Skip to content
Post Views: 1,765
நதி 26
வாணியை ஒருவழியாய் சமாதானம் செய்து, ‘என்ன செய்யலாம்..’ என ஒரு திட்டத்தையும் போட்டு வெளியே வந்த சக்தியின் கண்ணில் பட்டதென்னவோ சிரித்தபடி இருந்த தீனாவும்.. அவனை ரசித்து பார்த்தபடி இருந்த யமுனாவுமே.
Advertisement
இருவரும் வாழும் நிலை தெரியாது இருந்திருந்தால் எப்படியோ.. ஆனால், இப்போது அவருக்குள்ளும் அப்படி ஒரு வலி.
வாழ்க்கையை ஆசையோடு அனுபவித்து வாழ்பவருக்கு தெரியுமே அவர்களின் நிலை குறித்து..
Advertisement
Advertisement
அவரின் எண்ணத்திற்கு எதிராய், “நேத்து காலைல தான் ரெண்டும் மொகத்த திருப்பிட்டு கிடந்துச்சு.. என்னத்த செஞ்சானோ இப்ப இப்புடி இருக்குதுங்க..” என பொருமிக்கொண்டு அமர்ந்திருந்தார் ஜெயசீலன்.
சக்தி, தீனாவிடம் வரும் வரை மறைந்திருந்த தடுமாற்றம் தன்னால் வந்து ஒட்டிக்கொள்ள.. தயக்கத்தோடு சக்தியின் முகத்தை காண, அவரோ எப்போதும் போல இயல்பான பாவனையோடு பேச இப்போது யமுனாவிற்கு குழப்பம்.
Advertisement
‘அண்ணி இவருகிட்ட எதுவும் சொல்லலையா..?’ என யோசித்திருந்தவளை, இரவு உணவு உண்டதும் தனியே அழைத்து வாணி சொன்ன விசயத்தில் அதிர்ந்து விழித்தாள்.
“அண்ணி..! அது எப்படி.. நா அவருகிட்ட..” என பதட்டத்தோடு யமுனா கேட்க,
“அத நா பாத்துக்கறேன்.. நீ வா..” என்றவர் தலைவாரி வீட்டில் கட்டி வைத்திருந்த ஜாதிமல்லியை வைத்துவிட்டு வெளியே வந்தார்.
“டேய்.. நீ யமுனாவ கூட்டிட்டு மாமா வண்டில முன்னால கிளம்பு.. அவங்க பின்னால வரட்டும்..” என வாணி தீனாவிடம் சொல்ல,
“சரி.. மாமா வரட்டும். சொல்லிட்டு கிளம்பறோம்..” என, சக்தி எங்கோ தன் தந்தையோடு சென்றதை பார்த்ததால் தீனா சாவகாசமாக அமர்ந்தவாரே சொல்ல,
“மாமா வர நேரமாகும். அதுவர இருக்க வேணாம். மழ வர்றதுக்குள்ள நீங்க கிளம்புங்க..” என அவனை கிளப்ப முயல,
“ஜெகாவ கூப்பிடு. அவன நாங்களே வண்டில கூட்டிட்டு போயிடறோம்..” என்றான், ‘அவனை ஜெயசீலனோடு வர வைக்க முடியாது..’ என்பதால்.
“அவன எதுக்கு கூட்டிட்டு போறே..? நீங்க போங்கன்னா போகவேண்டியது தானே..?” என்றதும்,
“அது எதுக்கு உனக்கு..? அவன தனியா விட முடியாது.. நா கூட்டிட்டு போறேன். அவங்க ரெண்டு பேரும் வேணுமுன்னா நடந்து பொறுமையா வரட்டும்..” என தீனா பிடிவாதமாய் சொல்ல,
‘இவன வச்சுக்கிட்டு ஜாடையா எதாவது பேச முடியுதா.. மக்கு பயல தம்பியா வச்சுக்கிட்டு..’ என தன் நெற்றியில் மானசீகமாக அடித்துக்கொண்ட வாணி,
“அவன் இங்கே இருந்தா அதெப்படி தனியா இருக்கறதாகும்..? நானும் அவனுக்கு கூட பொறந்தவ தா. நா பாத்துக்கறேன் அவன. நீ உன்னோட வாழ்க்கைய போய் பாரு..” என கடுப்பாக வாணி சொல்ல,
“என்ன..! அவன் இங்கே இருக்கானா..? இது வரை இங்கே அவங்கம்மாவ விட்டுட்டு வந்து தங்கினதே இல்லன்னு சொன்னானே..?” என ஆச்சர்யமாக கேட்டான் தீனா.
