Skip to content
Post Views: 1,638
நாட்கள் கடக்க கஸ்தூரியின் பெரும்பாலான நேரம் கமலம்மா வாணி தீனாவோடே சென்றது.
பள்ளிக்கு ஐந்து வயதில் தான் போக முடியும் என்பதால் வீட்டிலேயே இருந்த வாணியை, “க்கா.. க்கா..” என தவழும் போதிருந்து பின்தொடரும் தீனாவை மிகவும் பிடிக்கும் அவனின் அக்காவிற்கு.
Advertisement
கஸ்தூரி வாணிக்கு ஊட்ட.. வாணி தீனாவிற்கு ஊட்ட என கமலம்மா இருக்கும் அறைக்குள் பந்தமாய் அடங்கி கொண்டது அவர்கள் கூட்டணி.
Advertisement
வாணிக்கு இப்போது எல்லாம் தீனா தான் அவளின் எல்லாமும்.
Advertisement
தொட்டிலில் போட்டு கொடுத்தால் அழகாய் ஆட்டி தூங்க வைப்பது, பால் கலந்து கொடுத்தால் தன் மடியில் வைத்து கொடுப்பது.. என அவனுக்கு மற்றுமொரு தாயாய் மாறியிருந்தாள் தமக்கையவள்.
Advertisement
தீனாவிற்கும் விளையாட்டு தோழியான அக்காவோடு ஓடி ஆட அத்தனை மகிழ்ச்சி.
அவள் பள்ளி செல்ல தொடங்கவும் தீனாவும் பால்வாடியில் சேர்க்கப்பட, வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அக்கா, தம்பி இருவருக்கும் தாயோடே நேரம் கழியும்.
எல்லாம் சரியாக போவதாய் இருக்க கஸ்தூரி மீண்டும் தன் கூட்டுக்குள் நத்தையாய் சுருள ஆரம்பித்திருந்தார் பிள்ளைகள் இல்லா நேரத்தில் ஜெயசீலனின் நடவடிக்கையால்.
கமலம்மா தெளிவாய் இருந்திருந்தால் அதை உடனே கண்டு கொண்டு இருப்பாரோ என்னவோ..?!
அவரும் மருந்துகளின் விளைவால் அரை மயக்கத்தில் இருக்க அந்த அறையை தாண்டி வெளியே வராத அவராலும் கண்டு கொள்ளப்படாமல் போனது.
அதன் விளைவால் தனிமையில் வேதனையில் உழன்றாள் பேதையவள்.
பணப்புழக்கம் அதிகரித்து இருந்த காரணத்தினாலோ என்னவோ அவ்வப்போது உடல் அலுப்புக்கு என இருந்த குடி இப்போது வாடிக்கையான ஒன்றானது.
தட்டிக்கேட்கும் தாயும் படுக்கையில். கஸ்தூரியை பொறுத்தவரை இப்போது அவளின் நிலை அநாதைக்கு ஒப்பானது தான்.
‘உறவுகள்..’ என இருந்தாலும் யாரிடம் கொண்டு சென்றாலும், “அனுசருச்சு போ.. கண்ணு.. ஆம்பளன்னா அப்புடி இப்புடின்னு இருக்கறது தான்.
நம்ம தான் பாத்து பக்குவமா நடக்கோனும்..’ என்ற அறிவுரை தான் வரும் என்பது அவளுக்கே தெரியும் போது யாரிடம் முறையிடுவாள்.
நாட்கள் செல்லச்செல்ல கஸ்தூரியிடம் அவர் பேசும் விதமும் பார்வையும் அவரை பயங்கொள்ளவே செய்தது.
மாதங்கள் கடந்து வருடமாக கமலம்மாவும் தன்னால் முடிந்த வரை போராடி பார்த்துவிட்டு, ‘இனி தன்னால் கஸ்தூரிக்கு பாரமாய் இருக்க முடியாது.. போதும் தன்னால் அவள் பட்ட பாடு..’ என நினைத்து உயிரை விட்டிருந்தார்.
அவர் அறியாத ஒன்று அவர் தான், இத்தனை நாளாய் அவரை கொடும் நரகத்திலிருந்து காத்திருக்கிறார். இனி தான் அவளுக்கு வாழும் வாழ்க்கையே நரகமாக போகிறது என்பது.
