Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 1.1

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 1.1

“கால் பட்ட இடம் எல்லாம் மலர் ஆக… கைப்பட்ட பொருள் எல்லாம் பொன் ஆகணும்….
உன் கண்பட்டு வழிகின்ற நீர் எல்லாம் ஆனந்தக் கண்ணீரே என்றாகணும்…
ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ அதை பார்க்கின்ற என் உள்ளம் தாய் ஆக…”
டி.எம் செளந்தர் ராஜனின் காந்தமான குரலில் எம்.ஜி. இராமச்சந்திரன் அவரது பொன் நிறத்திற்கு ஏற்ப கிளிப்பச்சை சட்டையுடன் கையில் ஃப்ளூட் வாசித்து அவருக்கே உரிய ஸ்டைலில் அபிநயத்துடன் ஆடிக் கொண்டிருந்தார்.

அந்த அறை முழுவதும் அந்த பாடலுடன் சிவராமன் சேர்ந்து பாடிக்கொண்டிருந்த அவரின் கணீர் குரலும் ஒலித்துக்கொண்டிருந்தது.

அருகே அவரின் செல்ல மகளான கங்கா அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருந்தாள். அவரின் குரல் உற்சாகமாக பாடல் வரிகளை பாடிக் கொண்டிருந்தது.



Advertisement

கங்காவிடம் திரும்பி, “நான் உன் கல்யாணத்தை இந்த மாதிரிதான் நடத்த போறேன்” என்றார். அவரது கண்களில் மகளின் வாழ்வை பற்றிய கனவும், ஏக்கமும் மிகுந்திருந்தது.

கங்காவும் மெளனமாக சிரித்துக்கொண்டே அந்த பாடலை ரசித்தாள்.சிவராமன் எம்.ஜி.ஆர் இன் ரசிகர் என்று சொல்வதை விட தீவிர பக்தர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர் இறந்து பல வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அவரது புகழ் இன்றுவரை மங்காது இருப்பதற்கான காரணம் அவரது உண்மையான ரசிக பெருமக்கள்தான்.

Advertisement

என்னதான் சிவராமன் தனது மகள்களுக்கு சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆர் திரைப் படங்களை காட்டி வளர்த்திருந்தாலும்,

Advertisement

அப்படி அவர் என்னதான் செய்து விட்டார்? இந்த அளவு மக்கள் அவர் மீது தீராக் காதல் கொண்டிருக்கிறார்கள்.
அவரது தங்க நிறமா? பூக்களை போன்ற சிரிப்பா?அல்லது தனது படங்களில் நீதிக்காக உயிரையே அர்ப்பணிக்கும் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களா? இல்லை அவரது தொண்டர்களை ரத்தத்தின் ரத்தங்களே என அழைக்கும் அரசியல் சூட்சமங்களா? இன்று வரை கங்காவிற்கு அது ஒரு புரியாத புதிர்.

 அப்போது சிவராமனின் இளைய மகள் கெளசல்யா சாடாரென ரிமோட்டை பிடிங்கி இதெல்லாம் போர் ரொம்ப பழைய படம், நான் பிக்பாஸ் பார்க்க போகிறேன் என சேனலை மாற்றினாள்.

சிவராமன் பிக்பாஸ் எல்லா எனக்கு புடிக்காது. ஆம்பிளைங்க பொம்பளைங்க எல்லா ஒரே ரூம்ல, அவங்க போடுற ட்ரெஸ் சகிக்கல. இனிமேல் இந்த வீட்டிலே பிக்பாஸ் ஓடுச்சு நான் டீவி கணக்சனை கட் பண்ணி விட்டுருவே என கொஞ்சம் அழுத்தமாக கறாராக கூற வீடே அமைதியானது.

Advertisement

அடுப்படியில் இருந்து அவரது மனைவி லட்சுமி திடுக்கிட்டு ஓடி வந்தார். கணவர் யாருடனோ சண்டை போடுகிறாரோ என எண்ணி , அந்த அளவு அவரது குரலில் கடுமை இருந்தது.

சற்று நேரத்திற்கு முன்பு இருந்த சந்தோச சூழல் ஒரு நொடியில் மாறியது. ஆம் அவர் அப்படிதான் நல்லவர்களுக்கு நல்லவன் நல்லவர் அல்லாதார்க்கு பொல்லாதவன்.

