Skip to content
Post Views: 1,593
பாலமுரளியோடு அவர்கள் கிளம்பியதும் யமுனா வீட்டிற்குள் செல்ல, தீனா முன் கேட்டை பூட்டிவிட்டு உள்ளே வந்து வாயில் கதவையும் அடைத்து அவர்களுக்கான அறைக்கு சென்றான்.
யமுனாவும் பாலை எடுத்துக்கொண்டு உள்ளே வந்து அந்த அறையின் கதவை அடைக்க போகும் போது, இன்றும் சகுந்தலா அவசரமாக அவளை பார்த்து திருட்டு முழி முழித்து வேகமாக போர்வையை தலையோடு மூடியதை கண்டு யோசனையோடு திரும்ப.. தீனா நின்ற நிலை கண்டு குழம்பி அவனின் முதுகுக்கு பின்னிருந்து எட்டி பார்த்தாள்.
Advertisement
அங்கிருந்த கட்டிலில் சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தான் ஜெகதீஷ்.
அவனை கண்ட அதிர்வில் தீனா நிற்க, ‘இத எதிர்பார்த்தேன்..’ என்பது போல தோளை குலுக்கிவிட்டு, “தயா.. இந்தாங்க பாலக்குடிங்க..” என கொடுக்க,
Advertisement
Advertisement
இயலாமையோடு அவளை பார்த்தவனை கண்டு அவளுக்கு பாவமாய் போனாலும் அதை காட்டினால்.. அவன் இன்னும் தளர்ந்து போவான் எனப்புரிந்து,
“என்னாச்சு..? எதுக்கு இந்த லுக்கு..?” என்றாள் ஏதும் அறியாதது போல.
Advertisement
“நடிக்காத யமுனா. எத்தன ஆசையா இந்த நேரத்தை எதிர்பார்த்திருப்பே. நா வேற எப்ப பாத்தாலும் உன்னை உசுப்பேத்தி விட்டே.. ச்சை.. எல்லாம் கூடி வந்தாலும் இப்படி எதாவது ஒண்ணு..
உனக்கு கண்டிப்பா இது எவ்வளவு ஹர்ட் பண்ணுமுன்னு எனக்கு தெரியும்..” என்றான் வருத்தமாய்.
“எனக்கு மட்டும் தான் ஹர்ட் ஆகும். அப்ப சாருக்கு அப்படி எதுவும் இல்ல..!
போய்யா கண்ணழகா. பகல் முச்சூடும் கண்ணால களவாண்ட லட்சணத்துக்கு குந்திதேவி மாதிரி புள்ள உண்டாகிடுமோன்னு பயந்து போயிட்டேன்.
இதுல இவரூ என்னைய சமாதானம் செய்யறாராம்..” என அவனின் உணர்வை புரிந்தவளாய் பேசியவள்,
அது இன்னும் அவனை வருத்தத்தில் தள்ளும் என்பதை உணர்ந்து,
“உங்களுக்கு நேரமின்னும் கூடி வரல போல.. கண்ணால களவாண்ட உங்களுக்கு மொத்தமா என்னைய களவாட..” என கண்சிமிட்ட அதை கண்டவன் முகம் இன்னும் வாடித்தான் போனது.
அவன் முகவாட்டத்தை கண்டு அவனை நெருங்கி நின்று தன் வலக்கரத்தை அவன் இடக்கன்னத்தில் பதித்து அவனின் கண்ணை பார்த்தவள்,
“தயா, நா ஒண்ணு சொல்லவா..? இதெல்லாம் நா எதிர்பார்த்த ஒண்ணு தான்.
நீங்க அவனோட சந்தோஷமா சிரிச்சு பேசினதுல அவனை நீங்க இப்ப.. இந்த நிலைமையில வெளியே கொண்டு போய் விடமாட்டிங்க.
அதே மாதிரி எங்களுக்கு ப்ரைவசி வேணுமுன்னு ஓப்பனா அவன்கிட்ட நம்மளால பேசவும் முடியாது ன்னு அவங்களுக்கு நல்லா தெரியும்.