தாயின் மரணம் வலியை கொடுப்பதற்கு பதிலாக தன் வன்மத்தை நேரடியாக காட்ட வழி விட்டதாக நினைத்த ஜெயசீலன், கிடைத்த நேரமெல்லாம் வார்த்தையால் கொல்லத்தொடங்கினார் கஸ்தூரியை.
பிள்ளைகளும் பள்ளிக்கு செல்ல பகல் இரவு என்ற பாகுபாடு இன்றி அவளை வார்த்தையால் வாட்டத்தொடங்கினார் ஜெயசீலன்.
“கண்ணாலத்துக்கு முன்னாடியே அவெனோட காடு மேடெல்லாம் சுத்தியிருக்கியாமே..?
சொத்தோட வார அழகான பொண்ண ஏன் வேணாங்கனுமுன்னு கட்டிக்கிட்டேம்பாரு.. என்னையச்சொல்லோனும்..” என்றவரை இயலாமையோடு பார்த்திருந்தார் கஸ்தூரி.
‘தன்னை நம்பாமல்.. இழிவு படுத்தவேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே கொண்டு பேசுபவரிடம்.. எதை சொல்லி தன்னை நிரூபிக்க முடியும்..’ என்ற நிலையில் அவரிருக்க,
ஜெயசீலனின் பேச்சு நாளுக்கு நாள் இன்னும் அருவெறுப்பாக மாறத்தொடங்கியது.
“எனக்கு என்னமோ அவெனோட மட்டு உன்ற ஒறவு நின்ன மாதிரி தெரியலையே..? அப்புடியே உன்னய கண்டா பாசம் பொங்குது அவெனோட அண்ணங்காரனுக்கு.
அவெனோட ஆத்தாக்காரி பேசினா கூட பொறுக்காம.. அப்புடி பாஞ்சு வந்து நிக்கறான் உனக்கு ஆதரவா.
ஒருவேள நீயும் அவெ அண்ணங்காரனும் ஒண்ணா கூத்தடிக்கறத பாத்துப்போட்டு.. வெறுத்து போயித்தே அவனோட்டுன வண்டிய லாரில உட்டானோ..?” என்றவரின் பேச்சில்,
அன்று பத்திரப்பதிவு தினத்தில் தன்னோடு தயாநிதியின் அன்னையும், அண்ணனும் பேசியதை அறைகுறையாக கேட்டிருக்கிறார்.. என்பது புரிந்தாலும், என்ன சொல்லி அதை தெளிவு படுத்த.. என்று விளங்காது தவித்தவர்,
தன்னை திடப்படுத்திக்கொண்டு, அன்று நடந்ததை சொல்ல, “அட அட, என்னா அழகா கத சொல்றே..!! இந்த திறமெ எல்லா எனக்கிருந்திருந்தா நல்லா இருந்திருக்குமே..” என ஏளனமாக சிரித்தவர்,
“நா தா கண்ணால பாத்தேனே..
அவென் அந்த உருகு உருகறான்.. நீ அழுதா..
அதோட இந்த புள்ளைய அப்புடி ஆசையா தடவுறான். உங்க ரெண்டு பேரு கண்ண பாத்து அப்புட்டு சிலாகிக்கறான்.. அம்புட்டு ரசன அதுல.. அதோட விட்டானா மகளயும் சேத்தில்ல விசாரிக்கான்.
எல்லா அவனோட தம்பிக்கு பொண்டாட்டியா போவ இருந்தவ புள்ளங்கன்னா..? நிச்சயமா இல்லே.
உண்மைய சொல்லு.. அவெனுக்கும், உனக்கும் எதுவுமே இல்லே..? அவெனோட பார்வையும் உன்ற அழுகையும்.
இதுல அவென் தம்பியே உன்ற வவுத்துல பொறந்திருக்கன்னு சொல்றான்..
எனக்கு சந்தேகமா இருக்கு.. இவென் என்ற மகன் தானா..?” என்று உறங்கும் தீனாவை காட்டி பேச,
காதிரண்டையும் அடைத்துக்கொண்டு கதறி அழுதவரை கண்டு துளியும் இரங்காமல், “என்னடீ.. உண்மைய கண்டுபுடுச்சுட்டேன்னு.. தெரிஞ்சதும் இந்தா நடிப்பு நடிக்கறே..!
