Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே – 2

“ஆச்சி… இங்கதான் இருக்கியா!! ஆமா நீ எதுக்கு இங்க இருக்க அவளுக்கு நீ என்ன வேலைக்காரியா பெத்துக்கிட்டவளுக்கு அதைப் பாத்துக்கவும்  தெரியும் நீ வீட்டுக்குப் போ” என்றான் தள்ளாடிக்கொண்டே.

 

 



Advertisement

அவளிடம் பதிலில்லை என்றதும் அமைதியாக நின்றவன் அவளைக் கொஞ்சம் நெருங்கி  “நல்லாருக்கியா ஆச்சிமா உன்னைய என் கண்ணுலயே காட்ட மாட்டறாங்க” என்றான் அத்தனை காதலையும் விழிகளில் சுமந்து.

 

Advertisement

 

Advertisement

அவனை இயலாமையோடு நோக்கியவள் விழிகள் கலங்க “ஏன் மாமா இப்படி பண்றீங்க” என்றவளுக்கு அழுகையில் வார்த்தைகள் வரவில்லை மகளைத் தன்னோடு  சேர்த்து அனைத்துக்கொண்ட அன்னம்மா கணவனைப் பார்க்க.

 

Advertisement

 

“அய்யா ஏன்யா இப்படி… அது முடிஞ்சு போய்டுச்சு கொஞ்சம் மனசை மாத்திக்க பாரு” என்று அவன் கையைப் பிடித்தார் மாசிலாமணி.

 

“எதுவும் முடியல மாமா எதுவும் முடியல எல்லாம் உங்க மகளால அந்தப் பிசாசால தான் இந்தப் பிரச்சனை எல்லாமே, அவ தலைகீழா நின்னாலும் என் பக்கத்துல நிக்கக்கூட அவல நான் விடமாட்டேன் எனக்கு ஆச்சி வேணும் எனக்கு அவளை நீங்கக் கட்டிக்குடுத்துதான் ஆகணும் வேற யாரையும் மாப்பிள்ளையா கூட்டிட்டு வரப் பாத்தீங்க இங்க கொலை விழும்” என்றான் மிரட்டலாக.

 

“உங்கள நான் எப்படி கல்யாணம் செஞ்சுக்க முடியும் நீங்க என் அக்கா புருஷன் அது உங்களுக்கு நினைப்பிருக்கா அதோட நானும் எத்தனை தடவை சொல்லிட்டேன் உங்கமேல எனக்குக் காதல் வந்ததில்லைன்னு” என்றாள் காமாட்சி இப்பொழுது குரல் உயர்த்தி.

 

 

“அப்போ நான் ஆசையா வாங்கிக்குடுத்ததெல்லாம் எதுக்கு டி வாங்கி வெச்சுக்கிட்ட வளவி, தாவணி, பொட்டு, பூவுன்னு… தேங்க்ஸ் மாமான்னு சிரிச்சுகிட்டே சொல்லித் துள்ளிக்கிட்டு போவியே,  நல்லா இருக்கா மாமான்னு அலங்காரம் பண்ணிட்டு வந்து நின்னு கேப்பியே அப்போ அதெல்லாம் என்ன” என்றான் தடுக்க வந்த மாமனாரை தள்ளிக்கொண்டு முன்னில் வந்து.

 

 

“ஆமா வாங்கிக்கிட்டேன் போட்டுகிட்டேன் உங்ககிட்ட காமிச்சு கேட்கவும் செஞ்சேன் ஏன்னா என்னோட அத்த மகனா உங்களைப் பிடிக்கும்,  அத்தமகன்ற உரிமைல தான் அப்படி செஞ்சேன்,  நீங்க என்னைக் கல்யாணம் கட்டிக்குற அளவுக்கு யோசிச்சிருப்பீங்கன்னு சத்தியமா எனக்குத் தெரியாது  மாமா,  வீட்ல பாத்து உங்களுக்கு என்னய பேசினப்போ கூட  உங்க இஷ்டம்ப்பான்னு  தான் சொன்னேன்”.

 

“என்மேல ஆசைப்பட்டு நீங்கதான் அத்தைகிட்ட சொல்லிப் பேசச் சொன்னீங்கன்னு அப்புறம் தான் எனக்குத் தெரிஞ்சுது இதுல எங்க என்னோட காதலை நீங்கப் பாத்தீங்க” என்றாள்.