இவனும் எப்பவும் அவன் படுக்கற மாதிரி வந்து படுத்திருப்பான்.
அவங்க நினைக்காம இதை மாத்த முடியாது.
அவங்க அவங்களால முடுஞ்சத செய்யட்டும்.
நமக்கு வாழ்க்கை இன்னும் ஆரம்பிக்கற நேரம் வரல ன்னு எடுத்துப்போம்..” என
‘நடந்தது இதுவாக தான் இருக்கும்.. அவர்களின் எண்ணமும் இப்படி தான்..’ என்பதை கண்டு கொண்டவள் போல தீவிரமான பாணியில் பேசிக்கொண்டிருந்தவள்,
“அதுவுமில்லாம இது ஒரு விதத்துல எக்ஸ்பீரியன்ஸ் தெரியுமா..?” என்றாள் கண்சிமிட்டி கள்ளத்தனமான சிரிப்பென்றை உதிர்த்து பாவனையாய்.
“எதுக்கு..?” என்றான் அவனும் அவளை போலவே பாவனை காட்டி.
“எப்படியும் நமக்கு புள்ள பொறந்தா.. அத கூட வச்சிட்டு குடுத்தனம் பண்ணாமலா இருப்போம்..? அதுக்கு இப்பவே நம்மள உங்க வீட்டுல பழக்கறாங்கன்னு எடுத்துப்போம்..” என சிரிப்போடு ஆரம்பித்து,
“இவனையும் நம்ம புள்ளையா பாத்தா அவனிருக்கறது கஷ்டமா தோணது..” என முடித்தவளின் எண்ணங்களின் விசாலத்தில் மெய் உருகி போனவன்,
“உண்மையா.. இந்த வீட்டுல நடக்கறதுக்கு வேற ஒரு பொண்ணா இருந்திருந்தா அவ நடந்துக்கற விதமே வேறையா இருக்கும்.
ஒண்ணு என்னோட சண்டை போட்டாருப்பா.. இல்ல இப்பவே வெளிய போய் இத பத்தி பேசி அக்கம் பக்கம் கேட்கற மாதிரி செஞ்சிருப்பா..
ரெண்டுல எது நடந்தாலும் அதுல அவமானப்படப்போறது அவங்க இல்ல.. நான் தான்.
அப்படி எதுவுமே செய்யாம நா வருத்தப்படக்கூடாதுன்னு எனக்காக நிற்கற பாரு.. நீ எனக்கு தவம் செய்யாம கிடச்ச வரம் டீ..” என்றான் உணர்ச்சிவசப்பட்டு அவளின் இடையில் கை கோர்த்து.
அவனை விட்டு விலகி நின்றபடி, “நீ உணர்ச்சி வசத்த அடக்கு.. சென்ட்டிமெண்ட்ட கட்டுப்படுத்து.. அதான் உனக்கும் நல்லது.. எனக்கும் நல்லது..” என வடிவேல் டைலாக்கை அதே மாடுலேஷனில் அவிழ்த்து விட,
மலர்ந்த புன்னகை தீனாவின் இதழில்.
“இப்ப எப்புடி இருக்கு மூஞ்சி..” என அதற்கும் அவள் அவ்வாரே பேச,
“ஏய் வாலு.. அடங்குடீ நீ முதல்ல..” என்றான் அடங்கா புன்னகையோடே.
அவனிடம் பாலை கொடுத்தவள், அவர்களுக்கான புது பாயை எடுத்து கீழே விரித்து புது பெட்சிட்டையும் எடுத்து போட்டவள்,
“ரெடி. தூங்கலாமா..?” என்றாள் புன்னகைத்து.
அவளிடம் தன் தளர்வை காட்டி அவளை உசுப்பேத்தி அவளின் அமைதியை உடைக்க பயந்தே அமைதியாய் அவளுக்கு பணிந்தான் தீனா.
‘இவர்கள் இப்படி செய்ததற்கு நிச்சயமாய் நாளைக்கு இதற்கும் எதாவது வெடிகுண்டு வெடிக்கும்.