உன்ற நடிப்பு திறம தெரியாம.. நானும் இத்தினி வருஷமா ஏமாந்து போயிருக்கேனே..!!
ஆமா.. நமக்கு கண்ணாலமான அடுத்த மாசமே உண்டாகி நின்னையே.. அதாவது என்றது தானா..? இல்லே.. வயித்த ரொப்பிட்டு தான் இங்கனையே வந்தையா..?” என்றவர்,
“அப்பவே இப்புடி வந்தது புள்ளன்னா.. இவெனும் உன்ற அப்பனோட சாவுக்குன்னு போயி இருந்த இடத்துல பழைய உறவை புதுப்பிச்சுட்டு வந்ததால வந்துச்சா..?
ஏளவுக்கு போனவ மாசக்கணக்கு கழிச்சு வீடு வந்ததும் உண்டான மாயம் இப்பெல்ல தெரியுது..!!” என கூசாமல் தன் மக்களின் பிறப்பையே சந்தேகம் கொண்டு வார்த்தையால் வதைத்தான் பெண்ணவளை.
அவள் பதில் சொல்ல வந்தால் இன்னும் பேசுவான்.
அதிலும் ஓரளவு விவரம் புரியத்தொடங்கும் வயதில் பெண் இருக்க,
‘அவளின் பிறப்பு பற்றி தந்தையின் பேச்சு.. அவளையும் தன்னைப்போல நரகத்தில் தள்ளிவிடுமே..’ என்ற அச்சத்தில் அமைதியாய் அவனின் பழிச்சொல்லை ஏற்று நின்றாள் கஸ்தூரி.
இதுவே தினமும் தொடர்கதையாகி போனது கஸ்தூரிக்கு.
அன்று வழக்கம் போல குடித்துவிட்டு வந்தவர், “ஆமா.. ஏன்டீ.. உன்ற காட்ட கூட அவெ வாங்கறான்னா.. எதுவும் சரியா படலையே..? ஒருவேல ஓடிப்போக திட்டங்கிட்டொ வச்சிருக்கீயோ..?” என்றவன்,
“அவென் ஆத்தாக்காரி ஆடுற ஆட்டத்துக்கு நீ மட்டுக்கும் அப்புடி போனே.. உன்னய கூறுபோட்டு வித்திடுவா பாத்துக்கோ..” என விகார சிரிப்போடு சொன்னவரின் பேச்சு எப்போதும் போல தொடர்ந்தது.
கடும் சாட்டையாய் சுழன்ற அந்த நாக்கு இறுதியாய்,
“தயா.. தயா ன்னு இவெங்கிட்ட கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்சி பேசுறப்போ எனக்கு வெளங்கலயே..
இது உங்கூட மொத வாழ்ந்தவனோட நியாபகத்துல வார கொஞ்சலு ன்னு..!!
ஆசையா தூக்கி கட்டிக்கறது என்ன.. முத்தமென்ன.. அவெனாவே நெனச்சு தான் கொஞ்சறையோ..?
கொழந்தையிலயே இந்தா கொஞ்சு இவென கொஞ்சறையே.. இன்னு அவென் வளந்தா.. கொஞ்சலத்தாண்டி இன்னுமே எல்லாமே பண்ணுவா போல..” என கூசாமல் மகனோடு இணைத்து பேச, மொத்தமாய் இடிந்து போய் அமர்ந்துவிட்டார் கஸ்தூரி.
எந்த தாயால் தான் இதை ஏற்கமுடியும்..?
‘பிள்ளையை ஆசையாய் தொட்டு.. தழுவி.. கொஞ்சி.. சீராட்டி வளர்க்க தானே அன்னை..
இனி தன் மகனை தொட்டு தூக்கினாலே இந்த வார்த்தை தானே வந்து முன் நிற்கும்.. அய்யோ..!!’ என அமர்ந்த இடத்தை விட்டு சிறிதும் அசையாமல் சிலையாகி மனதோடு அரட்ட துவங்கியவருக்கு விடிந்ததும் தெரியவில்லை.
இரவு பேசிவிட்டு ஓய்ந்து மதுவின் மயக்கத்தில் ஜெயசீலன் ஒரு ஓரத்தில் கிடக்க தூங்காமல் நிலைகுத்திய கண்ணோடு அமர்ந்திருந்தார் கஸ்தூரி.
