Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

குட் லக் சுந்தரி

குட் லக் சுந்தரி….4

குட் லக் சுந்தரி…..4

வேதாசலத்தின் ஒற்றை புதல்வி தான் வசந்தி.வசந்தியின் தாய் இவள் பிறக்கும் போதே பிரசவத்தில் இறந்துவிட சிறு வயது முதலே தாயாகவும்,தந்தையாகவும் வளர்த்தவர் வேதாசலம்.ஒற்றை பெண் என்று அதிக செல்லம் எல்லாம் கொடுக்கமாட்டார் அதே சமயம் அடக்கு முறையும் இருக்காது நீயே சுயமாக சிந்தித்து சரி எது தவறு எது என்று புரிந்து நடந்து கொள் என்றுவிடுவார்.வசந்தியும் எதிலும் சிந்தித்து செயல்படும் திறனுடன் தான் வளர்ந்தார்.

வேதாசலம் மகளை தன்னை போல வேளாண் துறையில் படிக்க வைக்க நினைக்க அவரோ இளங்கலை வணிகவியல் தான் பிடித்திருக்கிறது என்று அதை தேர்ந்தெடுத்து படித்தார்.அடுத்து அவருக்கு முதுகலை வணிக மேலாண்மை சென்னையில் நல்ல கல்லூரி கிடைக்கவே அங்கு தான் படிப்பேன் என்று தந்தையிடம் சண்டையிட்டு பின் கொஞ்சி பேசி கல்லூரியில் சேர்ந்தார்.

மகள் நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்துவிடுவாள் என்று நினைத்திருந்த தந்தைக்கு முதல் ஏமாற்றத்தை காதல் என்ற பெயரில் கொடுத்தார் வசந்தி.ஆம் இரண்டாம் ஆண்டின் முடிவில் தான் வாசுதேவன் என்பவரை காதலிக்கிறேன் அவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று வந்து நின்ற மகளை பார்த்து,



Advertisement

“என்ன வசும்மா இது நீ அங்க படிக்க தான போன….உன்னை நம்பி தானே அங்க அனுப்பினேன் இப்ப இப்படி சொன்னா என்ன அர்த்தம்….”என்று சற்று கோபமாகவே கேட்க,வசந்தி அதிரவெல்லாம் இல்லை,

“ப்பா நானும் என் படிப்பு ஒண்ணு தான் என் குறிக்கோள்னு போனேன் ஆனா….”என்று தடுமாறியவர் பின்,

“எனக்கு அவரை பிடிச்சிருக்குப்பா….உங்க கிட்ட சொல்லாம நான் எதையும் செஞ்சதில்லை….எப்பவும் செய்யவும் மாட்டேன்….அதனால தான் அவர் கிட்ட சம்மதம் சொன்ன உடனே உங்கிட்டயும் சொல்லுறேன்….”என்றுவிட வேதாசலத்திற்கு இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

Advertisement

“ப்பா நீங்க எதை நினைச்சு இப்படி பயப்படுறீங்கனு எனக்கு தெரியும்….இதையெல்லாம் என் படிப்புக்குள்ள கொண்டுவரமாட்டேன் ப்பா என்னை நம்புங்க….நான் படிச்சு வேலைக்கு போவேன்…..”என்று கூறிவிட்டார் வசந்தி.அவர் கூறியதை போல நன்கு படித்து வேலையில் அமர்ந்த பின் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

வேதாசலத்திற்கு வாசுதேவனின் அமைதியும்,பொறுமையும் பிடித்துவிட அவரும் தன் மாப்பிள்ளையுடன் இணக்கமாகிவிட்டார்.வாசுதேவன் குடும்பத்தாரும் நல்ல முறையில் தான் நடந்து கொண்டனர் அதனால் தன் மகள் புகுந்த வீட்டில் எந்த குறைவும் இன்றி இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் தான் அவளை புகுந்த வீட்டிற்கு அனுப்பினார்.

