சுஜினி அமெரிக்கா வந்து இன்றுடன் ஒருமாத காலம் காற்றில் கரைந்திருந்தது. முதல் இரண்டு நாட்களை தோழி சரண்யாவுடன் கழித்தாள். இரண்டாம் நாள் மாலையே சுஜினிக்கு உரிய விடுதி அறை கொடுக்கப்பட்டுவிட்டது. தன் உடைமைகளுடன் டார்மிடரி அறையில் குடியேறினாள். அறை சிறியதாகவே இருந்தது. சுஜினியின் நல்ல காலமோ என்னவோ, சிறிய அறையாக இருப்பினும் தனி அறை கிடைத்தது வசதி என்றே நினைத்தாள். சுஜினியின் அதிர்ஷ்டம் அத்துடன் நின்றுவிடவில்லை. ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த வித்யா ரெட்டியை தோழியாக கொடுத்தது.
“ஹாய் ஆர் யூ ஃப்ரம் இந்தியா? சவுத் இந்தியனா?” எனத் துவங்கிய நட்பு, ஒரு மாதத்தில் பல்கிப்பெருகியிருந்தது. வித்யாவின் அறைத் தோழி எம்மா, சுஜினி மூவருமே ஒரே வகுப்பில் படித்ததால் நெருக்கமானவர்களாகிப் போனதில் ஆச்சர்யமில்லை. அமெரிக்காவின் நடைமுறைப் பழக்கங்களை கற்றுக் கொடுக்க எம்மா இருந்தது மற்ற இருவருக்கும் வசதியாகப் போயிற்று. இந்த ஒருமாத காலத்தில் ஒரு நாள் சந்திந்த சதீஷையும், விவேக்கையும் பற்றி அவ்வப்போது சுஜினி நினைத்துப்பார்ப்பாள். கல்லூரி துவங்கிய சில நாட்கள் சுஜினியின் கண்கள் அலைபாயத்தான் செய்தன.
“எங்க இவனுகளை ஆளையே காணோம்”என வகுப்பு அறைக்குள் இல்லாத பொழுதுகளில் எல்லாம் மனதிற்குள் கேள்வி எழும் சுஜினிக்கு. நல்ல வேளையாக கேம்பஸ் சிறிய அளவிலான ஊர் போன்று இருந்ததாலும், இருவரும் வேறு பிரிவில் படிப்பதாலும் சதீஷ், விவேக் இருவரும் சுஜினியின் கண்களில் படவேயில்லை.
“யாரையாவது தேடறியா?”என சுஜினியின் கண்கள் தேடிக்கொண்டிருந்ததை வித்யா ஒரு நாள் கண்டுகொண்டு வினவினாள். தோழிகள் மூவரும், வகுப்பு இல்லாத ஒரு மதிய வேளையில், பாட குறிப்புகளின் உதவியுடன் அந்த வார அசைன்மெண்ட்டை எழுத்திக் கொண்டிருந்தனர். அந்த பெரிய வில்லோ மரத்தின் குளுமையை அனுபவித்தவண்ணம், பேசிக் கொண்டே குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவர்களின் கவனம், அப்போது கடந்து சென்ற மூன்று மாணவர்களால் கலைந்தது. மூவரும் அமெரிக்கர் என்றபோதும், சினேகமாக கையசைத்து, அதிலும் ஒருவன் எம்மாவைப் பார்த்து “ஹாய்”என்று வேறு மொழிந்து சென்றது மூவரது கவனத்தையும் கலைத்தது.
[the_ad id=”6605″]
“டிட் ஹி வேவ் அட் மீ?”என்று எம்மா மூன்றாவது முறையாக தெளிவுபடுத்திக் கொண்டாள். மகிழ்ச்சியில் மிதந்தபடிக்கு எம்மா, தன் தலைமுடிகளை கைவிரல்களால் கோதிக் கொண்டாள். சற்றைக்கெல்லாம் படிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சிதறி, ஆடர்வர்களைப் பற்றி, அவரவர் ரசித்த ஆண்களின் குணாதிசயங்கள் பற்றி என மூவரது பேச்சும் மாறியிருந்தது.
