Skip to content
Post Views: 2,849
யாதுமாகி #30
கார் சாலையில் நகர்ந்து சென்றதா அல்லது வானத்தில் இறக்கை கட்டி பறந்து சென்றதா? என்னும் அளவிற்கு பறந்து சென்றான் விஷ்ணு.
கலங்கிய விழிகளுடன் ஐ சி யூ வாயிலில் கண் மூடி நின்றார் வேதம்.
கைகளை பின்னால் கட்டிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாய் வராண்டாவை அளந்து கொண்டிருந்தார் வெங்கடாசலம்.
Advertisement
அத்த என்ன ஆச்சு? மூச்சுரைக்க ஓடி வந்தான் விஷ்ணு.
தெரியல மாப்பிள்ளை பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளியே வர்ற மாதிரி உதிரமாக வெளியே வருது பயத்தில் உடைந்து அழுதார்.
உள்ளுக்குள் உதறல் எடுத்தது விஷ்ணுவிற்கு. என்னதான் மருத்துவ உலகம் நவீன மயமாகிவிட்டாலும் பிரசவம் என்பது மறு ஜென்மம் தானே?
Advertisement
எவ்வளவுதான் தன்னை ஆசுவாசப்படுத்த முயற்சித்தாலும் லப்டப் கட்டுக்குள் வரவே இல்லை அவனுக்கு.
Advertisement
சார் இங்கே பேஷண்டோட ஹஸ்பண்ட் யாரு ? இதுல ஒரு சைன் போடுங்க!என்றார் வெள்ளடை தரித்த செவிலி ஒருவர்.
சைனா? என்ன ஆச்சு? எனிதிங் சீரியஸ்? விரல்களோடு இதயமும் நடுங்கியது அவனுக்கு.
C செக்க்ஷன், தியேட்டர் ரெடி பண்ண சொல்லி இருக்காங்க. மற்றதை எல்லாம் நீங்க டாக்டர்கிட்ட தான் கேட்கணும்! விஷ்ணுவின் கையெழுத்தை பெற்றுக் கொண்டு அந்த செவிலி தேவதை அவசரமாய் ICU விற்குள் ஓடியது.
Advertisement
மகப்பேறு மருத்துவருடன் மேலும் இரு மருத்துவர்கள் முக கவசத்துடன் வேகமாய் வந்தனர்.
டாக்டர் நேத்ராக்கு.. கலங்கிய குரலுடன் ஓடினான்.
இம்மிட்டியேட்டா சிசேரியன் பண்ணியாகணும் என்றார் மருத்துவர்.
டாக்டர் இன்னும் டியு டேட் இருக்கே…அவனுக்கு பதறியது.
சீ மிஸ்டர் விஷ்ணு இப்போ சிச்சுவேஷன் கிரிட்டிக்கல்.
கிரிட்டிக்கில்…?
நொறுக்கிவிட்டான். நடுக்கம் நிற்கவில்லை அவனுக்கு.
She is in a complicated situation.
What do you mean? கண்ணீர் கோடாய் இறங்கியது.
வேதம் கதறி அழ ஆம்பித்து விட்டார்.
இப்போ பேச நேரமில்லை. May be placental abruption.
அப்படினா? வேதம் பயம் கவ்விய முகத்துடன் டாக்டரை பார்த்தார்.
குழந்தையோட தொப்புள் கொடி கட் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்.
என் பொண்ணுக்கு? வெங்கடாச்சலம் விம்மினார்.
எதுவும் இப்போ சொல்ல முடியாது. தொப்புள் கொடி கட் ஆகியிருந்தா தாயுக்கும் குழந்தைக்கும் கனெக்ஷன் இருக்காது. குழந்தைக்கு மூச்சு திணறல் வந்துடும். சீக்கிரம் சிசேரியன் பண்ணனும் நேத்ராவுக்கு BP ஸ்டேபிலா இல்லை. அனஸ்திசியா கொடுக்குறதுக்குள் BP கண்ட்ரோலில் வரணும்! கொஞ்சம் ரிஸ்க் தான்.