வசந்தியும் எந்த குறையும் இன்றி தான் தன் வாழ்வை தொடங்கினாள்.இருவரும் வேலைக்கு செல்வதால் காலை வேலை மட்டும் சற்று பரபரப்பாகவே இருக்கும் வசந்திக்கு உதவ அவளின் மாமியார் வரமாட்டார்.அனைத்தும் வசந்தி தான் செய்ய வேண்டும் சில நேரங்களில் காலதாமதம் ஆகியும் விடும் சில நேரங்களில் வாசு கூட கத்திவிடுவான்.

“என்னம்மா நீ சும்மா தான இருக்க…அவளுக்கு உதவி செய்யலாம்ல…அவளே எவ்வளவு வேலை தான் செய்வா….இதை முடிச்சிட்டு வேலைக்கும் போகனும்…..”என்று ஒரு நாள் கூற,அன்றைய நாள் முழுவதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு மகனுடன் பேசமாட்டார்.அவருக்கு காலை அரக்க பரக்க வேலை செய்வது பிடிக்காத ஒன்று.அதோடு மருமகள் வேலைக்கு செல்வதில் அத்தனை பிடித்தம் இல்லை அதை மகனிடமும் கூற அவனோ,

Advertisement

“ம்மா நீ எந்த காலத்துல இருக்குற…..வசந்தியும் வேலைக்கு போனா தான் என்னால குடும்பம் ஓட்ட முடியும்….”என்று கூறிவிட்டான் அதன் பின் அவர் வாயை திறக்கவில்லை.ஆனால் இது போல காலை வேளைகளில் எதுவும் செய்யமாட்டார்.

“விடுங்க என்னால முடிஞ்ச வரை நான் பார்க்குறேன் இல்லைனா ஆள் வச்சிக்கலாம்….”என்று வசந்தி கூற அத்துடன் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.இதுபோல சிறு சிறு பிரச்சனைகள் அன்றி வசந்தியின் வாழ்க்கை நன்றாக தான் சென்றது முதல் ஆறு மாதங்கள் வரை அதன் பின் தான் குழந்தை இல்லை என்ற பிரச்சனை துவங்கினார் அவளின் மாமியார்.

“ம்மா நாங்க தான் இப்ப குழந்தை வேணாம்னு முடிவுல இருக்கோம்….”என்று வாசு கூறிவிட்டான்.ஆனால் அவனின் அம்மாவிற்கு மகனின் பதிலில் இருந்த பிடித்தமின்மையை அவர் வசந்தியிடம் காட்ட துவங்க வீடு நரகமாக மாறிக் கொண்டிருந்தது வசந்திக்கு.நாட்கள் அதன் போக்கில் நகர ஒரு வருடம் முடிந்து போனது.ஆனால் வசந்தியின் நிலை தான் மோசமாக மாறியிருந்தது.அவரும் தனக்கு நாள் தள்ளி போகும் நாட்கள் எல்லாம் நல்லது நடக்கும் என்று பார்த்து பார்த்து கண்கள் தான் பூத்து போனது ஆனால் நல்ல காரியம் தான் நடக்கவில்லை.

வேதாசலமும் மகளிற்காக ஏறாத கோவில்கள் இல்லை ஆனால் குழந்தை பாக்கியம் தான் கிடைக்கவில்லை.வாசுவிற்குமே இப்போதெல்லாம் குழந்தை குறித்த ஏக்கம் பிறக்க துவங்கியிருக்க அவனுமே மனவுளைச்சலுக்கு ஆளானான்.

“ஏங்க என் பிரண்டு ஒரு டாக்டர் சொன்னா அங்க போய் பார்க்கலாமா….”என்று வசந்தி கேட்க,

“எனக்கு இதெல்லாம் விருப்பம் இல்லைனு சொல்லிட்டேன்…..நமக்கு  நல்லது நடக்கும் நீ அமைதியா இரு….”என்று வாசு கூற,

“இன்னும் எத்தனை நாளைக்கு தான் நான் உங்க அம்மா பேச்சை பொறுத்திக்கிட்டு போறது….என்னால முடியலைங்க நானும் மனிஷி தான….ப்ளீஸ் எனக்கா வாங்க…..”என்று வசந்தி இரைஞ்சுதலாக கூற வாசுவிற்கும் போனால் தான் என்ன என்று தோன்றிவிட்டது.