“சரி உனக்குக் காதல் இல்ல… ஆனா எனக்கு இருந்துச்சுடி எட்டு வருஷ காதல் அதைத்தான் உன்  அக்கா குழி தோண்டி பொதச்சுட்டா ராட்சசி” என்று உறுமினான்.

 

“அவளை மட்டும் எதுக்கு தப்பு சொல்றீங்க மனசுல ஒருத்தி இருக்கும்போது இன்னொருத்தியை எப்படி தொட முடிஞ்சுது அதுலயே உங்க காதலோடு லட்சணம் தெரிஞ்சிடுச்சு,  இன்னும் அந்தக் கருமத்துலதான விழுந்து உருளுரீங்க” என்றவள் கன்னத்தைப் பதம் பார்த்தது அவன் கரம்.

 

 

“ஐயோ என் புள்ள” என்று அன்னம் மகளை அரவணைக்க முதல்முறையாக மருமகனின் சட்டையைப் பிடித்துவிட்டார் மாசிலாமணி.

 

 

“இங்கபாருலே நீ அடிக்கவும் மிதிக்கவும் நான் பிள்ளைகளைப் பெத்து வளக்கல, என் மக சொன்னதுல என்ன தப்பு?  மீனா தப்பு பண்ணினாதான் இல்லனு சொல்லல அப்போவே அவ செவுள்ள ரெண்டு போட்டு அவளை இழுத்துட்டு வந்து என் முன்னாடி நீ போட்டிருந்தாகூட அவ முதுகு தோலை நான் உரிச்சிருப்பேன் ஆனா அங்க என்ன நடந்துச்சு,  நடந்த தப்புக்கு நீங்க ரெண்டுரும்தான் காரணம் அதுக்கு என்ன வழின்னு யோசி” என்றார் மாசிலாமணி.

 

 

 

“வழியா?? ஒரே வழிதான் உங்க மூத்த மகளை வெட்டிப்போட்டு இவளைத் தூக்கிகிட்டு போறது” என்றவன் “ஆச்சி உன்னைய எவனுக்கும் விட்டுகுடுக்க மாட்டேண்டி குடுக்க மாட்டேன் இப்படியே வீம்பு புடிச்ச உன் அக்காவை மாதிரியே தாலி கட்ட முன்னவே உன்னைய என் புள்ளய சுமக்க வெப்பேன்” என்றவன் தள்ளாடிக்கொன்டே வெளியில் நடக்க காமாட்சியின் விழிகளில் அப்பட்டமான பயம்.

 

 

 

மீனாவை ரூமிற்க்கு மாற்றிவிட்டனர் மிகவும் அசதியில் உறங்கிக்கொண்டிருந்தாள் அவளைத் தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார் அன்னம்.

 

 

“மீனா… மீனா எழுந்துக்கோ குழந்தைக்குப் பால் குடுக்கணும் தொண்டை காஞ்சு போய்டும்” என்று அவளுக்குக் கூற.

 

 

 

“மச்… சும்மா இருமா நொச்சு நொச்சுன்னு இப்போதானே குடிச்சான் தூக்கம் வருது” என்றாள் அவள்.

 

 

“செவுலு பேந்திடும் எழுந்துருடி பிள்ளையைப் பெத்துட்டா ஆச்சா தூக்கம் வருதாம் தூக்கம் உனக்கு எப்படிடி வருது பாரு அந்த மனுஷனை பாரு அவர் நிம்மதியா தூங்கி எத்தனை மாசம் ஆச்சு தெரியுமா” என்க.

 

 

 

“அன்னம் என்ன பேசுற… இப்போ இதெல்லாம் தேவையா நல்லபடியா பிள்ளையோட வீட்டுக்குப் போகலாம்” என்றவர் விழிகள் அங்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்த இளைய மகளின் மீது படிந்தது,  என்ன செய்யப் போகிறேன் எப்படி காக்க போகிறேன் என் பிள்ளைகளின் வாழ்வை என்று மனம் சஞ்சலமடைந்தது.

 

 

“நான் வெளில இருக்கேன்” என்றவர் கதவை அடைத்துவிட்டு வெளியில் சென்றார் பால் குடித்து முடித்த  குழந்தையை அன்னம் தூக்கிக்கொள்ள “மாமா வரலையா” என்றாள் மீனா தங்கையைப் பார்த்துக்கொண்டே அவளை உக்கிரமாக முறைத்து நின்றார் அன்னம்.

