ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 10
அத்தியாயம் – 10
மிருதுளா அமைதியாக இருப்பதைப் பார்த்த ரன்வீர், அவளது முகத்தையே உற்றுப் பார்த்தபடி, “என்ன மிருதுளா… என்னைப் பத்தி வேற ஏதாவது தெரிஞ்சுக்கணுமா?” என்று வினவிட, சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்… “பேமிலி பேக்ரவுண்ட் மட்டுமே வச்சு உன்னோட கேரக்டரை கணிச்சிட முடியாதே ரன்வீர்,” என்று மிக நிதானமாகச் சொன்னாள்.
”கரெக்ட்… பாயிண்ட் இருக்கு! அப்போ நாம பழகிப் பார்க்கலாம்,” என்று அவன் மிகச் சாதாரணமாகச் சொல்லவும், மிருதுளாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது…
Advertisement
”என்னது?!” என்று அவனைத் தீயாக முறைக்க, ரன்வீர் அவளது முறைப்பைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “தப்பா நினைக்காதே! பிரண்ட்ஸா பழகலாம்னு சொல்ல வந்தேன், ஒருத்தரைக் கவனிச்சுப் புரிஞ்சுக்க நட்புதான் சரியான வழி,” என்று சொல்ல, அவளோ… “என்னால முடியாது!” என்று அதற்கும் முகத்தில் அடித்தாற்போலச் சொன்னாள், அவளது பிடிவாதம் அவனுக்கு நன்கு புரிந்தது.
”ஹேய்… பிரண்டா பழகுறதுல உனக்கென்ன கஷ்டம் மிருதுளா? ஒரு சான்ஸ் கொடு, கொஞ்ச நாள் பழகிப் பார்ப்போம், அதுக்கப்புறமும் உனக்கு என்னைப் பிடிக்கலன்னா, சத்தியமா நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று அவன் ஒரு டீல் பேசுவது போலச் சொன்னான், அவனது அந்த காந்த கண்களில் இப்போது ஒரு நேர்மையும் நம்பிக்கையும் தெரிந்தது…
மிருதுளா மௌனமாக யோசிக்கத் தொடங்கிட, அதனை கண்டவன்.. “என்ன மிருதுளா… அவ்வளவு பெரிய யோசனை? ஒரு பிரண்ட்ஷிப்க்கு ஓகே சொல்றதுக்கே இவ்வளவு யோசிக்கிறியா?” என்று வினவ,
அவள் மெல்ல அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு,.. “சரி… ஆனா ஒரு கண்டிஷன், இனிமே இப்படித் திருடன் மாதிரி ஜன்னல் வழியா வர்ற வேலையை வச்சுக்கக் கூடாது,” என்று கறாராகச் சொல்ல,
அவனது முகத்தில் ஒரு கள்ளச்சிரிப்பு அரும்பியது.
Advertisement
“பின்ன எப்படி வர்றது? வாசல் வழியாவா? ஆனா உங்க தாத்தா இருக்கும்போது நான் எப்படி உள்ள வர்றது? ” என்று அவன் வினவிட,
மிருதுளா ஒரு நிமிடம் யோசித்தாள், தாத்தாவிடம் இவனைப் பற்றிச் சொல்வது இப்போதைக்குச் சாத்தியமே இல்லை என்பதை அறிந்தவள்.. “நீ வர வேண்டாம்… நான் வர்றேன்,” என்றாள் சட்டென்று…
Advertisement
அவனது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. “திருடன் மாதிரியா? என் வீட்டுக்கா?!” என்று அவன் அதிர்ச்சியோடு கேட்க, மிருதுளாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது..
”உனக்கு ரொம்பத் தான் குசும்பு ரன்வீர்!” என்று அவனை முறைத்தவள், “நான் அப்படி சொல்லல, நாம வெளியே எங்கேயாவது மீட் பண்ணலாம்… ஒரு பிரண்ட்ஸா,” என்று தெளிவுபடுத்திட, ரன்வீர் அவளது அந்தப் பிடிவாதத்தையும், அதே சமயம் தனக்காக இறங்கி வந்த அந்த மனதையும் ரசித்தான்.