“சரி வரேன்….”என்றவனுக்கு உள்ளுக்குள் உதறல் தான் எங்கே தனக்கு எதும் குறை என்று கூறிவிடுவார்களோ என்று அதே பயத்துடன் தான் வசந்தியுடன் அவன் செல்ல ஆனால் அங்கோ குறை வசந்திக்கு தான் என்று கூறிவிட்டார்கள்.ஆம் வசந்தியின் கர்ப்பை குழந்தையை சுமக்கும் சக்தி இல்லை என்று கூறிவிட,மொத்தமாக உடைந்து போனாள் வசந்தி.

அதன்பின்னா நாட்களை கூறவும் வேண்டுமா எதற்கு எடுத்தாலும் வசந்தியை திட்ட தொடங்கிவிட்டார் அவளின் மாமியார்.வாசுவும் ஏதோ போல சுத்த தொடங்க அவருக்கு இன்னும் வசதியாகி போனது.ஒருநாள் அவரின் பேச்சுகள் எல்லை கடக்க வசந்தியும் கோபத்தில் பேச வீடே போர்களம் போல மாறியது.இத்தனை சண்டையிலும் வாசு வாய் திறக்காமல் இருக்க வசந்தி அன்றைய இரவு கணவனிடம் நேரிடையாகவே கேட்டுவிட்டார்.

“நீங்க உங்க மனசுல ஏதாவது நினைக்கிறீங்களா வாசு….இப்பெல்லாம் என் முகம் கூட பார்த்து போசமாட்டேங்குறீங்க….”என்று உடைந்துவிட,வாசுவிற்கும் மனது வலிக்க தான் செய்தது.

“ஏதாவது பேசுங்க….குறை எனக்கு தான் அதனால இப்ப என்ன செய்ய சொல்லுறாங்க உங்க அம்மா….”என்று வசந்தி கோபத்திலும் இயலாமையிலும் கத்திவிட,

“டிவேர்ஸ் பண்ணிக்கலாம்…..”என்று வாசு கூற,வசந்தி அதிர்ந்து நின்றுவிட்டார்.

“எ…என்ன சொல்லுறீங்க….”என்றவருக்கு அடுத்த வார்த்தைகள் தொண்டை குழியிலிருந்து வர மறுக்க,

“நாம பிரிஞ்சிடலாம் வசு…..என்னால இனி அம்மாவை அடக்கி வைக்க முடியாது….நீ எது செஞ்சாலும் இப்படி தான் உன்னை திட்டிக்கிட்டே இருப்பாங்க….எஸ் இதுல உன் தப்பு எதுவும் இல்லை தான் ஆனா இந்த சமுதாயம் அந்தளவுக்கு வளரலை வசந்தி….”என்றுவிட வசந்தி எதுவும் பேசவில்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறியவர் பின் வாசுவை விவாகரத்திற்கு கையெழுத்து போடும் போது  தான் பார்த்தார்.அதன் பின் வசந்தி வாசுவை பார்க்க முயற்சிக்கவில்லை.வேதாசலம் கூட ஒருமுறை நான் பேசி பார்க்கிறேன் என்று கேட்க,

“வேண்டாம் ப்பா…அவர் ஏற்கனவே முடிவு எடுத்துட்டு தான் என்கிட்ட பேசியிருக்கார்…..விடுங்க…..”என்றுவிட வேதாசலத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.ஒரு தந்தையாக மகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையே அந்த மனிதனை அரிக்க தொடங்கியது.இப்படியே நான்கு மாதங்கள் கடந்த நிலையில் திடீர் என்று ஒருநாள் அவரிடம் வந்த வசந்தி,

“ப்பா….நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்…..எனக்குனு ஒரு துணை வேணும்ப்பா….”என்று கூற,

“என்னம்மா நீ….இப்படி திடீர்னு சொல்லுற….இதெல்லாம் சரி வருமா….”என்று தயங்க,

“எல்லாம் சரி வரும்ப்பா….”

“இதை நீ உன் புருஷன் கிட்டடேயே சொல்லி இரண்டு பேரும் சேர்ந்து தத்து எடுத்துருக்கலாமே…..”

