Skip to content
Post Views: 1,498
தாய் தந்தை இருவரும் பிஸியாக இருக்க மான்யா முழுதாய் ஜெகதீஷின் வசம்.
வெளியே சிறு பிள்ளைகளுக்காக பலூன் கொடுக்கப்பட, “வாங்கி தாங்க சித்து..” என்றவளை தூக்கிக்கொண்டு வந்தவனை பின் தொடர்ந்த பாலமுரளி,
Advertisement
“அப்புறம் மொறப்பொண்ணு… எப்படி போகுது ஸ்கூலு..? அங்கையாச்சும் அடங்கறையா.. இல்ல, அறுந்த வாலா சுத்தறையா..?” என்றவரே அவள் கையிலிருந்த பலூனை தொட,
தானாக நடந்ததா..? இல்லை, அவன் நிஜமாக அழுத்தினானா..? பட்டென அது உடைய ஆரம்பித்தாள் அவளின் கச்சேரியை.
Advertisement
Advertisement
அவள் போட்ட சத்தத்தில் பதறிப்போன பாலா, “அய்யோ.. நா ஒண்ணுமே பண்ணல.. குட்டி மாமா சொல்லுடா உன் பொண்ணுகிட்ட..” என்றவனுக்கோ கண்ணா முழி பிதுங்கியது.
அவள் அழுகையை தொடங்கினாலே, முதல் முறை அவள் அழுது.. அவன் பயந்து அலறியது.. தன்னால் நினைவில் எழுந்து பதற வைக்கிறதே.
Advertisement
‘பொது இடத்தில் பெரிதாக எதுவும் செய்ய மாட்டாள்.. அவளும் கொஞ்சம் வளர்ந்துவிட்டாளே..’ என எண்ணி பேசப்போய் இப்படி முழித்துக்கொண்டு நிற்கிறான் அவனின் முறைப்பெண்ணிடம்.
“அறியாத வயசுல நா பண்ணதுக்கு வட்டியோட வச்சு செய்யன்னே மாமா உன்னைய பெத்துருக்காரு..” என சொன்னவன் பாவனையில்..
முகத்தை மூடியிருந்த கையை லேசாக அவன் பார்வைக்கு பாடாதபடி விலக்கி, ஜெகாவை பார்த்து கண் சிமிட்டியவளின் விளையாட்டு தனத்தில் வாய்விட்டு ஜெகதீஷ் சிரிக்க,
“என் பொழப்பு சிரிப்பா இருக்காடா குட்டி மாமா..? உங்க சங்காத்தமே வேணாம் சாமி. நா கோபமா போறேன்..” என திரும்பி போனவனின் கையை பற்றி இழுத்து அவனின் தோளோடு கை போட்டு அணைத்த ஜெகா,
“அட விடு மாப்ளே.. அடி வாங்கினாலும் எப்படி கெத்த விடாம மெயின்டெயின் பண்ணனுமுன்னு போக போக கத்துக்கலாம்..” என கலாய்க்க, அவனை முறைக்க ஆரம்பித்து பின் சிரித்துவிட்டான் அவனும்.
“இவள மாதிரி ஒரு பிசாசை பக்கத்துல வச்சிருந்தா கெத்தாவா… கொஞ்சம் விட்டா ஆள கொத்து புரோட்டா ஆக்கி ஊருக்கே தனம் பண்ணிடுவா..” என அப்போதும் அவளிடம் வம்பு பேச அவர்கள் மூவரும் இருக்குமிடம் கலகலத்தது.
எல்லோரும் உண்டு முடித்த பின் ஓய்வாக அமர்ந்திருக்க, அன்றைய விழா நாயகிக்கு வேறு உடை மாற்றி போட்டோ எடுக்க நினைத்து உள்ளே அழைத்து சென்றிருந்தனர்.
கிடைத்த இடைவெளியில் கேமிரா கண் வழி மண்டபத்தை வலம் வந்த போட்டோகிராபர் கண்ணில் விழுந்தான் ஜெகதீஷ்.
ஒரு கையில் வேட்டியின் நுனியை பற்றிக்கொண்டு மறுகையால் அவன் கேசம் கோதிவிட்டு சிரிப்போடு பாலமுரளியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தவனின் அடுத்த அடுத்த செயல்கள் புகைப்படமாக ஆரம்பித்தது அந்த கணம் முதல்.
அதிலும் யமுனா ஏதோ முறைப்போடு கேட்க, சட்டென ஒற்றை கண்ணை மூடி.. நுனி நாக்கை ஒரு புறமாய் கடித்துக்கொண்டு இரு கையால் காதை பற்றி அவன் நின்ற கோலம்..