எங்களால் முடிந்த ட்ரீட்மெண்ட் நாங்கள் கொடுப்போம். இரண்டு உயிரையும் காப்பாத்த ட்ரை பண்ணுவோம்.நீங்க கடவுளை நம்புங்க.
டாக்டர் ப்ளீஸ்…என் நேத்ராவை எனக்கு கொடுத்துடுங்க! கை கூப்பினான்.
ஸ்கேன் ரிப்போர்ட் பார்க்கும்போது இப்போ வரைக்கும் பேபிக்கு ஹார்ட் பீட் இருக்கு. சீக்கிரம் சிசேரியன் பண்ணியாகணும்.
டாக்டர் ஏதாவது பண்ணுங்க எனக்கு குழந்தையை விட என் நேத்ரா தான் முக்கியம்.
நம்பிக்கையுடன் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார் மருத்துவர்.
மருமகனின் பேச்சில் உறைந்து நின்றார் வெங்கடாசலம். தன் மகள் மீது இவ்வளவு காதலை வைத்திருக்கும் விஷ்ணுவிற்காக தன் மகளும் பேரக்குழந்தையும் நலமாய் வர வேண்டும் என்று உலகிலுள்ள அனைத்து கடவுள்களையும் வேண்டிக் கொண்டார்.
“——————–”
விஷ்ணு சக்தி மொத்தம் வடிந்தவனாய் தொய்ந்து நாற்காலியில் சரிந்தான்.
மருமகனின் நிலை கண்ட வெங்கடாசலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கேன்டினுக்கு சென்று காபி வாங்கி வந்தார்.
மனைவி கையில் பிளாஸ்கை கொடுத்து மாப்பிள்ளைக்கு கொடுக்கும்படி கண்ணை காட்டினார்.
மாப்பிள்ளை நேத்ராவும் குழந்தையும் நல்லவிதமா வருவாங்க! நீங்க இந்த காபியை குடிங்க! உள்ளுக்குள் இருக்கும் பயம் பதட்டத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு பேசினார்.
அத்தை எனக்கு எதுவும் வேண்டாம் ப்ளீஸ்…பிடிவாதமாய் மறுத்தவன் கண்களை மூடிக் கொண்டான்.
கடவுளே இருபத்து நாலு மணி நேரமே என் நேத்ரா இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அவளுக்கு ஏதாவது ஆகிட்டா என் மூச்சும் நின்னுடனும்! அரற்றினான்.
குழந்தை பெற்றுக் கொள்ள பயந்தாளே…அவள் பயந்தது போலவே அவள் உயிருக்கு ஆபத்தா வந்திருக்கே…
கடவுளே நான் இதுவரை எதுவும் வேண்டிக்கிட்டது இல்லை. என் நேத்ராவை எனக்கு கொடுத்துடு! உருகி தவித்துக் கொண்டிருந்தான்.
“——————”
என்னங்க இருக்கிற பதட்டத்தில் சம்பந்திக்கு தகவல் சொல்ல மறந்துட்டோம், ஒரு போன் போட்டு சொல்லுங்க என்றார் வேதம்.
வெங்கடாசலம் வேணுவிற்கு தகவல் சொல்ல அன்னமும் வேணுவும் அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
பயப்படும்படி ஒன்னும் இருக்காது. இன்னும் பிரசவத்துக்கு டேட் இருக்கு. சூடு அதிகமாக இருக்கும் அதுதான் வயிறு வலியா இருக்கும்.கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க இதுக்கு எதுக்கு இப்படி ஓவர் பில்டப் கொடுக்குறீங்க? என்று அலட்டலின்றி அக்கறையின்றி சொல்லிவிட்டார் ஜோதி.
இவ கூட என்ன பேச்சு? டிரைவரை கூப்பிட்டு காரை எடுக்க சொல்லு! மகனை விரட்டினார் அன்னம்.
மருத்துவமனைக்குள் நுழைந்த அன்னத்தை ஓடிப்போய் அணைத்துக்கொண்டார் வேதம்.
அம்மாடி நேத்ராக்கு ஒண்ணுமில்ல பச்சைவாழி அம்மனும் கருப்பண்ண சாமியும் துணை இருக்க என்ன பயம்? இன்னும் கொஞ்ச நேரத்துல என் கொள்ளு பேரக்குழந்தை வரப்போகுது பாரு!