(உரையாடல்கள் எல்லாமே ஆங்கிலத்தில் தான் நடக்கின்றன. இங்கே வாசகர்களின் தெளிவிற்காக, உரையாடல்கள் அனைத்தும் தமிழில்)
எம்மா தனது பள்ளிக்கால பாய்ஃப்ரெண்ட் பற்றி கொஞ்சம் சிலாகித்தே கூறினாள். “ஓ, ஆடம் வாஸ் எவ்ரிதிங் ஏ கேர்ள் கேன் ஆஸ்க் ஃபார்” என்று தனது முன்னாள் காதலன் பற்றி பெருமையாகக் கூறியவள், “சோ, வாட் அபவுட் யூ போத்”என வெளிப்படையாக வினவினாள்.
வித்யாவும் சுஜினியும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டனர். “யு ஃபர்ஸ்ட்” என்று வித்யா சுஜினியைப் பார்த்துக் கூற, சுஜி “ஹே நோ, யு கோ ஃபர்ஸ்ட்” என்று சிரிப்புடன் மொழிந்தாள். இருவரும் பேசத் தயங்குவதைக் கண்ட எம்மாவிற்கு சிரிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
“கேர்ள்ஸ் கமான்…யாராவது ஒருத்தர் சொல்லுங்க”என்று தடையில்லா ஆங்கிலத்தில் இருவரிடமும் மொழிந்தாள் எம்மா. பெருமூச்சு ஒன்றுடன் வித்யா முதலில் தன் பள்ளி கால தோழன் பற்றியும், அதன் பின்னர், கல்லூரியில் சிறிது நாட்கள் தீவிரமாக காதலித்த சீனியர் ஒருவனைப் பற்றியும் லேசாக கூறினாள். ஆனால் அந்தக் காதல் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து போய்விட்டதையும் கொஞ்சமும் வருத்தமின்றி தெரிவித்தாள்.
அடுத்து சுஜினியின் முறை வந்ததும், தரையில் கிடந்த புற்களை ஒவ்வின்றாக பிய்த்துக் கொண்டே, “எனக்கு சொல்லற மாதிரி எந்த இன்சிடெண்டும் இல்லை”என்று சிரிப்புடன் மொழிந்தாள். தோழிகள் இருவரும் விடுவதாய் இல்லை. “ஹே, யு ஆர் சீட்டிங்…அதெப்படி யாருமே இல்லாம இருக்கும்….கமான் யா”என வித்யாவும் எம்மாவும் தூண்டத்துவங்க, “நிஜம்மாவே என் லைஃப்ல இதுவரைக்கும் சொல்லிக்கற மாதிரி யாரும் இல்லை. ஸ்கூல் படிக்கறப்போ டியூஷன் செண்டர்ல ஒரு பையன் சும்மா அடிக்கடி பார்ப்பான். ஆனா ஒரு வார்த்தை கூட அவங்கிட்ட பேசினதில்ல… இன்ஃபாக்ட் அவன் பேர் கூட எனக்குத் தெரியாது. “ என்று ஆங்கிலத்தில் சுஜினி தோழிகள் இருவரையும் பார்த்துக் கொண்டே மொழிய, அவர்கள் இன்னமும் சமாதானமாவது போல் தெரியவில்லை. அதிலும் எம்மாவிற்கு சுஜினியின் பேச்சு சிரிக்க வைத்தது மட்டும் அன்றி, சுஜினியையும் வித்யாவையும் கண்டு ஆச்சர்யம் கொண்டாள்.