 

 

“அத்த எங்க” என்ற அவளின் அடுத்த கேள்வியை முடிக்கும் முன் வெளியில் சென்றுவிட்டாள் காமாட்சி.

 

 

“என்மேலதான அவங்களுக்கு கோபம் கொழந்த மேல என்ன இவனைப் பாக்க கூட வரல” என்றவளை சட்டை செய்யமல் பிள்ளையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு வெளியில் சென்ற அன்னம் “என்னங்க பாப்பாவை கூட்டிட்டு நீங்க வீட்டுக்குப் போங்க இங்க நான் பாத்துக்குறேன், ரமேஷ்கிட்ட எனக்குத் துணி கொடுத்துவிடு ஆச்சி நீ வர வேண்டாம் அம்மா இங்க பாத்துக்குறேன் நீ வீட்டுக்குப் போ” என்றார் அன்னம்.

 

 

அதுதான் சரி என்று மாசிலாமணிக்கும் தோன்றியது மாப்பிளை அந்தக் கோலத்தில் வந்து பேசிவிட்டு சென்றதும் வீட்டிற்கு போவதை தள்ளிவைத்துவிட்டு இருவரும் மகளுடன் இங்கேயே இருந்துவிட்டனர்.

 

 

நேரம் பத்து மணியை நெருங்கி இருந்தது “சரி பாத்துக்கோ” என்ற மாசிலாமணி மகளுடன் வெளியில் வந்து காரை எடுத்தார், சொந்தமாக வண்டி உள்ளது அதில்தான் மகளை அழைத்துவந்திருந்தார் பிரசவத்திற்கு  தகப்பனும் மகளும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை வீட்டை அடைந்ததும் வண்டியிலிருந்து இறங்கி கேட்டைத் திறந்துகொடுத்தவள் மீண்டும் அதை அடைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

 

 

வண்டி சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த முத்துலட்சுமி “என்ன ஆச்சி வந்துட்ட அங்க யாரு இருக்கா”  என்று கேட்க “அம்மா இருக்காங்க அத்த” என்றவள் அவள் அறைக்குள் நுழைந்துகொண்டாள்,  யோசனையாக அவளைப் பார்த்திருந்த முத்துலட்சுமி பின்னில் வந்த தம்பியைக் கேள்வியாகப் பார்க்க.

 

 

“ரகு ஹாஸ்பிடல் வந்து ஒரே ரகலைக்கா, ஆச்சியை அடிச்சுட்டான் என் பிள்ளையை என் கண்ணுமுன்னாடியே அடிச்சி…” என்றவர் விழிகள் கண்ணீர் சொரிய அந்தப் பெரியமனிதர் சிறு குழந்தையாகத் தேம்பினார்,  தளர்வாகச் சோபாவில் அமர்ந்தார் லட்சுமி.

 

 

“நான் யாருக்குனு பாப்பேன் இவங்க ரெண்டு பேர் செஞ்ச தப்புக்கு என் பிள்ளையைப் போட்டுப் படுத்தி எடுக்குறாங்க உன் மவன் என் மகளை மிரட்டிட்டு போயிருக்கான் என் முன்னாடியே என் மககிட்ட கேவலமா பேசிட்டு போறான்,  நான் தூக்கி வளத்த பிள்ளையாக்கா இது நான் பெத்ததும் வழிமாறி போச்சு வளத்ததும் வழிதவறிடுச்சு” என்றவர் குரல்  இடற தம்பிக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியாமல் தவித்து நின்றார் முத்துலட்சுமி.

 

 

முத்துலட்சுமியின் இருபத்தி இரண்டாம் வயதில் அவரைப் பெண் கேட்டு வந்தனர் ராஜன் குடும்பத்தினர் அப்பொழுது ராஜனுக்கு முப்பது வயது நல்ல உத்தியோகம் சம்பளம் ஆள் பார்க்கச் சினிமா நாயகன்போல இருந்தார் திருமணம் நல்ல படியாக நடந்தது.

