Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பிரியமே பிரிவேது

பிரியமே பிரிவேது! 39

அத்தியாயம் 39

தர்ஷினியோடு கல்பனாவும் அந்த அறையை விட்டு வெளிவந்து ஒரு மணி நேரம் ஆகிறது.



Advertisement

இருவரும் ஏதோவொரு வேலையை செய்து கொண்டு ரகு அறையை தான் பார்த்தபடி இருந்தனர்.

“ஆரா இன்னும் அங்க தான் இருக்காளா? இவ்வளவு நேரம் அங்க இருக்க மாட்டாளே?” ரகுவிற்கு சாப்பாடு கொடுத்து சில நிமிடங்கள் பேசிவிட்டு வெளியே வந்து அனைவருடனும் அமர்ந்து விடுவது தான் ஆராத்யாவின் வழக்கம். ரகுவுமே ஆரா வந்ததும் வெளியே வந்து விடுவான்.

Advertisement

Advertisement

இன்று ஒரு மணி நேரம் கடந்தும் வராமல் இருக்கவே மகேஸ்வரி தான் கல்பனாவிடம் கேட்டார்.

“இப்ப தான் நான் போய் பார்த்தேன் மா.. ரகு தூங்குறான்.. ஆரா ஏதோ புக் படிச்சுட்டு இருக்குறா!” என்று சொல்லி சமாளித்து வைத்தாள் தர்ஷினி.

Advertisement

முடிந்தளவுக்கு ஆராத்யாவிற்கு அறிவுரை வழங்கினாலும் அவள் முகம் தெளிவில்லாமல் இருக்க, ஒரு நேரத்திற்கு மேல் இருவரும் பேசி பார்க்கட்டுமே என நினைத்து தான் கல்பனாவும் தர்ஷினியும் வெளியே வந்திருந்தனர்.

தர்ஷினி கல்பனா கிளம்பி சென்று நேரங்கள் கடந்திருக்க, கீழே அமர்ந்திருந்தவளும் அசையவில்லை.. ரகுவும் அவளை திரும்பி பார்த்திடவில்லை.

நீண்ட சில நிமிடங்களுக்கு பின் ரகு அமர்ந்திருந்தவன் தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொள்ள பார்க்க, உடனே எழுந்து அவன்புறம் வந்துவிட்டாள் ஆராத்யா.

கைகளை தொட வந்தவளை அவன் புறக்கணிக்க, “நான் என்ன பண்ணட்டும்? உங்களுக்கு புரியலையா?” என்றாள் தன்னை ஏன் புரிந்து கொள்ளவில்லை இவர்கள் என்னும் ஆயாசத்தோடு.

“எனக்கு நல்லா புரியுது.. அதான் சொல்லிட்டேனே போனு.. ப்ளீஸ் போய்டு.. ஆல்ரெடி உன்னை அடிச்சதே இன்னும் எனக்கு வலிச்சுட்டு இருக்கு.. ஆனா இருக்குற கோபத்துக்கு மறுபடியும் உன்னை அடிச்சிருவேனோனு தோணுது..”

“நான் போறேன்.. போயிடுறேன்.. ஆனா உங்க லைஃப் நீங்க தான் பார்த்து…”

“உன்னை போனு சொன்னேன்.. என் பொறுமையை சோதிக்காம கிளம்பிடு.. என் லைஃப் நான் இருக்குறதும் முடிச்சிக்குறதும் என்னோட விருப்பம்.. வேண்டாம்னு போற நீ அதை பத்தி எல்லாம் பேச தேவை இல்லை..” என்று பல்லை கடித்தவன் நெற்றியை பிடித்துக் கொண்டான்.

“ஆல்ரெடி தலைவலிக்குது.. பேசி பேசி என்னை படுத்தாம கிளம்பிரு.. வேணும்னா சொல்லு ஏர்போர்ட் வந்து அனுப்பி வைக்குறேன்.. போய் சந்தோசமா இருந்துக்கோ.. ஆனா ஒன்னு! நான் இங்க நிம்மதியா சந்தோசமா இருப்பேன்னு மட்டும் நினைக்காத!” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

“என்னை மிறட்டுரிங்க நீங்க.. நான் போறதே நீங்க நல்லாருக்கணும்னு தான்..”