அவனது அந்த லேசர் விழிகள் இப்போது மென்மையாக மின்னிட.. “ஓகே மை டியர் பிரண்ட்… எனக்கு சம்மதம்! நீ சொல்ற இடத்துக்கே நான் வர்றேன், ஆனா ஒரு விஷயம்… அந்த மீட்டிங்ல நான் ரன்வீரா இருப்பேனா இல்ல உன் திருடனா இருப்பேனான்னு அங்க வந்துதான் முடிவு பண்ணுவேன்,” என்று கண்ணடித்து கூறிட,
”மறுபடியும் ஆரம்பிக்காத!” என்று அவள் அதட்ட, அவன் இரு கைகளையும் உயர்த்திச் சரணடைவது போலப் பாவனை செய்தான்…
Advertisement
”சரி… நாளைக்கு எங்கே மீட் பண்ணலாம்” அவன் ஆர்வமாக வினவ, யோசித்து பார்த்தவளுக்கு எந்த இடமும் பிடிபடவில்லை, எனவே “நீயே சொல்லு” என்று கூறிட, அவனோ,.. “ஈவ்னிங் 5 மணிக்கு பீச் சைடுல இருக்கிற அந்தப் பழைய கஃபே ஓகேவா? அங்கே கூட்டம் கம்மியா இருக்கும்,” என்று ரன்வீர் ஒரு இடத்தைச் சொல்ல, மிருதுளா மெல்லத் தலையசைத்தாள்…
“சரி இப்போ நான் கிளம்புறேன்” என்றவன் மெல்ல எழுந்து பால்கனியை நோக்கி நடந்தான். போவதற்கு முன்னால் ஒருமுறை திரும்பி அவளைப் பார்த்தவன்.. “நாளைக்கு நீ வர்ற வரைக்கும் எனக்குத் தூக்கமே வராது மிருதுளா. சீக்கிரம் வந்துடு,” என்று சொல்லிவிட்டு, இருளுக்குள் ஒரு மின்னலைப் போல மறைந்து விட,
மிருதுளா பால்கனி வழியாக அவன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனதிற்க்குள் ஒரு பக்கம் பயம் இருந்தாலும், மறுபக்கம் ஒரு புதிய இனிய உணர்வு அவளை ஆட்கொள்ளத் தொடங்கியது, ஒரு பிஸ்னஸ் மேக்னட்டுடன் ரகசியமாகத் தோழமை கொள்வது அவளது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது…
அன்றைய இரவு ஏனோ அவளுக்கு மிக நிம்மதியாக இருந்தது, ரன்வீரின் அந்த அதிரடிப் பேச்சும், அவன் காட்டிய உரிமையும் அவளுக்குள் இருந்த ஒருவிதமான இறுக்கத்தைத் தளர்த்தியிருந்தது.
‘நாளைக்கு அவனைப் பார்க்கப் போறோம்’ என்கிற அந்த ஒரு சிறு எண்ணமே அவளது உறக்கத்தை இனிமையாக்கியது…
அடுத்த நாள் பொழுது எப்போதும் போலத்தான் விடிந்தது. ஆனால், மிருதுளாவின் மனதிற்க்குள் மட்டும் ஒரு மெல்லிய பரபரப்பு ஓடிக்கொண்டிருந்தது, நேரம் நகர நகர, அவளது இதயம் ஒரு தாளத்தைப் போல் அடித்துக் கொண்டிருந்தது…
அவன் சொன்ன நேரத்திற்கெல்லாம் கிளம்ப தயாராகத் தொடங்கிவிட்டாள், ஒரு பெரிய தொழிலதிபரை சந்திக்கப் போகிறோம் என்பதற்காக அவள் ஆடம்பரமாக எதையும் செய்யவில்லை, மிகவும் எளிமையான, அதே சமயம் அவளது மேனிக்கு எடுப்பான ஒரு சல்வாரைத் தேர்ந்தெடுத்து அணிந்தாள்…
அவள் செய்திருந்த அந்தச் சிம்பிளான அலங்காரத்திலும், தேவதையாய் மின்னினாள், அவளது முகத்தில் தெரிந்த அந்தத் தெளிவும், கண்களில் இருந்த அந்த எதிர்பார்ப்பும் அவளது அழகை இன்னும் மெருகூட்டிக் காட்டின,
மிருதுளா அவ்வப்போது வெளியே செல்வது இயல்பானது என்பதால், தாத்தா வீரமாணிக்கமும் அவளைத் தடுத்து எதையும் கேட்கவில்லை. “பார்த்துப் போயிட்டு வாம்மா…” என்று அவர் சொன்னபோது, ஒரு கணம் அவளுக்குள் குற்ற உணர்வு எட்டிப் பார்த்தது, தாத்தாவிற்குத் தெரியாமல் ரன்வீரைச் சந்திக்கப் போவது சரியா? ஆனால், ‘நாங்கள் வெறும் நண்பர்களாகதானே பழகப் போகிறோம்’ என்று தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக்கொண்டாள்…
மிருதுளா எப்போதும் தன் சுயாதிபத்யத்தை விட்டுக் கொடுக்காதவள், இன்றும் அவள் வேறு யாரையும் எதிர்பார்க்காமல், தானே காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள், அந்த சிம்பிளான சல்வாரில், காரின் ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த அவளது கைகளில் ஒரு தனி கம்பீரம் தெரிந்தது…
