Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 2

கோபத்தோடு மாடியேறி வந்தவளை இறுக்கி அணைத்தான் வாத்சல்யன்..

“காலையில விட்டுப் போன முத்தத்தை சேர்த்து இப்ப கொடுக்கட்டுமா..?” கிறங்கும் கண்களோடு அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

“விடுங்க வாத்சா..!” என அவனை உதறி தள்ளிவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு தனது துணிமணிகளை அலமாரியிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தாள் லஷ்மி.

“என்ன ஆச்சுடி மறுபடியும் ஏதாவது பிரச்சனையா..?” இடுப்பில் கை வைத்து அழுத முகத்தோடு நின்றிருக்கும் மனைவியை கவலையோடு பார்த்தான் அவன்.



Advertisement

“இந்த வீட்ல பிரச்சனைக்கு என்ன குறைச்சல்..! தினமும் என்னை ஏதாவது இழுத்துப் பேசலைனா உங்க அம்மாவுக்கு உங்க தம்பி பொண்டாட்டிக்கும் தூக்கமே வராதே..!”

உடைகளோடு குளியலறைக்குள் நுழையப் போனவளை கைப்பற்றி இழுத்து நிறுத்தினான் வாத்சல்யன்‌‌..

“என்னடி இது! இன்னைக்கு நேத்தா நடக்குது..! இதுக்கு போய் அழுதுகிட்டு.. அவங்க ஏதாச்சும் சொல்லிட்டேதான் இருப்பாங்க..”

Advertisement

“நீ காதுல வாங்காம கண்டுக்காம போயிட்டே இரு அதானே..!” லக்ஷ்மி கோபத்தில் சீறினாள்.

Advertisement

“கண்டுக்காம போற ஆளா நீ.. அதான் நேருக்கு நேரா மூக்கை உடைக்கற மாதிரி பதிலடி கொடுத்துடுவியே! அப்புறமும் அதையே நினைச்சு ஏன்டி அழுதுக்கிட்டு நிக்கற..!”

“பதிலடி கொடுத்தா மட்டும் அவங்க பேசறதை நிறுத்திட்டாங்களா என்ன? இந்த வீட்ல நான் வேலையே செய்யறதில்லையாம்.. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்கம்மாவுக்கு.. வீட்ல போட்ட பொருள் போட்ட இடத்தில் அப்படியே கிடக்கும்.. ஞாயிறு கிழமையான்னா உக்காராம ஓய்வெடுக்காம வீட்டை துடைச்சு சுத்தம் பண்றது நான்தானே..! சமைச்ச பிறகு ரெண்டு வேளையும் கிச்சனை நீட்டா கிளீன் பண்ணி வைக்கறேன்..”

“நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்பக்கம் தோட்டத்தை கிளீன் பண்ணி செடிகளுக்கு தண்ணி ஊத்தறேன்.. உங்க அம்மாவுக்கு கை கால் மூட்டு வலின்னா நாந்தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன். காலையில ஒன்பது மணிக்கு போயிட்டு ராத்திரி ஏழு மணிக்கு வர்றவளால இவ்வளவுதான் வேலை செய்ய முடியும் வாத்சா..!

Advertisement

“என்னவோ எனக்கு சமையல் சரியா வரல.. அப்படியே நான் சமைச்சாலும் உப்பு புளி காரம் குறைவுன்னு எப்ப பாரு ஏதாவது குறை.. அடுப்பு பக்கத்துல நின்னாத்தான் அது வேலையா..?” என்றவளின் குரல் தழுதழுத்தது. கலங்கிய கண்களின் கண்ணீர் கன்னத்தில் வழியாமல் உள்ளிழுத்துக் கொண்டாள்.

“விடுடி..! இதையெல்லாம் பெருசு படுத்தி ரொம்ப யோசிக்காத.. இதெல்லாம் எப்பவும் நடக்கிறதுதானே.. போய் குளிச்சிட்டு வா..!”

“சரிதான்.. இவ்வளவு நேர புலம்பலுக்கு உங்க ரியாக்ஷன் இவ்வளவுதானா..!”