அவிநாசி ஒரு அழகான டவுன் பஞ்சாயத்து அனைத்து வசதிகளும் நிரம்பிய ஒரு அழகான வளர்ந்து வரும் கிராமம் அதுதான் சிவராமனின் ஊர். சிறிய அளவிலான ரீடு( பவர் லூம் சம்பந்தப்பட்டது)கடையின் ஓனர். அவரது சின்ன கடைக்கு அவரே ராஜா அவரே மந்திரி.

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்னும் பேர்வழி .அந்த வரிகளை போன்று தான் அவரும் வாழ்ந்து வந்தார்.

பெரிய அரசியல் வாதியோ, பணக்காரனோ கிடையாது.அவரது குட்டி சாம்ராஜ்ஜியத்தில் தன் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்பான மனைவி லட்சுமி ,கண்மணிகள் போல இரண்டு பெண் பிள்ளைகள் மூத்தவள் கங்கா இளையவள் கெளசல்யா.

சொந்த தொழில், அவிநாசி டவுனில் சொந்தமான பூர்வீக வீடு, நிறைந்த சொந்தங்கள் என அவர் வாழ்வு செழுமையான முறையில் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.அவரின் உழைப்பு மட்டுமே அவரின் மூலதனம்.

அவரின் அப்பா அருணாசலம் சிவராமன் சிறுவயதாக இருக்கும் போதே காலமாகி, விட அவரது பெரியம்மா சங்கரம்மாள் சிவராமன், அவரது அண்ணன், தங்கையை தன் பொறுப்பில் எடுத்து வளர்த்தார்.

காரணம் அவரின் தாய் பாப்பம்மாள் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதவர். தந்தை இறந்த இரண்டு மாதங்களில் சங்கரம்மாவிற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ஊர் பெரியவர்களை அழைத்து டவுனில் இருந்த 4 சென்ட் இடத்துடன் கூடிய வீட்டை அருணாசலம் மக்களான சிவராமன் பெயரிலும், அவரது அண்ணன் பழனிச்சாமி பெயரிலும் உயில் எழுதி வைத்து விட்டார்.

 அப்போது சிவராமனுக்கு 6 வயது ,அவரது அண்ணனுக்கு 11 வயது .அதுதான் காலத்தின் கட்டாயம் போல உயில் எழுதி முடித்த அடுத்த ஆண்டிலேயே அவரும் காலமாகி விட அம்மா ,தங்கை,அண்ணன் என சிவராமன் அந்த பூர்வீக வீட்டில் வசிக்க ஆரம்பித்தார் .

 வீடு மட்டும் சொந்தமாக இருக்க மற்றது எல்லாம் கஷ்ட ஜீவனம் தான் வறுமை சுற்றி சுற்றி அடிக்க உழைக்க ஆரம்பித்து விட்டார் சிவராமன். கடுமையான உழைப்பாளி ஆனார். காலப்போக்கில் அண்ணன், தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டது.

லட்சுமிஇன் குடும்பம் பெரியது இரண்டு அண்ணன்கள் இரண்டு தங்கைகள் ஒரு தம்பியுடன் பிறந்தவள். அதுமட்டுமில்லை அவள் அப்பா உடன் பிறந்தவர்கள் ஆறு அண்ணன் தம்பிகள்,ஒரு தங்கை அவர்களின் வாரிசுகள் என ஒரு குட்டி கிராமமே இருக்கும்.

அவர்களது குடும்பத்தில் பெண் கொடுத்து பெண் எடுப்பது வழக்கம் அந்த வகையில் சொந்தம் விட்டுப் போக கூடாது என லட்சுமியின் தந்தை அவிநாசியப்பன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

இன்று அவரது வீட்டில் இருக்கும் கடுகு முதல் கொண்டு அவரது செல்லமகள்களுக்கு அவர் சேர்த்த நகைகள் வரை அனைத்தும் உரக்க சொல்லும் ஒரே பெயர் சிவராமன்.. சிவராமன்.. சிவராமன் ..

சிவராமன் ,லட்சுமி இருவரும் படித்தது இல்லை. அதனால் தனது மகள்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பது அவர்களின் கனவு.
அதைப்போலவே இரண்டு மகள்களும் படிப்பில் கெட்டிக் காரர்கள்தான்.

