Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அங்கணம் நின்றான் அந்தியூறான்

அந்தியூரான்-18

அந்தியூரான்-18
விடிந்தும் விடியாமலும் இருக்கும் வேளையில் வந்து நின்ற மகளின் வீட்டாரை பார்த்து மரகததிற்கு  வயிற்றைக் கலக்கி கொண்டு தான் வந்தது.அதுவும் விசலாட்சியின் முகம் வேறு கலக்கமாக இருக்க ரொம்பவே பயந்து போனார்.
முத்து,காந்திமதி இருவரும் அதே எண்ணத்தில் தான் உறைந்திருந்தனர்.மரியாதை நிமித்தம் அனைவரையும் அழைத்துக் கூடத்தில் அமர வைத்து பேசி கொண்டிருந்தனர்.பெரியவர்கள் அனைவரும் வந்திருக்க அவர்களுடன் தணிகா மட்டும் விசலாட்சி குழந்தையை தூக்கி கொண்டு வந்திருந்தனர்.இவர்களைக் கண்டதும் வேலைக்குக் கிளம்பி கொண்டிருந்த அமுதன்.


Advertisement

சற்று நிதானித்து அனைவரையும் வரவேற்றவன் தங்கையைக் கண்களாலே என்னவென்று கேட்க.குழந்தையை அண்ணனிடம் கொடுக்கும் சாக்கில் அவனை நெருங்கி,”கொஞ்சம் மேல வாண்ணா பேசணும்” மெதுவாக முனகி விட்டு.அமுதன் முகம் பார்த்து நிற்க.

Advertisement

அவளது கையில் உள்ள குழந்தையை வாங்கியவன், “பேசிட்டு இருங்க வாரேன்” என்றவன் பொதுவாக அனைவரையும் பார்த்து சொல்லிவிட்டு மெத்தைக்குச் செல்ல.கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனுடன் சென்றாள்.

Advertisement

இருவரும் மேல வந்து திண்டில் சாய்ந்து கொண்டு “இப்போ என்னவாம் உன் வீட்டுக்காருக்கு”

