Skip to content
Post Views: 314
சுயம்பு-5-1
திடீர் என நின்ற காரால் தன் நினைவுகள் கலைந்து போன ட்ரைவரை பார்த்த கவுதம் “என்ன ஏன் கார் நின்னுடுச்சு” என ஹிந்தியில் கேட்க..
ட்ரைவர் “இப்ப எட்டு மணி ஆகுது…உங்களை ப்ரேக்பாஸ்ட் சாப்பிட சாப் நினைவு படுத்த சொன்னார்” என சொன்னதும்..
“ஓஓஓஓ…சரி..சரி..உங்களுக்கு” என கேட்க..அவரும் எனக்கும் சாப் வீட்டுலேந்தே சாப்பாடு குடுத்திட்டாங்க” என சொன்ன பதிலால் திருப்தி அடைந்து…அவரை சாப்பிட சொல்லி விட்டு ஸ்வேதாவை எழுப்ப, அவள் முகம் அலம்பி வந்ததும் நண்பர் வீட்டில் குடுத்திருந்த கெஸ்ரோலை திறக்க…மணக்க மணக்க..சூடாக ஆலு பராத்தா இருந்ததை பார்த்தவர்கள்..பையில் அவர்கள் வைத்திருந்த தட்டுக்களில் அதை வைத்து வேக வேகமாக சாப்பிட்டு முடித்தார்கள்.
Advertisement
ட்ரைவரை அரை மணி நேரம் ஓய்வு எடுக்க சொல்லிய கவுதம், ஸ்வேதாவோடு காரில் இருந்து இறங்க..அங்கிருந்த பசுமையான சூழ்நிலையில் தங்களை மறந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.
அவர்கள் நின்று கொண்டு இருந்த இடத்தில் ஒரு சிறிய தோட்டம் இருந்தது…முதல் நாள் பெய்த மழையால் அங்கிருந்த மரங்களின் இருந்து வீசிய பசுமை வாசனை, இலைகளும், பூக்களுமாக நிறைந்திருந்த அந்த மரங்களின் தாவி ஓடிய அணில்கள், தங்கள் பாஷைகளில் ஏதேதோ சொல்லி கீச் கீச் என கத்தியபடி இருந்த பறவைகளினால் நன்றாக உணர முடிந்தது.
அதை ரசித்து பார்த்த ஸ்வேதா “கவுதம்..உங்க மான்குட்டிக்கு கூட இந்த சத்தம் எல்லாம் ரொம்ப பிடிக்கும்ல்ல” என தன்னை மறந்து சொன்னாள்.
Advertisement
அதற்கு கவுதம் “ஆமா..ஸ்வே…அவளுக்கு இது எல்லாம் ரொம்ப பிடிக்கும்..ம்ம்ம்..நாம எல்லாம் நியாபகம் வெச்சிருக்கோம்..”
Advertisement
“ஆனா அவ எல்லாத்தையும் மறந்துட்டா..அவ குடும்பத்தை..நம்மளை ..எல்லாத்தையும் மறந்து..அங்க எப்டி தான் இருக்காளோ..திடீர்னு யாருமே இல்லாத இடத்துக்கு போக வேண்டிய அவசியம் அவளுக்கு ஏன் வந்ததுங்கறது தான் எனக்கு மர்மமா இருக்கு..இதே யோசனையில எனக்கு தூக்கம் கூட வரல..” என வருத்தமாக பேசினான்.
“சரி..ஏதாவது சொன்னா போதுமே..உடனே அவளை பத்தி யோசனை போயிட வேண்டியது.. தூக்கம் வராம அவதிபட வேண்டியது…”
“நாம தான் நேர்ல பாக்க போறோமே…அப்ப அவளை நல்லா கேள்வியா கேட்டுக்கலாம்…வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சிடலாம்..
Advertisement
சரியா…வானம் இருண்டு மழை வர மாதிரி இருக்கு.. கார்க்கு போகலாம் வாங்க..”என அவனுக்கு ஆறுதல் சொல்லி கார்க்கு போய் உட்கார்ந்ததும்..ட்ரைவர் காரை கிளப்பினார்.
வழியில் வாய் ஓயாமல் பேசியபடி வந்த ஸ்வேதாவிடம் அவனும் சலிக்காமல் பதில் சொல்லியபடி வந்தவன்..திடீரென “போதும்… ஸ்வே…போதும்…இதுக்கு மேல..என்னால தாங்க முடியாது..