ஏற்கனவே சித்தியின் இடுப்பை உடைத்தவள்.. இதற்கு என்ன செய்வாளோ..?
அதற்கு எதற்கு தூபம் போடுவானேன்..’ என அவனும் அவளுக்கு உடன்பட்டு பாலை குடித்து அவளுக்கும் கொடுத்துவிட்டு அமைதியாய் அவளருகே சென்று படுத்தான்.
தன்னவளுக்கு தன் கையையே தலையணையாய் கொடுத்து மல்லாந்து படுத்திருந்தவனின் புஜத்தில் தலை வைத்து அவனின் மார்பில் கரம் பதித்திருந்தவளின் அருகாமையே போதும் என்ற நிம்மதி அந்த நேரம் அவனுள்.
அவன் புஜத்தில் பதிந்திருந்த அவள் முகத்திலிருக்கும் கண் இமையின் ஓயாத சிமிட்டலில் அவள் ஏதோ அலைப்புருதலில் இருப்பது புரிந்து கொண்ட தீனா அவளின் புறம் ஒருக்களித்து படுத்து அவள் தாடை பற்றி நிமிர்த்தி அவளின் கண் பார்த்து,
“என்னம்மா ஆச்சு..? இங்கே நடக்கறது ரொம்ப ஹர்ட் பண்ணுதா..?
நா ஜெகாகிட்ட சொல்லிட்டேன்னு எனக்காகன்னு யோசிச்சு உன்ன நீயே கஷ்டப்படுத்திட்டு இங்கே இருக்கனுமுன்னு இல்லை.. அவனுக்கு புரிய வச்சிடலாம்..” என பரிதவிப்போடு சொல்ல,
“அதெல்லாம் இல்ல தயா. இது வேற..” என்றதும்,
“வேறையா..! என்னம்மா..?” என்றான் ஆதூரமாய்.
“நா இங்கே வந்ததுல இருந்து பல தடவ உங்க போன்.. வாணி அண்ணியோட போனுன்னு மாத்தி மாத்தி எடுத்து அப்பாக்கு கால் பண்ணிட்டேன். பேசறது நான்னு தெரிஞ்சதும் கட் பண்ணிடறார்.
இன்னைக்கு பங்ஷன்ல எடுத்த போட்டோ சிலத வாணி அண்ணி போன்ல இருந்து அனுப்பினேன்.
பார்த்துட்டாங்கன்னு ப்ளூ டிக் காட்டுச்சு. அப்புறமும் போன் பண்ணினேன். ஆனா அப்பவும் கட் பண்ணிட்டாங்க பேசாமையே..
நா அவங்கள பிரிஞ்சு வருஷகணக்கா இருந்திருக்கேன் தான். ஆனா பேசாம இருந்ததே இல்ல.. ஆனா இப்ப அவங்க கூட பேசாம.. ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு தயா.
அவங்க நம்மள ஏத்துக்கவே மாட்டாங்களா தயா..?” என்றவளின் விழி நீர் கசிந்து அவன் புஜத்தில் விழ அவளை இரு கரம் கொண்டு தன் நெஞ்சோடு அணைத்தான் ஆறுதலாய்.
அவன் அணைப்பு தந்த ஆறுதல் பாவத்தில் மேலும் அவள் அழுகை கூட,
“ஏய் பாப்பா..! என்னடாம்மா.. இப்படி அழறே..? நீ என் சமத்து பாப்பா இல்ல..” என அவளை நிமிர்த்தி விழி நீரை துடைத்துவிட்டவன்,
“நம்ம மேல அவங்களுக்கு இருக்கறது கோபம் தான் ஒழிய வெறுப்பு இல்ல. நிச்சயமா அதுவும் ஒரு நாள் மாறும். அதுக்கு கொஞ்ச நாள் ஆகும்டா.
உன்னை அவங்க அப்படியே விட்டுவாங்களா..? மாட்டாங்கம்மா.