Advertisement

“ஐயோ! அவர் எதுவும் பிரச்சனை இல்லண்ணா?”
“அப்போ நீ எதுவும்”
“ஹ்ம்ம்! நானும் இல்லை”
 “அப்போ யாரு?”
“நீ தான் பிரச்சனை” என்றதும் எரிச்சலாக,
“விசலாட்சி வார்த்தை விளையாட்டு காட்டாத விஷயம் என்ன பட்டுனு சொல்லு. என்னைக் கொண்டு பிரச்சனை பண்ண அங்க என்ன இருக்கு? நானா அந்த வீட்டுல வாக்கப்பட்டு இருக்கேன்”
விசாலாட்சி தயங்கி தயங்கி உளறி வைத்ததில் பெரும் எரிச்சலாகி போனான் போலும் அமுதன்.கொஞ்சம் அதட்டல் போலவே பேசி வைக்க.ஏற்கனவே இந்த விஷியத்தில் பயந்திருந்தவள் இன்னும் பயந்து போயி கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது அதில் பதறியவன்.
“ஏய் என்னம்மா? நீ விட்டு விட்டு பேசி வைக்கவும் கொஞ்சம் கோபமாகிட்டேன் விசா ப்ச்! விடு என்னாச்சு?” கோபத்தை கைவிட்டு கொஞ்சம் தன்மையாக கேட்கவும் அதில் தெளிந்தவள்.
“குமாரி உன்னைத் தான் கட்டிக்குவேன்னு நிக்கிறா” ஒருவழியாக விஷியத்தைப் போட்டு உடைக்க உள்ளுக்குள் பலமாக  தான் அதிர்ந்து போனான் அமுதன்.
“ஏய்! என்ன பேச்சு இது?”
“அவளுக்குக் கல்யாணம் பேச வந்தாங்க அண்ணா அப்போ தான் எனக்கே சொல்லுறா வீட்டுல எல்லாருகிட்டையும் அவளே சொல்லிட்டா”
” இதுக்கு எதுக்கு என்னை தனியா கூட்டிட்டு வந்த அங்கையே பேசியிருக்கலாம் தானே. சரி வா கீழ போலாம் ” என்றவன் அவசரமாகக் கீழே செல்ல முயல அவனது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட விசா.
“அண்ணா எதுவும் கோபமா பேசிடாத அவங்க பேசுறதை வச்சுத் தன்மையா பதில் சொல்லுண்ணா அதுக்கு தான் தனியா கூட்டிட்டு வந்தேன் “
“ப்ச்! நீ வா நான் பேசுகிறேன்” என்றவன் அவசரமாகக் கீழே இறங்கி செல்ல. அங்கே அப்போதான் சிவராமன் முத்துவிடம் பேச்சை தொடங்கியிருந்தார்.
முத்து,காந்திமதி,மரகதம் மூவரும் திகில் அடைந்த பார்வையுடன் திருத் திருவென முழிக்கவும்,அமுதன் வரவும் சரியாக இருந்தது.முத்துவுக்கு இந்த விஷியத்தில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.அந்நேரம் அமுதன் கீழே வரவும்.
“வா அமுதா! இங்க வந்து உக்காரு” முத்து தனது அருகில் உள்ள இடத்தைக் காட்ட வேகமாக வந்து அங்கு அமர்ந்து கொண்டான்.உள்ளுக்குள் கொஞ்சம் படபடப்பாக இருந்தாலும் .அதனை அத்தனை அழகாக மறைத்து கொஞ்சம் கம்பீரமாகவே அமர்ந்திருந்தான்.
தணிகாவின் பார்வை தன்னைத் தொலைத்தாலும் அதனைக் கண்டு கொள்ளாமல் சிவராமன் முகம் பார்த்திருக்க. அவனை கண்டு அவர் முகத்தில் அழகான புன்னகை. அந்த புன்னகையில் அவருக்கு அத்தனை நிறைவு.
பேச்சின் தொடக்கமே அதிரடி இல்லாமல் மெல்ல மெல்ல தொடக்கம் காட்டினார் சிவராமன்,” தொழில் எப்படி போகுது அமுதன்?”
“நல்லாவே போகுது சார்”
“இன்னும் உனக்கு சார் தானா” அதற்குப் பதில் சொல்லாமல் புன்னகைத்தான் அமுதன்.
அதற்குள் ராணியின் காதில் வைரம், “அக்கா ஆளு நல்லா ஜம்முனு இருக்கான் க்கா”
“சும்மான்னு இருடி”
சிவராமன் கந்தனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “குமாரிக்கு மாப்பிள்ளை பார்த்தோம்.பேசி முடிகிற நேரம் உங்களைத் தான் கட்டிக்குவேன்னு நிக்கிறா” என்றவர் அமுதனை ஆழ்ந்து பார்க்க.அவனும் அடுத்து என்பது போல் பார்த்திருந்தான்.
“சரி சின்னப் பிள்ளை சும்மா விளையாட்டு பண்ணுதுன்னு ஒரு எண்ணம், ஆனா பேசி பார்த்ததுல பொண்ணு ரொம்ப உறுதியா இருக்கு” சிவராமன் வார்த்தையைக் கவனமாகக் கோர்த்து பேசி கொண்டிருக்க.
படக்கென அழகு குறுக்கே புகுந்து, “நீங்க ஏன் தம்பி இத்தனை நாள் கல்யாணம் பண்ணிக்கல?” என்றுவிட்டு பார்வையில் அழுத்தம் கொடுத்து அமுதனை பார்க்க.
“உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்” அவள் கேள்வியில் உள்ள மறைபொருள் நன்கு விளங்கியது.குமாரியின் நினைவில் அல்லது விருப்பம் ஏற்பட்டு தான் இந்நாள் வரை அவன் திருமணம் செய்யவில்லையோ என்ற எண்ணம் அதிலிருக்க.
அழகிக்கு மட்டும் இல்லை அந்த எண்ணமில்லை. சிவராமன் வீட்டு அத்தனை பெண்களுக்கும் அந்த கேள்வி இருந்தது ஏனென்றால் குமாரியின் உறுதி அப்படி.
“ஒரு மகனா ஒரு அண்ணனா எனக்குன்னு சில பொறுப்பிருங்கும்மா. நான் சாதாரணக் குடும்ப வகையைச் சேர்ந்தவன்.என்னை நம்பி மூணு பெரியவங்க இருக்காங்க.ஒரு தங்கச்சி இருக்கா அப்போ எனக்குன்னு கடமைகள் கொஞ்சம் அதிகம் தானே.அதுவும் போக என் தங்கச்சிக்கு இப்போ தான் குழந்தையே பிறந்திருக்கு இந்த இடத்தில் அமுதன் நிறுத்தி கொள்ள.
“என்ன இழுக்கலனா  இவனுக்குப் பேச்சே வராது போல” வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டான் தணிகாசலம்.
அமுதன் சொன்னதின் உள்ள பொருள் பொட்டில் அடிக்க அழகியை ‘இது தேவையா உனக்கு’ என்பது போல் முறைத்தார் சிவகாமி.
“அழகி செத்த சும்மாதான் இரேண்டி”ராணி தங்கையை ஒரு கடி கடிக்க அமைதியாகி விட்டாள்.
சூழ்நிலையை இப்போது கந்தன் கையில் எடுத்து கொண்டார்,”வாஸ்தவத் தான் தலைச்சான கடமைகள் செஞ்சு தான் ஆகணும்” என்றவர் சிவராமனை பார்த்து யார் கண்ணும் உறுத்தாமல் தலையை அசைக்க.
“அமுதன் எங்களைப் பொறுத்தவரை கண்ணுக்கு முன்னாடி வளர்ந்து நிக்கிறீங்க உங்க உழைப்புத் தொடங்கிப் பொறுப்பு வரை பார்த்து நிக்கிறோம். ஒரு பொண்ணைக் கொடுக்கறவங்களுக்கு இதை விட என்ன வேணும் சொல்லுங்க” மறைமுகமாக எங்களுக்குத் திருமணத்தில் சம்மதம் தான் என்றவர்களைத் திடுக்கிட்டு தான் பார்த்தான்.
“சார்?”
“அமுதன் பொண்ணு பிடிவாதம் பண்ணுறதுக்காக மட்டும் நான் மாப்பிள்ளை கேட்டு வரல. என் பேத்தி உன்னை கைகாட்டி நிக்கும் போது உன் தகுதி தான் கண் முன் வந்துச்சு. தகுதிங்குறது இங்க உன் குணத்தை வச்சு, உன் நடத்தை வச்சு தான் கேட்டு வந்திருக்கோம்” என்றதும் ஒரு நொடி தடுமாறி தான் போனான்.
தணிகாசலம் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தான்.அவனுக்குப் பேச்சே வரவில்லை என்பது தான் உண்மை.அமுதனை மாப்பிள்ளையாக அவன் கனவிலும் எண்ணி வைக்கவில்லை. அவனை மறுக்கவும் அவன் தகுதியற்றவன் இல்லை.
அதுவும் போக ஒரு பெண்ணின் தகப்பனாகக் கொள்ளை கொள்ளையாகக் கேள்விகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தது ,ஆனால் அதனை அமுதனிடம் தான் கேட்க முடியவில்லை.முன் சரித்திரம் கொஞ்சம் பயம் காட்டி வைத்தது என்பது மறுக்க படாத உண்மை.
“என்ன அமுதன் யோசனை?” கொஞ்சம் பெரிய குரலில் தான் கந்தன் கேட்டார். அவரது தொனியே சொன்னது என் பேத்தியை கட்ட என்ன அத்தனை யோசனை என்று?”
” ஐயா இது யோசிச்சு செய்ய வேண்டிய விஷயம் தான். நான் எப்படியும் கல்யாணம் பண்ண போறேன், ஆனா சொந்தத்துக்குள்ள பெண் எடுக்கும் போது ரொம்பவே யோசிக்கனும்.அதுவும் விசா குமாரிக்கு அம்மா இல்லனாலும் அவ தான் அம்மா.இன்னும் சொல்ல போனா என் தங்கை மக அப்போ நான் ரொம்பவே யோசிக்கனும் “
“நீ உன் தங்கச்சி வாழ்க்கையை எண்ணி பயப்பட வேணாம் அமுதன்” சிவகாமி சரியாக அமுதனை கணித்துச் சொல்ல.
“அதுக்கு மட்டும் நான் யோசிச்சு நிக்கல அத்தை. அவ சின்னப் பொண்ணு  எதுனால அவ என்னைக் கட்டிக்க எண்ணி வைக்கிறான்னு எனக்குப் புரியவே இல்லை.
அதுவும் போக நான் இந்த உறவுக்குள்ள நுழைஞ்சா விசா எனக்கு மாமியார். அவர் கணவர் எனக்கு மாமனார் அதனைத் தொடர்ந்து உறவு எல்லைகள் எல்லாமே மாறி நிற்கும்
