Skip to content
Post Views: 271
”என்னாச்சி” என்றாள் கண்மணி
”எனக்கு போதும் நீ சாப்பிடு” என்றான் குணா
”எது நீ சாப்பிட்ட எச்சிலை நான் சாப்பிடனுமா முடியாது” என சொல்ல அவனோ கடுப்பாகி
Advertisement
”சரி கொடு வெளிய கொட்டிடறேன் உனக்கு கான்டீன்ல இருந்து வாங்கிட்டு வரேன்”
”ஒண்ணும் வேணாம் எனக்கு இதுவே போதும்” என சொல்லிக் கொண்டே சாப்பிட அவனுக்கு சிரிப்பே வந்தது, மென்மையாக சிரித்தவன்
”எச்சில்ன்னு சொன்ன மாதிரியிருந்தது“
Advertisement
”பசி ருசியை மட்டுமில்லை எச்சிலை கூட அறியாது”
Advertisement
”நல்லாதான் பேசற“
”இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலையே”
”இப்ப என் குடும்பத்தை பத்தி தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப் போற”
Advertisement
”சரி நீ எங்க தங்கியிருக்க” என கேட்க அவனும் தான் தங்கும் இடத்தைகூற அவளோ திடுக்கிட்டாள்
”லாட்ஜ்லயா அய்யே” என்றாள் வெறுப்பாக
“எனக்கு அது கிடைச்சதே பெரிசு”
”என்னை போல ஹாஸ்டல்ல தங்கிடலாம்ல”
”எனக்கு தரமாட்டாங்க கண்மணி“
”ஏன் அப்படி“
”அது அப்படித்தான்”
”புரியலை விளக்கம் சொல்லு“
”நீ ஹாஸ்டல்ல சேர்ந்தப்ப அவங்க உன்கிட்ட உன் குடும்பத்தை பத்தி கேட்டிருப்பாங்கள்ல நீயும் உன் குடும்பத்தை பத்தி சொல்லியிருப்ப கரெக்டா”
”ஆமாம்”
”ம் அதை சொன்ன பின்னாடி கூட உன் வீட்டுக்கு போன் பண்ணி வெரிபை பண்ணியிருப்பாங்களே”
”ம் ஆமாம்“
”எனக்குன்னு யார் இருக்கா நான் யாரை பத்தி சொல்றது அவங்க எப்படி என்னை நம்புவாங்க”
”இதுல நம்பாம போக என்ன இருக்கு”
”யாருமில்லாதவனுக்கு வீடோ ஹாஸ்டலோ தரமாட்டாங்க கண்மணி“
”ஏன் அப்படி”
”யாருமில்லாதவனை யாரும் நம்ப மாட்டாங்க, அவனால ஏதாவது பிரச்சனை வருமோன்னுதான் யோசிப்பாங்க, என்னை போல பேச்சலர்ஸ்க்கு வீடு தரமாட்டாங்க”
”லாட்ஜ்ல தங்கறது நல்லாவாயிருக்கு”
”நல்லாதான் இல்லை என்ன செய்றது, எனக்கு ஒரு குடும்பம் இருந்திருந்தா, ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கலாம் அதான் இல்லையே ஆனா நீ மனசு வைச்சா”
”எது”
”இல்லை நீ மனசு வைச்சா எனக்கு தங்க ஒரு வீடு கிடைக்கும்”
”எப்படி நான் நினைச்சா உனக்கு வீடு கிடைக்கும்”
”நீயும் நானும் ஒரு குடும்பம் ஆனா கண்டிப்பா வீடு கிடைக்கும், இந்த லாட்ஜ் வாழ்க்கை வெறுப்பை தருது, உனக்கும் ஹாஸ்டல் வாழ்க்கை மேல பெரிசா விருப்பம் இல்லைன்னு தெரியுது பேசாம”
”பேசாம”
”நாம ஏன் ஒரு குடும்பமாகி ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கி படிக்க கூடாது” என அவன் சொன்னதும் அவளோ அவனை எகத்தாளமாக சிரித்தாள்
”எதுக்கு இந்த கேவலமான சிரிப்பு”