அப்படி அவங்க பேசலன்னா என்ன..? கொஞ்ச நாள் போகட்டும். நாமளே அங்கே போய் நேர்ல நிற்கலாம். அப்பவும் பேசாம போவாங்களா என்ன..?” என்றவன்,
இன்னும் அவளின் முகம் காட்டும் வருத்தத்தை திசை மாற்றவென,
“இதெல்லாம் விட சீக்கிரமா அவங்க நம்மள ஏத்துக்க சூப்பரா ஒரு ஐடியா இருக்கு சொல்லவா..?” என்றவனை ஆர்வமாய், ‘என்ன..?’ என பார்வையால் கேட்டவளின் காதருகே நெருங்கி,
“சீக்கிரமா நீ அம்மா ஆகிட்டேன்னா.. பேரப்பிள்ளைக்காக உடனே வந்திடமாட்டாங்க..” என்றதும்,
“புஷ்.. புஷ்..” என மூச்சு வாங்க முறைத்தவள்,
“மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க ட்ரை பண்ணறே..? ஒழுங்கா தள்ளி படு.. ஆளும் மூஞ்சியும் பாரு..” என திட்டத்தொடங்கியவளின் இதழை மெல்ல தன் வசதிக்கு ஏற்ப பூட்டிட்டு அடக்கியவன் அவளின் திமிறல்
அடங்கிய பின்னரே அவளை விடுவித்தான்.
“ப்ராடு.. எப்படியாவது உங்களுக்கு உங்க காரியம் ஆகனும்..” என செல்ல சிணுங்களோடு அவனின் நெஞ்சில் வலிக்காமல் அடிக்க,
“பின்னே என்னோட செல்லப் பாப்பா ஃபீலிங்ல இருக்கும் போது அப்படியே விட முடியுமா..?
உன்ன டைவர்ட்டும் பண்ணனும். எனக்கு வேணுங்கறதும் எடுத்துக்கனும்..
நிச்சயமா இது ப்ளான் எல்லாம் இல்லம்மா.. நீ ஆரம்பிச்ச விசயத்தை எனக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டேன்..” என்றான் கள்ளத்தனமான சிரிப்போடு.
அவனோடு இணைந்து சிரித்த போதும் அவளின் விழியில் இன்னமும் மிச்சமிருக்கும் ஏக்கம் அவனை வாட்டாமல் இல்லை.
அவளின் தலையை தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டவன் கரங்கள் ஆதூரமாய் அவளின் தலையை வருட,
“நிச்சயமா நம்மள ஏத்துப்பாங்கடா.. நீ தூங்கும்மா..” என்றவனுக்குள் அத்தனை தவிப்பு.
ஏற்கனவே, ‘தன்னால்.. தன் வீட்டினரால் அவள் படும் பாடு போதாதென இப்போது இதுவுமா..? எப்படி தாங்குவாள் என் பாப்பா…?’ என எண்ணியவன் இன்னமும் அவளை தன்னோடு ஆறுதலாய் சேர்த்தணைத்துக்கொண்டான் வாஞ்சையுடன்.
காதல் காமம் மட்டுமல்ல.. ஆறுதலும் அரவணைப்பு கூட ஒருவழி பாதையாய் இல்லாமல் இருபுறமிருந்தும் வந்தால் மட்டுமே அவர்களின் வாழ்வு என்றும் சிறப்பாய் இருக்கும்.
இதோ அன்று அவள் தந்ததை அவனவளுக்கு அளித்துக்கொண்டிருந்தான் இன்று அவளின் மணாளன்.
யமுனா ஆழ்ந்த தூக்கத்திற்குள் செல்லும் முன்.. இன்னமும் அந்த ஏக்கத்தில் விசும்பியவளை வாகாய் அணைத்து அவளின் காதோடு,
“நா இருக்கேன்.. உனக்காக.. உன்னோட எப்பவும்..” எனச்சொல்ல யமுனாவின் கண்கள் ஆழ்ந்த தூக்கத்துக்குள் சென்றது.
விழியில் விழும் துளி
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில்
கண்ணீரா நியாயமா பெண்ணே-ஹோ
error: Content is protected !!