அதையெல்லாம் பக்கவுமா குமாரி கையாண்டு நிற்பாளான்னு தெரியல.இதெல்லாம் உங்க பக்கமிருந்து நான் எண்ணி வைக்கிறது” என்றவன் பார்வை மீண்டும் தனிகாவை தீண்ட. இப்போது வெளிப்படையாகப் பல்லை கடித்த தனிகா பக்கத்தில் அமர்ந்திருக்கும் விசாவிடம் குனிந்து.
“இப்போ என்னடி சொல்ல வாரான். நான் இரண்டு பக்கமும் எண்ணி வைக்கலைன்னு குத்தி காமிக்கிறானா? உங்களைப் போல யோசிக்கிற அளவுக்கு நான் நல்லவன் இல்லடி” என்றவனைப் பார்த்துத் திருத் திருவென விழித்து நின்றாள் விசலாட்சி அவள் பயந்ததே இதற்குத் தானே.
எதையெல்லாம் எண்ணி அவள் இந்த திருமணத்தை மறுத்தாலோ அது எல்லாம் வரிசை  கட்டி சரியாக நடந்தது இனியும் நடக்கும் போலும்.
“என் பக்கம் விசா,அம்மா,அத்தை,மாமான்னு அவங்க கடைசிக் காலம் வரைக்கும் பொறுப்பிருக்கு மாமா.அதையெல்லாம் என்னோட கை கோர்த்து பார்த்து வைக்கிற அளவுக்குப் பக்கவும் வேணும் என்றவன் அழகியை ஒரு பார்வை பார்த்து,நான் கல்யாணத்தைத் தள்ளி போட இதுவும் ஒரு காரணம் என்க இப்போது அழகிக்கே சங்கடமாகி போனது.
அதுனால பெரியவங்க என்னை மன்னிக்கனும் நீங்க வீடு தேடி வந்ததாலும். என் தங்கச்சி குடும்பம் அப்படின்னு எண்ணி வச்சதுனால தான் பேசுறேன் நான் குமாரி கிட்ட பேசனும்.
ஒரு வேலை சின்ன பிள்ளை தனமான காரணம் கொண்டு அவ இந்தக் கல்யாணத்துக்கு எண்ணிருந்தா நானே எடுத்து சொல்லி பேசி பாக்குறேன்.உங்களுக்கு சரினா நான் குமாரி கிட்ட பேச ஏற்பாடு பண்ணுங்க”
சிவராமன் தணிகாசலத்தை பார்க்க அவனோ கந்தனை தான் பார்த்தான்.கந்தன், “தோது படுற நாள் நீங்களே சொல்லுங்க அன்னைக்கு மாமா வீட்டுல வச்சு பேசிடுவோம்”
“வர வாரம் சனி கிழமை வரேன்”
“ஹ்ம்ம்! சரி அப்புறம் என்ன எல்லாம் நல்லதாவே நடக்கட்டும்” என்ற கந்தன் எழுந்து கொள்ள.அவரை தொடர்ந்து அனைவரும் எழுந்து கொண்டனர்.
“என்ன கிளம்பிட்டிங்க சாப்பிட்டுப் போகலாம்”
“இல்ல முத்து எல்லாம் நல்லபடியா முடியட்டும் மனசார விருந்தே சாப்பிடலாம். இப்போ நின்ன நிலைக்குக் கிளம்பி வந்திருக்கோம். எங்களுக்குக் கொஞ்சம் தயக்கம் இதைக் கேட்டு நீங்க என்ன நினைச்சிப்பீங்களோன்னு ஒரு  எண்ணம்” சிவராமன் தனது எண்ணத்தை வெளிப்படையாக சொல்ல.
“என்ன சிவராம?” நண்பனை மெல்லமாகக் கடிந்து கொண்டார் முத்து.
“அண்ணே என்ன பேசுறீங்க அப்படியெல்லாம் எண்ணி வைப்போமா அவ எனக்கும் பேத்தி தான்” என்றாள் மரகதம்.
“என் எண்ணத்தை சொன்னேன் ம்மா வேற ஒன்னுமில்லை எல்லாமே நல்லதாவே நடக்கும் முத்து அப்போ நாங்க கிளப்புறோம்” என்றவர்கள் விடைபெற அப்போதும் தணிகாசலம் பேசவில்லை.
ஆனால் மரியாதையாகப் பெரியவர்களிடம் விடைபெற்றவன்.அமுதனிடம் நெருங்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் அப்படிப் பார்த்துக் கொண்டார்கள்.இவர்களது பார்வை பெரியவர்களை உறுத்தவில்லை என்றாலும் விசலாட்சிக்கு நன்கு தெரிந்தது.
அதுவும் தணிகாசலம் அமுதனை கடந்து செல்கையில் அமுதன் “உலகம் ஒரு உருண்டை தான் போல விசா” என்றவிட விசலாட்சி கண்ணை முடிந்த மட்டும் விரித்து நின்றாள்.
அமுதன் பேச்சுக்கு மீண்டும்  ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான் தணிகாசலம்.
அண்ணன் சொன்ன உருண்டை இங்கு எப்போது ஒரண்டையை இழுத்து வைக்குமோ என்ற பயத்தில். உலகத்தில் உள்ள அத்தனை தெய்வங்களையும் துணைக்கு அழைத்து கொண்டே அந்தியூரை நோக்கி பயணப்பட்டாள் விசலாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!