”ம்ம் இது உனக்கே ஓவரா தெரியலை”
”ஓவராதான் இருக்கு”
”புரிஞ்சா சரி”
”சரி அதை விடு நாளையில இருந்து இப்படி சுடிதார் போட்டுக்கிட்டு வராத“
”ஏன்”
”சுடிதார்ல விட பாவாடை தாவணியில அழகா இருக்க, உனக்கு அந்த உடைதான் பொருத்தமா இருக்கு”
”அப்படியா ஏன் நீயும் என் அழகை பார்த்துதான்” என இழுக்க அவனோ
”நிப்பாட்டு இழுக்காத, நீ ஒண்ணும் பேரழகி கிடையாது, உன்னை விட அழகான பொண்ணுங்க எல்லாம் எனக்கு காதல் சொல்லியிருக்காங்க, ஆனா நான்தான் வேணாம்னு ரிஜக்ட் பண்ணிட்டேன்”
”நம்பிட்டேன்”
”சத்தியமா நீ வேணா இந்த க்ளாஸ்ல படிக்கறாளே கமலி அவளை வேணா கேட்டுப்பாரு அவளும் என்கிட்ட லவ் சொன்னா நல்லா திட்டிவிட்டுட்டேன்”
”திட்டினியா ஏன்”
”ஏன்னா என்ன அர்த்தம்”
”அவளை ஏன் திட்டனும் அவள் பார்க்க நல்லாதானே இருக்கா அவளை காதலிக்க வேண்டியதுதானே”
”நீயா இப்படி பேசறது“
”ஹலோ நான் இப்ப சொல்லலை அவள் சொன்னப்ப ஏன் ரிஜக்ட் பண்ணீங்கன்னு கேட்டேன்”
”என்னவோ தெரியலை உன்கிட்ட ஏற்பட்ட ஒரு உணர்வு யார்கிட்டயும் எனக்குள்ள ஏற்படலை”
”என்ன உணர்வுன்னு எனக்குத் தெரியும், இந்த ஆம்பளைங்களே இவ்ளோதான், ஒரு பொண்ணு அழகா இருந்தா காதலிப்பாங்க, திறமையானவளா இருந்தா காதலிப்பாங்க, பணக்காரியா இருந்தா காதலிப்பாங்க, அவங்க காதலிக்க இதுதானே காரணம்“
”ஆனா நான் அப்படியில்லை நான் உன்னை” என ஏதோ சொல்ல வந்து நிப்பாட்ட அவள் ஆர்வமானாள்
”சொல்லு என்னை”
அந்நேரம் பெல் அடிக்கவும்
”பெல் அடிச்சிட்டாங்க”
”ப்ச் இது போங்காட்டம் ஏதோ சொல்ல வந்து நிப்பாட்டினா என்ன அர்த்தம்”
”நீ கூடதான் ஏதோ சொல்ல வந்த, சார் வரவும் நிப்பாட்டிட்ட, முதல்ல நீ சொல்ல வந்ததை சொல்லு அப்புறம் நான் சொல்றேன்“
”போ சொல்லமாட்டேன்“ என்றாள் வீம்பாக
”அப்ப நானும் சொல்ல மாட்டேன்” என அவனும் வீம்புடன் சொல்ல அதற்குள் வாத்தியார் வரவும் பாடத்தை கவனிக்கலானார்கள்.
மாலை கல்லூரி முடிந்ததும் அனைவரும் கிளம்ப குணாவோ கண்மணியைப் பார்த்தான்
”வேலைக்குதானே போற, அந்த வழியாதான் நானும் போறேன் வாயேன் உன்னை ட்ராப் பண்றேன்”
”ஹலோ எனக்கு போக தெரியும் இத்தனை நாள் இல்லாம இப்ப என்ன அக்கறை வந்துடுச்சி“
”முன்னாடி தயக்கமா இருந்தது இப்ப அது இல்லை அதான்”
”முதல்ல நாம படிக்கனும் பெரியாளாகனும் இந்த பிக்கப் ட்ராப் எல்லாம் இப்ப வேணாம்னு நினைக்கறேன்”
”நீ சொல்றதும் சரிதான் ஆனா ஒண்ணு என்னிக்காவது எமர்ஜென்சி டைம்ல நீ என்கூட வரனும், அப்ப இந்த மாதிரி முரண்டுபிடிச்சா எனக்கு கோபம் வரும்”
”சரி சரி எனக்கு ஏன் ஆபத்து வரப்போகுது வந்தா பார்க்கலாம் இப்ப கிளம்பலாம்” என சொல்லியவள் கல்லூரியை விட்டு சென்றாள்.