 

 

ராஜன் அவரின் குடும்பத்தோடே பெரிதாக ஓட்டமாட்டார் என்பது போகப் போகத்தான் தெரிந்தது,  இவர்கள் யாருக்கும் நாகரிகம் இல்லை என்பது அவரின் எண்ணம் மனைவியையும் பிறந்த வீட்டிற்கு அதிகம் அனுப்பமாட்டார் வருடத்திற்கு ஒருமுறை அதுவும் கூடிப்போனால் நான்கு நாட்கள் மட்டும்.

 

 

 

முத்துலட்சுமியின் பெற்றோர்தான் மாதம் ஒருமுறை மகளைச் சென்று பார்த்து வருவர்,  ராஜன் கல்லூரி பேராசிரியர் மேலும் மேலும் படித்துக்கொண்டே இருந்தார்,  முத்துலட்சுமி ராஜன் தம்பதிக்கு ஒரே மகன் ரகுவரன் அவனுக்கு நான்கு வயதானபோது ஒரு நாள் வகுப்பறையில் மயங்கி விழுந்தார் ராஜன்.

 

 

மருத்துவமனையில் சேர்க்கப்பட மாரடைப்பு என்றார்கள்,  பத்திய சாப்பாடு நடைப்பயிற்சி மனதை அமைதியாக வைத்திருக்கத் தியானம் என்று நாட்கள் சென்றது என்னவானாலும் பிறவி குணம் மாறவா போகிறது அனைத்திற்கும் கோபம் ராஜனுக்கு.

 

 

 

மருமகனுக்கு இப்படி இளம் வயதிலே நோய் வந்துவிட்டதே மகளின் வாழ்வு என்னாவது என்று கலங்கிய பெற்றோர் அடிக்கடி மகளுக்கு உதவியாக இருக்க மகள் வீட்டிற்கு  செல்லத் தொடங்கினர்,  முத்துலட்சுமி கணவனைக் கவனிக்க பல நாட்கள் ரகுவரன் பொறுப்புத் தாத்தா பாட்டியிடம் சேர்ந்தது.

 

 

அவர்கள் எது செய்தாலும் சரியில்லை, சுத்தம் இல்லை, நாகரீகம் இல்லை என்று அனைத்திற்கும் கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார்,  மகளைக் கொடுத்திருக்கிறோமே என்று அந்தப் பெற்றோர் பொறுத்துக்கொண்டதோடு அங்குச் செல்வத்தையும் குறைத்துக்கொண்டனர்.

 

 

 

ராஜன் அதிக காலம் வாழவில்லை அடுத்த மூன்று வருடத்தில் மூச்சை நிறுத்திக்கொண்டார் முத்துலெட்சுமிக்கு வெறும் முப்பத்தொரு வயது,  ராஜனின் மருத்துவச்செலவு வீட்டின் செலவுகள், வாடகை, மகனின் உயர்ந்த பள்ளியின் கட்டணம் என்று அனைத்து பணமும் கரைந்து இறுதி ஆறு மாதங்கள் மாமனாரின் தயவிலே வாழ்ந்தார் ராஜன்.

 

 

மனைவிக்கும் மகனுக்கும் எதுவும் சேர்த்துவைக்கவில்லை ராஜன் மறைந்த நான்காம் மாதம் பிறந்த வீட்டிலிருந்த முத்துலெட்சுமியை தேடி வந்தனர் அவரின் புகுந்த வீட்டினர் அவருக்கும் அவரின் மகனுக்கும் சேரவேண்டிய குடும்பச்சொத்தின் கணக்கை ஒப்படைக்க.

 

 

“அவன் எங்களையெல்லாம் மனுஷங்களா கூட மதிச்சதில்லை எங்களுக்கு நாகரிகம் கிடையாதாம் அப்பா அம்மாவை ஒரு நாள் கூட வெச்சு பாத்துக்கிட்டதில்லை உங்களுக்குத் தெரியாததா” என்றனர் முத்துலெட்சுமியிடமும் அவர் வீட்டினரிடமும்.

 

 

 

“காடு மேடு கஷ்டப்பட்டவங்க நாங்க எங்களுக்கு வீடும் நிலமும் வேணும் அதுக்கு பதிலா உங்க பங்கு காசைக் கொண்டுவந்திருக்கோம்” என்று ஒரு தொகையைக் கொடுத்துச்சென்றனர் இவர்களும் அதைப் பெரிதுபடுத்தவில்லை,  முத்துலட்சுமி எதையும் யோசிக்கும் நிலையிலே இல்லை அவரைத் தேற்றவே இவர்களுக்கு இரண்டு வருடம் பிடித்தது.