தங்களது சொந்தத்தில் படித்த மாப்பிள்ளை கிடைக்க மாட்டார்கள், பெண் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டாம் என அவரது குடும்பச் சுற்றம் அறிவுறுத்தினாலும்,
எதையும் காதில் வாங்காமல் அவர் இரண்டு பெண் பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தார்.

பெரியவள் கங்கா படித்து முடித்தவுடன் பிரபல பள்ளியான வெங்கடாசலபதி மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள். இளைய மகள் பி.சி.ஏ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

மூத்தமகள் கங்காவிற்கு வலைவீசி மருமகனை தேடிக் கொண்டிருந்தார், சிவராமன்.

வி ஏ ஓ மாப்பிள்ளையை ப்ரோக்கர் கொண்டு வர வேண்டாம் என்றார்.
சொந்தமாக கம்பெனி வைத்திருக்கும் மாப்பிள்ளை அதையும் நிராகரித்தார். அடுத்து போலீஸ் மாப்பிள்ளை
அவர் பார்த்த தோரணையே வேண்டாம் என கூற, ப்ரோக்கரோ சலித்து போய் எப்படிதான் உன் பிள்ளைக்கு மாப்பிள்ளை எதிர்பார்க்கிறே என கேட்டார்.

பணக்காரன் பகட்டு வாழ்க்கை வாழ்றவன் எல்லாம் வேண்டாம். நல்லா பாட்டாளியா இருக்கனும் திறமை இருக்கறவனா இருக்கனும் அப்படி இருந்தா கூட்டிட்டு வா.

15,000 சம்பளம் வாங்கினா போதும் என கூற, ப்ரோக்கர் இப்போ இருக்கற விலை வாசிக்கு 15000 போதுமா என்றார் கேலியாக ,சிவராமனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கூலோ கஞ்சியோ அவன் சம்பாத்தியத்துலே என் புள்ளைக்கு கொடுக்கறவனா இருக்கனும் அப்படி ஒரு மாப்பிள்ளை இருந்தா கூட்டிட்டு வா இல்லைனா இந்த பக்கம் வராதேனு கட் அன்ட் ரைட்டா பேசி அனுப்பி வைச்சிட்டார்.

அவர் போனதும் லட்சுமி வந்து இப்படி நல்ல நல்ல மாப்பிள்ளையை வேண்டானு சொல்லிட்டு 15000 வாங்கறவன் போதுங்கறே உனக்கு என்ன பைத்தியமா?

வி.ஏ.ஓ மாப்பிள்ளையைப் பாருன்னு சொன்ன, அடுத்த நிமிஷமே,
‘அவன் லஞ்சம் வாங்குவான்… அந்த லஞ்சப் பணம் என் புள்ளைக்கு வேண்டாம்’

‘சரி, கம்பெனி வச்சிருக்க மாப்பிள்ளை?’ன்னு கேட்டதுக்கு,
‘அவனுக்கு கைமடிக்க ஆள் பத்துலினா என் புள்ளையைக் கூட்டிட்டு போய் கஷ்டப்படுத்துவான்… அவனும் வேண்டாம்’

‘அப்போ போலீஸ் மாப்பிள்ளை?’ன்னு கேட்டதும்,’போலீஸ் வேலைக்குள்ள ரிஸ்கும், டியூட்டியும் அதிகம். எப்போ என்ன நடக்கும்னு தெரியாது. அந்த மாதிரி வாழ்க்கை என் புள்ளைக்கு வேண்டாம். எனக்கு 15000 மாச சம்பளம் வாங்கர மருமகன் போதும் என்றார்.

உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது நீ ஆச்சு உன் மகளாச்சு என பெருமூச்சு வீட்டு உள்ளே சென்றார் லட்சுமி.

எங்கெங்கோ மாப்பிள்ளை தேடி சலித்து விட்டார் ஒன்றும் அமையவில்லை.

