Skip to content
Post Views: 55
“ஸ்ருதி…ஸ்ருதி…” என மகளை காணாமல் கோவில் முழுவதும் துழவிக்கொண்டே வந்தாள் தேவி.
அவளின் முழுப்பெயர் கோப்பெருந்தேவி.
Advertisement
வரலாற்றில் சிறப்புமிக்க அரசியார் ஒருவரின் பெயர் தான் அவளுடையது.
ஆனால் அதற்கு சிறிதும் பொருத்தமில்லாத மங்கை அவள்.
Advertisement
Advertisement
ஏனெனில்,துணிச்சல் என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய ரகம் தான் கோப்பெருந்தேவி…அப்படியொரு பயந்த சுபாவம் உடையவள்.
தனக்கு மிகவும் நெருக்கமானவர்களை தவிர ஏனையோரிடம் பேசவே தயங்குவாள்.
Advertisement
அடக்கம்,பணிவு என அனைத்தையும் முதன்மையாக கொண்டவள் அவள்.
அவளிற்கு வயது இருப்பத்தி மூன்று.அவளை ‘பேரழகி’ என்றெல்லாம் கூற முடியாது.
அதேசமயம் அவளின் மென்மை பொருந்திய தூய அழகை தவிர்க்க முடியாது.
பாலும் சந்தனமும் குழைந்தெடுத்த ஒரு நிறம்,மை தீட்டினால் மற்றவரை வசீகரிக்கக்கூடிய கயல் விழிகள்,வில்லாய் வளைந்த புருவங்கள்,கூரான நாசி,உதட்டுச் சாயம் பூசப்படாமலே சிவந்து காணப்படும் செர்ரி உதடுகள்.
இடை வரை நீண்டிருந்த கருங்கூந்தலின் நடுவில் கிளிப் பொருத்தி மயில் தொகையென முடியை விரித்து விட்டிருந்தாள்.
நெற்றியில் ஒரு சிறிய கருப்பு நிற பொட்டும் திருநீறு கீற்றும் மட்டுமே அவளை அலங்கரித்திருந்தது.
அவள் வெளிர் ஊதா நிற பட்டு கரை வைத்த புடவை அணிந்திருந்தாள்.
கோவில் முழுவதும் சுற்றி திரிந்ததாலும் பயத்தினாலும் அவளின் முகம் வெளிறி முத்து முத்தாய் வியர்வை அரும்புகள் பூத்திருந்தது.
அவையும் கூட அவளின் அழகிய முகத்தை அலங்கரிக்கவே செய்தன.
மொத்தத்தில்,கோப்பெருந்தேவி ஒரு வடிவான தோற்றம் கொண்ட நடுத்தர குடும்பத்து மங்கையவள்.
அவள் பதட்டத்துடன் ஓடி வந்து ஒரு வழியாக தன் மகளை கண்டறிந்துவிட்டாள்.
“ஸ்ருதி” என ஆசுவாசமாக முணுமுணுத்தவளின் விழிகள் மகளருகில் நின்றிருந்த ஆறடி உயர ஆண்மகனை பார்த்து விரிந்தன.
அவனை அவ்விடத்தில் எதிர்பாராமல் கண்டதும் அவளின் நெஞ்சம் படபடத்தது.
அவனை நெருங்கவே அவளிற்கு அச்சமாக இருந்தாலும்,தன்னுடைய மகளிற்காக வேகமாக அவர்களை நோக்கி நடந்தாள்.
அதேநேரம் ஸ்ருதியோ அவனது கரத்தை உரிமையாய் பற்றி “அங்கிள் என்னை அந்த யானை மேலே ஏத்தி விடதீங்களா?” என கொஞ்சலாக கேட்டுக்கொண்டிருந்தாள்.
குழந்தையின் பிஞ்சுக்கரத்தையும் அவளது எதிர்பார்ப்பு நிறைந்த கண்களையும் பார்த்த சேரனின் அகம் அப்படியே உருகிப்போனது.
ஏனோ அந்த சிறு குழந்தையின் ஸ்பரிசம் அந்த முரட்டு ஆடவனை சிலிர்க்க வைத்தது.
இதுவரை அவனுள் தோன்றிராத ஒரு உணர்வு அவனிற்குள்!
அவன் இதழிலும் கூட மென்புன்னகை ஒன்று உதியமானது.