அப்பாவியா ஆள் கிடைச்சா போதுமே…நீ பேசியே அவங்களை கதற விட்டுடுவியே..” என அவளை காலை வாரியதும்..
“யாரு…அந்த அப்பாவி கவுதம்” என முகத்தை ஒன்றும் தெரியாதது போல வைத்து கொண்டு ஸ்வேதா கேட்க…
அதற்கு கவுதம் “நான் தான் அந்த அப்பாவி…உன் கழுத்து தாலி கட்டின ஏமாளி…இந்த பொண்ணு உனக்கு வேணாம்…அண்ணா..இதுக்கு வாய் அதிகமா இருக்கு…எந்தங்கச்சி சொன்னாளே…கேட்டேனா…”
“பொண்ணு அழகா இருக்கு…டாக்டர் வேற…எனக்கு ஹெல்பா இருக்கும்னு ஏமாந்து போய் போனா போகட்டும்..ஒரு அபலைக்கு வாழ்க்கை குடுத்த மாதிரி இருக்கட்டும்னு கல்யாணம் பண்ணி இப்ப கஷ்டப்படறேனே…ஓஓ..கடவுளே..இந்த அப்பாவிக்கு ஏதாவது விமோசனம் இருக்கா” என நக்கலாக கேட்டதும்..
முகத்தில் கோவம் பொங்க…”ஓஹோ…எதேது…நீங்க போனா போகட்டும்னு எனக்கு தாலி கட்டினீங்களா…டாக்டர்..நீங்க உங்களை கண்ணாடில பாக்கறதே இல்லையா..”
“எங்க வீட்டுல உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயமா பண்ணாங்க..உங்க அருமை தங்கச்சி ஆசைப்பட்டு சொன்னானு தானே நீங்க என்னை கல்யாணம் பண்ணிங்க..இதுல எனக்கு வாய் அதிகமா…நேர்ல பாக்கும் போது ..இருக்கு..உங்க தங்கச்சிக்கு..” என ஆக்ரோஷமாக பேசியவளிடம்..
“ஏன் ஸ்வே..எனக்கு ஒரு சந்தேகம் கேக்கவா..”என மெல்லிய குரலில் பயந்தபடி கேட்டவனை முறைத்து பார்த்த ஸ்வேதா “கேளுங்க..உங்க சந்தேகத்தை தீர்த்து வெச்சிடறேன்” என தோள்களில் தட்டியபடி கேட்டவளை பார்த்து கேலி சிரிப்போடு..
“நம்ம பசங்களுக்கு ரெண்டு வயசு தான் ஆகுது…இப்ப தான் பேசவே ஆரம்பிச்சிருக்காங்க..
அவங்களுக்கு அவங்க பேசற ஒவ்வொரு வார்த்தையுமே அதிசயம் தான்.. ஆனா நீ எப்ப பாரு…பசங்களுக்கு வாய் அதிகம்னு சொல்றியே…அதுக்கு காரணம் யாரா இருக்கும்..டாக்டர் மேடம்” என கேட்டதுமே..
“கவுதம்..ரொம்ப என்னை சீண்டாதீங்க..உங்க பேச்சு அதிகமா போகுது..” என புசுபுசுவென மூச்சு விட்டவளை பார்த்து சிரித்தவனிடம் ஏதோ பேச ஆரம்பிப்பதற்குள் ஸ்வேதாவின் போன் அடித்ததும் எடுத்து பார்க்க..அவளுடைய ஹாஸ்பிடலில் இருந்து வந்த கால் என தெரிந்ததும் அமைதியான கவுதம் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவனை மறுபடியும் உத்ராவின் நினைவுகளே சூழ்ந்து கொண்டது.
அவர்கள் கோயமுத்தூர் வந்து இரண்டு நாள் முடியவே தாங்கள் கிளம்புவதாக சொன்ன கவுதம் குடும்பத்திடம் “எங்க கெளம்பறீங்க..நாளைக்கு உத்ராவோட பொறந்த நாளு…இந்த வாட்டி அவளோட நட்சத்திரமும் சேந்து வந்திருக்கு..அவ பொறந்த நாளுக்காக மருதமலை முருகர் கோயில்ல..அபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் செஞ்சிருக்கு..” என்றதும்..