 

 

ராஜன் மறைந்தபோது மாசிலாமணி அன்னம்மா தம்பதியருக்கு மீனா பிறந்து ஒன்றரை வயது நடந்துகொண்டிருந்தது  அதோடு அன்னம் காமாட்சியை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார் அக்காவையும் அக்கா மகனையும் தாங்கிக்கொண்டார் மாசிலாமணி அடுத்தடுத்து பெற்றோரும் மறைந்துவிட முத்துலெட்சுமியை எந்தக் குறையும் இல்லாமலே கணவன் மனைவி பார்த்துக்கொண்டனர்.

 

 

 

ரகுவரன் படிப்புச் செலவு அனைத்தும் மாசிலாமணியே பார்த்துக்கொண்டார் மெல்ல மெல்ல துக்கத்திலிருந்து மீண்ட முத்துலட்சுமி தம்பியை வற்புறுத்தித் தனக்கென்று ஒரு வேளையில் சேர்ந்துகொண்டார்,  மீனா பதிமூன்று வயதில் பூப்படைய தங்களுக்கு தனியாக வீடு வேண்டும் என்று முடிவு செய்தார் முத்துலட்சுமி.

 

 

மாசிலாமணியும் அன்னமும் தடுத்துப்பார்த்தனர் “இங்கபாரு மணி நமக்குப் பிரச்ச்னையில்ல ஆனா வெளில இருந்து பாக்குற எல்லா கண்ணும் ஒரேபோலவே இருக்காது நாளைக்கு யாரு யார் கூட வாழப்போரான்னு நமக்குத் தெரியாது வயசு பிள்ளை இருக்குற வீட்ல அத்தை மகனாவே இருந்தாலும் தப்பா பேசும் உலகம்,  தூரமா எல்லாம் வேண்டாம் பக்கத்திலேயே பாத்துக்குடு”.

 

 

“அவங்க அப்பா வீட்ல இருந்து வந்த காசு அப்படியேதான இருக்கு அதுல இடம்வாங்கி வீடு கட்டிக்கலாம்” என்று முடிவாகச் சொல்லிவிட அப்படியே நான்கு  தெரு தள்ளி இடம் வாங்கி வீடு கட்டிக்கொண்டு சென்றுவிட்டனர், உறவுக்குள் எந்தப் பிணக்கமும் வந்ததில்லை ரகுவரன் மட்டும் அதிகம் வரமாட்டான் வயது ஏற ஏற ஒதுக்கம் வந்தது பெரியவர்களும் புரிந்துகொண்டனர்.

 

 

 

காமாட்சியிடம் மட்டும் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வான் நிறைய பொருட்களை அவளுக்கு மட்டுமாக வாங்கிவருவான் சின்னப் பிள்ளை  என்று செய்கிறான் என்றுதான் அனைவரும் நினைத்தனர்.

 

 

 

“இருபத்தேழு வயதாகிறது பெண் பார்க்கவா இல்லை மீனாவை கட்டிக்கொள்கிறாயா” என்று தாய் கேட்க்கும்வரை காமாட்சியின் மீதான பிடித்ததை சொல்லவில்லை.

 

 

“மாமன் மகளைத்தான் கட்டுவேன் ஆனா மீனா இல்ல ஆச்சி” என்றான்.

 

 

முத்துலெட்சுமிக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை அவர் கொஞ்சம் யூகித்திருந்தார் மகனின் பிடித்ததை இன்னும் சொல்வதென்றால் மீனாவை விட அவருக்கும் ஆச்சி தான் பிரியமானவள்,  தன் தாயை போலப் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இருப்பவளை அவருக்குப் பிடிக்காமல் போகுமா தம்பியிடம் பேசிவிட்டார்.

 

 

மீனாவின் திருமணம் முடிந்தவுடன் இவர்களின் திருமணம் என்று பேசியும் விட்டனர் “உனக்குச் சம்மதமா ஆச்சி” என்று தந்தை கேட்க “உங்க விருப்பம்ப்பா” என்றுவிட்டாள்.

 

 

சொந்த அத்தை,  அத்தை மகன் நல்ல வேலை அவனின் தந்தையை போலவே அழகானவன் நல்ல குணம் தாய் தந்தைக்கு முழு சம்மதம் வேறு எதையும் யோசிக்கவில்லை அவள்,  ரகுவரனுக்கு வானில் பறக்காத குறைதான்.