விசைத்தறி தொழில் என்பது மின்சாரம் அல்லது நீராவி மூலம் இயங்கும் தானியங்கி தறிகளைப் பயன்படுத்தி நூல்களை துணியாக நெய்யும் முக்கிய தொழிலாகும். இது கைத்தறியை விட வேகமானது மற்றும் தமிழ்நாட்டின் ஜவுளி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் சுமார் 58.4% விசைத்தறிகள் மூலம் நடைபெறுகிறது. ஆனால் தற்போது நூல்விலை மற்றும் மின்கட்டண உயர்வு போன்ற சவால்களால் இந்த தொழில் நலிவடைந்து வரும் நிலையில் உள்ளது.

விசைத்தறியில் ரீடு என்பது சீப்பு போன்ற கருவியாகும். இது நூல்களை சீராக பிரித்து, அடர்த்தியை நிர்ணயித்து, துணி நெய்யும்போது நூல் சிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது.

துணியின் தரம் மற்றும் உற்பத்தி வேகம் ரீடின் தரத்தைப் பொறுத்தே அமையும். அதனால் “ரீடு” விசைத்தறி உற்பத்தியின் முதுகெலும்பாக கருதப்படுகிறது.

சிவராமன் பழைய ரீடுகளை வாங்கி விற்பதும், சேதமடைந்த ரீடுகளை பழுது பார்க்கும் “ரீடு நீக்கல்” பணியையும் மேற்கொள்கிறார்.

தறி ஓடும் போது ரீடில் நூல் சிக்கினால் தறி நிற்கும். அப்போது ரீடை கழற்றி, துருப்பை மணல் காகிதம் கொண்டு நீக்கி, அதற்கென ப்ரத்யேகமான சிறிய கருவியினால் சேதமடைந்த பற்களை சீரமைப்பதே ரீடு நீக்கல் ஆகும். இதனால் நூல் சிக்கல் தவிர்க்கப்பட்டு, நெய்தல் சீராக நடைபெறும்.

அது ஒரு அருமையான காலைப் பொழுது. லட்சுமி காலை எழுந்தவுடன் காபி வைத்து, சிவராமனுடன் அமர்ந்து பருகினார். பின்னர் அவரின் ஆணைப்படி, மகள்கள் எழுவதற்குள் வர்க்கியை காபியில் போட்டு ஊறவைத்தார்.

சிவராமன் அடிக்கடி கூறுவார்: “பிள்ளைகள் எழுந்தவுடன் எந்த மனநிலையில் இருப்பார்களோ, அப்படித்தான் அன்றைய நாள் முழுவதும் கழியும்” என்று.

அதனால் அவர்கள் கண் திறக்கும் நொடியிலேயே, அவர்களுக்கு பிடித்தமான ஒன்றை கண்முன் வைத்துவிட வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

காலை எழுந்தவுடன் இனிப்பான வாசனையும், பிடித்த திண்பண்டமும் கண்ணில் பட்டால், அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக நகரும் அல்லவா?

அந்த வயதில் தன்மகள்களுக்கு மிகவும் பிடித்தது திண்பண்டம்தான்.
அதற்காகவே லட்சுமியிடம், அவர்கள் எழும் நேரத்திற்குள் மென்மையாக இருக்க, வர்க்கியை காபியில் ஊறவைக்க வற்புறுத்துவார்.

சிவராமன் அவரது வீட்டில் உள்ள ஜாதி மல்லி மரத்தின் கீழ் அமர்ந்து நீக்கல் எடுத்துக் கொண்டு இருந்தார்.

மகள்கள் இருவரும் எழுந்து பல்துலக்கி விட்டு,டீயில் ஊறி இருந்த வர்க்கியை எடுத்துக் கொண்டு தந்தையின் முன்பு அமர்ந்தனர்.

அப்போது கங்காவுக்கு ஆறு வயது கெளசல்யாவிற்கு நான்கு.இருவரும் அப்பா நீக்கல் எடுப்பதை வர்க்கியை சாப்பிட்டுக் கொண்டே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

திடீரென ஒரு ஆறு அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் அழையா விருந்தாளியாக வீட்டில் நுழைந்து படமெடுத்து நின்றது.

கங்கா,” அப்பா அங்கே பாரு” என கத்தினாள். கெளசிக்கு அது என்ன என புரியாமல் வர்க்கியை சாப்பிட்டுக் கொண்டே அதை பார்த்து உற்சாகமாக கைதட்டினாள்.

சிவராமன்,” கங்கா பாப்பாவை கூட்டிட்டு உள்ளே போ” என்றார்.

