரும் பழகி கொண்டார்கள்.
வேலை நேரம் முடிந்ததும் இருவரும் ஒன்றாக தானே இருக்கிறார்கள்.
ஆனால் இந்த சிறு இடைவேளி ஒரு விதத்தில் இருவரின் தனி திறமையை வெளிக் கொண்டு வந்தது என்றே கூறலாம்.
பாரி சிரித்துக்கொண்டே இன்னொரு அடுப்பில் டீக்கு எல்லாம் சேர்த்து அடுப்பில் வைத்தான்.
“பாரி, முதல்ல தண்ணீர்ல டீ தூள் போட்டுட்டு, அப்புறம் கொதி வந்ததும் பால் சேர்த்தா நல்லா இருக்கும் ப்பா..” என்றார் அங்கே இருந்து எட்டி பார்த்த சுமதி.
“ஏன் சொல்லமாட்ட… உன் பிள்ளைகளுக்கு வடிச்சு கொட்டுறான் இல்ல… இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ.. “ என்றார் பாட்டி மருமகளிடம்.
உடனே, “ஏன் பாட்டி அப்படி சொல்றீங்க? நாங்க சேர்ந்து தானே வேலை செய்றோம்” என்று பாரி கூறவும்.
“அதானே” என்று பின் பாட்டு பாடினான் வில்வா.
அடுப்படி பக்கமே தலை வைத்திராத பாரியும் வில்வாவும் இப்பொழுது அவ்வளவு அழகாக சமையல் செய்கிறார்கள். பாட்டி தான் பெரும்பாலும் வீடியோ அழைப்பில் இருவருக்கும் பக்குவம் சொல்லி கொடுப்பார்.
“ஒரு தக்காளி பழத்தை கரைச்சு விடு பாரி..”
“நான் கொடுத்துவிட்ட குழம்பு மிளகாய் தூள் இருக்குல்ல.. அதை அந்த புளி கரைசல்ல போடு வில்வா, மூணு ஸ்பூன் போடு, இன்னும் இரண்டு டம்பளர் தண்ணீர் ஊத்து.. மஞ்சத்தூள் போடு.. எல்லாம் சேர்த்து நல்லா கலந்து விடு”
வில்வா கலக்கும் பொழுது, அந்த பக்கம் டீ கொதித்து வரவும் பாரி அதை இறக்கி வடிகட்டினான். மூன்று கப்புகளில் டீயை நிரப்பினான்.
“இருங்க பாட்டி நான் போய் கருணாம்பிகைக்கு கொடுத்துட்டு வரேன்” என்று பாரி வெளியே சென்றான்.
“வில்வா மெதுவா வாணலில் இப்ப இதை ஊத்து, கரண்டி வைத்து ஒரு தடவை எல்லாம் சேர்த்து கிண்டிவிடு..”
“இப்ப கால் மணி நேரம் கொதிக்கும்.. நீயும் பாரியும் டீ குடிச்சிட்டு வந்து அப்புறம் எனக்கு கூப்பிடுங்க..”
“சூப்பர் டீ பாரி” என்று பாரியை பாராட்டி கொண்டே டீயை ரசிச்சு குடித்தான் வில்வா.
பிறகு மீண்டும் பாட்டியை அழைத்தனர். குழம்பை காட்டவும், “அவ்வளவு தான்.. இப்ப ஒரு அரை ஸ்பூன் வெல்லம் போட்டு இறக்கிடுங்க..”
பார்க்கவே குழம்பு தகதக தங்கம் போல மின்னியது.
“பாட்டி சூப்பர் பாட்டி…ஐ லவ் யூ பாட்டி” என்று அங்கே இருந்தே ஆர்பரித்தான் வில்வா.
காலை ஏழு மணிக்கு எல்லாம் சமையல் தயாராகி விட்டது.
கருணாவிற்கு படிப்பதற்கு நிறைய இருந்தது. இருந்தும் நான் சமைக்கிறேன் என்று வருபவளை இருவரும் வேண்டாம் என்று கூறிவிடுவார்கள்.
காலை மூன்று மணிக்கு எழுந்து படிப்பவள், ஏழரை மணிக்கு கிளாஸ்ஸிற்கு செல்வாள். மாலை வர ஐந்து ஐந்தரை ஆகிவிடும், மீண்டும் ஏழு மணிக்கு படிக்க உட்கார்ந்தால் என்றால் பத்துமணி வரை படிப்பாள்.