சேரன் மெதுவாக நிமிர்ந்து தனது தும்பிக்கையை ஆட்டிக்கொண்டிருந்த யானையை ஒரு பார்வை பார்த்துவிட்டு குழந்தையின் புறம் திரும்பியவன் “பேபிகேர்ள் நீ சொன்ன மாதிரி தாராளமா யானை மேலே உன்னை ஏத்திவிடறேன்…அதுக்கு முன்னாடி உங்க அம்மா எங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்” என குழந்தையிடம் நயமாக பேசி விவரம் சேகரிக்க முனைந்தான்.
அவள் தனது அன்னையைப் பற்றி பேசுவதற்குள் தேவியே “அம்மு” என பதற்றத்துடன் அழைத்தப்படி கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன் வந்தாள்.
அந்த குரல் கேட்டதும் குழந்தையின் விழிகள் விரிந்திட “ஐய்யோ போச்சு அங்கிள்” என வாயில் கைவைக்க,
அவனிற்கோ அந்த சிறாரின் செயல்கள் ஒவ்வொன்றும் சுவாரசியத்தையே வரவழைத்தது.
அதனால் “என்ன?” என ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்க,
குழந்தையோ “அம்மா வந்துத்தாங்க…என்னை அதிக்க போறாங்க அங்கிள்…போச்சு” என அவனின் காதருகே பயத்தில் கிசுகிசுத்து அவன் கரத்தை இறுகப்பற்றியது.
சேரனோ ‘அவ்வளவு கொடூரமானவங்களா உன் அம்மா?’ என நெற்றி சுருங்க சிந்தித்தப்படியே தலையுயர்த்தி அவளை பார்த்தான்.
அதற்குள் “அம்மு” என கூட்டத்தினர் அனைவரையும் விலக்கிக்கொண்டு அவர்களருகே மூச்சிறைக்க ஓடி வந்திருந்தாள் தேவி.
வேகமாக ஓடி வந்து தன் முன்னால் வந்து நின்றவளைப் பார்த்தவாறே சேரன் செங்குட்டுவன் எழுந்து நின்றான்.
ஸ்ருதி அவன் கரத்தை இறுகப்பற்றி இருந்ததால் அவளையும் தன்னுடன் தூக்கிக்கொண்டான்.
அதுவரை குழந்தை என்றாலும் பெண் குழந்தை என்பதால் அதன் மேல் தன் நுனி விரல் கூட படாமல் பேசிக்கொண்டிருந்த சேரன்,மதலை அவளே வந்து சரணடையும் போது அவனால் விலக்கி தள்ள முடியுமா என்ன?
அதனால் கோப்பெருந்தேவியை தலை முதல் பாதம் வரை கூர்மையாக அளவிட்ட சேரன் “இது உங்க பொண்ணா?” என அழுத்தமாக வினவினான்.
அவளும் பயத்துடனே “ஆமாம்” என வேகமாக தலையாட்டி “அம்மு” என மகளை நோக்கி கை நீட்டினாள்.
ஒரு அந்நிய ஆண்மகனுடன் மகள் இவ்வாறு ஒட்டிக்கொண்டிருப்பது அவளிற்கு அறவே பிடிக்கவில்லை.
அது அவளின் முகத்தில் பட்டவர்த்தனமாக தெரிந்தது.
உடனே அவனின் இமைகள் இரண்டும் கோபத்தில் இடுங்கின.
குழந்தையின் முன்பு எதையும் காட்டிக்கொள்ள விரும்பாத சேரன் “ஒரு நிமிஷம் குழந்தை யானை மேலே உட்கார ஆசைப்பட்டாள்…உட்கார வைச்சிட்டு வர்றேன் இருங்க” என்று தனக்கே உரிய அதிகாரத் தொனியில் சொல்லிக்கொண்டே அவளிடம் அனுமதி பெறாமல் குழந்தையை தூக்கிச் சென்றான்.
அவளோ ‘அது என் குழந்தை…நான் உட்கார வைச்சுக்கிறேன்…கொடுங்க’ என கோபமாய் கேட்டுவிட தான் தவித்தாள்.
ஆனால் அவளால் அவனிடம் எதுவும் பேச முடியவில்லை.
அவனை கண்டதும் அவளின் வாய் அடைத்துப்போனது.
ஏனெனில்,அவனிற்கு தான் அவளை யாரென்று தெரியாது.
ஆனால் அவளிற்கோ அவனை நன்றாகவே தெரியும்.