அட அட.. அந்த யசோதையிடம் சேட்டை செய்து மாட்டிக்கொண்டு நிற்கும் கோகுல மாயக்கண்ணனே தான்..
அதை பார்த்த போட்டோகிராபர் அவன் யாரென அறிந்து தீனாவிடம் வந்து நின்றவர் எடுத்தவற்றை காட்டி,
“சார்.. இது உங்க வீட்டு பையன்னு சொன்னாங்க.. இவரோட இந்த பிக்ஸ் எல்லாத்தையும் என்னோட இன்ஸ்டால போட்டா இன்னும் கொஞ்சம் ஆர்டர்ஸ் வரும்.. போட்டுக்கவா..?” என கோரிக்கை வைக்க,
அதிலிருந்தவனின் தோற்றத்தை கண்டு பிரமித்த தீனா, அனுமதி வழங்கியதோடு அதில் சிலதை தங்களுக்கு தனியாக ப்ரேம் செய்து தர சொல்ல, சந்தோஷமாகவே சம்மதித்தார் அந்த போட்டோகிராப்பரும்.
அங்கே ஜெகதீஷிக்கே தெரியாமல் நடந்த போட்டோ ஷூட்டை கேமிரா மட்டும் உள் வாங்கவில்லை.. வேறு விழியும் ஆர்வமாய் உள் வாங்கி கொண்டதை அவன் அறிந்திருக்கவில்லை.
காலம் கை கூடினால் விழி வழி களவு கொண்டவளும் கைத்தலம் பற்றுவாளோ..?!
பொறுத்திருப்போம் காலம் வரும் வரை..
தீனதயாளன் சக்தி குடும்பத்தோடு அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அமர்ந்த தங்கமணி, “ஏன்டா, பொண்ணுக்கு வயசு ஏறிட்டே போகுது.. அடுத்து ஒரு பையன பெத்துக்கற ஐடியா இல்லையா..?” என்றதும்,
“எனக்கு தான் ஏற்கனவே பையன் இருக்கானே ண்ணே.. ஆசைக்கு பொண்ணு. என்னோட ஆஸ்த்திக்கு என்னோட மூத்த புள்ள..” என ஜெகதீஷை ஆதூரமாய் பார்த்தபடி சொன்னவன் வாய்மொழி கேட்ட சகுந்தலாவிற்கு கண்கள் கலங்கியது, இன்றும் தான் செய்த தவறை எண்ணி.
அவரின் ஆயுளுக்கும் அந்த குற்ற உணர்வு அவரை விட்டு விலகாது.
அவரும் மனப்பூர்வமாகவே அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்.
இது போல சமயங்களில் அதன் வீரியம் கூட.. அதிகத்திற்கும் வலி அவருள்ளே.
அதிலும் ஊரிலிருந்த வீட்டை ஜெயசீலன் இறந்து இரு வருடம் கடந்த நிலையில் வாணியின் பெயருக்கு மாற்ற தீனா சொல்ல, முதலில் தயக்கம் கொண்டது சகுந்தலா தான்.
ஏனெனில் தீனாவின் திறமைக்கு அவன் வீட்டை வாங்கி விட்டான் திருப்பூரில். வாணிக்கும் வீடு இருக்க.. நாளை தன் மகனின் நிலை..? என அப்போதும் தாயாய் ஒரு மனம் தவிக்கவே செய்தது.
தீனா கைவிட்டு விட மாட்டான்.. என்ற நம்பிக்கையை காட்டிலும் ஒரு பயம் அவருக்குள்.
வாணியும் தீனா முடிவை நிராகரிக்க,
“வாணி.. இது எப்படியும் நம்ம அப்புச்சி சொத்த வித்ததுல வந்தது தான்.
அப்போ இது அம்மா சொத்து. அது பொண்ணா உனக்கு சேர்றது தான் முறை.
அவங்க நகையெல்லாம் தான் வீணா போச்சு.. இதாவது உனக்கு வரட்டும்..” என்றுவிட யாராலும் மறுப்பு சொல்ல முடியவில்லை.
இந்த கோணத்தில் பார்த்தால்.. இதில் ஜெகதீஷ் உரிமை கூட கேட்க முடியாதே. அதனால் சம்மதித்திருந்தார் அன்று.
அந்த வீட்டை வாணி பெயருக்கு மாற்றியதுமே, தனது வீட்டை இரண்டு அடுக்காக மாற்றியவன் தனது தம்பியை உடன் அழைத்துக்கொள்ள, சகுந்தலாவின் பயம் அவசியமே இல்லாத ஒன்றாகி இருந்தது.