“வேணாம் டி..” என்று அடுத்து சொல்ல வந்தவன்,

“நான் எதாவது சொல்லிருவேன்.. சொல்லிட்டே இருக்கேன்..  பைத்தியமா டி நீ? நீ இருந்தா தான் நான் உயிரோட வாழவே முடியும்னு சொல்லிட்டு இருக்கேன்.. போறேன் போறேன்னு சொல்லிட்டு நான் நல்லாருக்கணும்னு வேற சொல்ற..” என்று அவள் முகம் பார்த்து கத்தியவன்,

“நீ நினைக்குறது தான் சரி.. சரியா? நான் உன்னை தொல்லை பண்ணல. மிரட்டல. உன்கிட்ட பேசவும் இல்ல. கிளம்பு. போய் உன் வேலையை பாரு. அதோ! அதை பொறுக்கிட்டு போ!” என சிதறி கிடந்த அவள் மொபைலை கைகாட்டியவன்,

“முதல்ல உன் பிரண்ட்க்கு போன் பண்ணி என்ன ஏதுன்னு டீடெயில்ஸ் கேட்டுட்டு பத்திரமா போ..”

“ராம்!”

“திரும்பி திருந்தி என்னைக்காவது வரணும்னு தோணுச்சுனா.. தயவு செஞ்சு வந்துடாத.. உன்னை காதலிச்ச அந்த ரகுராம் நீ வரும் போது இங்க இருக்க மாட்டான்..” என்றவன் தன் தலையிலேயே பலமாய் அடித்துக் கொண்டு ,

“போ போனு இவ்வளவு சொல்றேன்.. ஆனா அந்த வார்த்தை மனசுல இருந்து வந்து தொலைய மாட்டுது..” என்றவன் நேருக்கு நேராய் அவள் முகம் பார்த்தான்.

“உனக்கு எப்படி டி சொல்லாம போக தோணுச்சு? அவ்வளவு தான்ல்ல நான் உனக்கு?” என்ற கேள்வியில் ஆராத்யா உடைந்து அழ,

“நிறைய பாத்துட்டேன். போதும். இப்ப ஏன் அழுற? அதான் முடிவு பண்ணி எவ்ளோ பக்காவா ப்ளன் பண்ணிருக்க. அம்பிகா ஆண்ட்டி மட்டும் இதை என்கிட்ட தரலைனா?” என்றவன்,

“ப்ச்!” என்றவனுக்கு அந்த அறைக்குள் நிற்கவோ படுக்கவோ, உலவவோ முடியவில்லை.

எத்தனை தூரம் நம்பி இருந்த உறவு? அவள் வந்த பின் தான் வாழ்வில் பெரிதாய் மாற்றம் வந்ததாய் அவன் இருவருக்கான எதிர்கால வாழ்க்கையை வகுத்து வைத்திருக்க, இப்படி கூடவே இருந்து அவள் செய்த செயலை அவனால் எற்கவும் முடியாமல் அவள் அழுது கரைவதை பார்க்கவும் முடியாமல் நிலைகுலைந்து போயிருந்தான்.

“எல்லாம் சரியா போயிருந்தா இதோ இப்ப நம்ம மேரேஜ் நடந்து முடிஞ்சிருக்கும் தானே? அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு இந்த மாதிரி எதாவது ஆகி இருந்தா? அப்பவும் இதே முடிவு தான் எடுத்துருப்பியா?” என்று பேச பேச அவனுக்கு தாளமுடியவில்லை.

எப்படி தன்னை விட்டு செல்ல அவள் முடிவெடுத்தாள் என்பதில் இருந்து மீள முடியவில்லை.

மெதுவாய் மிக பொறுமையாய் நடந்து வந்து அந்த அரையின் ஓரம் இருந்த கண்ணாடி டேபிளின் உள்ளே இருந்து ஒரு கவரை எடுத்து வந்து அவள் முன் கட்டிலில் வீச அதிலிருந்து பறந்தது சில தாள்களும் டிக்கெட்டும்.

“எடுத்து பாரு! நான் எந்த அளவுக்கு முட்டாளா இருந்துருக்கேன்னு எடுத்து பாரு!” என்றவன் அவள் அழுதபடி நிற்கவும் அவனே எடுத்து அவள் கைகளில் திணித்தான்.