‘கிங் ஆஃப் டிவோர்ஸ்’ என்று பெயர் கூறினால் குடும்ப நல நீதிமன்றத்தில் தெரியாதவர் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
அதற்கு அவள் மட்டும் விதி விலக்கல்ல.
அவளின் கொள்கையே ஒரு நாளும் அவனருகே அவள் சென்று விடவே கூடாது என்பது தான்!
அவ்வாறு இருக்கையில் அவன் முன்பு சென்று நிற்க வேண்டிய தன் அவலத்தை எண்ணி அவள் தவிக்க,ஸ்ருதியோ “அம்மா ஒரே ஒரு ரவுண்டு மட்தும் யானை மேலே போயித்து வந்தறேன்…பிளீஸ்” என கண்கள் சுருக்கி அன்னையிடம் அனுமதி வேண்டி நின்றாள்.
அவன் அனுமதி கேட்கவில்லை என்றாலும் மகவு அவளிடம் அனுமதி கேட்டதும் வேறுவழியின்றி “சரி அம்மு” என ஒரு பெருமூச்சுடன் தலையசைத்தாள்.
அவனின் கைகளில் பாந்தமாய் இருந்த ஸ்ருதியோ “ஹை யானை மேலே பாப்பா உட்கார போறேன்” என ஆர்ப்பரித்து துள்ளிக்குதிக்க,சேரனின் இறுகிய முகத்தில் சட்டென ஒரு மென்மை!
அவனது இதழ்கள் இலேசாக விரிந்திட,அவளை தூக்கிச் சென்று யானையின் மீது ஏற்றிவிட்டான்.
யானையின் பாகனிடம் “குழந்தை பத்திரம்” என்று கடுமையாக எச்சரிக்க,
அவனது தோரணையும் கம்பீரமும் அவனை மிரட்ட “சார் பயப்படாதீங்க…உங்க குழந்தைய பத்திரமா பார்த்துக்கறேன்” என பவ்யமாக கூறி தானும் உடன் ஏறிக்கொண்டான்.
அதில் ஏறி அமர்ந்ததும் “பாப்பா அப்பாக்கும் அம்மாவுக்கும் ஹை சொல்லு” என்று அந்த பாகன் சொன்னதும்,
குழந்தையோ இருந்த மகிழ்ச்சியில் எதையும் கவனிக்காமல் “ஹே…ஐய் ஜாலி அம்மா அப்பா டாடா” என இருவரையும் கண்டு கையசைத்திருந்தது.
அவளது ‘அப்பா’ என்ற விளிப்பில் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டனர்.
அவளின் அந்த அழைப்பில் ஆடவனது உள்ளம் அதிர்ச்சியில் சிலிர்த்திட,தேவியோ ‘என்ன யாரையோ போய் அப்பானு சொல்லறாள்?’ என மிரட்சியில் அதிர்ந்தாள்.
உடனே அவனை அதிர்ச்சியுடன் அவள் திரும்பி ஏறிட,அவனது பார்வை மொத்தமும் குழந்தையின் மீது மட்டுமே இருந்தது.
குழந்தையை வருடும் விழிகளில் அப்படியொரு கனிவு!
அதைக்கண்டு இன்னும் அதிர்ந்துப்போனாள் தேவி.
‘என்ன நடக்குது இங்கே?’ என ஒன்றும் புரியாமல் அவள் குழப்பமாக நிற்கும் போதே அவளருகே “ம்க்கும்” என தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டது.
அதில் திடுக்கிட்டு தன்னிசையாய் ஒரு அடி விலகி நின்று அவனை ஏறிட்டவளை உறுத்து விழித்தான் சேரன்.
அவளோ மிரட்சியுடன் கைகளை பிசைந்தப்படி அவனை காண “இப்படி தான் குழந்தைய அசால்ட்டா விடுவீங்களா நீங்க?குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்னாகியிருக்கும்?கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை உங்களுக்கு” என எடுத்த எடுப்பிலே அவளை சரமாரியாக அவன் திட்ட,அவளோ எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டாள்.
அவளிற்கு சட்டென எதுவும் பேச வரவில்லை.
அதைக்கண்டு கடுப்பானவன் “என்ன இப்பவும் வாயே திறக்கமாட்டிக்கிறீங்க?உங்களை தான் கேள்விக்கேட்கறேன்…பதில் சொல்லுங்க” என அதட்ட,அதற்கே அவளின் மேனியில் நடுக்கம் விரவி ஓடியது.