அன்னத்தின் பேச்சு அவ்வளவு பலத்தை கொடுத்தது. இக்கட்டான நேரத்தில் கொடுக்கும் தைரியமான வார்த்தைகளுக்கு வலிமை அதிகம்.
மனம் கலங்கி நின்ற வெங்கடாசலத்தில் தோளில் கை போட்டு அழுத்தமாய் தட்டிக் கொடுத்தார் வேணு. அதுவே மிகப்பெரிய ஆறுதலாய் இருந்தது வெங்கடாசலத்திற்கு.
யாரையும் தலை நிமிர்ந்து பார்க்கும் நிலையில் விஷ்ணு இல்லை.
சற்று நேரத்தில் சுரேந்தரும், வாசுவும் கூட வந்து சேர்ந்தனர்.
விஷ்ணுவின் நிலை கண்டு நண்பர்கள் இருவரும் கலங்கிவிட்டனர். எந்த சூழ்நிலையிலும் விஷ்ணு உடைந்து அவர்கள் இதுவரை பார்த்ததே இல்லை.
டேய் மாப்பிள்ளை நீயாடா இப்படி உட்க்கார்ந்திருக்க? சுரேந்தர் விஷ்ணுவின் தோளில் வலிக்கும்படி தட்டினான்.
விஷ்ணு இன்னைக்கு மெடிக்கல் பீல்ட் ரொம்ப அட்வான்ஸா இருக்கு. ஈஸியா ஹேண்டில் பண்ணுவாங்க பாரு! விஷ்ணுவை அணைத்து தட்டிக் கொடுத்தான் வாசு.
டேய் நேத்ராக்கு BP 190. அனஸ்திசியா கொடுக்க சிரமம் இருக்கும்னு சொன்னாங்க. முடியலைடா குலுங்கி அழுதான்.
விஷ்ணு காம் டவுன்… சுரேந்தர் அவன் கரம் பிடித்து ஆறுதல் படுத்த…ஆண் குழந்தை பிறந்திருக்கு என்று ஓடிவந்தார் நர்ஸ்.
அடுத்த நிமிடமே குழந்த நல மருத்துவர் neonatal வார்டுக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினார்.
டாக்டர் குழந்தைக்கு…. வேணும் வெங்கடாசலமும் பின்னாலே ஓடினார்கள்.
பேபிக்கு மூச்சு திணறல் அதிகமா இருக்கு. Premature பேபி. வேண்டிலேஷன் கொடுக்கனும்! அப்சர்வேஷன்ல வைக்கணும்.
ICU வில் இருந்து வெளியில் வந்த கைனோ கீதாவை நோக்கி ஓடினான் விஷ்ணு.
டாக்டர் நேத்ரா…. நிமிடத்திற்கு நூறு முறைக்கு மேல் இதயம் துடித்தது.
வெயிட்…அப்சர்வேஷனில் இருக்காங்க.
டாக்டர் ப்ளீஸ்…எதுவானாலும் சொல்லுங்க.
ஹெவி பிளட் லாஸ், BP ஸ்டேபிலா இல்லை.
நம்பிக்கை இருக்கு! பயப்படாம இருங்க… நீங்க போய் பார்க்கலாம். ஆறுதலாய் சொல்லி சென்றார்.
இடிந்து அமர்ந்துவிட்டான். மனைவி ஒருபுறம், குழந்தை ஒருபுறம் உயிருக்கு உத்தரவாதமின்றி இருக்க…அவனுக்கு சுவாசிக்கவே சிரமமாய் இருந்தது.
நெஞ்சுக்குள் ஏதோ உருண்டு பிரண்டு அழுத்தியது.
என்னாகுமோ ஏதாகுமோ? என்ற அச்சம் அவனுக்கு நடுக்கத்தை கொடுத்தது.
ச்சீ…எழுந்து வா மாப்பிள்ளை. போ போய் நேத்ராவை பார்த்துட்டு வா! கைப்பற்றி இழுத்தான் வாசு.