“அதுக்கு அவர் வாயப்பே கொடுக்கலையேப்பா…..அவரை பொறுத்தவரை அவருக்கு அவரோட குழந்தை வேண்டும் அவ்வளவு தான்….என்கிட்ட என்னை மாதிரி உள்ளவங்களை இந்த சமுதாயம் ஏத்துக்கலைனு சொன்னாரு….ஆனா அவரே என்னை ஏத்துகலை அது தான் நான் விவாகரத்து கொடுக்க காரணம்…..”

“நீ என்னனென்னமோ சொல்லுறமா….ஆனா இது சரி வருமா….இது சின்ன விஷயம் இல்லை…..”

“எல்லாம் சரி வரும்பா….நீங்க என்கூட மட்டும் இருங்க அது போதும் எனக்கு….”என்ற வசந்தியின் தலையில் கை வைத்த வேதாசலம்,

“சரிடா உன் இஷ்டபடி செய்…..நான் உன் கூட தான் இருப்பேன்….”என்றுவிட்டார்.அவருக்கு தன் மகள் சந்தோஷமாக இருந்தால் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது.அதற்கு அவரால் என்ன முடியுமோ அதை செய்ய அவர் தயாராக இருந்தார்.வசந்தியின் ஆசை பட்டபடி அனாதை ஆசரமத்தில் இருந்தனர்.

“வசந்திமா….நீ இங்க உட்காரு நான் இதோ வந்துடுறேன்….”என்றுவிட்டு வேதாசலம் சென்றிருக்க,வசந்தி அங்கு இருக்கும் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தாள்.அப்போது யாரோ அவளின் முடியை இழுப்பது போல இருக்க திரும்பி பார்த்தவளின் முன் துருதுரு கண்களுடன் நின்றிருந்தாள் ஒரு பெண் குழந்தை.இரட்டை சடை பின்னல் சரியாக பின்னாமல் அங்காங்கே முடி பிய்ந்து போன நிலையில் இருக்க,நயிந்து போன உடையில் இருந்தவளை பார்த்த வசந்திக்கு கண்கள் கலங்கி போக,

“அச்சோ உனக்கும் தூசி பட்டுடுச்சா….இந்தா துணி துடைச்சுக்க….”என்று தன் கவுனை இழுத்துக் கொண்டு வந்தாள் குட்டி வாண்டு.

“ஏய் ஏய் போ உள்ள போ…”என்று அங்கிருக்கும் பணியாள் அவளை விரட்ட,

“ஏன் குழந்தையை விரட்டீரீங்க….”என்ற வசந்தி கேட்டாள்.

“அய்யோ இது சரியான வாளுமா….ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்காது….உங்களுக்கு ஒன்னு தெரியுமா இதை தத்து எடுத்துட்டு போனவங்க மண்டை உடைச்சு இங்கேயே ஓடி வந்துட்டு….நீங்க எதுக்கும் இதுக்கிட்டேந்து தள்ளியே இருங்க…”என்றுவிட்டு அவர் செல்ல,அந்த குழந்தையோ அவருக்கு ஒழுங்கு காட்டிவிட்டு விளையாட சென்றுவிட்டது.

“வசந்திமா வாம்மா நான் பேசிட்டேன்….”என்று வேதாசலம் அழைக்க,

“ம்ம் வரேன்ப்பா….ஒருநிமிஷம் இருங்கப்பா….”என்றவர் மீண்டும் அந்த குழந்தையிடம் சென்று,

“குட்டிமா….”என்று அழைக்க,அதுவும் அவளை பார்த்து,

“ஹாய்….”என்றது.

“ஆமா விளையாட தான வந்த அப்புறம் ஏன் தனியா உட்கார்ந்திருக்க…..”என்று கேட்க,

“என் கூட யாரும் விளையாட வரமாட்டேங்குறாங்க….”என்றுவிட்டு தன் கையில் வைத்திருந்த பொம்மையுடன் தன் விளையாட்டை தொடங்க,

“ஏன்???”

“தெரியல….”

“சரி என்கூட என்வீட்டுக்கு வரியா…”என்று கேட்க,

“என்னை கூட்டிட்டு போய் பேட் லக்னு சொல்லுவியா….நான் பேட் லக்காம் முன்னாடி கூட்டிட்டு போன ஆன்டி சொன்னாங்க…..”