 

 

அவளுடைய நெருங்கிய தோழிகூட பலமுறை கேலி செய்திருக்கிறாள் “என்னடி மாமன் கவனிப்பு பலமா இருக்கு, ஓஹ்… பாசி கலர் பாவாடை தாவணிக்கு கத்திரிபூ  பார்டர் அதுக்கு மேட்சா வளையல் கம்மல் என்னடி நடக்குது” என்று.

 

 

 

“ஏய் மாமா சும்மா வாங்கி தராங்க” என்பாள் காமாட்சி.

 

 

 

“அது எப்படி உன் அக்காவும் உரிமை பட்டவங்கதானே அவங்களுக்கு வாங்குறதில்ல” என்று.

 

 

 

“நாளைக்கு கல்யாணம்னு வந்தா அக்காவை தானே கட்டி வைப்பாங்க நான் சின்ன பிள்ளைன்னு எனக்கு வாங்கி தராங்க” என்க.

 

 

 

“ஆமா ஆமா உனக்கும் உங்க அக்காவுக்கும் பத்து வயசு வித்யாசம் போடி…  வெறும் ரெண்டு வயசுதானே எனக்கென்னமோ இது அதுவா இருக்கும்னு தோணுத்து”  என்பாள் காமாட்சிக்கு அப்படி தோன்றியதில்லை திருமணம் என்றால் மீனவைதான் ராகுவிற்கு பேசுவார்கள் என்று ஒரு எண்ணம் அவள் மனதில் இருந்ததால் ராகுவை அப்படி நினைத்ததில்லை அவள்

 

 

 

மிகவும் நல்லவனான ரகுவிற்கு சமீபமாகக் குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது நண்பர்கள் மூலமாக,  தாய்க்கு தெரியாமல் அளவாகக் குடித்துக்கொண்டிருந்தவன் மெல்ல மெல்ல நட்புவட்டத்தின் தூண்டுதல் மற்றும் உதவியால் போதை பழக்கத்திற்கு ஆளானான்.

 

 

 

மகனின் குடிப்பழக்கத்தை ஒரு கட்டத்தில் கண்டுபிடித்த முத்துலெட்சுமிக்கு போதையை கண்டறிய முடியாமல் போனது,  தம்பிக்கும் காமாட்சிக்கும் தெரியாமல் எப்படியாவது மகனை மீட்டுவிட வேண்டும்  அவன் ஆசை பட்ட வாழ்வை அவன் வாழ்ந்துவிட வேண்டும் என்று அழுது புரண்டு மகனிடம் பேசாமல் இருந்து, பட்டினி கிடந்து என்று அவனை மீட்டுக்கொண்டிருந்தார்.

 

 

 

அப்படியும் மாசிலாமணி கண்டுபிடித்துவிட்டார் விஷயம் தெரிந்துவிட “இங்கபாரு ரகு அக்கா மகன் நல்லவன்னு தான் உனக்கு என் மகளைக் கொடுக்கச் சம்மதிச்சேன் இப்படியே போனா இந்தக் கல்யாணம் நடக்காது, எல்லாத்தயும் விட என் பிள்ளை வாழ்க்கையும் நிம்மதியும் எனக்கு முக்கியம் ஒரு குடிகாரனுக்கு அவளைக் கொடுக்க முடியாது” என்றுவிட்டார் கண்டிப்பாக.

 

 

அவராலும் அவனின் போதை பழக்கத்தைக் கண்டறியமுடியவில்லை குடி மட்டுமே அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது, குடிப்பதின் அளவை குறைத்துக்கொண்டான் அவனிடம் மாற்றம் தெரியவும் தாய்க்கும் தாய் மாமனுக்கும் நம்பிக்கை பிறந்தது.

 

 

 

போதை மருந்தை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை இரவு வீட்டிற்கு வந்து உண்டு முடித்ததும் போதையேற்றுவான் படுத்து உறங்குவான் அதன் அளவும் சிறிய அளவில் இருக்க பெரிதாக வெளியில் தெரியவில்லை,  அது யாருக்கும் தெரியப்போவதில்லை என்ற தைரியம்தான் மொத்தமாக அவன் கனவுகளைச் சிதைத்துவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!