ம்க்கூம் நான் மாட்டேன்…. கை நடுங்கியது அவனுக்கு.
என்னடா வீரன் வேலுதம்பி ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்ப…இப்போ இவ்வளவு கோழையா இருக்க? சுரேன் உசுப்பி விட்டான்.
டேய் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தான் தெரியும்.
உள்ளே இருக்கிறது என் பொண்டாட்டி, பிள்ளை.வாடிய முகத்தில் தாடியை தேய்த்துக் கொண்டான்.
தம்பி விஷ்ணு நேத்ரா கண்விழிச்சு பார்க்கிறாளாம், நர்ஸ் வந்து சொல்லிட்டு போறாங்க. அன்னம் முகம் மலர்ந்தது.
வேதம் அவரை போய் பார்க்க சொல்லு அவர் பேசினா நேத்ராக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும். வெங்கி மனைவிக்கு சொல்வது போல் விஷ்ணுவை பார்த்து சொன்னார்.
டேய் மாப்பிள்ளை…போ . போய் பேசு! அவனை கையை பிடித்து இழுத்துக் கொண்டுப்போய் விட்டனர் நண்பர்கள்.
“——————”
கண்விழித்து எதிரில் நின்ற கணவனை கண்டவளுக்கு கண்ணீர் பொங்கியது.
மீண்டும் கணவனை பார்ப்போமா என்று துடித்தாளே…..
அவனை காண ஜென்மம் முழுதும் காத்திருந்தார் போல் கண்களால் அள்ளி பருகினாள்.
ம்ம்ம்மா நீங்க அழக்கூடாது…ஜன்னி வந்துடும்! நர்ஸ் கடுமையாய் எச்சரித்தார்.
நடுங்கும் கரம் கொண்டு மனைவியின் கரம் பற்றினான்.
கணவனின் கரத்தை இறுக்கி பற்றியவள் இன்னும் அழுதாள்.
ஏய் லூசு அழாதடி! ஆதங்கத்துடன் கடிந்து கொண்டான்.
குழந்தை எங்கே என்பது போல் கேட்டாள்.
உன் பையன் சேஃபா இங்குபேட்டரில் இருக்கான்.ப்ரீமிச்சூர் பேபி இல்லையா அதுதான் வார்ம் பண்ண வச்சிருக்காங்க.
ம்ம்ம்ம் என்று திருப்தியாய் தலை அசைத்தாள்.
உள்ளம் துடிக்க உதடு நீக்கி லேசாய் சிரித்து சமாளித்தான்.
குழந்தையை பற்றி கவலை படாம உன் உடம்பை கவனிச்சா போதும்.
ம்ம்ம்ம்ம் என்று ஆமோதித்தாள்.
குழந்தை யார் மாதிரி இருக்கான்? முனகலாய் கேட்டான்.
ம்ம்ம்ம்ம் உன்னை மாதிரி என்னை மாதிரி இல்லை எங்க தாத்தா பொன்னுசாமி மாதிரி இருக்கான்.
நான் பார்க்கணும்! அவ்வளவு ஆர்வம் அவளுக்கு.
இன்னும் டூ டேஸில் கொடுத்துருவாங்க. வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தான்.
அவள் முகம் கூம்பி போனது.
நீ எதுக்கும் டென்சன் ஆகாம இரு! குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம், அவனுக்கு அடுத்து தம்பி பாப்பாவா? தங்கச்சி பாப்பாவா? அதைப்பத்தி மட்டும் யோசி. காதலுடன் அவள் பிறை நுதலில் முத்தமிட்டான்.
அவன் கரம் பற்றியபடியே விழி மூடினாள்.
பயந்துட்டியா? அவள் தலை கோதினான்.
ம்ம்ம்ம்ம் என்றவள் . உங்க சிங்கக்குட்டியை உங்கட்ட சேர்க்காம போயிடுவேனோன்னு…
சட்டென்று அவள் வாயை பொத்தினான்.
நீ அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு போக முடியாது.
எங்கம்மா கூட நீ இன்னும் எவ்வளவு சண்டை போட வேண்டியது இருக்கு… கண்சிமிட்டி சிரித்தான்.
