ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 50
அத்தியாயம் – 50
அதிசயமாக அன்று அறைக்குள் வந்த ரன்வீரிடம், மிருதுளா மெல்ல… “இந்த கண்ட்ரி சிம்கார்ட் ஒன்னு வாங்கித் தர்றீங்களா ரன்வீர்?” என்று கேட்க, விழிகளைச் சுருக்கி அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவன்,.. ”எதுக்கு?” என்று அதிகாரமாகக் கேட்டான்..
“சிம் கார்டு எதுக்குக் கேட்பாங்க? போன் பேசுறதுக்குத் தான்” என்று அவள் சாதாரணமாகப் பதிலளிக்க,.. ”இந்தியா நம்பர்ல வாட்ஸ்அப் யூஸ் பண்றில்ல? இங்கே வைஃபை இருக்கு, அதை கனெக்ட் பண்ணி அதுலேயே பேசிக்கோ” என்று முட்டுக்கட்டை போட, ஆனால் மிருதுளா விடுவதாக இல்லை.
Advertisement
“ஊர்ல இருக்கிறவங்ககிட்ட பேசுறதுக்கு வாட்ஸ்அப் யூஸ் பண்ணிப்பேன். ஆனா, என் பிரண்ட் லூகஸ்கிட்ட எப்படிப் பேசுறது? அதுவும் இல்லாம, நான் வெளியே போகணும்னா என்கிட்ட ஒரு சிம் இருக்கிறது ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்ல?” என்று அவள் சொன்னதும், ரன்வீரின் மூளை சூடானது.
’லூகஸ்’… என்ற அந்தப் பெயரைக் கேட்டாலே அவனுக்குப் பற்றிக்கொண்டு தான் வந்தது. இப்போதும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “நானெல்லாம் வாங்கித் தர முடியாது, உனக்கு வேணும்னா நீயே போய் வாங்கிக்கோ” என்று கறாராகச் சொல்லிட, அவளோ..
”ஓகே… நான் லூகஸ்கிட்டயே கேட்டு வாங்கிக்கிறேன், அவன் டெய்லி அந்த சூப்பர் மார்க்கெட் வருவேன்னு சொன்னான்,” என்று அவள் சொன்னதுதான் தாமதம், அவளை அனலாய் முறைத்தவன்,.
”வீட்டை விட்டு காலடி எடுத்து வச்ச, காலை உடைச்சிடுவேன்!” என்று ஆவேசமாக மிரட்டினான்.
அவனை நக்கலாக பார்த்து சிரித்தவளோ.. “வீட்டை விட்டுப் போக சொன்ன வாய், இப்போ என்ன வேற என்னவோ சொல்லுது?” என்று வினவிட,
அவளது கேள்வியில் நிலைதடுமாறிய ரன்வீர், “இங்கே வந்து ஏன்டி என் உசுரை எடுக்கிற? நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன், என் நிம்மதியைக் கெடுக்கிறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கியா?” என்று எகிறினான், அவளைத் துரத்தவும் முடியாமல், அவளது செய்கைகளைப் பொறுக்கவும் முடியாமல் தவித்தவன், அந்த அறையை விட்டே கோபமாக வெளியேறிவிட்டான்.
Advertisement
ரன்வீர் சென்ற திசையையே பார்த்திருந்த மிருதுளாவிடமிருந்து ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது.
Advertisement
’உங்க நிம்மதி உங்க பையன்கிட்டயும் என்கிட்டயும் தான் இருக்குன்னு எனக்கு தெரியும் வீர், ஆனா நீங்க தான் கோபத்துல அதை வெளிக்காட்டிக்க மட்டேங்கிறீங்க’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவள், தன் மகனை அணைத்துக்கொண்டாள்.
இரண்டு நாட்கள் மௌனமாகவே கடந்திட, என்றும் இல்லாமல் அன்று ரன்வீர் அவனது அறைக்கே படுக்க வந்திருந்தான். மிருதுளா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை, எங்கே சின்னதாகக் கேள்வி கேட்டாலும் அவன் கோபப்பட்டு வெளியே போய்விடுவானோ என்ற பயம் அவளுக்கு..