“அப்போ நீங்க…..நீங்க ரெண்டு பேருமே…ரெண்டு பேரும்……வர்ஜினா? ப்ளீஸ் சிரிக்காம பதில் சொல்லுங்க…. தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும்”என்று தன் ப்ளாண்ட் கூந்தலை கைகளால் கலைத்தபடிக்கு வினவினாள் எம்மா. வித்யாவிற்கும் சுஜினிக்கும் எம்மாவின் பேச்சைக் கேட்டு மறுபடியும் சிரிப்பு எழுந்தது. “டோண்ட் டெல் த வி வோர்ட் அகேன்” என்று சிரித்துக் கொண்டே சுஜினி வேகமாக தலையசைக்க, வித்யா கொஞ்ச மொதுவாக தலை ஆட்டினாள்.
சுஜினி கேள்வியுடன் ”ஹே வித்தூ” என்று வித்யாவைப் பார்க்க, “பார்ஷியலி…..அதாவது கிஸ் பண்ணியிருக்கேன்…சோ, ஃபுல் வியான்னு தெரியலை….”என்று மொழிய, கொல்லென்று சிரித்த சுஜினியுடன் எம்மாவும் சேர்ந்து சிரித்தாள்.
“உங்களுக்கு எப்படியும் 21 வயசு இருக்கும்…இன்னமும் ஒரு உருப்படியான பாய்ஃப்ரெண்ட் கூட இல்லைன்னு சொன்னா….என்னால நம்ப முடியலை கேர்ஸ்…ஒன்னு நீங்க பொய் சொல்லணும், இல்லை நான் படுமுட்டாளா இருக்கணும்”என்று எம்மா கொஞ்சம் சீரியஸாக மொழிய, தோழிகள் வேகமாக மறுத்தனர்.
எம்மாவைச் சுறுக்கி எம் என்று அழைத்த வித்யா“எம்…. இதெல்லாம் இந்தியன் கல்ச்சர்…அதுவும் நாங்க சவுத் இந்தியன்ஸ்…. இதெல்லாம் நாங்க ஸ்டிரிக்டா ஃபாலோ பண்ணுவோம்…. அப்படியே ஒரு பாய் ஃப்ரெண்டு இருந்தான்னு வை, அவனையே நாலுவருஷம் லவ்பண்ணி கல்யாணமும் பண்ணிக்குவோம்…லவ் மேரேஜ்க்கு ஒத்துக்காத பேரண்ட்ஸ்ன்னா, அவங்களா ஒருத்தனை கல்யாணம் பண்ணிவைப்பாங்க….அவனை லவ் பண்ண ஆரம்பிப்போம்..எங்களுக்கு அவ்வளவா சாய்ஸே இல்லை…. தெரியுமா?”என சோகமாக வித்யா மொழிய, சுஜினி ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
[the_ad id=”6605″]
“என்னோட அம்மா என் அப்பாவோட முகத்தையே கல்யாணம் முடிஞ்சு நாலு நாள்கழிச்சு தான் நேரா பார்த்தாங்களாம்”என்று சிரிக்காமல் சுஜினி கூற எம்மா ஆச்சர்யத்துடன் கண்களை விரித்தவள், “ஓ…புவர் கைஸ்…..சோ சேட்”என்று உச்சு கொட்டினாள்.
“சீ எம்மா….. வி இந்தியன்ஸ் ஆர் வெரி ஷை பீப்பிள்…தட் இஸ் வை, வி ஆர் த செகண்ட் பாபுலேட்டட் கண்டரி இன் த வேர்ல்ட்” என்று சிரிக்காமல் வித்யா மொழிய, புரிந்து கொள்ள ஒருகணம் எடுத்துக் கொண்டு எம்மா கொல்லென சிரித்தாள். எம்மாவின் சிரிப்பில் சுஜினியின் கலகல சிரிப்பும் சேர்ந்து ஒலித்தது.