“வேற என்ன செய்யணும்? இப்போ அவங்க கிட்ட போய் சண்டை போடணுமா..! அப்ப தினம் தினம் சண்ட போட்டுக்கிட்டேத்தான் இருக்கணும்.. தினம் தினம் கேள்வி கேட்கணும். நான் உன் பேச்சைக் கேட்டு ஆடறதா பிரச்சனை வரும். குடும்பத்தில் சண்டை வரும்.. நம்ம நிம்மதி போகும்.. அது பரவாயில்லையா உனக்கு.?”

“நான் அப்படி சொல்ல வரல..! என்னோட ஆதங்கத்தை காது கொடுத்து கேளுங்கன்னு சொல்றேன்.”

“கேட்டுட்டுதானடி இருக்கேன். மூஞ்சிய தூக்கி வச்சிட்டு குளிக்க போனவளை நிறுத்தி என்ன பிரச்சனைன்னு நான்தானே கேட்டேன். அம்மா பத்து வருஷமா பேசாத பேச்சையா இன்னைக்கு பேசிட்டாங்க.. குடும்பம்னா அப்படித்தான் இருக்கும்னு எனக்கு அறிவுரை சொன்னவா நீ.. விட்டு தள்ளுடி.”

“அப்படியெல்லாம் விட முடியல.. இத்தனை வருஷத்துக்கு பிறகும் இந்த மாதிரி பேச்சுகளை கேட்கணும்னா எனக்கு தலையே வலிக்குது.. எனக்கும்.. எனக்கும்..” அதற்கு மேல் பேச முடியாமல் விம்மினாள்.

“அம்மு இங்க வா..! ஏன் அப்படியெல்லாம் யோசிக்கற.. அடுத்தவங்களோட வார்த்தைகள்ல வாழ ஆரம்பிச்சா நிம்மதி போய்டும்.” என்றபடி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“அதுக்காக எப்பவும் என்னை நோகடிக்கிற மாதிரியே பேசினா.. வலிக்குது வாத்சா..!” என அவன் நெஞ்சில் சாய்ந்தாள் லஷ்மி.

“இதெல்லாம் நமக்கு புதுசா..! நீ முக்கியத்துவம் கொடுத்து மனசை குழப்பிக்கிறதுதான் புதுசா இருக்கு.. இப்ப நீ எதுக்கெடுத்தாலும் டென்ஷனாகற..! ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணிக்காதடி.. ஆபீஸ் வேண்டாம்.. இந்த வீடு வேண்டாம் பத்து நாள் எங்கேயாவது வெக்கேஷன் போயிட்டு வரலாமா..?”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு.. என்னால லீவ் போட முடியாது. பேசிப்பேசியே நேரத்தை கடத்தாதீங்க.. நான் போய் குளிச்சிட்டு வரேன்.. தயாராக இருங்க..!”

“எது..! நான் நேரத்தை கடத்தறேனா.. அடிப்பாவி..! ஆறுதல் சொல்ல வந்தவன் அனாயிங் ஹஸ்பன்டா தெரியறேனா உனக்கு.. எல்லாம் என் நேரம்..! என்னடி பேசிட்டே இருக்கும்போது உள்ள போற இரு நானும் வரேன்..!” என வாத்சல்யன் பாய்ந்து வர அதற்குள் சிரித்துக் கொண்டே குளியலறை கதவை சாத்தியிருந்தாள் லக்ஷ்மி.

புன்னகையோடு எதிரில் தெரிந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தபடி சிகையை கோதியவனுக்குள் ஆழ்ந்த யோசனை.

‘அதைப்பத்தி அவளிடம் சொல்லலாமா..? வேண்டாம் ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருக்கா..! இதை வேற சொல்லி அவ மனசை குழப்ப வேண்டாம்.. சாதாரண கனவுதானே அப்படியே மறந்திடலாம்.. ஆனாலும் ஏன் இப்படி ஒரு வித்தியாசமான கனவு..!’ நெற்றியை தேய்த்தபடி குழம்பிப் போனான்..

‘அது சரி கவலைப்பட ஆயிரம் விஷயம் இருக்கும்போது இந்த கனவு தானா உன்னை கலங்கடிக்குது.. லீவ் இட் வாத்சா..!’ என கண்களை சிமிட்டியபடி சிரித்தபடி அறையின் கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.

