Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Suyambu

Suyambu 5 2

சுயம்பு-5-2 

பேசியபடி இருந்தவர்களை பார்த்த ராம் அம்பலவாணனிடம் “மாமா..உங்க பேத்தியை பாத்தீங்களா..சந்தோஷமா…அவ உங்க கிட்ட வந்தாளா..பேசினாளா..” என ஆவலோடு கேட்க.. 

“அவ எங்கடா வரா..நாம என்ன தான் பாசமா பழகினாலும் அவ எங்க நம்ம கிட்ட ஒட்டறா…அவங்க அப்பாவை பாத்தா தான் அவளுக்கு உலகமே மறந்துடுதே..” 

“இத்தனைக்கும் அவன் அதிகமா பேசினா குழந்தை அம்மா இல்லேனு ஏங்கி போயிடுவா..அவனை உடனே பாக்கணும்னு அடம் பிடிக்க போறானு பயந்துக்கிட்டு அவ கிட்ட நம்மள மாதிரி கூட அவன் பேசறது கூட இல்ல..” என அங்கலாய்த்து கொண்டார். 



Advertisement

சற்று நேரத்தில் எல்லாரும் தயாராகி கிளம்பி மருதமலைக்கு போய் இறங்கியதும், காரில் இருந்த பூஜை சாமான்களை எடுத்து கொண்டு இறங்கிய சத்யாவிடம் வேகமாக வந்த உத்ராவின் பெரியப்பா சுந்தரலிங்கம் “கொண்டா மா..இதை நான் எடுத்துட்டு வரேன்…நீ நிதானமா ஏறி வா” என சொல்லி அவள் கைகளில் இருந்து வாங்கி கொண்டு படி ஏற ஆரம்பித்தார். 

மலை ஏற தொடங்கியதுமே குழந்தைகளுக்கு உற்சாகம் அதிகமாகவே..வேகமாக ஓடியபடி படிகளில் ஏற ஆரம்பித்தனர். அவர்களை தடுத்த ராம் ஒவ்வொருவராக நிதானமாக ஏற சொல்லி அவர்களை கூடவே கண்காணித்தபடி வந்தார். 

சத்யாவோடு பொறுமையாக மலை ஏற ஆரம்பித்த புவனா மெல்ல சுற்றி பார்க்க…அங்கிருந்த பசுமையில் தன்னை மறந்தவளாக மெல்லிய குரலில் சத்யாவோடு சேர்ந்து கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்தபடி இருவருமாக ஏற ஆரம்பித்தனர். 

Advertisement

மேலே சன்னிதானத்துக்கு போனதும் அன்று உத்ரமாக இருக்கவே பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இவர்கள் அங்கு ஓரமாக கிடைத்த இடத்தில் நின்று எதிரே தெரிந்த முருகனின் வடிவை கண்களில் நிரப்பி மனதில் நிறுத்தி, ஆனந்தப்பட்டு கொண்டனர்.   

Advertisement

அப்போது கர்ப்பகிரஹத்தில் இருந்து வெளியே வந்து அவர்களை கண்ட கோயிலின் தலைமை குருக்கள், அவர்களை வரவேற்று நலம் விசாரித்து அங்கு வரிசையில் உட்கார சொல்லி அபிஷேகத்தை ஆரம்பித்தார். 

பால்,தேன்,தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், என ஒவ்வொன்றாக அபிஷேகமாக, அடுத்து வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், முந்திரி ஹல்வா, முறுக்கு, ஜாங்கிரி, இளநீர் பாயசம், தயிர்சாதம், என விதவிதமான நைவேத்தியங்கள் செய்த பின், கற்பூர ஹாத்தி எடுத்ததும் கண்குளிர எல்லாவற்றையும் ஆனந்தமாக தரிசித்தவர்கள் அதன் பின் நடந்த பூஜையையும் தரிசித்து விட்டு வெளியே வந்து, அன்று அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அன்னதானத்தை உத்ராவின் கைகளாலேயே குடுக்க செய்தனர். 

