Skip to content
Post Views: 58
ஒரு வழியாக மகளிடம் பேசிக்கொண்டே குழந்தையுடன் தனது வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவர்கள் இருவரும் உள்ளே நுழையும் நேரம் சரியாக தம்பதியினர் இருவர் வாசலை நோக்கி வந்தனர்.
Advertisement
அதிலிருந்த அந்த பெண் மட்டும் “சனியன் சனியன்…இதுங்க இரண்டும் வரதுக்குள்ள வீட்டை விட்டு வெளியப்போயிடலாம்னு நினைச்சா வந்து தொலைச்சிடுச்சுங்க…இனி போற காரியம் உருப்பட்ட மாதிரி தான்” என கடுஞ்சொற்கள் கொண்டு அவர்களை வஞ்சிக்க,தேவியின் முகமோ இருண்டுப்போனது.
ஆயினும்,அவள் எதுவும் பேசாமல் குழந்தையை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல “இதுங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை…புருஷன் செத்துப்போயும் ஆத்தாக்காரி வீட்டுக்கு போகாமல் இங்க இருந்து நம்ப உசரை எடுக்குதுங்க…” என கண்டப்படி திட்டியவாறே அவள் கணவனுடன் வெளியேறினாள் ஜமுனா.
Advertisement
Advertisement
அவளின் பேச்சை கேட்டதும் இதயத்தில் சுருக்கென்று தைத்தது தேவிக்கு!
ஆம்,அவள் ஒரு கைம்பெண் தான்!
Advertisement
ஆறு மாதத்திற்கு முன்பு தான் தனது கணவனை ஒரு விபத்தில் பறிக்கொடுத்திருந்தாள் அவள்.
அவள் திருமண கதையை கேட்டால் உயிரற்ற அந்த சுவர் கூட கண்ணீர் வடிக்கும்.
அந்த அளவு கொடூரமான கதை அவளுடையது.
பதினெட்டு வயதில் திருமணம்…போதைக்கு அடிமைமாகிய கணவன்…
பத்தொன்பது வயதில் கையில் குழந்தை.இதற்கிடையில் தினந்தோறும் அடி,உதை,சித்திரவதை…
ஒரு சில நேரங்களில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் வேறு!
அப்பொழுது எல்லாம் மிருகத்தை விட மிக குரூரமாக அவளிடம் நடந்துக்கொள்வான்,அவளின் கணவன் ஆனந்தன்.
அதுவே,போதையின்றி தெளிவாக இருக்கும் சமயங்களில் அவனை போன்ற ஒரு நல்ல கணவனை பார்க்கவே முடியாது.
அவளின் மீது அளவுக்கு அதிகமான அன்பை கொட்டுவான்.
என்ன தான் அவன் அன்பை கொட்டினாலும் அவளை பொருத்தவரை திருமண வாழ்வு அவளிற்கு ஒரு சாபம் தான்!
ஆயினும்,அவன் செய்யும் பிழைப்பொருத்து அவனுடனே தன் வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்தாள் ஏந்திழை.
அவளின் மேல் இரக்கம் கொண்ட விதி அவளின் சாபத்தை முடித்து வைக்க எண்ணியதோ என்னவோ?
தலைக்கேறிய போதையில் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தவனை எமதர்மன் தன் கோட்டைக்கு அழைத்து சென்றிருந்தார்.
அதனால் இருபத்தி மூன்று வயதில் விதவை கோலம் பெண்ணவளிற்கு!
அதை எண்ணி அவளால் நிம்மதியடைய முடியவில்லை.
ஏனெனில்,கணவனை இழந்து குழந்தையுடன் தனித்து நிற்கும் அவளை ஆதரிக்கவென்று பிறந்த வீட்டில் ஒருவரும் இல்லை.
அவளை பெற்றெடுத்த தாயிற்கே அவள் வேண்டாத ஒரு குப்பை!
பிறந்தகத்தில் தான் அவ்வாறு என்றால்,புகுந்த வீட்டிலோ சொல்லவே தேவையில்லை.
அவளது மாமியார் சங்கரி தவிர வேறு யாரும் அவளிற்கு ஆதரவு கிடையாது.
இப்போது அவளை அவதூறாக பேசிவிட்டு சென்றதும் கூட,அவளின் ஓரகத்தி ஜமுனா தான்!