அதனை அவளின் இலேசான உடல் அசைவிலே உணர்ந்த சேரன் “ப்ச்” என சலிப்பாக இதழை குவித்து ஊதிக்கொண்டான்.
பின்பு தன் குரலை தாழ்த்தி “நாட்டுலே நடக்கிற நியூஸ் எல்லாம் பார்க்கிறீர்களா இல்லையா?ஒரு மாசம் குழந்தையிலிருந்து எண்பது வயசு கிழவி வரை ஒருத்தரையும் விட்டு வைக்கிறது இல்லை…இந்த மாதிரி நிலைமையிலே குழந்தைய தனியா விட்டிருக்கீங்க…என் கையிலே கிடைச்சதாலே தப்பிச்சிட்டாள்…இதுவே வேற யாரோ ஒருத்தரோட கையிலே சிக்கியிருந்தால் என்னாகறது?” என இழுத்து பிடித்த பொறுமையுடன் அவன் கேட்க,
அவன் பேசியதை கேட்டதும் அவளின் முகம் அச்சத்தில் வெளுத்தது.
அதனால் “இல்லை…பாப்பாவுக்கு இன்னைக்கு பிறந்தநாளு…அதான் மத்தவங்களுக்கு பிரசாதம் தரலாம்னு ஏற்பாடு பண்ணிட்டு இருந்தேன்…ஒரே ஒரு நிமிஷம் நான் கண் அசைந்த நேரம் ஓடி வந்திட்டாள்” என அவள் மெல்லிய குரலில் விளக்கம் கொடுத்தாள்.
அவள் அவனது முகத்தை ஏறிட்டு பார்க்கவே இல்லை.
அவனது சட்டை காலரை பார்த்தப் படியே பேசிக்கொண்டிருந்தாள்.
‘ரொம்ப நல்லது’ என இதழுக்குள் சப்தம் வராமல் முணுமுணுத்தவன் “சரி இனி கவனமா பார்த்துக்கோங்க” என்றதோடு அவளிடம் பேச நாட்டமின்றி பேச்சை முடித்துக்கொண்டிருந்தான்.
அவனது தற்போதைய விருப்பமெல்லாம் ஸ்ருதியின் மேல் மட்டுமே?
‘அம்மா பிரசாதம் கொடுக்கிறாள் சரி…பேபியோட அப்பா என்ன பண்ணறான்?’ என உள்ளுக்குள் கேள்வி எழும்பினாலும் அதனை வாய் திறந்து கேட்கவில்லை.
அது அவனிற்கு தேவையுமில்லை.
அதனால் “ஹீரோ அங்கிள் ஹாய்” என கத்தி குதூகலித்த குழந்தையின் புறம் திரும்பி சிரித்த முகமாக அவனும் கையசைத்தான்.
தேவியோ சற்று முன்பு அத்துணை இறுக்கமாக தன்னிடம் பேசியவனா இவன் என ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.
அவனது முகத்தில் அப்படியொரு மென்மை!
ஸ்ருதியின் தகப்பன் கூட குழந்தையிடம் இத்தகைய கனிவை காட்டியது இல்லை.
அதைப்பற்றி எண்ணியவுடன் அவளின் முகம் அப்படியே வாடி வதங்கிப்போனது.
குழந்தை யானை சவாரி முடிந்து வந்திருக்க,அவனிற்கு முன்பாக குழந்தையைத் தூக்க தேவி ஓடிச்சென்றாள்.
யானையின் பாகன் குழந்தையை தூக்கி கீழே கொடுக்க அவளின் கைகளுக்கு குழந்தை எட்டவில்லை.
அதனால் “நகருங்க” என அவளை ஒரே வார்த்தையில் தள்ளி நிறுத்திவிட்டு ஸ்ருதியை தன் கைகளில் வாங்கிக்கொண்டான் சேரன்.
அந்த யானை பாகனிடம் சில ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அவன் முன்னால் நடக்க ‘அது என் குழந்தை’ என தேவி மீண்டும் உள்ளுக்குள் பொருமினாள்.
அவன் என்னவோ குழந்தைக்கு உரிமையுள்ளவன் போல் நடக்க,இவளோ வேறு வழியின்றி எதுவும் பேச முடியாமல் பின்னால் ஓடிச்சென்றாள்.