“கல்யாணம் முடிஞ்ச மூணாவது நாள் இங்கேருந்து உன் அம்மா அப்பா வாழ்ந்த வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போக அந்த வீட்டை தேடி கண்டுபிடிச்சு, அங்கேருந்து ஹனிமூனுக்கு ஒரு வாரம் டிக்கெட் போட்டு உனக்கு சர்ப்ரைஸ் குடுக்க நான் பிளான் பண்ணி இருந்தேன். விதி சதி பண்ணிச்சு சரி மாத்திக்கலாம்னு நான் நினைச்சேன். ஆனா..” என்றவன் அடுத்து பேச முடியாமல் தலை கோதி நிற்க,

“அய்யோ!” என்று முகத்தை மூடிக் கொண்டு அழுதவள் மனமும் சேர்ந்து கதறியது அவனின் அன்பினில்.

அவனை அறிந்தவள் தான். அவன் தாங்க மாட்டான் என தெரியும் தான். அனைத்தும் யோசித்து எடுத்த முடிவு தான் எனினும் அவனின் வாய்வழி அனைத்தும் கேட்ட பின்பும் அவளால் அவள் முடிவை இறுக பற்ற முடியவில்லை.

அதுவும் அவன் பேச்சும் தங்களின் எதிர்காலம் குறித்து அவனின் கனவுகளும் என அவன் கண்கள் வழி காணுகையில் இது எத்தனை பெரிய வலி அவனுக்கு என்றும் புரிந்தது.

“ப்ச்! நீ கிளம்பு!” என்றவன் அவள் அழுவதை காணவும் முடியாமல் அவள் செய்ததை ஏற்கவும் முடியாமல் திணறி,

“என்னவோ பண்ணு!” என்று சொல்லி அங்கிருந்து செல்ல அறை கதவை திறக்க கைவைக்கவும் ஓடிவந்து அவன் பின்னின்று அணைத்திருந்தாள்.

“சாரி! ரொம்ப சாரி! என்றவள் அவனை அணைத்தபடி அழ, ஏற்கவோ விலகவோ இன்றி அவள் அழுகையில் அவனுமே கரைந்து நின்றிருந்தான்.

“நான் தப்பு! சத்தியமா இப்படி இனி நடந்துக்க மாட்டேன். ப்ளீஸ்!” என்று சொல்லி அழ, அப்பொழுதும் அவனிடம் அசைவில்லை.

“இந்த ஒரு தடவை என்னை நம்புங்க. நிஜமா இனி உங்களை கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டேன். ப்ளீஸ்!” என்றவள் தானே அவன் முன் வந்து நின்று அணைத்து அவன் முகம் பார்த்து,

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம். உங்க கூடவே இருப்பேன். நீங்க சொல்றதை மட்டும் பண்றேன்.” என்று அவன் சட்டையைப் பற்றி அழ,

“இன்னும் நிறைய பேர் இருகாங்க. அவங்க எல்லாம் கல்யாணத்துக்கு வருவாங்க” என்றவன் சொல்லில் என்ன சொல்ல வருகிறான் என பார்த்தவள் கூடவே அவன் இன்னும் தன்னை ஏற்கவில்லை என்பதும் அவனின் அசையாத உடல்மொழியை கவனித்து அவன் பேச்சிலும் கவனத்தை கொண்டு வர,

“உன் முன்னாடியே கல்யாணத்துல தேவை இல்லாம எதையாவது பேசுவாங்க. உடனே உனக்கு என்னை விட்டுட்டு போக தான் தோணும்.” என்று சொல்லி முடிக்கவும்,

“மாட்டேன். யார் என்ன சொன்னாலும் இனி அப்படி நினைக்க மாட்டேன். கூடவே இருப்பேன். இதோ இந்த கைக்குள்ள நான் இருந்துப்பேன். அன்னைக்கு சொன்னிங்க தான? என் கைக்குள்ள வந்துடுன்னு கேட்டீங்க தான? நான் இங்க தான் இருக்கேன்” என்று அவன் முகம் பார்த்து கண் பார்த்து உணர்ச்சி வேகத்தில் பேசிக் கொண்டு இருக்க, அவளிடம் கோபத்தை இழுக்க முடியவில்லை ரகுவால்.