“அப்போ பாலா கூட பழகல.. இப்போ ரெண்டும் சேந்து இருந்துக்கும்.
அவனென்ன கைக்கொழந்தையா..? அம்மாவ கேட்டு அழ.. அவனுக்கு அம்மா வேணுமுன்னா சித்தியும் தங்கிப்போட்டு வரட்டும்.. ஏன் இது அவங்க ஆத்தா ஊடு தானே..?” என கோபத்தை முகத்தில் அப்பட்டமாக காட்டி சொல்லிவிட,
“அதும் சரி தான் நாங்க கிளம்பறோம்.. மாமா வரட்டுமுன்னு பார்த்தா விட மாட்டிங்கற.. வந்தா சொல்லிடு.
காலைல வண்டிய விட வரும் போது பாத்து பேசிக்கறேன்.. யமுனா ஏறு..” என்றவன் வேகமாக வண்டியை கிளப்பியிருந்தான், ‘விட்டால் அடித்துவிடுவாரோ..?’ எனும் பாவனையை அவர் முகத்தில் கண்டு கொண்டதால்.
சக்தியின் திட்டப்படி தீனாவை கிளம்ப சொல்லும் முன்னமே ஜெயசீலனை அவரின் ஆஸ்த்தான பாணத்தை காட்டி சக்தி திசை மாற்றி தனியாக அழைத்து சென்றிருந்தான்.
சகுந்தலாவை விசயம் கேள்விப்பட்ட நொடி முதல் சக்தி பார்க்கும் பார்வையிலேயே அவருக்கு கிலி பிடித்திருந்தது.
சக்தி கோபக்காரன் இல்லை. எல்லா விசயத்திலும் மூக்கை நுழைக்கவும் மாட்டான். அவனை பொறுத்தவரை அவன் குடும்பம் தான் முதலில்.
அதில் விதிவிலக்காய் வாணிக்கு கஷ்டம் தரும் விசயம் என்றால் எப்பாடுபட்டாவது சரி செய்ய வேண்டும் என ஆசைப்படுபவன்.
வாணியின் கவலை அவளின் தம்பியின் தனிமை தானே..!
அவன் திருமணத்தை நடத்த சக்தி எடுத்த முயற்சியை சகுந்தலா தானே ஏதேதோ சொல்லி தடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது எழாத சந்தேகம் இப்போது அவர் நடத்தையில் எழ, அவரை ஒருவழியாக்க காத்திருக்கிறான் என்பது சகுந்தாவிற்கு அவன் பார்வையிலேயே தெரிந்திருந்ததே.
காலை வந்தது முதல் அவனிடம் இல்லாத பார்வை மாற்றம்.. வாணியோடு உள்ளே சென்று வந்தபின் கண்டு கொண்டவருக்கு, ‘இதை எதை சொல்லி நியாயப்படுத்தி சமாளிப்பது..?’ என்ற பெரும் பயம் ஆட்கொண்டிருந்ததால் சக்தியிடம் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்.
உள்ளூர் என்பதால் வாணி எப்படி பிறந்த வீட்டுற்கு சென்றாலும் இரவில் தங்காமல் தன் வீட்டுற்கு வந்துவிடுவாளோ.. அதே போல தான் வாணி திருமணத்திற்கு பின் சகுந்தலாவும் இங்கே வந்து தங்க மாட்டார்.