ரன்வீர் சொன்ன அந்த பீச் சைடு கஃபே-வை நோக்கி வண்டி நகரத் தொடங்கிட, ஏனோ அவளது கைகள் லேசாக நடுங்கின…
சாலைகளில் லாவகமாக காரைச் செலுத்தினாலும் அவளது மனம் ரன்வீரை நோக்கியே ஓடியது. ‘இத்தனை நாட்கள் பால்கனி வழியாக குதித்தவன், இன்று ஒரு நாகரீகமான இடத்தில் எப்படி நடந்து கொள்வான்?’ என்கிற கேள்வி அவளுக்குள் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்தது…
கஃபே-வின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இறங்கியவள், தன் கூந்தலை ஒருமுறை சரிசெய்து கொண்டாள், கடல் காற்று அவளது முகத்தைத் தழுவிச் செல்ல, மெல்ல கஃபே-வுக்குள் நுழைந்தாள்…
அங்கே, ஒரு மூலையில் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ரன்வீர், கார் வந்து நின்ற சத்தத்திலேயே அவள் வந்திருப்பதை உணர்ந்து கொண்டான், அவன் மெல்லத் திரும்பி அவளைப் பார்த்தபோது, அவனது அந்த லேசர் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன…
”வாவ்! நீயே கார் டிரைவ் பண்ணிட்டு வருவேன்னு நான் எதிர்பார்க்கல மிருதுளா. செல்ஃப் டிபெண்டன்ட் பொண்ணுங்கன்னா எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு,” என்று அவன் எழுந்து நின்று அவளை வரவேற்க,
மிருதுளா அவனது பாராட்டை ஒரு மெல்லிய தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டு, அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“என் அப்பா அம்மா போனதுக்கு அப்புறம் எனக்கு யாரையும் சார்ந்து இருக்கிறது பிடிக்கல ரன்வீர், அது கார் ஓட்டுறதா இருந்தாலும் சரி, வாழ்க்கையா இருந்தாலும் சரி,” என்று அவள் அழுத்தமாக சொல்ல,
அவளது அந்தத் தெளிவான பேச்சைக் கேட்டு வியந்தவன்… “நல்ல கொள்கை! சரி… இப்போ சொல்லு, உனக்கு என்ன குடிக்கப் பிடிக்கும்? இங்கே கோல்ட் காபி ரொம்ப ஃபேமஸ்,” என்று அவன் உபசரிக்கத் தொடங்கினான்…
அவர்கள் பேசத் தொடங்கிய அந்தச் சில நிமிடங்களிலேயே, ரன்வீர் ஒரு தொழிலதிபன் என்பதையும் தாண்டி, மிகவும் கனிவானவன் என்பதை மிருதுளா உணரத் தொடங்கினாள்.
அவனது பேச்சில் இருந்த தெளிவும், பிறர் கருத்துக்கு அவன் கொடுத்த மதிப்பும் அவளை மெல்லக் கவரத் தொடங்கியது, அந்த நேரத்தில் அவளது கைப்பேசி அடிக்கடி சிணுங்கிக் கொண்டே இருந்தது, ஒவ்வொரு முறையும் திரையில் மின்னிய அந்தப் பெயரைப் பார்த்துவிட்டு, முகத்தைச் சுளித்தபடி அவள் அழைப்பைத் துண்டித்துக் கொண்டே இருக்க,
இதை நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருந்த ரன்வீரின் லேசர் கண்களுக்கு அது தப்பவில்லை.
“ரொம்ப நேரமா கால் வந்துட்டே இருக்கே மிருதுளா, பரவாயில்லை, எடுத்துப் பேசு. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப் போகுது,” அவன் அக்கறையுடன் சொல்ல,.. ”இல்ல… இது தேவையில்லாத கால், அதை விடுங்க,” என்றாள், இத்தனை நாட்களாக அவனை ‘வா, போ’ என்று ஒருமையில் பேசிக்கொண்டிருந்தவள், இப்போது அவள் அறியாமலேயே ‘நீங்க’ என்று மரியாதையோடு பேசத் தொடங்கியிருந்தாள், அந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது என்று அவளுக்கே புரியவில்லை, ஒருவேளை அவனது நிதானமான பண்பு அவளை அப்படி மாற்றியிருக்கலாம்.