“பேபிகேர்ள் சவாரி எப்படி இருந்துச்சு?” என குழந்தையிடம் அவன் வினவ,
“சூப்பதா இருந்துச்சு அங்கிள்…” என கண்கள் விரிய தலையாட்டி அந்த நிகழ்வைப் பற்றி மகிழ்ச்சியுடன் சிறியவள் விவரிக்க,
அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் “சார் நாங்க போகணும்” என தேவி ஒரு வழியாய் குரலை வரவழைத்து சொல்லியிருந்தாள்.
அன்னையின் குரல் கேட்டதும் “அம்மா” என குழந்தை அவளிடம் தாவ முயற்சித்தது.
அவளோ ஒரு அந்நிய ஆடவனோடு உடன் நடக்க விரும்பாமல் இரண்டடி இடைவெளிவிட்டு பின்னால் வந்துக்கொண்டிருந்தாள்.
அன்னையிடம் குழந்தை தாவ முயற்சித்ததும் சேரன் தன் நடையை நிறுத்தி அவளை நோக்கி திரும்பினான்.
அவளோ இப்போது அவனை நேர்ப்பார்வையாக நோக்கி “நாங்க போகணும்…நேரமாச்சு” என்றாள் மெல்லியக்குரலில்.
அவளை ஒரு கணம் அழுத்தமாக நோக்கிய சேரன் பின்பு குழந்தையிடம் திரும்பி “உங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள்னு அம்மா சொன்னாங்க…பேபிக்கு என்ன பர்த்டே கிஃப்ட் வேணும்?” என அவன் கேட்க,
குழந்தை வாயை திறப்பதற்கு முன்பு “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” என அவசரமாக முன் வந்து சொன்னாள் அவளின் தாய்.
வெடுக்கென்று அவளின் புறம் திரும்பிய சேரன் ‘உன்னை நான் கேட்டனா?’ என்பது போல் அனல் பார்வை பார்க்க,அவள் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
‘அது’ என்பது போல் பார்த்தவன் ஸ்ருதியிடம் திரும்ப,அதற்குள் தேவியோ குழந்தையிடம் கண்ணால் ‘எதையும் வாங்கக்கூடாது’ என எச்சரித்திருந்தாள்.
அதையுணர்ந்த அந்த புத்திசாலி குழந்தையும் “பாப்பாவுக்கு எந்த கிப்த்தும் வேணாம் அங்கிள்…அம்மா எனக்கு கார் பொம்மை வாங்கி தர்றேன்னு சொல்லிருக்காங்க” என சந்தோஷமாய் சிரித்தப்படி சொன்னது.
அதனை ரசனையுடன் நோக்கியவன் “ஓகே பேபி கேர்ள்…மேனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே” என மீண்டும் ஒரு முறை குழந்தையிடம் வாழ்த்து தெரிவித்துவிட்டு தனது சட்டை பையிலிருந்து ஐந்நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.
குழந்தையோ சட்டென திரும்பி தனது அன்னையை ஏறிட,அவளோ மறுப்பாக தலையசைத்தாள்.
சேரனோ படீரென்று திரும்பி தேவியை ஏறிட,அவளோ மௌனமாக குழந்தையைப் பார்த்திருந்தாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவாறே ஸ்ருதியிடம் “அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க…வாங்கிக்கோ பேபி கேர்ள்” என குழந்தையின் கையில் வலுக்கட்டாயமாக பணத்தை திணித்தவன்,அதேநேரம் “பேபிகேர்ளுக்கு என்ன வேணும்னாலும் அதை அம்மா கூட போய் தான் வாங்கணும்…தனியா எங்கியும் போகக்கூடாது பாப்பா…அப்படி தனியா போனால் உங்களை பூச்சாண்டி கூட்டிட்டு போய் கடிச்சு தின்னுடுவான்” என அவளை பயமுறுத்தி எச்சரித்தே கீழே இறக்கிவிட்டிருந்தான்.
உடனே பயத்தில் விழி விரித்த குழந்தையின் மருண்ட விழிகளை பார்த்து மென்மையாய் புன்னகைத்தவன் “பட் பேபி கேர்ள் பயப்பட வேண்டாம்…ஹீரோ அங்கிள் உன்னை எப்பவும் புரொடெக்ட் பண்ணுவேன்…ஓகே” என கன்னத்தை தட்டி கூறியப்பிறகே குழந்தையின் முகம் தெளிந்தது.