குணாவும் தான் வேலை செய்யும் இடத்திற்குச் சென்றான், அவனது புது கெட்டப்பைக்கண்டு அனைவரும் அவனை புகழ்ந்தார்கள், அவனும் அருமையாக பாடம் எடுத்தான், வேலை முடிந்ததும் கண்மணியைக் காண விரைந்து வந்தான், அந்நேரம் பயிற்சிக்கு வந்த இளம்பெண் ஒருத்தி அவனிடம் அசடு வழிய நின்றாள், அவனோ விசாரித்தான், அந்நேரம் கண்மணி தனது வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள், குணா ஒரு இளம் பெண்ணுடன் பேசுவதைக்கண்டு திடுக்கிட்டாள்
”க்ளாஸ் முடிஞ்ச பின்னாடி என்ன பேச்சு வேண்டியிருக்கு, இது சரியில்லையே” என நினைத்துக் கொண்டிருக்க அவனோ அந்த பெண்ணிடம் பொறுமையாகப் பேசினான்
அவன் என்ன பேசினானோ, அந்த பெண் அழுதுக் கொண்டே சென்றாள், அவளை அனுப்பிவிட்டு திரும்பி பார்க்க கண்மணியின் கோபம் அவனை பயமுறுத்தியது, அவசர அவசரமாக அவளை நாடி வர அவளோ விறுவிறுவென நடந்துச் செல்ல அவனோ பைக்கில் அவளை ஃபாலோ செய்து அவளை ஓரிடத்தில் பிடித்தான், அவள் நடக்க இவன் பைக்கில் மெதுவாக ஓட்டியபடியே பேசினான்
”கண்மணி இரு இரு, பொறு, என்ன நடந்ததுன்னு சொல்றேன், என் மேல தப்பில்லை, அந்த பொண்ணு மேலதான்“
”அதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது”
”இல்லை நான் சொல்றதை கேளு, இப்படி என் மேல கோபப்படாத”
”ப்ச் வழியை விடு நான் போகனும்”
”அந்த பொண்ணுதான் என்கிட்ட வந்து லவ்வுன்னு நின்னா”
”உடனே எஸ்ன்னு சொல்லிட்டீங்களோ”
”நீயிருக்கறப்ப நான் ஏன் இன்னொருத்தியை பார்க்கப் போறேன்”
”அப்போ நான் இல்லைன்னா நீ் அவளை பார்த்திருப்ப அதானே“
”அப்பவும் பார்த்திருக்க மாட்டேன், என் கேரக்டர் உனக்குத் தெரியாதா“
”அப்புறம் எதுக்காக எனக்கு விளக்கம் சொல்ல பின்னாடியே வர்ற, எனக்குதான் உன்னைப் பத்தி தெரியுமே”
”அப்புறம் எதுக்காக கோபமா இருக்க”
”என்னோட கோபத்துக்கு காரணமே வேற”
”என்னன்னு சொல்லு, தப்பாயிருந்தா சரிபண்ணிடறேன்“
”சொல்ல மாட்டேன் போ“
”ஏன் அப்படி சொல்ற, ப்ளீஸ் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு, என்ன விசயம்னு சொல்லு” என கேட்க அவளோ சட்டென தனது பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவன் முன் நீட்டி
”என்ன இது” என்றாள் கோபமாக அவனோ நிம்மதியாகி சின்னதாக சிரித்து
”லவ் லெட்டர்“
”ஓ எனக்குத் தெரியாது பாரு, இதை ஏன் என் பையில வைச்ச”
”அதுக்காக வேற பையிலயா வைக்க முடியும் அது தப்பாச்சே”
”ஆமா இதை எப்ப எழுதினீங்க”
”சார் பாடம் எடுக்கறப்பவே எழுதினேன்”
”சார் பாடம் எடுக்கறப்ப நோட்ஸ்தானே எழுதிக்கிட்டு இருந்தீங்கன்னு நினைச்சேன்”
”அந்த பாடத்தை ஏற்கனவே நான் படிச்சிட்டேன், அதனால நோட்ஸ் எதுக்கு எழுதனும்னு லெட்டர் எழுதினேன், அதுக்கா இப்படி கோச்சிக்கற, ஏன் உனக்கு பிடிக்காத மாதிரி ஏதாவது எழுதிட்டேனா”
”இன்னும் நான் படிக்கலை”