மூன்று தோழிகளும் இப்படி சிரித்துக் கொண்டிருந்த வேளையில் தான், சுஜினிக்கு சம்பந்தமேயில்லாமல் சதீஷின் நினைவு எழுந்தது. “இது என்ன நாராசமா, அந்த மூஞ்சி நியாபகம் வருது. அட்லீஸ்ட் விவேக் நியாபகம் வந்தாக் கூட ஒரு நியாயம் இருக்கு….அவனாவது கொஞ்சம் பேசினான். இந்த உர்ராங்குட்டான் எதுக்கு என் மனசில வந்துட்டு போகுது?” என்று எண்ணம் தோன்ற தலையை உலுக்கி தன் நினைவுகளை நேராக்கிக் கொண்டாள்.
கல்லூரி தொடங்கப்பட்டிருந்த இந்த ஒரு மாதத்தில் அவர்கள் இருவரும் சுஜினியின் கண்களிலேயே படவில்லை. கல்லூரி வளாகம் சிறிய ஊரின் அளவில் இருந்ததால் சொல்லிவைத்துப் பார்த்துக் கொண்டாள் ஒழிய எதார்த்தமாக சந்திப்பது என்பது சாத்தியமில்லை. அதிலும் சுஜினி இரண்டு வாரமாக கல்லூரி இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த “சிம்பிளி ஏஸ்யா” என்ற ஆசிய உணவகம் ஒன்றில் பகுதி நேர ஊழியராக பணியாற்றத் துவங்கியிருந்ததால் சதீஷையோ விவேக்கையோ சந்திக்கும் தருணம் வாய்க்கவில்லை.
அதே ஒரு மாத காலத்தில், விவேக்கும் சதீஷும் தங்கள் பாடங்களில் கவனம் செலுத்திய போதும், விவேக்கின் மனம் அவ்வப்போது சுஜினியை நினைக்கத்தான் செய்தது.
கல்லூரி வளாகத்தில் தன்னிட்சையாக கண்கள் துளாவவே செய்தன. அதிலும் இந்தியப் பெண்கள் சாயலில் எவரேனும் தூரத்தில் சென்று கொண்டிருந்தாள் கூட அது சுஜினி தானோ என இதயத் துடிப்பு சட்டென எகிறியது நிஜம். தன் மனதின் எண்ணத்தை விவேக் எப்போதுமே சட்டென வெளிப்படுத்திவிட மாட்டான்.
“இப்படி வேடிக்கை பார்த்துட்டு மெதுவா நடந்தா நாளைக்கு தான் கிளாசுக்கு போவோம்.. வேகமா வாடா” என சதீஷ் எரிச்சல் படும் அளவிற்கு சில சமயங்களில் விவேக், சுஜினி எங்கேனும் தென்படுகிறாளா என தேடிக் கொண்டே அன்னநடை நடப்பான்.
அன்றைக்கும் அப்படித்தான், எதிர் சாரியில், ஒரு கடையின் முன்பு நின்றிருந்த பெண் சுஜினி போலவே இருந்தாள், வெளிநாட்டவர்களைப் போல் அதிக உயரம் இல்லாத இந்திய உயரம். ஒரு கணம் எங்கிருக்கிறோம் என மறந்தவன் போல் விவேக், சட்டென வீதியைக் கடந்து, வீதியில் வேகமாக வந்து கொண்டிருந்த கார்களை அலட்சியம் செய்து, அதற்காக காரின் ஓட்டுனரிடம் தகாத ஆங்கில வார்த்தையால் அர்ச்சனை வாங்கிக் கொண்டு எதிர் திசை செல்லும் முன் அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தாள்.
“டே…டே..” என சதீஷ் கத்தியதோ, *********என காரின் ஓட்டுனர் திட்டியதோ எதுவும் விவேக்கின் மூளையில் பதியவில்லை. பின்னாலேயே ஓடி வந்த சதீஷ், “டே..அறிவிருக்கா உனக்கு? ரோட்டை இப்படியா கிராஸ் பண்ணுவ? மகனே இது நம்ம ஊரு இல்ல.. இங்க கிராஸிங்ல மட்டும் யுஸ் பண்ணனும். ஃபைன் போட்ருவான்.””என இழுத்துக் கொண்டு நடந்தான்.