அவளது அந்த மாற்றத்தை உடனே கவனித்துவிட்ட ரன்வீர். ஒரு சிறு புன்னகையுடன், “நீ ‘வா, போ’ன்னே பேசலாம் மிருதுளா, எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு” என்று சொல்ல,.. மிருதுளா மெல்லத் தலையசைத்து, “இல்ல… எனக்கு ரெஸ்பெக்ட் கொடுத்துப் பேசிதான் பழக்கம், நீங்க என்னை விட வயசுல பெரியவர் இல்லையா, அதான்? ஆனா… எனக்குக் கோபம் வந்தா மட்டும் எப்படி வேணும்னாலும் மாறலாம், பாத்துக்கோங்க!” என்று சொல்லிவிட்டு அவள் லேசாகப் புன்னகைக்க, அவளது அந்த மெல்லிய புன்னகையைக் கண்ட ரன்வீர், ஒரு கணம் அப்படியே மெய்மறந்து போனான். அந்தச் சிரிப்பில் இருந்த நிதானமும், ஒருவிதமான முதிர்ச்சியும் அவளை இன்னும் ஆழமாக ரசிக்க வைத்தது…
”உன் சிரிப்பு… நிஜமாவே ரொம்ப அழகா இருக்கு மிருதுளா, நேத்து அந்தத் திருடன் வேஷத்துல உன்னைப் பார்த்தப்போ இருந்த மிரட்சிய விட, இப்போ இந்தச் சிரிப்போட உன்னைப் பார்க்கிறதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு,” என்று அவன் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல, மிருதுளா சட்டென்று வெட்கப்பட்டுத் தலை குனிந்தாள்.
பின் சூழலைச் சுதாரித்துக் கொண்டவளாய், “ரொம்பப் புகழாதீங்க… அப்புறம் எனக்குத் தலைக்கனம் வந்துடப் போகுது,” என்று கிண்டலாகச் சொல்லிப் பேச்சை மாற்றிட, அதன் பிறகு
இருவருக்கும் இடையே ஒரு அழகான நட்பு மலரத் தொடங்கியது, விஷ்வாவின் இடைவிடாத அழைப்புகள் ஒருபுறம் அவளை எரிச்சலூட்டினாலும், ரன்வீரின் முன்னிலையில் அவள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
அந்த மாலை நேரத்துக் கடல் காற்றும், சுடசுட காபியும், ரன்வீரின் சுவாரஸ்யமான பேச்சுக்களும் அவளுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டின, ரன்வீர் தனது பிசினஸ் பயணங்கள், சிறுவயது குறும்புகள் என ஒவ்வொன்றாகச் சொல்ல, மிருதுளா அதைக் கேட்டு அவ்வப்போது கலகலவெனச் சிரித்தாள். “நீங்க இவ்வளவு ஜாலியான டைப்னு நான் நினைக்கவே இல்ல, ஒரு பெரிய கம்பெனி சி.இ.ஓனா எப்போதுமே முறைச்சுக்கிட்டு, ஃபைல்ஸை பார்த்துக்கிட்டு இருப்பாங்கன்னு நினைச்சேன்,” என்றாள்…
”நானும் அப்படித் தான் இருந்தேன் மிருதுளா உன்னைப் பார்க்கிற வரைக்கும்! இப்போ எனக்கே என்னைப் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு,” என்று அவன் சொல்ல, மீண்டும் ஒரு மெல்லிய மௌனம் அவர்கள் இருவருக்கும் இடையே நிலவியது, அந்த மௌனம் சங்கடமாக இல்லை, மாறாக ஒரு புரிதலின் தொடக்கமாக இருந்தது.
வெளியே சூரியன் மெல்லக் கடலுக்குள் மறையத் தொடங்க, வானம் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்தது. “நேரம் போறதே தெரியல ரன்வீர்… நான் கிளம்பணும். தாத்தா தேடுவார்,” என்று சொல்லிவிட்டு அவள் எழுந்துகொள்ள, ரன்வீரும் அவளுடன் எழுந்து கஃபேவின் பார்க்கிங் ஏரியா வரை வந்தவன், அவள் தனது காரின் கதவைத் திறக்கப் போன கணம் அவன் மெல்ல அவளது கையை பற்றி தடுத்து நிறுத்தினான்…