”படிக்காமலே இப்படி பேசற, படிச்சா திட்டுவியோ அதை கொடு நீ படிக்கவே வேணாம்”
”முடியாது நான் படிப்பேன் அதுவும் இப்பவே இங்கயே”
”ஏய் இங்கயா நடுரோட்லயா”
”ஆமாம்”
”வேணாம் எனக்கு கூச்சமா இருக்கு, நீ ஹாஸ்டல்ல போய் படி இப்ப கிளம்பு”
”முடியாது“
”சரி நான் கிளம்பறேன்“
”போறதாயிருந்தா போ எனக்கென்ன” என சொல்லியவள் அவன் தந்த கடிதத்தை படிக்கலானாள்
”கண்மணி
என் வாழ்க்கையில நான் நிறைய மேடு பள்ளங்களை பார்த்துட்டேன், ஒரு முழம் ஏறினா நாலு முழம் சரிக்கிவிழுவேன், அதிர்ஷ்டம் கூட என்னை எப்பவோ கைவிட்டு போயிடுச்சி, அதுக்கு காரணம் என்னோட குடும்பம் என்னை ஆதரவா பார்த்துக்க, அரவணைக்க, பாசம் காட்ட ஒருத்தரும் இல்லை, எனக்கு யாராவது பாசம் காட்ட மாட்டாங்களான்னு எத்தனையோ நாள் ஏங்கியிருக்கேன், நான் பார்க்கற எல்லார்கிட்டயும் நான் எதிர்ப்பார்க்கறது ஒண்ணுதான், அது அன்பு ஆனா அதை யாரும் எனக்குத் தரலை, இந்த உலகமே என்னை கைவிட்டது போல, எனக்கு தோணவும் நானே இந்த உலகத்தை கைவிட்டு புதுசா வாழ்க்கையை வாழ தொடங்கினான்.
அப்போ எனக்கு அன்பு கூட தேவைப்படலை, ஆனா என்னை லவ் பண்றேன்னு வரிசையா பொண்ணுங்க வந்தப்ப எனக்கு கோபம் தலைக்கேறிடுச்சி, நான் எதிர்பார்த்தப்ப யாரும் வரலை, நான் வேணாம்னு நினைக்கறப்ப ஒவ்வொருத்தரா வந்தாங்க, ஆனா அவங்களும் என் அழகை பார்த்து, என் திறமையை பார்த்து, என் மேல பரிதாபப்பட்டுன்னு, இந்த வீணா போன காரணங்களை வைச்சி லவ்வுன்னு சொன்னப்ப, எனக்கு பிடிக்காமலே போயிடுச்சி
எனக்கு என் அழகு மேலயே வெறுப்பு வந்தது, யாருமே என் அழகை விட்டுட்டு என் மனசை பார்த்து காதலிக்கலை, எனக்கு அன்பு காட்ட முன்வரலை, ஏதோ டைம்பாஸ் பண்றதா நினைச்சாங்க போல, ஆனா அதுக்கு நான் ஆள் கிடையாது, எனக்கு தேவை நான் இழந்த அன்பு, அக்கறை, பாசம், நேசம், அரவணைப்பு இதெல்லாம் யார் கிட்ட கிடைக்கும்னு தேடினேன், கடைசியில உன்னைப் பார்த்தேன், உன்கிட்ட அது கிடைக்கும்னு நம்பினேன்
மத்தபடி நீ அழகா இருக்கியா, படிச்சிருக்கியா, பணக்காரியா இதெல்லாம் நான் பார்க்கலை, எனக்கு உன்னோட மொத்த அன்பும் வேணும், அது எனக்கு மட்டும்தான் இருக்கனும், வேற யாருக்கும் நீ உன் அன்பை தரக்கூடாது, சுயநலவாதியா உனக்கு நான் தெரிவேன், ஆனா நான் இழந்த மொத்த பாசத்தையும் மறுபடியும் உன் மூலமா மீட்டெடுக்க ஆசைப்படறேன், எனக்கு பசிக்கறப்ப ஒரு தாயா நீயிருக்கனும்னு நினைச்சேன்
அதே போல எனக்கு பசி நேரத்தில டிபன் வாங்கித்தந்த அதுவும் நான் கேட்காமலே, அதை எனக்கு தரனும்னு உனக்கு அவசியம் இல்லைதான், ஆனாலும் நீ செய்த, ஒரு குழந்தையோட பசி யாருக்கு உடனே தெரியும் தெரியுமா அவனோட அம்மாவுக்குதான் தெரியும், அவள் சாப்பிடலைன்னாலும் குழந்தையோட பசியைத்தான் பார்ப்பா