இப்போதும் சக்தியிடம் தப்ப வேண்டி ஜெயசீலன் வந்ததும் அழைத்தால் எழுந்து அவரோடு ஓடிவிடலாம் என்ற எண்ணத்தில் அவர் படுத்திருக்க.. ஜெயசீலன் வரும் போதே நிதானத்தை இழந்து வர, வேறு வழியின்றி அங்கேயே இருக்க வேண்டிய நிலை.
தன்னை கேள்வி கேட்காதபடி நேரமே படுப்பதாக சகுந்தலா பாவனை காட்ட செய்ததில்.. பயங்கர கடுப்பு சக்திக்கு.
‘பிள்ளைகள் உறங்கட்டும்..’ என அவன் காத்திருக்க அதற்கும் முட்டுக்கட்டை இட்டவன் தீனாவே..
***
தீனதயாளனோ வேகமாய் சென்றால் ஐந்து பத்து நிமிடத்திற்குள் செல்லும் தூரம் தான் அவனின் வீடு.
ஆனால் வாணியின் பேச்சும் நடவடிக்கையும் அவனை யோசனைக்குள்ளாக்கியிருக்க மெதுவாகவே வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான்.
யமுனாவிற்கோ இருவரின் தனிமை நினைத்து வெக்கமும் தயக்கமும் வருவதை விடுத்து,
‘இவர்களின் தனிப்பட்ட விசயம் வாணி வரை சென்றதை தீனா எப்படி எடுத்துக்கொள்வானோ..? என்ற அச்சமே மேலோங்கி இருந்தது.
‘வீட்டுல போய் தனியா இவருகிட்ட சொல்லி.. அதுக்கு இவரு கோபப்பட்டு திட்டிட்டா..
அச்சோ..! அதுக்கு போற வழியிலேயே சொல்லிட்டா.. ரோட்டுல வச்சு எதுவும் சொல்ல மாட்டார்.
வீட்டுக்கு போறதுக்குள்ள கொஞ்சம் அவருக்கு கோபமும் குறஞ்சிடும்.. என நினைத்த யமுனா, “தயா..” என்றழைத்தாள் தயக்கமாக.
முதலில் அவள் அழைப்பது கூட கேட்கவில்லை அவன் யோசனையில் ஆழ்ந்திருந்ததால்.
மீண்டும் அழைத்து பார்த்தவள் அவன் தோளை பிடித்து உலுக்கி, “தயா..” என சத்தமாக அழைத்த பின்னே சுற்றம் உணர்ந்தது போல உடல் உலுக்கி நிதானத்துக்கு வந்தவன்,
“என்ன பாப்பா..? என்னாச்சு..?” என வண்டியை அவசரமாக நிறுத்திவிட்டு திரும்பி அவளை ஆராய்ந்தபடி பதட்டத்தோடு கேட்டிருந்தான்.
அவனை சத்தமாக அழைத்ததில், ‘தனக்கு என்னவானதோ..?’ என அவன் பயந்துவிட்டது புரிந்து,
“அச்சோ.. எனக்கு ஒண்ணுமில்ல தயா.. கூப்பிட்டேன் நீங்க கவனிக்கலன்னு தான்..” என வேகமாய் யமுனா சொல்ல,
அப்போதும் அவளின் பதட்டமான முகம் கண்டு புருவம் முடுச்சிட கூர்ந்து அவளை பார்த்தவன், “என்கிட்ட ஏதாவது சொல்லனுமா பாப்பா..?” என்றிருந்தான் சரியாக.
‘ஆமா..’ என தலையசைத்தவளுக்கு, ‘அதை எப்படி சொல்ல..?’ என்பதில் அத்தனை தயக்கம்.
‘தங்களின் அந்தரங்கம் அல்லவா பேசு பொருளாகி இருக்கிறது..’ அதை சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் ஒரு தவிப்பு.
error: Content is protected !!