இப்போது அதை அவன் வாய்மொழியாய் மீண்டும் நிரூபிக்க.. சந்தோஷத்தில் மனமார வாழ்த்தினார் மனதுக்குள்ளாக அவனை.
எல்லாம் நல்லபடியாக முடிய, சக்தி விடைபெற்ற போது சகுந்தலா, “நா ரெண்டு நா இங்கன இருந்துபோட்டு வாரேன்..” என்றுவிட, அவர்கள் மூவர் மட்டும் கிளம்பியிருந்தனர்.
சகுந்தலாவிற்கு இந்த பட்டணத்து வாழ்க்கை முறை ஒத்துவரவில்லை. அதனால் அதிகமாய் சக்தியோடு தான். இப்படி தோன்றும் போது சில நாட்கள் இங்கே இருப்பார்.
வீட்டிற்கு வந்து உடை மாற்றி இரவு உணவும் உண்ட பின் அனைவருக்கும் பால் காய்ச்சி எடுத்து வந்தவள் தீனா அங்கில்லை என்பதை கண்டு,
“அப்பா எங்கே மானு..?” எனக்கேட்க,
“அப்பா டையர்ட். சோ தூங்க போயாச்சு..” என்றவளிடம் அவளுக்கானதை தந்தவள்,
“சிந்தாம குடுச்சிட்டு ரூமுக்கு போ.. நா வர்றேன்..” என்ற படி ஜெகாவுக்கு கொடுத்தவள் சகுந்தலாவுக்கும் சென்று கொடுத்துவிட்டு வந்தாள்.
“நா சித்து கூட தூங்க போறேன்.. சித்து பெட் டைம் ஸ்டோரி சொல்வாங்க..” என மான்யா சொல்ல,
“இதே வேலையா போச்சு உனக்கு. அவன தூங்கவிடாம சேட்டை பண்ண அவன் கூட போகனும் நீ..
நாளைக்கு அவனுக்கு காலேஜ் இருக்கு.. லீவ் நாள்ல ஸ்டோரி கேளு. இப்ப ஒழுங்கா நம்ம ரூமுக்கு ஓடு..” என யமுனா அதட்ட உதட்டை பிதுக்கினாள் பூக்குட்டி.
மகளின் அழுகை தாங்குமா ஜெகாவுக்கும்..?!
“அண்ணி.. பாப்பா இன்னைக்கு ரொம்ப டையர்டா இருக்கா. அதனால சீக்கிரமா தூங்கிடுவா.
என்ன டிஸ்டர்ப் பண்ணாம நா பாத்துக்கறேன்..” என்றவன் பிள்ளையோடு அவன் அறைக்கு சென்று விட,
“ரெண்டும் திருந்தவே திருந்தாது..” என செல்லமாய் அலுத்துக்கொண்டு, பாத்திரங்களை கழுவி வைத்து கதவெல்லாம் அடைத்திருப்பதை சரிபார்த்து.. விளக்குகளை அணைத்து அவர்களின் அறைக்கு சென்றாள் யமுனா கையில் பாலோடு.
அறைக்குள் வந்து பார்க்க, தீனாவோ அலைச்சலினால் உண்டான களைப்பில் குப்புற படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்.
அவனுக்கு கொண்டு வந்ததை டேபிள் மேல் வைத்துவிட்டு சில நொடி நின்று அவன் தூங்கும் அழகை ரசித்திருந்தாள்.
மெல்ல அவளின் துடுக்குத்தனம் எட்டிப்பார்க்க, மெதுவாக அவன் முதுகின் மீது தன் முன்னழகு படற ஒய்யாரமாக படுத்து அவனை வாகாய் தன் கை கொண்டு அணைத்திருந்தாள்.
அவள் உள்ள வந்து கதவடைத்த சிறு சத்தத்திலேயே லேசாக விலக ஆரம்பித்த தூக்கம், இப்போது அவளின் நெருக்கத்தில் முற்றிலும் விலகியது.
அதில் லேசான இதழ் வலைவோடு அவளின் செய்கையை ரசித்தவன் அமைதியாக படுத்திருக்க, அவனின் உடலில் உண்டான மாற்றத்தை கண்டு கொண்டது போல,
“த..யா..” என்றழைத்தாள் அவன் காதோரம் நெருங்கி கிசுகிசுப்பாய்.
அவளின் நெருக்கமே தகிக்க செய்திருக்க, இம்மாதிரியான அழைப்பு வேறு அவனின் உணர்வுகளை தூண்டாமல் தூண்டியது.