அதுபோலதான் நீயும் இருந்த, அம்மா பாசத்தை அறியாத எனக்கு உன்னோட பாசம் பிடிச்சிருந்தது, அதனாலதான் நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சேன், எஸ் ஐ லவ் யூ கண்மணி, நீ எதுக்காக என்னை லவ் பண்ணன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன், இப்படிக்கு குணா” என எழுதியிருக்கவும் அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது
அந்த கடிதத்தை மடித்துவிட்டு குணாவை ஏறிட்டுப் பார்த்தாள் கண்மணி, அவனோ ஏக்கமாக முகத்தை வைத்திருந்தான், என்ன நினைத்தானோ அதுவரை அவனுக்குள் இருந்த தயக்கம் காணாமல் போனது சட்டென அவளிடம் நேருக்கு நேராக பேசினான்
”ஐ லவ் யூ கண்மணி” என்றான்
அந்த வார்த்தையில் அத்தனை மென்மை, அடி மனதில் இருந்து அவன் சொல்லியதால் அதில் அவ்வளவு அழுத்தம் இருந்தது, கண்கள் கலங்கியபடியே அதைக்கேட்டவளுக்கு பதில் சொல்ல முடியாமல் நின்றாள், அவளின் பதிலுக்காக அவன் காத்திருக்கவில்லை, அங்கிருந்து சென்றுவிட்டான், அவளோ அவன் சென்றதும் மென்மையாக சிரித்து
”என்னை எத்தனையோ பேர் காதலிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க, ஆனா உன்னை போல காதலை யாரும் இவ்வளவு அழகா வெளிப்படுத்தலை, இப்ப என்ன உனக்கு அம்மா பாசம் வேணும், அதை என்கிட்ட எதிர்பார்க்கற, சரி தந்துட்டா போச்சி” என நினைத்துக் கொண்டு புன்னகையுடன் அந்த கடிதத்தை தனது பைக்குள் வைத்துக் கொண்டு ஹாஸ்டலுக்குச் சென்றாள்.
குணாவை நினைத்தபடியே பொழுதை கழித்து தாமதமாகவே உறங்கினாள், மறுநாள் கல்லூரிக்கு குணா ஆசைப்பட்டபடியே பாவாடை தாவணியில் தயாராகி கிளம்புவதற்குள் தாமதமாகிவிட கல்லூரிக்கும் அவள் தாமதமாகவே வந்து சேர்ந்தாள்.
அதற்குள் வாத்தியார் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் குணாவோ கண்மணி வராமல் போகவே பரிதவித்துப் போயிருந்தான், வாசலில் அவளைக்கண்டதும் அவனின் கவலை பறந்துப் போனது, புன்னகை பூக்க அதைப் பார்த்தபடியே வாத்தியாரிடம் அனுமதி கேட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள் கண்மணி
”ஏன் லேட்டு” என குணா மெதுவாக கேட்க அவளோ
”ம் எல்லாம் உன்னாலதான்”
”என்னாலயா நான் என்ன செய்தேன்”
”என்னை நீ நிம்மதியா தூங்கவே விடலை அதான் லேட்டு” என சொல்ல அவனுக்கு கூச்சமாகிப் போனது
”இந்த ட்ரஸ் உனக்கு நல்லாயிருக்கு, நான் சொல்லித்தானே இதை போட்டுக்கிட்டு வந்த”
”ஆசையை பாரு உனக்காகலாம் இல்லை எனக்காக உடுத்தினேன்“
”சமாளிக்காத எனக்குத் தெரியும்”
”தெரியும்ல, அப்புறம் ஏன் கேனத்தனமா கேள்வி கேட்கற, பேசாம பாடத்தை கவனி” என சொல்ல அவனோ அவளை ஏற இறங்கப் பார்த்து கர்வத்துடன் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு பாடத்தை கவனிக்கலானான்
அவளும் பாடத்தை கவனித்தபடியே ஓரக்கண்ணில் குணாவை பார்த்து சைட் அடிக்கலானாள்.