அவனிற்கே இதையெல்லாம் அவன் ஏன் சொல்கிறான் என்றே தெரியவில்லை.
அவனிற்கு தன்னை நினைத்தே அதிர்ச்சியாக இருந்தது.
அதற்குள் ஸ்ருதியோ அவன் பேச்சை கேட்டு “ம்..ம் சதி” என வேகமாக தலையாட்ட “ஸ்வீட் கேர்ள்” என அவளின் கன்னத்தை கிள்ளி அவன் கொஞ்சிக்கொள்ள,
அதற்குள் “அம்மு வா..” என தேவி பொறுமையிழந்து மகளை அழைக்க ‘இவ ஒருத்தி’ என கடுப்பாகிவிட்டான் சேரன்.
அவனிற்கு ஏனோ அந்த குழந்தையைப் பிரிய மனமில்லை.
இன்று தான் அவளை முதல் முறையாய் பார்க்கிறான் என்றெல்லாம் அவனிற்கு தோன்றவில்லை.
பல ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் போல் தோன்றியது அவனிற்கு!
அதனால் அவளை பிரிய மனமின்றி தவித்தான்.
அதையறியாத தேவியோ “அம்மு வா” என வேகமாக மகளின் கரம் பற்றி தரதரவென இழுத்து சென்றிருந்தாள்.
குழந்தையோ செல்லும் போது “பை ஹீரோ அங்கிள்” என தனது இரட்டை ஜடை ஆட தலையாட்டி சிரித்துக்கொண்டே சொல்லி செல்ல,அதுவே அவனிற்கு ஒரு கவிதை போல் இருந்தது.
அவர்களை பற்றி அவன் விசாரிக்க எண்ணினான்.
ஆனால் நேரடியாக அவ்வாறு கேட்க அவனிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அதனால் அவர்களிடம் எந்தவொரு விபரமும் கேட்காமல் ஒரு பெருமூச்சுடன் நின்றிருந்தான்.
அவன் மனதில் மட்டும் எதையோ இழந்ததை போன்ற ஒரு வெறுமை குடிக்கொண்டன.
அதற்கான அர்த்தம் புரியாமல் சிகையை அழுந்தக்கோதியப்படி தனது குடும்பத்தினரை தேடி சென்றான்.
அதுவரை இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்திருந்த மீனாட்சி,குந்தவை,ரகுபதி என மூவரும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக்கொண்டனர்.
“என்னம்மா நடக்குது இங்கே?” என குந்தவை திகைப்புடன் வினவ,
“எனக்கும் அது தான் புரியலைடி…உன் அண்ணன் சிரிச்சு நான் இன்னைக்கு தான் பார்க்கறேன்” என அவரும் ஒரு வித வியப்புடன் கூற,
“அத்தை எனக்கு என்னவோ அந்த குழந்தையை அவனுக்கு ரொம்ப பிடிச்சிருச்சுனு நினைக்கிறேன்” என்றான் ரகுபதி.
அதை ஆமோதிக்கும் விதமாக “ஆமா மாப்பிள்ளை…அவனுக்கு குழந்தைங்கனா ரொம்ப பிடிக்கும் போலிருக்கு…எனக்கே இன்னைக்கு தான் தெரியுது” என்று வியப்புடன் விழி விரித்து மீனாட்சி உரைக்க,
“அப்போ அத்தை இதை வைச்சே உங்க பையனுக்கு கொக்கிப்போட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சிடுங்க” என ரகுபதி யோசனை கூறினான்.
அதைக்கேட்ட குந்தவை “அது அவ்வளவு சீக்கிரம் நடக்கிற காரியமில்லை…அண்ணனோட பிடிவாதம் பத்தி உங்களுக்கு தெரியாதா?” என அங்கலாய்ப்புடன் வினவ,
“ப்ச் இவ ஒருத்தி…நல்ல விஷயம் பேசும் போதே அபசக்குணமா பேசிக்கிட்டு…வாயிலே அடி” என மகளை அடக்கிவிட்டு “மாப்பிள்ளை நீங்க வாங்க…நாம்ப எப்படி அவனை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கலாம்னு திட்டம் போடலாம்” என தனது மருமகனிடம் திட்டம் தீட்டியப்படி முன்னால் நடக்க,
குந்தவையோ “இங்க இவருக்கு நான் பொண்ணா?இல்லை இவரான்னு தெரியலை” என தலையிலடித்தவள் ‘நீங்க என்ன தான் கலர் கலரா ஐடியா பண்ணாலும் அண்ணா எப்படியும் ஒத்துக்கப்போறது இல்லை…பார்ப்போம் என்ன நடக்குதுனு’ என பின்னால் திரும்பி தேவியையும் அவள் குழந்தையையும் பார்த்தாள்.