[the_ad id=”6605″]
“அப்படி என்ன அவசரம்…” என்ற சதீஷின் நியாமான கேள்விக்கு விவேக்கிடம் உடனே பதிலில்லை. “சுஜினி மாதிரியே இருந்துச்சு” என உண்மையைக் கூறவும் தயக்கமாக இருந்தது. இருக்காதா பின்னே, ஒரே ஒரு முறை பார்த்த பெண்ணிடம் மனதை தொலைத்துவிட்டேன் என சொல்ல விவேக்கின் மூளை இடம் கொடுக்கவில்லை. ஆனால் சதீஷின் கூர்மையான கண்களில் இருந்து இது தப்பவில்லை எனலாம்.
“அந்த பொண்ணுன்னு நினைச்சியா?” என தயங்காமல் சதீஷ் வினவ, விவேக் தலையை மட்டுமே ஆட்டினான். சிரிப்புடன் விவேக்கின் தோளில் இடித்த சதீஷ் அதற்கு மேல் தன் நண்பனை சங்கடப்படுத்தவில்லை.
விவேக்கிற்கு ஒரு பெண்ணைப் பிடிக்கிறது என்ற செய்தியே சதீஷிக்கு ஆச்சர்யமாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. கல்லூரி நாட்களில் விவேக்குடன் பேச விளைந்த பெண்களிடம் பெரிதாக எந்த அபிப்பிராயமும் விவேக் கொள்ளவில்லை. ஏன், சதீஹின் சித்தப்பா மகள், அருந்ததி கூட விவேக்கிடம் நெருங்கிப் பழக முயற்சித்தாள் என சதீஷ் அறிவான்.
அருந்ததியின் தொல்லை தாங்காமல், சதீஷ் ஒரு முறை அருந்ததி பற்றி விவேக்கிடம் பேச விளைந்தான். “டே, அருந்ததி பத்தி.” என சதீஷ் துவங்கும் முன்னரே, “டே, மச்சி.. உனக்கு தங்கச்சின்னா அது எனக்கும் தங்கச்சி மாதிரி தான்.” என சிரிப்புடன் பன்ச் டயலாக் பேசினான் விவேக்.
சதீஷ் அப்போதும் விடாமல், “என் தங்கச்சி உனக்கும் தங்கச்சி, அப்போ என் லவ்வர்…” என சதீஷ் சிரிப்புடம் ஆரம்பிக்கும் முன்னரே அவன் வாயை இறுக்கமாக பொத்திய விவேக், “அடுத்து ஒரு வார்த்தை பேசினேன்னு வை, கடவாய் பல்லு வலிக்குதுன்னு அடிக்கடி சொல்லறேல்ல, டெண்டிஸ்டுகிட்ட போகாமயே உன் பல்லை பிடிங்கி கைல குடுத்துருவேன்..” என்றான் விவேக் கொஞ்சமும் சிரிப்பு மாறாமல்.
“என்னை உன் அப்பா அம்மா நல்லவன்னு நம்பறாங்க சதீஷ். தன்னோட பையன் மாதிரி கவனிச்சுகறாங்க.. அந்த நம்பிக்கையை உடைக்கற மாதிரி எந்த விஷயமும் நான் செய்யமாட்டேன். அருந்ததி ஏதோ சின்ன பொண்ணு… சும்மா உளருது. அதைப் போய் சீரியஸா என்கிட்ட சொல்ல வந்துட்ட… கொஞ்சமாச்சும் அண்ணன் மாதிரி நடந்துக்கோடா..” என்று சதீஷின் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டவன் விவேக்.
அதே போன்று தன் காதலி சபாஷினியின் தோழி கவிதாவின் காதலையும் இதே போன்று நாசூக்காக மறுத்துவிட்டான். “அருந்ததிய தங்கச்சி செண்டிமெண்ட் சொல்லி வேணாம்னுட்ட. இப்போ கவிதாக்கு என்னடா சொல்லப் போற…” என வினவிய சதீஷிற்கு பதில் சொல்ல விவேக் கடமைப்பட்டிருந்தான்.