கீழே நடுக்கூடத்தில் சோபாவில் அமர்ந்து பேப்பரை படித்துக் கொண்டு அப்படியே தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் செய்தியிலும் ஒரு கண் பதித்திருந்தார் செல்வவிநாயகம்.

ஓய்வு பெற்ற கையோடு தனது மிச்சமிருக்கும் வாழ்க்கையை உல்லாசமாக கழித்துக் கொண்டிருப்பவர்.. ஆனால் பாவம் அவர் மனைவிக்குத்தான் இந்த வீட்டு வேலைகளிலிருந்து ஓய்வு கிடைத்த பாடில்லை. சமையலறை ராஜ்யத்தை விட்டுக் கொடுக்க அவரும் தயாராய் இல்லை.

இப்போதைய நிலவரப்படி செல்வ விநாயகத்தை காலையிலும் மாலையிலும் வாக்கிங் போவதற்கே அவரை இரண்டு பேர் நெட்டித் தள்ள வேண்டும்.

“என்னப்பா பேப்பர் முடிஞ்சுதா..?” என்றபடியே வந்த சோபாவில் அமர்ந்தான் வாத்சல்யன்..! மகன் வந்தமர்ந்து தன்னை கேள்வி கேட்பது கூட தெரியாமல் முழு முற்றாக அரசியல் செய்திகளில் மூழ்கி இருந்தார் விநாயகம்.

“புவனா என் பெல்ட் எங்க..?

புவனா..!

புவனா ஷூ கேட்கிறான் பார்..!”

என புவனாவின் பெயரை ஏலம் போட்டுக் கொண்டிருந்தான் வாத்சல்யனின் தம்பி முரளி.

வாத்சல்யனுக்கு தினமும் தம்பி இப்படி கத்திக் கொண்டிருப்பதில் சிரிப்புதான் வருகிறது.

இருந்த இடத்திலிருந்து பொருட்கள் நடந்து போகுமா என்ன..? அந்தந்த இடத்தில் பொருட்களை சரியாக வைக்க பழகினால் தினமும் காலையில் இப்படி டென்ஷனாக வேண்டிய அவசியமே இல்லையே.! பொறுப்பில்லாமல் மூலைக்கொரு பக்கமாய் பொருட்களை தூக்கி வீசினால் இப்படித்தான்.!

ஒருமுறை இது குறித்து அறிவுரை சொல்லப் பொய் அவன் மனைவி புவனா பதிலடி கொடுத்தது இன்னும் நெஞ்சில் நீங்காத வடுவாக நிற்கிறது.

“ஏன்டா தினமும் இப்படி கத்தறதுக்கு பதிலா.. அந்தந்த பொருளை அதுக்கான இடத்தில் பத்திரமா வச்சா.. இப்படி தேட வேண்டிய அவசியமே இல்லையே..?”

“எங்கண்ணா..? நீங்களே அவகிட்ட சொல்லுங்க..!” என பிளேட்டை அவள் பக்கம் திருப்பி விட்டான்.

“புவனாட்ட எதுக்கு சொல்லணும்.. ஷூ சாக்ஸ் பெல்ட்.. போன் சார்ஜர் உன்னோட டிரஸ்..! நீ பயன்படுத்தற பொருட்களையாவது பத்திரமா அதுக்கான இடத்துல வச்சுக்கலாம் இல்லையா..! கல்யாணமாகி குழந்தை குட்டின்னு வந்தாச்சு இன்னும் பொறுப்பில்லாமல் இருந்தா எப்படி..! சின்ன சின்ன வேலைகளையாவது செய்ய பழகிட்டா ஒவ்வொண்ணத்துக்கும் புவனா கிட்ட போய் நிற்க வேண்டிய அவசியமே இல்லையே..!”

“குழந்தைகள் இருக்கற இடத்தில அப்படித்தானே அத்தான்..! வைச்ச பொருள் வச்ச இடத்துல எங்க இருக்க விடுதுங்க.. எதையாவது எடுத்து எங்கேயாவது போட்டுடுதுங்க..! காலையில நாங்கதான் டென்ஷனாக வேண்டியதா இருக்கு. உங்களுக்கு குழந்தைகள் இல்ல அதனால.. எந்த பொருளை எங்க வச்சாலும் அது தொலையாம அப்படியே இருக்குது..! உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இருக்குல்ல அத்தான்..?