கங்கா வேகமாக ?எழுந்து,” வா கெளசி” என அவளை அழைக்க, அவள் பாம்பை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள். கங்கா அவளால் முடிந்த முழுபலத்தையும் கொண்டு தங்கையை இழுத்துக் கொண்டு உள்ளே போனாள்.

அதற்குள் சிவராமன் ஒரு அரிவாளை எடுத்து இரண்டு பாம்புகளின் தலையையும் வெட்டி விட்டார்.

வீட்டிற்குள் தங்கையை விட்டுவிட்டு,அம்மா… அப்பா என அழுது கொண்டே வெளியே வர,அவர் வெட்டிய பாம்பின் தலை கங்காவின் கால் அருகே வந்து விழுந்தது.

அதைப்பார்த்து கங்கா பயந்து கத்த ஆரம்பித்தாள். லட்சுமி வந்து மகளை தூக்கி கொண்டார். கங்கா தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள்.

சிவராமன் அவளை சமாதானப் படுத்தினார்.எதுக்கு கங்கா அழறே? அது இனிமேல் வராது பயப்படாதே என்றார்.

 எனக்கு பாம்பை பார்த்து எல்லா பயம் இல்லைப்பா நானும் கெளசியும் உள்ளே போய்டோம். பாம்பு உன்னை ஏதாச்சு பண்ணிருனு நான் பயந்துடேப்பா என்றாள்.

“கங்கா அப்பாவை யாராலும் எதும் செய்ய முடியாது.அப்பாக்கு எதும் ஆகாது ” என்றார்.

இருந்தும் மனம் சமாதானமடையவில்லை.நேற்றுதான் அவளின் ஆசிரியை லீமா பாம்பை பற்றியும் அதன் விஷத்தன்மை பற்றியும் பாடம் நடத்தி இருந்தார்.

பாம்பு அப்பாவை கடிச்சு இருந்தா? என்ற பயமே அவளுக்கு இருந்தது தேம்பிக் கொண்டே, அப்பாவின் மடிமீது அமர்ந்தவாறு கழுத்தை கட்டிக் கொண்டாள்.

“அக்கா மட்டுந்தா மடிலே உட்காருவாளா நானு?” என கெளசியும் அவர் மடிமீது அமர்ந்து கொண்டாள்.

இருமகள்களையும் வாஞ்சையாக தடவிக் கொண்டார் சிவராமன்.

லட்சுமி,” எதுக்கு இப்படி அரிவாளை எடுத்து வெட்டுனே? அடிச்சு துரத்தி விட்டுருக்கலாம்” என்றார்.

நீயும் நானும் மட்டும் இந்த வீட்டுல இருந்திருந்த நான் அடிக்காம விட்டுருப்பே, ஆனா ரெண்டு புள்ளைங்க இருக்கே அதுகல ஏதாச்சு பாம்பு கடிச்சிருந்தா? அதுதா அரிவாளை எடுத்து வெட்டிட்டே என்றார்.

பெண் பிள்ளைகளுக்குத் தங்கள் அப்பா எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோதான்.அதற்கு காரணம் என்ன என்று எல்லாம் அவர்களுக்கு விளக்கத் தெரியாது.

அப்பாக்களும் வானில் பறப்பதில்லை; சக்திமான், ஸ்பைடர்மேன் போல் மயாஜாலங்களை செய்து காட்டு வதுமில்லை. இருந்தாலும், அவர்களுடைய இயல்பான அன்பும், தைரியமும், பொறுப்பும் மகள்களின் கண்களில் அவர்களை ஒரு சாகச வீரராகப் பதித்து விடுகிறது.

தங்கள் மகள்களின் வாழ்வாதாரத்திற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காத மனமே அவர்களை சூப்பர் ஹீரோக்களாக்குகிறது.

ஆறு வயதில் தன்னையும் தங்கையையும் காப்பாற்ற, அரிவாளை எடுத்து பாம்பை வெட்டிய அந்த நொடி, கங்காவின் கண்களுக்கு அவளின் அப்பா ஒரு சாதாரண மனிதனாக அல்லாமல், ஒரு உண்மையான சூப்பர் ஹீரோவாகி போனார்.

— தலைவன் வருவான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!