ஆனாலும் தன் நிலையை விட்டுக்கொடுக்காமல் அமைதி காக்க, “கண்ணழகா.. நீங்க முழிச்சிட்டீங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு.. சும்மா ஏக்டிங்க போடாம கண்ண திறந்து பாருங்க..” என்றிட,
“என்ன பாப்பா வேணும்..? நா ரொம்ப டையர்ட்.. அதனால பேசாம தூங்கனும்..” என அவளின் எதிர்வினை என்னவென அறிந்தது போல தூண்டிலிட வகையாய் சிக்கினாள் யமுனாவும்.
“எதூ..! தூங்கனுமா..? இன்னைக்கு பங்ஷன்ல எத்தன பேரு கேட்டாங்க தெரியுமா.. அடுத்து புள்ள பெத்துக்கற ஐடியா இல்லையான்னு..?” என அவனிடமிருந்து உருண்டு மெத்தையில் படுத்து அவனை முறைத்தபடி கேட்டாள்.
“தெரியுமே.. என்னையும் தான் கேட்டாங்க..?” என தனது ஒரு கையை தலைக்கு முட்டுக்கொடுத்து ஒருக்களித்து படுத்து அவள் முகம் பார்த்து சொல்ல,
அவனை நெருங்கி படுத்து அவனின் கழுத்தோடு கையிட்டு முகம் பார்த்து, “அப்ப பெத்துக்கலாமே..” என்றாள் கொஞ்சலாய்.
“நமக்கு தான் ரெண்டு புள்ள இருக்கே பாப்பா..” என அவளின் முகத்தில் விழுந்த கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு சொல்ல,
“ம்ப்ச்.. ரெண்டோட மூணாவது வந்தா உங்களால அந்த புள்ளைக்கும் சேத்து சம்பாதிக்க முடியாதா..?” என்றாள் முகத்தை உம்மென்றாக்கி.
“ஒண்ணு இல்ல.. இன்னும் பத்து புள்ள வந்தாலும் என்னால சமாளிக்க முடியும்.
ஆனா, நீ மறுபடியும் பிரசவத்துக்குன்னு ஹாஸ்பிடல் போகனுங்கறத நினைச்சாலே அந்த எண்ணமெல்லாம் தூரமா ஓடி போயிடுது.
அன்னைக்கு நா அனுபவிச்சதே காலத்துக்கும் போதும்.. அதனால பேசாம தூங்கு..” என அவளின் கையை எடுத்துவிட்டுவிட்டு மீண்டும் அவன் அப்படியே படுக்க போக,
“வலிச்சா கஷ்டப்படப்போறது நானு.. உங்களுக்கு என்ன..? அதெல்லாம் முடியாது.. எனக்கு இன்னொரு புள்ள வேணும்..” என அவன் முதுகில் ஒரு அடியை போட்டு உசுப்பியபடி யமுனா சொல்ல,
“வாய்ப்பே இல்ல.. நீ உசுப்பேத்தி என்னோட கிட்னிய புடுங்க பாக்கறேன்னு தெரியும்.
ஒழுங்கு மரியாதையா தள்ளிப்படுத்து தூங்கு.. குட் நைட்..” என திரும்பி அவளுக்கு முதுகாட்டி படுத்தவன் கண்ணை மூடிக்கொண்டு.. மனதுக்குள் 1,2,3.. என எண்ணத்தொடங்கினான்.
சரியாக அவன் பத்தை தொடும் முன் அவனின் எண்ணம் போலவே அவனை தன் புறம் திருப்பி அவன் மீதேறி அமர்ந்தவள்,
“மயிலே மயிலே ன்னா எறகு போடாதுன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா..? இல்லன்னா இன்னைக்கு இருக்கு பாருங்க..” என்றவள் எப்போதும் அவன் செய்யும் செயலை அவளுடையதாக்க..
திட்டம் வெற்றி கண்ட களிப்போடு அவளை இன்னும் தூண்டும் எண்ணத்தோடு அவன் மறுக்க.. அங்கே மான் புலியை வேட்டையாட துணிந்தது.
காலை முதல் பட்டு சேலையில் தன் இளமையை இம்சை செய்து சோதித்து கொண்டிருந்தவளை இப்போது தூண்டி விட்டு..
அவள் துவண்டு போன நேரத்தை தீனா தனக்கு சாதகமாக்க..
அவர்களின் இனிமையான இன்பப்பொழுதுகள் எப்போதும் போல கொலுசுகளின் மெட்டுக்கு ஸ்ருதியோடான ராகமழையாய் நீண்டு கொண்டே சென்றது எந்த தடையுமின்றி.
சுபம்.
பகலுக்கு தடை
போடு இரவினை எடை
போடு
எங்கே நான் என்று
நீ தேடு
ஈரங்கள் காயாமல்
இன்ப ராக மழை
பொழியலாம்
error: Content is protected !!