பாடம் முடிந்ததும் வாத்தியார் கிளம்பிச் சென்றதும் குணா கண்மணியைப் பார்த்து
”சாரி” என்றான்
”எதுக்கு”
”உன்னை தூங்க விடாம செய்ததுக்கு”
”ஓ சரி உன் சாரியை நான் ஏத்துக்கறேன், அதுக்காக தினமும் சாரி சொல்லி பழககூடாது தப்பு”
”சரி சரி ஆமா உன் தூக்கத்தை கெடுக்கற அளவுக்கு அப்படி நான் என்ன செய்தேன்”
”அவசியம் சொல்லனுமா”
”ஆமாம் அவசியம் சொல்லனும் ப்ளீஸ்” என அவன் கெஞ்ச அவளோ நக்கலாக சிரித்து
“ஆஆ மறந்துப் போச்சி”
”பொய்“
”நிஜமாதான் மறந்துட்டேன்”
”ப்ச் சொல்லு கண்மணி”
”அட மறந்துட்டேன், விடேன், சார் வராரு அமைதியாயிரு” என அவனை அதட்டிவிட்டு பாடத்தை கவனிக்கலானாள்.
நேற்று எடுத்த பாடத்திலிருந்து வாத்தியார் கேள்வி கேட்க அதற்கு சிலர் பதில் தந்தார்கள், சிலர் பதில் அளிக்கவில்லை, கண்மணி முறை வந்தது, அவளும் வாத்தியார் கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளித்து அமர்ந்தாள், அடுத்து குணாவின் முறை வந்தது அவனிடம் கேட்ட கேள்விக்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை, அதைக்கண்டு அவர் ஆச்சர்யப்பட்டார்
”என்ன குணா படிப்பில கெட்டியாச்சே நீ, சின்ன கேள்விக்கு பதில் தெரியாதுன்னு சொன்னா எப்படி, நேத்துதானே இந்த பாடத்தை நடத்தினேன், பாடம் நடத்தறப்ப அதை கவனிக்காம என்ன செய்துக்கிட்டு இருந்த”
”சாரி சார்”
”சரி சரி இனிமேல பாடத்தை கவனிக்காம இருக்காத உட்காரு” என சொல்ல அவனும் அமர்ந்தான், அதைக்கண்ட கண்மணிக்கு கவலையாகிப் போனது
பாடம் நடத்தி முடித்து வாத்தியார் கிளம்பிச் சென்றதும் கண்மணி குணாவிடம்
”குணா என்னாச்சி உனக்கு ஏன் கேள்விக்கு பதில் சொல்லலை“
”நான்தான் பாடத்தையே கவனிக்கலையே”
”பாடத்தை கவனிக்காம என்ன செய்துக்கிட்டு இருந்த”
”உனக்கு காதல் கடிதம் எழுதிக்கிட்டு இருந்தேன்”
”ப்ச் படிக்கற நேரத்தில இது தேவையா”
”சாரி மனசுல இருக்கற பாரத்தை உன்கிட்ட இறக்கி வைக்கனும்னு நினைச்சி கடிதம் எழுதினேன் அதனால பாடத்தை கவனிக்கலை”
”சரி நைட் ரூம்ல இருந்தப்ப பாடத்தை படிச்சிருக்கலாம்ல”
”எங்க உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லிட்டு வந்துட்டேன், பதிலுக்கு நீ என்ன நினைப்ப, என்ன யோசிப்ப, என் காதலை ஏத்துக்கிட்டியா இல்லையா, நாளைக்கு நீ எப்படி வருவ, என்ன சொல்வங்கற நினைப்பிலயே கிடந்தேன், அதனால படிக்கல, சாப்பிடலை, ஏன் தூக்கம் கூட வரலை, லேட்டாதான் தூங்கினேன், ஆனா உன்னை இந்த பாவாடை தாவணியில பார்த்ததும்தான் எனக்கு உசுரே வந்தது, தினமும் இப்படியே வா” என அவன் ஆசையாக பேச அவளுக்கு வருத்தமாக இருந்தது