“இப்போ என்ன கதை சொல்லப் போற விவேக்?”
“டே… எனக்கு அப்படிலாம் எந்த லவ்வும் வரலைடா.. விட்ருடா என்னை..” என விவேக் எவ்வளவோ தடுத்தும் சதீஷ் மசியவில்லை. சுபாஷினியுடன் தான் செல்லும் இடங்களுக்கு வலுக்கட்டாயமாக விவேக்கையும் கவிதாவையும் கூட்டிச் சென்றான்.
“டே, கவிதா சுபாவோட ஃப்ரெண்ட், நீ என்னோட ஃப்ரெண்ட்.. சூப்பரா இருக்கும் மச்சி…” என சதீஷ் சாதிக்க, அடுத்துச் சென்ற சில இடங்களுக்கு கவிதாவிடம் சில நேரம் தனிமையாக விவேக் செலவிட, கொஞ்ச நாட்களிலேயே விவேக் என்றாலே காத தூரம் ஓடிவிடும் அளவிற்கு கவிதா நடந்து கொண்டாள்.
“டே என்னடா பண்ணிவச்ச அந்தப் பொண்ணை, விவேக்குன்னு உன் பேரை எடுத்தாலே பயந்தடிச்சு ஓடிப்போறா..” என சதீஷ் வினவ, “அதெல்லாம் ஒண்ணும் பண்ணலை… ஜஸ்ட் சும்மா பேசினேன்…”
“பேசினதுக்கே இப்படியா? அப்படி என்ன பேசினீங்க சார்.”
“வேற என்ன? என் அம்மா எப்படி கஷ்டப்பட்டு வளர்த்தியிருக்காங்க.. என்னோட தம்பி தங்கச்சிங்களோட பொறுப்பு, என்ன எதுக்கும் இருக்கட்டுமேன்னு நீ தான் கவி இனிமே என்னை, என் வீட்டை, என் அம்மா, சித்தி, மூனு தங்கச்சி ஒரு தம்பின்னு எல்லார்த்தையும் சேர்த்துப் பார்த்துக்கணும்னு பிட் போட்டேன்..” என்றான் விவேக் சிரிப்புடன்.
“அடப்பாவி சண்டாளா? இப்படியெல்லாம் பேசினா அந்தப் பொண்ணு எப்படிடா லவ் பண்ணும்?”
“கரெக்ட்… அதனால தான சொன்னேன். டே சதீஷ், எனக்கு இந்த லவ்லாம் இண்டிரெஸ்ட் இல்ல, இப்போதைக்கு நான் நல்லா படிக்கணும், சம்பாரிக்கனும், அவளோ தான் என் மைண்ட்ல இருக்கு.. சோ, நீ எனக்கு செட் சேர்த்தி வைக்கற வேலையை விட்டுட்டு உன் லவ்வை மட்டும் நல்லபடியா பார்த்துக்க சரியா.. அப்படியே எனக்கு எதாவது பொண்ணை பிடிச்சிருந்தா உங்கிட்ட சொல்லறேன்.. அப்போ எனக்கு ஹெல்ப் பண்ணி சேர்த்திவை.. அதுவரைக்கும் ஆளை விடு” என சொன்னபடி தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றே வலம் வந்த தன் நண்பன், இன்று இந்தப் பெண்ணிற்காக அலைவது கண்டு சதீஷீற்கு சிரிப்பாகவே இருந்தது.
“அப்படி என்ன இந்த சுஜி ஸ்பெஷல்…”என்ற கேள்வியும் உடன் எழாமல் இல்லை சதீஷிற்கு. விவேக்கிற்கு மிகவும் பிடித்துப் போன இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன மாயம் இருக்கிறது என சதீஷ் அப்போதைக்கு நினைக்கவும் இல்லை.