இரட்டை ஜடை பின்னல் அசைந்தாட அன்னையிடம் தலையாட்டி பேசிக்கொண்டே சென்ற ஸ்ருதியை ஏக்கத்துடன் நோக்கினாள் குந்தவை.
வெளியில் கூறவில்லை என்றாலும் தனக்கொரு குழந்தை இல்லையே என்ற வருத்தம் அவளுக்குள் புதைந்துக்கிடந்தது.
எங்கு அவள் வருத்தப்பட்டால் கணவன் தன்னை எண்ணி கலங்குவானோ என தன்னுடைய துயரத்தை மறைத்து வைத்துவிட்டு மகிழ்ச்சியாய் இருப்பது போல் வலம் வருகிறாள் குந்தவை.
அதேப்போல் தான் ரகுபதியும்!
குழந்தைப் பேறு இல்லாத குறை இருவரையும் வாட்டி வதைத்தப்போதும் மற்றவரிடம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.
இங்கு ஸ்ருதியிடம் தேவி “அம்மு யார் என்ன கொடுத்தாலும் வாங்கக்கூடாது…வேணாம்னு தான் சொல்லணும்…புரியுதா?” என அறிவுரை கூற,
அவளோ “அம்மா நான் வேணாம்னு தான் சொன்னே…அங்கிள் தான் கொடுத்தாரு” என்றாள் பாவமாக…
குழந்தையின் பாவமான முகப்பாவனை கண்டதும் அவளின் நெஞ்சம் இறங்கிட “சரி அம்மு…இந்த தடவை விடு…இனி அம்மா கையை விட்டுட்டு வேற எங்கியும் போகக்கூடாது…அதே மாதிரி புதுசா யார்க் கிட்டயும் பேசக்கூடாது” என ஒரு தாயாக மகளை எச்சரித்தாள்.
அவளும் அனைத்தும் புரிந்தது போல் “சரிம்மா…இனி அம்மா ஹீரோ அங்கிள் தவிர யாதுகிட்டயும் போக மாத்தேன்” என்று சொல்ல,
தேவியிற்கோ ‘ஐய்யோ’ என்றானது.
அவளும் முதலில் இருந்து அவனை விலக்கி நிறுத்தி பேச முயல்கிறாள்.
மகளோ அதை புரிந்துக்கொள்ளாமல் “ஹீரோ அங்கிள் ரொம்ப நல்லவர்மா…அவர் என்னை பூச்சாண்டி கிட்டயிருந்து காப்பாத்துவாரு…குத் அங்கிள் அவர்” என அவனது புராணத்தையே பாடிக்கொண்டிருந்தாள்.
“இல்லை தங்கம்…அங்கிள் பத்தி நமக்கு ஒண்ணுமே தெரியாது இல்லை…அதனாலே தான் அவர்கிட்ட பேச வேணாம்னு சொல்லறேன்” என மகளிற்கு புரிய வைக்க முயல,
அவளோ “இல்லையேம்மா…அங்கிள் பேது சே…சே…” என்றவள் சொல்ல முடியாமல் தடுமாறி “சேதன்…அவரு ஒது லாயராம்…நான் பெதுசாகி லாயராகணும்னு நீ தானேமா சொன்னே…அப்போ அவது குத் அங்கிள் தானே” என அவளும் தனது
அன்னையிடம் விவாதம் செய்ய,
ஒரு கட்டத்தில் தேவிக்கு களைத்துப்போனது தான் மிச்சம்!
பின்பு அவளாகவே ‘நான் ஏன் இப்போ வீணா கவலைப்படறேன்…அம்மு தான் இனி அவரை பார்க்கப்போறதே இல்லையே’ என்றெண்ணி ஆசுவாமசடைந்தாள்.
ஆனால் வெகு விரைவிலே அவர்களது சந்திப்பு அவளாலே நிகழவிருப்பதை அக்கணம் அறியவில்லை.
error: Content is protected !!