கணவனும் மனைவியும் வேலையை பகிர்ந்து கொண்டு திட்டமிட்டு செய்தால் இந்த காலை நேர டென்ஷன்களை தவிர்க்கலாம் என அவன் சொன்னதை கூட சரியாக புரிந்து கொள்ளாமல்.. புவனா தந்த பதிலடியால் சூடுபட்ட வேதனையை அனுபவித்தான் வாத்சல்யன். அதிலிருந்து அவர்கள் விஷயத்தில் தலையிட்டு கொள்வதில்லை..

நெஞ்சுக்குள் ஏதோ ஒரு மூலையில் அந்த வார்த்தைகள் அனத்திக் கொண்டிருந்த போதிலும் மனைவியிடமும் இதைப் பற்றி பகிர்ந்து கொள்ளவில்லை.

சந்தான லஷ்மி என்ன செய்வாள்.. கோபப்படுவாள்.. கணவன் காயப்பட்டதற்காக அவமானப்பட்டதற்காக அழுவாள்.. இல்லையேல் புவனாவிடம் போய் சண்டை போடுவாள். இதனால் பிரச்சனை பெரிதாகுமேயன்றி குறையப்போவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் சில பிரச்சனைகளை கண்டுங் காணாமலும் கடந்து போவது மட்டுமே நிம்மதியையும் ஒற்றுமையையும் நீடிக்க செய்வதற்கான ஒரே வழி.

வாத்சல்யனுக்கு திருமணமான அடுத்த வருடத்திலேயே முரளிக்கும் நல்ல வரன் குதிர்ந்து விட அவனுக்கு கையோடு கையாக திருமணத்தை முடித்து விட்டார்கள்.

புவனா திருமண முடிந்த ஒரு வருடத்திலேயே மழலைச் செல்வத்தை மாமியாரின் கையில் தந்த காரணத்தால் அவளுக்கு ஏக மதிப்பும் மரியாதையும்..! அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு குழந்தை..! எட்டு வயதில் ஒரு பெண் பிள்ளையும்.. ஆறு வயதில் ஒரு ஆண் பிள்ளையுமாக இரு பிள்ளைகளை பெற்றெடுத்த புவனா இரண்டாவது மருமகளாக இருந்தபோதிலும்.. அனைத்து அதிகாரங்களும் இவள் கையில்தான்.. மூத்த மருமகளுக்கு பெயரளவில் மட்டுமே மரியாதை..!

“அம்மா.. ஷூ போட்டு விடுமா..!” என புவனாவின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் இளைய மகன் சரவணன்..

“டேய் சரவணா இங்க வா..! நான் ஷூ போட்டு விடறேன்..!” வாத்சல்யன் அழைத்ததும் ஷூவையும் சாக்ஸையும் தூக்கிக்கொண்டு அவனிடம் ஓடி வர.. பிள்ளையை பக்கவாட்டிலிருந்த சோபாவில் அமர வைத்து அவன் காலை தூக்கி தன் மடியில் வைத்து ஷுவை அணிவித்து லேஸ் கட்டி விட்டான் வாத்சல்யன்.

“தேங்க்யூ பெரியப்பா..!” என கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றது சின்ன வாண்டு.

குளித்து முடித்து வேலைக்கு போக தயாராகிக் கீழே இறங்கி வந்தாள் சந்தான லஷ்மி..

சமையலறைக்கு செல்லும் வழியில் முரளி புவனாவின் அறையை கடக்கும்போது..

“2+3= 5 தான்டா..! நீ தப்பா எழுதியிருக்க..! போ மிஸ் உன்ன அடிக்கப் போறாங்க.. என்று தம்பியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் முரளி புவனா தம்பதியரின் மூத்த மகள் வினோதினி.
இ.. இல்ல நான் கரெக்டா தான் எழுதி இருக்கேன்.. 2+3=6 தான்..” என்றது இளையது.