எல்லாம் முடிந்ததும் அங்கிருந்த மரத்தடியில் அவர்கள் உட்கார்ந்து கொண்டதும் வந்த கோயிலின் குருக்கள் ஒருவர் அவர்களிடம் தலைமை குருக்கள் பிரசாதத்தை தர சொன்னதாக சொல்லி தந்ததும், அங்கேயே சத்யாவும் புவனாவுமாக சேர்ந்து எல்லாருக்கும் இலையில் வைத்து குடுத்து தாங்களும் சாப்பிட்டு விட்டு, ஏற்கனவே வீட்டில் இருந்து தயார் செய்து வந்திருந்த சாம்பார் சாதம், தயிர் சாதத்தையும் சேர்த்து சாப்பிட்டு கைகளை அலம்பி கொண்டு ஓய்வாக உட்கார்ந்து கொண்டனர். 

Advertisement

மெல்ல வந்து தன் மடியில் உட்கார்ந்த உத்ராவை பார்த்த அம்பலவாணன் ராமிடம்..” பாத்தியா டா எங்கம்மாவ..மத்தவங்க கூப்பிட்டா தான் என் பேத்தி அவங்க கிட்ட போவா…ஆனா நான் கூப்பிடாமயே என் கிட்ட வந்துடுவா..என் மேல அவளுக்கு பாசம் அதிகம்…” என சொல்லி சந்தோஷப்பட்டார். 

அதை கேட்ட மஹாலிங்கம் சிரித்தபடி “மத்தவங்கனு சொன்னீங்களே…அது யாரு பா” என கேட்க.. 

அவரும் சளைக்காமல் “வேற யாரு நீயும் உங்கண்ணனும் தான்” என பதிலளிக்க.. 

அதை கேட்டதும்.. வாய் விட்டு சிரித்த சுந்தரலிங்கம் “ஏன் பா…அவ எப்பயாவது தான் உங்க கிட்ட வருவா..ஆனா இந்த பெரியப்பா பாத்தாலே போதும்…ஓடி வந்து என் கிட்ட உக்காந்துப்பா…அவ எனக்கு தான் மொதல்ல செல்லம்..” என போட்டி குரலில் சொல்ல.. 

அங்கிருந்த வருணும் வர்ஷாவும் ஓடி வந்து “யாரு …யாரு..எங்க தங்கச்சிய செல்லம் கொஞ்சறது…அவ எங்களுக்கு தான் மொதல்ல தங்கச்சி..அப்பறம் தான் உங்களுக்கு…நீ வா..செல்லம்..நாம விளையாடலாம்..” என சொல்லி..அவளை அழைத்து போயினர். 

நடந்ததை ஆச்சரியம் ததும்ப பார்த்து கொண்டு இருந்த ராஜாராமன் தம்பதியிடம்.. 

சுந்தரலிங்கம்”என்னங்கண்ணா அப்டி பாக்கறீங்க..இதுவரைக்கும் உத்ராவை யாரும் ஸ்கூல்ல வந்து பாத்தது கூட இல்ல…இப்ப மட்டும் அதிகமா கவனிக்கறாங்களேனு ஆச்சர்யமா இருக்கா…” என கேட்க.. 

அவர்களும் தர்மசங்கடத்தில் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக தலையாட்டி அதை ஆமோதித்தனர். 

அதை பார்த்த சுந்தரலிங்கம் “நான் யாரையும் குறை சொல்ல முடியாதுங்கண்ணா..இது என்னோட தலைவிதி..மாத்த முடியுமா…” 

“என்னால என்ன பண்ண முடியும் சொல்லுங்க பாப்போம்.. “ம்ம்ம்….நான் வாழ்க்கைப்பட்டது ஒரு பேய்க்கு…அது புளிய மரம் ஏற சொன்னாலும் வேகமா ஏறணும்..முருங்கை மரம் ஏற சொன்னாலும் மறு கேள்வி கேக்காம ஏறி ஆகணும்..” 

“இது நிச்சயமாக அவ கிட்ட எனக்கு பயம்ங்கறது இல்ல..அவளால வீட்டுல தேவையில்லாம பிரச்சினை வரக்கூடாது…வீட்டோட அமைதி கெடக்கூடாதுங்கறது என்னோட ஒரே எண்ணம்..” 