அவரை தயக்கமாக பார்த்து “இல்ல…ஊர்ல வீடு பூட்டிட்டு வந்திருக்கோம்..அங்க நாங்க இருக்கிற இடம் அவ்ளோ பாதுகாப்பான இடம் இல்லை” என்ற ராஜாராமனிடம் “ஊருக்கு கெளம்பற யோசனையை இன்னிக்கு மட்டும் மறந்துடுங்க மச்சான்..நாளைக்கு கோயில்ல தரிசனம் முடிஞ்சதும் நம்ம கார்லயே ஊருக்கு திரும்பிடலாம்..நான் போய் வேண்டிய ஏற்பாடுகள் பாக்கணும்..கெளம்பவா” என அனுமதி கேட்ட ராமுக்கு சரி என ராஜாராமனுக்கு தலையை மட்டுமே அசைக்க முடிந்தது.
மறுநாள் அதிகாலையிலேயே உத்ராவின் பிறந்த நாள் என அவளுடைய அப்பா மஹாலிங்கம், தாத்தா அம்பலவாணன், பெரியப்பா சுந்தரலிங்கம், அவருடைய குழந்தைகள் வருண், வர்ஷா என உத்ராவின் குடும்பத்தின் வருகையால் அவளுடைய பிறந்த நாள் களை கட்ட ஆரம்பித்தது.
வந்தவர்களை உற்சாகமாக வரவேற்ற ராம் தம்பதியர் கவுதம் குடும்பத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு சத்யா காபி குடுக்க அதை பருகியபடி அவர்களும் பொதுவாக பேச ஆரம்பித்தார்கள்.
ஹாலில் பேச்சு சப்தம் கேட்டு கண்களை கசக்கியபடி வந்த உத்ரா தன் அப்பாவை பார்த்து ஓடி போய் கட்டி கொள்ள…
அவரும் அவளை ஆசை தீர கன்னங்களில் முத்தமிட்டு தன் மடியில் உட்கார வைத்து கொண்டு…தான் வாங்கி வந்த டிரஸ்ஸை குடுக்க முகம் மலர உத்ரா அதை வாங்கி கொண்டாள்.
வருண் வர்ஷா அவளிடம் ஓடி வர அவளும் அவர்களுடன் உட்கார்ந்து அவர்கள் அவளிடம் உற்சாகமா பேசுவதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.
அதை பார்த்து கண்களில் வந்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்து கொண்ட சுந்தரலிங்கத்தை ஆச்சரியமாக பார்த்த புவனாவிடம் மெல்லிய குரலில் சத்யா..”அண்ணனுக்கு உத்ரானா உயிர்.. ஆனா பெரிய அண்ணி எதிர்க்க எதையும் காண்பிச்சுக்க மாட்டார்..”
“அவங்க இல்லாம தனியா இருந்தா…உத்ராவை தூக்கி கொஞ்சறது..அவளை வெளியே கூப்பிட்டுகிட்டு போறது..அவ கேக்கறதை வாங்கி தரதுனு அவ மேல பாசமா இருப்பார்..”
“இது எதையும் அண்ணிக்கு தெரியாம பாத்துக்கறதுல அவரோட சாமர்த்தியம் அதிகம். அண்ணி உத்ராவை கொடுமை பண்ணது அவங்க எல்லாருக்குமே ரொம்ப வருத்தம் தான்…”
“ஆனா அவங்களோட குணம் தெரிஞ்சு…எதையும் காமிச்சுக்காம…அவங்க எதிர்க்க அமைதியா இருந்துட்டு…
அவங்களுக்கு தெரியாம ரகசியமா எல்லாரும் இந்த குழந்தையை கொஞ்சி விளையாடுவாங்க..ம்ம்ம்…இது எத்தனை நாளைக்கு சொல்லுங்க..” என கேள்வி கேட்டதும்..
“அட கடவுளே..உத்ராவோட பெரியம்மாக்கு இது தெரிஞ்சா என்னாகும்” என பயந்தபடி கேட்ட புவனாவிடம்…
“பெரிய பூகம்பமே வெடிக்கும்…பெரிய அண்ணி எப்பவுமே தன்னோட தோல்வியை ஏத்துக்கவே மாட்டாங்க..கலவரம் பண்ணியாவது ஜெயிக்கணும்னு பாப்பாங்க..” என மாலினியின் குணத்தை பற்றி சொல்லி மாய்ந்து போனார். (தொடரும்)
error: Content is protected !!