“அடி என் கட்டிக் கரும்பே..! செல்ல கற்கண்டே! இரண்டும் மூணும் கூட்டினால் அஞ்சு தான்.. பெருக்கினால்தான் ஆறு..” என அவனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சி கொஞ்சி சொல்லிக் கொடுக்கத் தோன்றிய தன் அவாவை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள் லஷ்மி..

“பட்டதெல்லாம் போதாதா..! காயப்பட மனசுல இன்னும் தெம்பு இருக்கா என்ன.. போ லக்ஷ்மி.. பிள்ளையை பார்த்து தேவையில்லாம ஆசை வளத்துக்காதே..!” மனதோரம் நெறி கட்டிய கசப்போடு எச்சில் விழுங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் சந்தான லஷ்மி.

கிச்சனுக்குள் புகுந்து சமைத்து வைத்திருக்கும் உணவில் தனக்கு தேவையானதை டிபன் பாக்ஸில் போட்டு அடைத்துக்கொண்டு.. “குழந்தைகளுக்கு நான் பேக் பண்ணட்டுமா புவனா..?” என மனம் தாங்காமல் கேட்க..

காலையில் நடந்த காரசார விவாதத்தால் “இல்ல வேண்டாம்..! நானே பாத்துக்கறேன்..” என்றாள் அவள் சிடுசிடுப்புடன்.

“ஒகே..!” என தோள் குலுக்கி அசட்டையாக பதில் சொன்னாலும் உள்ளுக்குள் வருத்தம்தான்.

குழந்தைகளுக்கும் தன் கணவனுக்கும் உணவை பேக் செய்து எடுத்துக் கொண்டு புவனா அங்கிருந்து நகர்ந்துவிட.. டிபன் பாத்திரங்களை எடுத்து வந்து மேஜையின் மீது வைத்து.. “வாத்சா.. சாப்பிட வாங்க..!” என அழைத்தாள் லஷ்மி..

“ஹான்.. இதோ வந்துட்டேன்..!” என எழுந்து வந்தான் அவன். முரளியின் அந்நேரம் சாப்பிட வந்து உட்கார குழந்தைகளும் அங்கே ஆஜராகின.

தன் கணவனுக்கும் முரளிக்கும் உணவை பரிமாறினாள் லக்ஷ்மி..

சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் தட்டில் உணவை போட்டு ஊட்டி விட ஆசைதான்.

தன் கைபட்டதால்தான் குழந்தைகளுக்கு வாந்தி பேதி திருஷ்டி என.. சாடை மாடையாக ஏகப்பட்ட பேச்சுக்களை கேட்க இனி திராணி இல்லை.!

கண்டுங் காணாமலும் தனக்கான உணவை தட்டில் போட்டுக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.

புவனா குழந்தைகளுக்கான உணவை தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு.. “வாங்க பசங்களா நாம அங்க போய் சாப்பிடலாம்” என பிள்ளைகளை அழைத்துக் கொண்டு லஷ்மியின் முதுகுக்கு பின்னால் சோபாவில் போய் அமர்ந்தாள்.

குழந்தைகள் உண்ணுவதை தான் பார்த்தால் திருஷ்டி பட்டு போகுமாம். இதழோரம் உண்டான விரக்தி புன்னகையுடன் உணவை தொண்டைக்குள் விழுங்க அது முள்ளாக இறங்கியது.

உண்டு முடித்த பிறகு பாத்திரங்களை எடுத்து போட்டு கழுவிக் கொண்டிருந்தாள் அவள்.. அவ்வளவு கஷ்டமா இருந்தா இதையும் நாங்களே செஞ்சுகிறோம் என்று சொன்ன ஆட்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை.

இன்று வழக்கத்திற்கு மாறாக நேரமாகிவிட்டது.. மளமளவென வேலைகளை முடித்துக் கொண்டிருந்த நேரத்தில்..

“ஏதாவது ஹெல்ப் பண்ணவாடி..!” முதுகின் பின்னாலிருந்து அவன் குரல் கேட்டது.

“வேண்டாம்பா ஒரு பத்து நிமிஷம் வந்துடறேன்..!” சொல்லிக் கொண்டிருக்கும்போதே முழங்கை வரை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு சமையலறை மேடையை துடைத்து சுத்தம் பண்ண ஆரம்பித்திருந்தான் வாத்சல்யன்.