அதாவது,அவளது கணவனின் தமையனான அர்ஜுனனின் மனைவி.
கணவனை இழந்தப்பிறகு இங்கு பாதுகாப்பிற்காக அடைக்கலம் புகுந்திருப்பதால் தேவியின் மீது அவளிற்கு அப்படியொரு இளப்பம்!
இத்தனைக்கும் கணவனை இழந்தப்பிறகு தனது சொந்த காலில் நின்று உழைத்து தான் சாப்பிடுகிறாள் தேவி.
அவ்வாறு இருந்தும் கூட ஜமுனா அவளை வார்த்தைகளால் தினந்தோறும் வதைத்து கொடுமை செய்துக்கொண்டே இருந்தாள்.
அவளை ஏதேனும் கூறினால் பொறுத்துப்போகலாம்.ஆனால் சமீப காலமாக அவளோடு சேர்த்து அவளது மகளையும் வதை தொடங்கியிருந்தாள் ஜமுனா.
அதை தான் அவளால் ஏற்க முடியவில்லை.
இந்த வீட்டை விட்டு வெளியே சென்றுவிடலாம் என்றால் அவளின் வயதும் மகளின் எதிர்காலமும் அவளை அச்சுறுத்தியது.
சமுதாயத்தில் தனித்து நிற்கும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பல அநீதிகளை கண்கொண்டு பார்ப்பவளால் துணிந்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.
அதன் பொருட்டே,ஒரு பாதுகாப்பிற்காக அந்த வீட்டில் குடியிருக்கிறாள்.
ஆனால் நாளுக்கு நாள் ஜமுனாவின் செயல்கள் அத்துமீறி கொண்டிருந்தன.
அவர்களின் மாமியார் அவளிற்கு ஆதரவாக பேசினால் “நீங்க என்ன அவளுக்கு சப்போர்ட்டா?வேணும்னா நீங்களும் உங்க மருமகளோட வீட்டை விட்டு வெளியப்போயிடுங்க…ஆனால் இந்த வீட்டு படி தாண்டிட்டீங்கன்னா உங்களுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என சிறிதும் இரக்கமின்றி மிரட்டி அவரின் வாயை அடைத்துவிடுவாள்.
அவருக்கு சாதகமாக அவரது மகன் கூட எதுவும் பேசாமல் மௌனம் காக்க, அவருக்கே மனது வெறுத்துப்போனது..
அதனால் சங்கிரியும் அங்கு வாயில்லா பூச்சி தான்!
அவரை சொல்லியும் குத்தமில்லை…
கணவனின் துணையின்றி வாழும் பெண்மணிக்கு மகன் என்ற உறவு தானே அனைத்தும்!
ஆதலால்,அவர்களை அண்டி வாழ வேண்டிய ஒரு நிலை அவருக்கு!
தன்னை இழிவாக எண்ணுபவரின் வீட்டில் தாம் இருக்க வேண்டிய அவல நிலையை எண்ணி அவளே வெறுத்தாள்.
இப்படியொரு வாழ்க்கை எந்தவொரு பெண்ணிற்கும் கிடைக்கவே கூடாது.
அவளிற்கு வேறு வழியுமில்லை…
அனைத்தையும் பல்லை கடித்து பொறுத்துக்கொண்டு அமைதி காத்தாள்.
ஆனால் அவளை போல் இல்லாமல் அவளின் மகளோ “அம்மா பெரியம்மா ஏன் நம்மளை திட்டிட்டே இருக்காங்க…அவங்களுக்கு என்னை பிடிக்கலையா?” என கேட்க ஆரம்பித்திருந்தாள்.
அவளிற்கு வயது நான்கை தொட்டுவிட்டிருந்ததால் ஓரளவு அவளிற்கும் அனைத்தும் புரிந்தன.
அவளிடம் என்ன பதில் சொல்வது என தெரியாமல் உள்ளுக்குள் நொறுங்கிப்போனாள் கோப்பெருந்தேவி.
“விடியலின்றி தவிக்கும்
பூவுலகில்
விதியின் கரங்கள்
சங்கிலி
கொண்டு கட்டப்பட்டனவோ?
துயரம் சூழ்ந்த
கானகத்தில்
இருள் மட்டுமே அவளின்
துணையானது”
error: Content is protected !!