“ம்ஹம்…..மாட்டேன்….”

“அப்போ சரி…..”என்றுவிட்டு வசந்தியின் கையை கெட்டியாக பிடித்துக் கொள்ள,

“சரி உன் பேரு என்ன….”

“சுந்தரி…அழகு சுந்தரி…..ஆனா இங்க உள்ளவங்க எல்லாரும் என்னை பேட் லக் சுந்தரினு தான் என்னை கூப்பிடுவாங்க….”என்று கூற,

“ஏன்….”

“தெரியல…”

“சரி இனி அப்படி கூப்பிட மாட்டாங்க வா….”என்று கூறிக் கொண்டே அங்கு இருக்கும் மதர் ரூமிற்குள் செல்ல,

“வாம்மா வசந்தி…”என்றவரின் பார்வை சுந்திரியின் மீது முறைப்புடன் படிந்து மீண்டது.

“அப்பா எல்லாம் சொன்னாரு….நான் உனக்கு சில குழந்தைகளை காட்டுறேன்….உனக்கு யாரை பிடிச்சிருக்கோ அவங்களை நீ தத்தெடுத்துக்கலாம்….”என்றுகூற,

“நான் என் பொண்ணை பார்த்துட்டேன் மதர்…..எனக்கு இந்த சுந்தரி ஆகாங் தப்பு தப்பு…..இந்த அழகு சுந்தரி தான் வேணும்…..”என்று கூற,மதர் சற்று நேரம் அமைதியாக இருவரையும் பார்த்தவிட்டு வசந்தியிடம்,

“வசந்திமா நான் உன் கிட்ட தனியா பேசனும்….என்கூட வா….”என்று மதர் கூற,

“ப்பா….பாப்பாவை பார்த்துக்கோங்க….நான் வந்துடுறேன்….”என்றுவிட்டு மதருடன் சென்றாள்.

“வசந்திமா….உனக்கு இந்த குழந்தை வேண்டாம்…..இவ கொஞ்சம் வல்கரா இருக்கா….”என்று கூற,

“எனக்கு தெரியும் மதர்….ஆனா அவளை எனக்கு பார்த்தவுடனே பிடிச்சு போச்சு….”

“அது வசந்திமா…..”என்று ஏதோ கூற வந்த மதரை தடுத்த வசந்தி,

“மதர் எனக்கு என்னமோ மனசு சொல்லுது எனக்கு சொல்ல தெரியல என்னோட வலி எல்லாத்துக்கும் அவ மருந்தா இருப்பா சோ ப்ளீஸ் மதர் முடியாது மட்டும் சொல்லாதீங்க…”என்றுவிட அதற்கு மேல் மதரும் எதுவும் கூறவில்லை.ஒரு மாதம் கழித்து வசந்தியின் மகளாக அவரின் வீட்டில் காலடி எடுத்து வைத்திருந்தாள் சுந்தரி.

“இப்படி தான் இந்த அழகு சுந்தரி இந்த வீட்டுக்கு வந்து வீட்டை அழகு சேர்த்து…..சூம் சூம்…..”என்று தன் கைகளை சுழற்றி காட்ட,

“அடியே என்ன ஆச்சு உனக்கு….”என்று வசந்தி தன் நினைவுகளில் இருந்து தெளிந்து கேட்டார்.

“அதான் மீ நீ இப்ப ஒரு பிளாஷ் பேக் பார்த்தியே அதுல என்னோட இண்டரோ சொல்லிக்கிட்டு இருக்கேன்…..இந்த பேட் லக் எப்படி குட் லக்கா மாறுச்சுனு…..”என்று கூற,

“எருமை…..எத்தனை தடவை சொல்லிருக்கேன் இப்படி பேசாதனு….”என்று அவள் முதுகில் ஒரு அடி போட,

“இது தான் என் மீ…..இப்படி தான் நீ இருக்கனும்….அதை விட்டுட்டு கொஞ்ச நேரம் முன்னாடி இருந்த மாதிரி எல்லாம் முகத்தை தூக்காத….பார்க்க நல்லவே இல்லை….”என்றுவிட்டு இன்னும் நான்கைந்து அடிகளை வாங்கி கொண்டு ஓடினாள் சுந்தரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!