“ஏய்.. வேண்டாம் நான் பாத்துக்கறேன்.. டிரஸ் அழுக்காக போகுதுப்பா..!”

“ஏன் உனக்கு மட்டும் டிரஸ் அழுக்காகாதா..! பாத்துக்கலாம்டி..!”

“எம்.எஸ் ஆட்டோமொபைல் கம்பெனி ஓனர் அடுப்படியில அழுக்கு துடைக்கறார்..” சொல்லிவிட்டு சிரித்தாள் லஷ்மி..

“ஊருக்கே பருப்பானாலும் வீட்டுக்கு தொடப்ப கட்ட தானே..!”

“கிட்ட வாங்க..!”

“என்னடி..?”

வாத்சல்யன் கன்னத்தில் முத்தமிட்டாள் சந்தான லஷ்மி.

கண்களை விரித்து பரவசப்பட்டவன் “அப்போ கொஞ்ச நகரு இந்த பாத்திரம் எல்லாத்தையும் நானே கழுவி வைச்சிடறேன்..” என்று அவள் பக்கத்தில் வந்து நிற்க..

“வேண்டாம்ப்பா..! என் புள்ளைய தனக்கு அடிமையாக்கினது பத்தாதுன்னு வீட்டு வேலைக்காரனாவும் ஆகிட்டான்னு ஊர் முழுக்க தண்டோரா போடுவாங்க உங்க அம்மா..!” என்றதும்..

“என் அம்மாவை வார்த்தைக்கு வார்த்தை இழுக்கலைன்னா உனக்கு தூக்கமே வராதே..! இது முடிச்சிட்டேன்.. ஏதாவதுன்னா கூப்பிடு..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அமைதியாக கார் ஓட்டிக் கொண்டிருந்தான் வாத்சல்யன்..

சந்தான லஷ்மி தீவிர யோசனையில் இருந்தாள்..

பெரும்பாலும் அலுவலகம் செல்லும் நேரம் கார் பயணங்களில் இருவரும் வளவளவென பேசிக் கொள்வதில்லை என்றாலும்.. இது போன்ற ஆழ்ந்த யோசனைகளில் மூழ்கி பேசாமலும் இருந்ததில்லை.

லஷ்மியை அவளது அலுவலக வாசலில் இறக்கி விட்டான் வாத்சல்யன்.

“ஈவினிங் நாலு மணிக்கு ஹாஸ்பிடல் போகணும் மறக்காம வந்து பிக்கப் பண்ணிக்கோங்க..!”

ம்ம்..! என தலையசைத்தான் அவன்.

லக்ஷ்மி இறங்கப் போகும் நேரம்.. “சந்தா..” என அழைத்து அவளை நிறுத்தினான்.

“சொல்லுங்க..!”

சில கணங்கள் யோசித்தவன்.. “ஒன்னும் இல்லை..!” என்றதும் அவனை குழப்பமாக பார்த்துவிட்டு காரிலிருந்து இறங்கினாள் சந்தான லஷ்மி.

தொடரும்.

9 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 2

  • Rameeza Sait

    இரண்டு பேருக்கும் ஒரே கனவா…அப்படி அது என்ன கனவா இருக்கும்…🤔🤔🤔 காலங்கள் மாறினாலும் இந்த மாதிரி பேச்சுக்கள் மாறுறதில்ல..திருந்தாத ஜென்மங்கள்..😡😡😡

    Reply
  • Revathy Dhanda

    💯💯 True words writer ji 👌👌அடுத்தவங்க வார்த்தையில வாழ ஆரம்பிச்சா நிம்மதி போயிடும். கூட்டு குடும்பம் ஒற்றுமை யா இருக்கனும் னா எல்லாருமே அனுசரிச்சு போனும். சந்தானலக்ஷ்மி பாவம் பதிலடி கொடுத்தாலும் காயப்பட்ட மனசு அழ தானே செய்யும்.