விடிந்து வெகு நேரம் ஆகியும் சற்றும் சொரணை இன்றி வெறித்திருந்தவரை தூங்கி விழித்ததும் தேடி ஓடி வந்தான் தீனதயாளன்.
அவர் கால் நீட்டி அமர்ந்திருக்க ஆசையாய், “ம்மா..” என அழைத்து அவர் மடியில் அமர்ந்து கழுத்தோடு கட்டிக்கொண்டான் மூன்று வயது பிள்ளை.
எப்போதும் இப்படி அவன் வந்தால், ஆசையாய் கன்னத்தில் முத்தமிட்டு, “தயாக்குட்டி, என் செல்லத்தங்கம்.. பட்டுக்குட்டி..” என கொஞ்சும் தாய், இன்று கொஞ்சாமல் போக யோசனையோடு தலையை தூக்கி அவரை பார்த்தான்.
அவரோ எந்த உணர்வுமின்றி எங்கோ பார்த்துக்கொண்டிருப்பதை கண்டு அவரின் மனநிலை உணரும் வயதா அவனுக்கு..?!
அவர் தன்னை கொஞ்சவில்லை என்பது மட்டுமே புரிந்து, “ம்மா.. அன்ன கொச்சு..” என பிஞ்சு கரத்தால் அவரின் முகத்தை தன்னை நோக்கி திரும்பி இதழருகே தன் முகத்தை நகர்த்த இயலாமை தந்த பாரத்தோடு அவரின் விழி கலங்கிப்போனாலும் சிலையென வீற்றிருந்தார் அவர்.
அவனே முன்வந்தும் தாயின் நிலை மாறவில்லை என்றதும், “ம்மா.. கொதும்மா.. ங்க.. அப்புதோ ங்க..” என அவனின் நெற்றி, கன்னம் என தொட்டுக்காட்டி கஸ்தூரியின் கன்னம் பற்றி இழுத்து தன் முகத்திற்கு நெருக்கமாக்க,
இரவு ஜெயசீலன் சொன்ன விசயம் நாராசமாய் செவியில் ஒலிக்க.. அதன் கனம் தாங்க முடியாது அவனை தன் மடியிலிருந்து தள்ளிவிட்டவர் அவசரமாக வெளியே இருந்த குளியலறை பக்கம் விரைந்தார்.
தான் கொஞ்சக்கேட்டும் செய்யாமல்.. தன்னை தள்ளிவிட்டு சென்ற அன்னையின் செயலில்.. செய்வதறியாது விழித்த அந்த பிஞ்சோ எப்போதும் போல தன் அக்காவை சரணடைய எண்ணி அழுது கொண்டே வாணியிடம் சென்றான்.
அவள் இன்னும் தூக்கத்தின் பிடியில் இருக்க, “க்கா.. க்கா.. ம்மா.. அன்ன தள்ளி. நீ வா.. கொச்ச தொல்லு..” என அழுகையோடு உசுப்ப,
அவளும் தூக்க கலக்கத்தோடு எழுந்து, “என்ன தம்பீ.. அக்கா தூங்கனுன்டா..” என கொட்டாவி விட்டபடி சொல்ல,
“அம்மா தள்ளி போச்சு க்கா.. என்ன டூக்கல.. இப்புதி இப்புதி கொச்சல..” என அக்காவை கட்டி.. அவளின் நெற்றி, கன்னமெல்லாம் முத்தமிட்டு தேம்பிக்கொண்டு சொல்லி வெளியே கை காட்டவும்,
“ஆ….” என்ற அலறல் ஒலி ஓங்காரமாய் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
அதில் பயந்து போன வாணிக்கு இருந்த அரைகுறை தூக்கமும் தெளிந்துவிட குரலை அடையாளம் கண்டு கொண்டவள்,
“ம்மா..!!!” என கத்திக்கொண்டு ஓட தீனாவும் அவளின் பின்னே சென்றான்.
அங்கு அவன் கண்ட காட்சியின் கொடூரத்தில் அதிர்ந்து பயந்து மூர்ச்சையாகி போனான் அந்த பிஞ்சு.
என்ன சுத்தி என்னனமோ நடக்கு தம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூகத்தில்ல உன்னை நானும் தொலைச்சேன் அம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா
error: Content is protected !!