இவர்கள் இருவரும் பத்து மணிக்கு தான் வேலைக்கு செல்ல வேண்டும். காலை கருணாவை அவள் வகுப்பில் விட்டு விட்டு, இருவரும் அங்கே பக்கத்தில் இருந்த கிக் பாக்ஸிங் கிளாஸில் சேர்ந்திருந்தார்கள். இல்லை கருணாவால் சேர்க்க பட்டிருந்தார்கள்.
க்ளாஸ் முடித்து வீடு வந்து கிளம்பி வேலைக்கு செல்வார்கள். அதனால் காலையிலே சமையலை முடித்து விடுவார்கள்.
காலை மூவரும் பாட்டி தயார் செய்து கொடுத்திருந்த சத்துமாவில் கஞ்சி போட்டு குடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள்.
அன்று வகுப்பிற்கு செல்லும் வழியில், “டேய் அண்ணா, எப்படி போகுது பாக்ஸிங் கிளாஸ்?” என்றாள் கருணா.
“போகுது போகுது.. “
“பாரிவேந்தன், நேத்து அவினாஷ் கிட்ட பேசும்போது ஆன்லைன் ஹிந்தி கிளாஸ் பத்தி கேட்டிருந்தேன். அவனுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்க எடுக்கிறாங்களாம். நீங்க இரண்டு பேரும் ஈவினிங் சேர்த்துக்கோங்க, அவினாஷ் கிட்ட பேசுங்க, என்ன?”என்றாள் இப்பொழுது பாரியிடம்.
“ஹிந்தி கிளாஸ்ஸா?” என்று இருவரும் அலறினார்கள்.
“நானெல்லாம் கூட இருக்கவங்க கிட்டவே கத்துக்கிட்டேன். ஆறு மாசம் ஆச்சு இங்கே வந்து, நீங்க இரண்டு பேரும் இன்னும் கத்துக்கவே இல்லை. இப்ப கிளாஸ்க்கு தண்ட செலவு தானே?” என்றாள் இருவரையும் முறைத்து கொண்டு.
“நாங்களே கத்துப்போம்.. கிளாஸ் எல்லாம் வேண்டாம்” என்றான் வில்வா.
அதற்குள் அவள் வகுப்பு வரவும் நண்பர்களிடம் விடை பெற்று கிளாஸ் உள்ளே சென்றுவிட்டாள்.
“சின்ன வயசுல இருந்தே நம்மளை விடாது கருணா தான் டா” என்று இருவரும் புலம்பி கொண்டே பாக்ஸிங் கிளாஸ் அருகில் வந்தனர்.
அப்பொழுது அதிவேகமாக ஒரு பைக் இவர்களை உரசுவதை போல வந்த முன்னே நின்றது.
“யாருடா இது?” என்று இருவரும் கோவமாக பார்த்தனர்.
“நடு ரோட்டுல என்ன ஊர்வலமா போறீங்க” என்று ஹிந்தியில் இவர்களை கண்டித்துவிட்டு வண்டியில் இருந்த இருவரும் தங்கள் தலை கவசத்தை கழட்டினார்கள்.
இவர்கள் இருவரும் ‘ஆங்’ என்று வாயை பிளந்துகொண்டு வண்டியில் இருந்து இறங்கிய இருவரையும் பார்த்தனர்.
அழகான இரு பெண்கள்.. அழுக்கு ஜீன்ஸ், டீ ஷர்ட்.. முறுக்கேறிய கைகள்… கையில் ஒரு செப்பு காப்பு, ஒற்றை காதில் மட்டும் ஒரு வளையம்.. கொஞ்சம் முரட்டு தனமாக தோற்றம் அளித்தனர்.
“குழந்தைகளுக்கு இங்கே என்ன வேலை?” என்று இவர்களை பார்த்து ஹிந்தியில் கூறி விட்டு இருவரும் உள்ளே சென்றனர்.
அவர்கள் கூறியது இவர்களுக்கு புரியவில்லை. இருந்தாலும் தங்களை தான் கிண்டல் அடித்துவிட்டு செல்கிறார்க்ள என்று புரிந்தது.
“டேய் வில்வா.. இதுக்காகவாச்சும் ஹிந்தி கத்துக்கணும்டா“
“ஆமா பாரி.. இன்னிக்கே அவினாஷ் கிட்ட பேசிடுவோம் “
ஒரு தீர்மானத்தை எடுத்துக்கொண்டு இருவரும் உள்ளே சென்றார்கள்