“என்னை பாத்து எங்க வீட்டு ஆளுங்க..குழந்தைங்க முதல் கொண்டு அவளை அனுசரிச்சு போக பழகிக்கிட்டாங்க…குழந்தைகளுக்கும் வளரும் போது நல்ல சூழ்நிலை வேணுமே..அதான்..” 

“நாங்க எல்லாம் இவ்ளோ உஷாரா இருந்துமே..சரியா எல்லாரும் வெளியே ஒரு நில விஷயமா போன போது அவ பண்ண ஆர்ப்பாட்டத்தால எங்க உத்ராவை அவ கிட்டேயிருந்து காப்பாத்த முடியாம போயிருச்சு..” 

“ஆனா..இப்பவும் நாங்க தனியா அவளை பாக்கறது, செல்லம் கொஞ்சது எதுவுமே அவளுக்கு தெரியாத மாதிரி பாத்துக்கறோம்..ஒரு வேளை தெரிஞ்சா அது உத்ராவோட உயிருக்கு கூட ஆபத்தா கூட முடியலாம்..”என வேதனை பொங்க சொல்லி முடித்தார். 

அவர் பேசிய விஷயத்தின் தாக்கத்தால் யாரும் பேசாமல் அமைதியாக சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். சற்று நேரத்தில் ஒலித்த குழந்தைகளில் உரத்த குரலால் தங்களது நினைவுக்கு திரும்பியவர்கள்..சில பொதுவான பேச்சுக்களுக்கு பின் உத்ராவின் அப்பா தான் உத்ராவோடு இருக்க போவதாக சொல்லவே அம்பலவாணன், சுந்தரலிங்கம் அவருடைய குழந்தைகள் தாங்கள் அங்கிருந்தே தங்களது வீட்டுக்கு செல்வதாக சொல்லி எல்லாரிடமும் விடை பெற்று கிளம்ப, கவுதம் குடும்பத்தினரும் தாங்கள் அன்று ஊருக்கு கிளம்புவதாக சொல்லி அவர்களிடம் விடை பெற்றனர். 

அடுத்த தடவை வரும் போது அவசியம் தங்களது வீட்டுக்கு வர வேண்டும் என கவுதம் குடும்பத்தை அழைத்து விட்டு அவர்கள் கிளம்பினார்கள்.. 

அவர்கள் கிளம்பியதும் மீதி இருந்தவர்கள் ராமின் காரில் ஏற கார் கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி போக ஆரம்பித்தது. ஒரு இதமான மௌனம் காரில் நிறைந்திருந்தது. காரில் ஏறியதுமே அதுவரை விளையாடிய அலுப்பால் உத்ரா தூங்கி விட்டாள். கவுதம்க்கு தூக்கம் வராததால் அவன் ஜன்னல் வழியாக வேடிக்கை பாத்தபடி வந்தான். 

“மறுபடியும் எப்ப ஸ்கூல்”என்ற ராமின் குரலுக்கு அவரை பார்த்தவன் “நெக்ஸ்ட் வீக் அங்கிள்” என்றான். 

“ஏன் தம்பி நானும் அங்கிள் உத்ரா அப்பாவும் உனக்கு அங்கிளா”என கேலியாக கேட்ட ராமை கேள்வியாக பார்த்தவனிடம் “நீங்க என்னை உத்ரா கூப்பிடற மாதிரி மாமானே கூப்பிடுங்க…அப்பறம்..உத்ரா அப்பாவை சித்தப்பானு கூப்பிடுங்க” என விளக்கமாக சொன்னார். 

அதை கேட்டதும் எந்த கேள்வியும் கேட்காமல் “சரிங்க மாமா..” என கவுதம் சொன்ன பதிலால் ராம் பூரித்து போனார். 

மஹாலிங்கம் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த கவுதம் மெல்லிய குரலில் அவரிடம் “சித்தப்பா.. நான் உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா..”என கேட்டான்.. 

அவரும் மெல்ல தலையசைக்கவே..”நீங்க ஏன் இதுவரைக்கும் உத்ராவுக்கு ஒரு போன் கூட பண்ணதில்லை” என கேட்டான்..(தொடரும்) 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!