“என் கையை பிடிச்சுக்கோங்க ராம். ப்ளீஸ்! எனக்கு நீங்க தான எல்லாம். இனி நானா எந்த முடிவுமே எடுக்க மாட்டேன்.” என்று பேசிக் கொண்டே இருந்தவள்,

“நான் வேணா தர்ஷ், கல்பனா அக்காக்கு குடுத்த கிப்ட் எல்லாம் திரும்ப வாங்கிடவா? ஆமா வாங்கிடுறேன். அது வேண்டாம். ம்ம் சரியா?” என்றவள் தலை சாய்த்து அவன் முகம் பார்க்க,

“ஹே!” என்று சின்னதாய் அவளைப் பார்த்து கைநீட்டியவன் செயலில் அடிக்கவோ என்பதை போல அவள் அதிர்ந்து விழிக்க, அவள் நெற்றியின் ஓரம் தட்டியவன் கண்களின் வெளிச்சமும் உதட்டில் சிறிதாய் புன்னகையும்.

“அவ்ளோ அறிவு!” என்றதும் அவன் அமைதியான பேச்சில் தான் அவள் முகத்தில் ஒளிவட்டமே வந்தது.

“என்னை நீங்க மன்னிக்க மன்னிக்க தான் நான் தப்பு பண்றேன். எனக்கு எதுவுமே தெரியல. இப்ப நான் பண்ணினது பெரிய தப்பு தான்.” அவள் பேச பேச கேட்டுக் கொண்டிருந்தவன் கைகளும் அவளை அணைத்திருந்தது.

“சத்தியமா உனக்கு சொல்லி புரிய வைக்க முடியுமான்னு எனக்கு தெரியல!” என்றவன் தன் அணைப்பில் நின்று தன் முகத்தை பார்த்து பார்த்தவளை தன் நெஞ்சோடு அழுத்தி சாய்த்துக் கொண்டான்.

“இப்ப சொல்ற இத்தனை முறை தப்பு தப்புனு. நீ செய்யும் போது தெரிலயா உனக்கு?” என்றவன் கேள்வியில் அவள் விசும்ப,

“நான் உனக்கு சொல்லிட்டே இருக்கணுமா ஆரா என் லவ் என்னனு?” என்று கேட்ட கேள்வியில் அவனோடு ஒட்டிக் கொண்டவள் அணைப்பு இன்னும் வலுத்தது.

“சப்போஸ் எனக்கு இது தெரியாம போயிருந்தா இந்நேரம் நீ கிளம்பி இருப்ப தானே?” என்றான் இன்னும் அந்த வலி மாறாமல்.

“உனக்கு ஏன் ஆரா புரியல? ஏன் என்னால உனக்கு புரிய வைக்க முடியல?” என்று கேட்டவனின் எந்த கேள்விக்குமே பதில் சொல்ல முடியவில்லை என்பதை விட அவளிடம் பதிளில்லை.

“நமக்கு என்ன வேணும்ன்றதுல நாம தான் ஸ்ட்ரோங்கா இருக்கனும்.  எனக்கு நீ வேணும். இப்ப கோபப்பட்டு உன்னை போக விட்டுட்டு அப்புறம் நான் இங்க என்ன பண்ண? இன்னுமே என் கோபம் தீரல. அதுக்காக உன்னை அனுப்பிட்டு இங்க நான்…” என்றவன் அந்த கணம் தாளாமல் அவளை தன்னோடு இறுக்கி தன் தவிப்பை எல்லாம் சேர்த்து அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமொன்றை பதித்தான்.

“எனக்கு நீ வேணும். எப்பவும் வேணும். எனக்கு எதாவது ஆனாலுமே நீ கூட இரு.. உனக்காக நான் திரும்பி வருவேன். ஆரா பொண்ணு தான் ரகுவோட உலகம்ன்றது எப்பவும் உனக்கு மறக்க கூடாது.” என்று சொல்லி அவள் நாடி பிடித்து நிமிர்த்தி புன்னகைக்க, கலங்கிய கண்களோடு அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் பதிலை செய்கையாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!