உங்கம்மா வந்திருக்காங்களா? சந்தேகமாய் கேட்டாள்.
அவனிடம் பதில் இல்லாமல் போகவே…. உங்கம்மா வந்திருக்க மாட்டாங்கன்னு தெரியும்! இருந்தாலும் ஒரு நப்பாசை. பேரனுக்காக… அவள் கண்களில் நீர் முத்துகள் திரண்டது.
அவங்க வரலைனா…. அது பெரிய இஷ்யுவா? நீயும் நானும் தான் குழந்தைக்கு முக்கியம். BP ஏத்திக்காம ரிலாக்ஸா இரு!
நர்சிடம் கண்காட்டிவிட்டு வெளியேறினான்.
இந்தம்மா ஏன் இவ்வளவு மட்டமா நடந்துக்குறாங்க? மருமகள் மீது கோபம் என்றால் பேரக்குழந்தை மீது வெறுப்பு வருமா? வெறுத்து போனான்.
நேத்ராவை பரிசோதித்த மருத்துவர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்திருந்தது கண்டார் . ரத்தம் ஏறிக் கொண்டிருந்தது. இனி பயம் இல்லை என்று நிம்மதியடைந்தார்.
“—————-”
மருத்துவர் வாயால் நேத்ரா ஓகே என்று சொல்லக் கேட்டு நிம்மதி அடைந்தான்.
குழந்தை கண் விழிக்கிறது, கை கால் உதைத்து அழுகிறது என்று மருத்துவர் நம்பிக்கை அளித்தார்.
மூன்றாம் நாள் ICU வில் இருந்து நார்மல் வார்டுக்கு ஷிப்ட் ஆன பிறகே ஜோதி வந்தார். பத்தோடு பதினொன்றாக தலையை காட்டிவிட்டு போனார்.
குழந்தையை பார்க்கலாம் வா என்று வேணு அழைத்தும் நார்மல் ஆன பிறகு பார்த்து கொள்ளலாம் என்றார்.
ஜோதிக்கு பேரன் பிறந்த மகிழ்வைவிட நேத்ராக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டதே என்ற கடுப்பு.
பொன்னுசாமி சொத்துக்கு ஏகபோக வாரிசாக நேத்ரா பெற்ற மகன் வந்துவிட்டானே…அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
நான்கு நாட்கள் எல்லாரையும் பாடாய் படுத்தி பயம்காட்டிய பிறகே நார்மல் வார்டுக்கு வந்தான் நேத்ராவின் புத்திரன்.
“——————-”
தாயையும் சேயையும் ஒன்று சேர்த்த பின்னே ஓய்ந்தான். நான்கு நாட்களாக மருத்துவமனையே பழியாக கிடந்தான்.
நேத்ராவின் பெற்றோரும் விஷ்ணுவும் மட்டுமே உடனிருந்தனர். நான் ஒத்தாசைக்கு வரவா என்று ஒரு பேச்சுக்கு கூட ஜோதி கேட்கவில்லை.
குழந்தையின் ரோஜாப்பூ பாதம் தொட்டு மென்மையாய் அதன் தேகம் தீண்டி சிலிர்த்தாள் நேத்ரா.
குழந்தை விரல் பற்றி தன் விரலோடு பிணைத்துக் கொண்டான். இவன் தான் அப்பன் என்று அறிந்ததோ என்னவோ அவன் விரலை இறுக்கிப் பிடித்துக் கொண்டது.
பேரன் சமத்தா இருக்கான்! வேணு புலகாங்கிதம் அடைந்தார் இரு தாத்தாக்களும் போட்டி போட்டுக்கோண்டனர் பேரனை தூக்கி வைத்துக் கொள்ள…
ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் நேத்ராவின் நலம் குறித்து கேட்டறிந்தார். நேத்ரா நீங்க எவ்வளவு போராடி பிழைத்திருக்கீங்க தெரியுமா? பிரம்மிப்பாய் சொன்னார்.
அவள் புரியாமல் பார்க்க…உங்களுக்கு நடந்தது placental abruption. Highly complicated. Thank God! தாயும் சேயும் மறு ஜென்மம் கண்டு வந்திருக்கீங்க!