”இதுக்குதான் இந்த காதலே வேணாம்னு இருந்தேன்”
”இப்ப என்னாச்சின்னு இப்படி பேசற”
”இல்லை இந்த காதலால நாம ரெண்டு பேருமே டிஸ்டர்ப் ஆகறோம், இதனால படிப்பை கோட்டை விட்டுட்டா நம்ம லட்சியம் என்னாகிறது”
”அதெல்லாம் ஒண்ணும் ஆகாது கண்மணி வீணா பயப்படற”
”பயந்துதான் ஆகனும் குணா, 2 வருஷம் நல்லபடியா படிக்கனும், பெரிய வேலைக்கு போகனும் இதுக்கு நடுவில இந்த காதலால நாம தடுமாற கூடாது”
“அட இன்னிக்கு நடந்தது இனி எப்பவும் நடக்காது”
”இல்லை குணா இதை இதோட நிறுத்திக்கலாம்”
”எதை இப்படி சண்டை போடறதையா”
”இல்லை காதலிக்கறதை” என அவள் பட்டென சொல்லிவிட அவனது இதயம் அதிர்ந்துப் போனது
”கண்மணி” என அலற
”ப்ச் படிப்புக்கு முன்னாடி நமக்கு வேற எதுவுமே பெரிசா தெரியக்கூடாது”
”படிக்கலாம் அதுக்காக காதலே வேணாம்ங்கறது சரியில்லை”
”இல்லை நமக்குள்ள இருக்கறது வெறும் ஈர்ப்புதான் இதனால நம்ம படிப்புல எந்த தடையும் வரக்கூடாது” என அவள் கடுமையாகச் சொல்ல குணாவிற்கு மனது வலித்தது
கண்கள் கலங்கிவிட்டது, அவனால் மேற்கொண்டு பேச இயலவில்லை, அதற்குள் பாடம் எடுக்க வாத்தியார் வர அனைவரும் பாடத்தை கவனித்தார்கள், ஆனால் குணாவால் இயலவில்லை. அவன் தலைகுனிந்தபடி இருக்க வாத்தியார் அவனை எழுப்பினார்
”குணா உனக்கு உடம்பு சரியில்லையா”
”ஆமாம் சார்”
”சரி என் பாடத்தை கெடுக்காத போ போய் லாஸ்ட் பெஞ்சில உட்காரு” என விரட்ட அவனும் சென்று பழைய இடத்தில் அமர்ந்துவிட்டான்.
யாரும் தனது கண்ணீரை காணக் கூடாதென பெஞ்ச் மீது தலைசாய்ந்து படுத்துவிட்டான், அதை கவனித்த கண்மணிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, எப்போது லன்ச் பிரேக் வரும் என காத்திருந்ததில் அவளும் பாடத்தை கவனிக்க மறந்தாள், சிறிது நேரத்தில் பெல் அடிக்க அனைவரும் சாப்பிடச் செல்ல கண்மணி குணாவுக்கும் சேர்த்து 2 டிபன் பாக்ஸ் எடுத்து வந்திருந்தாள், இரண்டையும் எடுத்துக் கொண்டு குணாவிடம் சென்றாள்
”குணா குணா” என அழைக்க அவனோ தலை தூக்கி அவளைப் பார்த்தான், அவனின் அழுது வடிந்த முகத்தைக்கண்டு அதிர்ந்தாள் கண்மணி
”ஏய் என்ன இப்படியிருக்கு உன் முகம்” என சொல்ல அவனோ உடனே தனது கண்ணீரை துடைத்துவிட்டு கர்ச்சிப்பால் முகத்தை துடைத்தான், ஆனாலும் அவனது கண்கள் சிவந்திருந்தது, கன்னம் வீங்கியிருந்தது, முகம் பொலிவு இல்லாமல் இருந்தது
…. தொடரும்
error: Content is protected !!