    Reply
  • அப்படி என்ன தான் கனவு வந்து இருக்கும் 🤔🤔🤔
    எந்த காலத்திலும் இது போன்ற பிரச்சனை மாறவே மாறாது போல அதிலும் இந்த கூட்டு குடும்பத்தில் சொல்லவா வேணும் 🤷🏼‍♀️🤷🏼‍♀️🤷🏼‍♀️
    லஷ்மி உன்ன நினைச்சா கஷ்டமாகவும் இருக்கு அதே சமயம் எல்லாருக்கும் தக்க பதிலடி கொடுத்து எதுவும் நடக்காதது போல அடுத்த வேலை பார்க்க போற பத்தியா அது நினச்சு சந்தோஷமாகவும் இருக்கு 🙏🏼🙏🏼🙏🏼
    வாச்சா நீ தான் லஷ்மி க்கு பக்கபலம் ❤️❤️

    Reply
  • Engada irukinga intha mari alellammmmm…. Ipidi irukavana nambavu mudiyala nambamavu iruka mudiyala

    2 perukum orea kanavaaaaaaaa

    Reply
  • Krishna veni

    அப்படி என்ன கனவா இருக்கும் 🤔🤔🤔
    எந்த காலத்திலும் இப்படி பட்ட ஒரு மனநிலை மட்டும் எப்போதும் மாறாது போல அதிலும் குறிப்பாக கூட்டு குடும்பத்தில் 🤷🏼‍♀️🤷🏼‍♀️🤷🏼‍♀️
    லஷ்மி உன்ன நினைச்சா எல்லாரும் தக்க பதிலடி கொடுக்கும் போது சந்தோஷமாகவும் இருக்கு அதே நேரத்தில் உன்னோட மனசு கஷ்டபடும் போது வருத்தமாகவும் இருக்கு 😔😔😔
    வச்சா நீ தான் லஷ்மி க்கு பக்கபலம் 🙏🏼🙏🏼🙏🏼❤️❤️

    Reply
  • Jothi vel

    ரெண்டு பேத்துக்கும் ஒரே கனவா?? என்னவா இருக்கும்.
    என்னதான் அவங்களுக்குள்ள சந்தோசமா இருந்தாலும் எவ்வளவு மன அழுத்துல இருப்பாங்க இவங்க ரெண்டு பேரும்…💔💔💔

    Reply
  • Kowsikrishna

    எவ்வளவு ஈசியா பேசுறாங்க இதுவே அவங்க பொண்ணவோ இல்ல கூட பிறந்த அக்காவாக இருந்தா பேசுவாங்களா 😡😡😡

    அவங்க மனகஷ்டம் அவங்களுக்கு மட்டும் தான் 💔💔💔💔

    எவ்வளவு போல்டா பேசினாலும் அவங்க வீக்னெஸ் பார்த்து அடிக்கிறதுல சொந்தகாரவங்களா அடிச்சிக்க ஆளே இல்லடா சாமி 😏😏😏

    எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் நம்பள நம்பி துணையா இருக்க வாழ்கை துணை கிடைச்சாலே நம்ம வாழ்க்கையே சொர்க்கம் தான் அதுவரைக்கும் நம்ம லஷ்மியும் வாத்சல்யன் super Jodi ❤️❤️❤️

    Reply
  • Shilaja sankaran

    என்ன கனவா இருக்கும், ரெண்டு பேருக்கும் ஒரே கனவாக இருக்குமோ?🤔
    மாமியார்னு இருந்தாலே இதுபோல ஏதாவது மருமகளை குற்றம்,குறை சொல்லாம தூக்கம் வராது போல,😒😒
    சரி அவங்க தான் அந்த காலத்து மனுஷி இந்த புவனா அதுக்கு கூடவா அறிவில்ல குழந்தை இல்லாதது ஏதோ தேச துரோக குற்றம் போலவே பேசுறாங்க 😔
    மத்தவங்க எப்படியோ ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு அனுசரணையாக இருந்தா சரி❤️❤️

    Reply
  • Rendu perukumae kannavudhan confusion ah adhuvum at a timela 🤔🤔🤔🤔

    Kudumba arasiyal adhuvum kalyanam aagi kuzhandhai illanuradhu kastam avangluku irukkaradha adhai kuthi katti
    Pasangala parthalae kuthal pechulam avangala hurt pannum nu yosikka mateenga la 😟😟😟😟

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!