அவளுக்கு இப்போது பதட்டம்.
இனி பயப்பட எதுவும் இல்லை. என் சர்வீசில் இது ரேர் கேஸ். ஆயிரத்தில் ஒருவருக்கு இப்படி நடக்கிறதுண்டு. சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தீங்க…தொப்புள் கொடி அறுந்து இடியாப்பம் மாதிரி சிக்கலாகி இருந்தது. பேபி அழவே இல்லை…பிரீத்திங் நார்மலா இல்லை. நினைச்சாலே பதறுது.
உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் இனி ஆயுசு நூறு! மனதார வாழ்தினார் மருத்துவர்.
தானும், குழந்தையும் இவ்வளவு பெரிய அபாயத்தை கடந்தோமா? நடுங்கியது அவளுக்கு.
அன்னம் அழுதே விட்டார் மருத்துவர் விளக்கம் கேட்டு.
“*——————”
இன்னும் நான்கு நாட்கள் கழித்தே டிஸ்சார்ஜ் என்று மருத்துவர் கூறிவிட்டார்.
வேதம் விட்டாப்பிடியாய் மருமகனை வீட்டுக்கு அனுப்பினார்.
வீட்டிற்கு வந்த விஷ்ணு இதமான வெந்நீர் குளியல் போட்டு ஆசுவாசமாய் சாப்பிட அமர்ந்தான்.
என்னைக்குப்பா டிஸ்சார்ஜ்? வேணு சாப்பிட வந்து அமர்ந்தார்.
இன்னும் நாலு நாள் ஆகும்பா!
இப்போ தான் விஷ்ணு நிம்மதியா இருக்கு! ஏதோ போதாத நேரம் நம்மை ஆட்டி படைச்சுடுச்சு! தாயும் சேயும் மறுஜென்மம் கண்டிருக்காங்க…. ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டார்.
அது தான் நல்லா இருக்காங்கல்ல…இன்னும் ஏன் அதையே பேசி பெருமூச்சு விடறீங்க? தட்டை பார்த்து சாப்பிடுங்க…நொடித்துக் கொண்டார் ஜோதி.
அது சரி…எதுவும் நடக்கலையேன்னு கவலைபடற மாதிரி இருக்கு? பொங்கினான் விஷ்ணு.
என்னடா வார்த்தை ஒரு தினுசா இருக்கு? ஜோதி பாய்ச்சலுக்கு தயாரானார்.
செத்து பிழைத்தது என் பொண்டாட்டி மட்டும் இல்லை, என் குழந்தையும் தான்.
நம்ம மருமகளுக்கு இப்படி ஆகிடுச்சே…குழந்தைக்கு என்ன ஆகுமோ? ஒரு பயம், சின்ன பதட்டம்….எப்படி இவ்வளவு கல்லு மாதிரி இருக்கீங்க? என்ன மனுஷி நீங்க?
இதுவே வினிதாக்கு இப்படி ஆகியிருந்தா…. எவனுக்கு விருந்தோன்னு இருப்பீங்களா? அடக்கி வைத்திருந்த கோபத்தை கொட்டி கவிழ்த்தான்.
அடப்பாவி…என் பொண்ணுக்கு சாபம் கொடுக்கறியா? நல்லா பேசறடா! நீயா பேசல,உன்னை பேச வைக்கிறா அந்த கைகாரி. எகிறி பேசினார் ஜோதி.
வேண்டாம்…. மேல மேல பேசி என்னை டென்ஷன் பண்ணாதீங்க! கோபம் அணைகடந்தா என்ன பேசுவேன்னு எனக்கே தெரியாது.
நியாயமா பாத்தா என் பொண்டாட்டி பிள்ளையை இங்கே கூட்டிட்டு வரக்கூடாது. பாட்டிக்காக பார்க்கிறேன். மூச்சிறைக்க பேசியவன் தட்டில் கைகழுவி எழுந்து போனான்.
உன் ஆணவமும் அகந்தையும் என்னைக்கு குறையுமோ? எல்லாம் என் தலையெழுத்து! வேணுவும் கையை உதறிக் கொண்டு எழுந்தார்.
error: Content is protected !!