குழந்தை புதிதாக வாங்கிய தொட்டிலில் அழகாக துயில் கொண்டிருந்தான், படுக்கையில் அமர்ந்து இருவருக்கும் நடுவில் தலையணையால் ஒரு பெரிய சுவர் கட்டியவன், அவளைத் திரும்பிப் பாராமல் படுத்துக்கொண்டான். அவன் சிறுபிள்ளைத்தனமான செய்கையை பார்த்துத் தனக்குள் புன்னகைத்தவள், “பயப்படாதீங்க, நான் ஒன்னும் பாஞ்சிட மாட்டேன்!” என்று கேலியாகச் சொல்ல… “மூடிட்டுப் படுடி!” என்று அவனது வழக்கமான பாணியில் அதட்டினான்.
Advertisement
பல நாட்களுக்குப் பிறகு அவனது அருகாமை கிடைத்திருக்கிறது. அவன் மார்பில் சாய்ந்து கொள்ளும் உரிமை இப்போது பறிக்கப்பட்டிருந்தாலும், ஒரே படுக்கையில் படுப்பதே அவளுக்கு ஒருவித உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த நிம்மதியிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றவள், அடுத்த சில நிமிடங்களில் போன் ஒலிக்கும் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தாள்.
திரையில் வந்த பெயரைப் பார்த்துவிட்டு ரன்வீரை நோக்கி திரும்பிட, அவனோ கண்கள் மூடி அசைவற்றுப் படுத்திருந்தான். அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தவள், போனை எடுத்துக்கொண்டு மெல்லப் பால்கனிக்குள் நுழைந்தாள். அவள் சென்ற கணம், ரன்வீரின் விழிகள் சட்டென்று திறந்து கொண்டன.
அவன் இன்னும் தூங்கவில்லை, அவளுக்கு இந்த நேரத்தில் யார் போன் செய்வது யார் என்ற உறுத்தல் வேறு அவனை அரிக்கத் தொடங்கியது. இது வெறும் சந்தேகம் இல்லை, அவனது ஆழ்மனதில் இருக்கும் பொசசிவ்னஸ் மட்டுமே, அந்த லூகாஸாக இருக்குமோ என்ற எண்ணம் வந்ததும் அவனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை,..
உடனே படுக்கையை விட்டுப் எழுந்தவன், பால்கனிக்குள் நுழைந்து அவள் போனைப் பிடுங்கி, “என்னடா வேணும் உனக்கு?” என்று ஆவேசத்தில் கத்தியவன், ”ரன்வீர்… என்னாச்சுப்பா?” என்று மறுமுனையில் கேட்ட தாயின் குரலில் அப்படியே உறைந்து போனான். விழிகளை மூடித் திறந்தவன், “ஒ… ஒன்னுமில்லமா…” என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு, போனை அவளிடமே கொடுத்துவிட்டு வேகமாக வந்து படுத்துக் கொண்டான்.
மிருதுளாவிற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவன் மனதை அவள் அறியாதவளா என்ன? உள்ளே வந்தவள் மீண்டும் போனைத் தன் காதுக்குக் கொடுக்க,.. ”என்னமா, என்னாச்சு அவனுக்கு?” என்று காயத்ரி பதற்றத்துடன் வினவ… “அதெல்லாம் ஒன்னுமில்லை அத்த, உங்க பையனுக்கு என் மேல ஓவர் பொசசிவ்னஸ், அதான் யாருன்னு தெரியாம எகிறிட்டார்,” என்று அவள் வேண்டுமென்றே சத்தமாகக் கூறிட, அந்த வார்த்தைகள் ரன்வீரின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது. போர்வையை இன்னும் இழுத்துப் போர்த்திக்கொண்டவன், ‘நாசமாப் போச்சு, இவகிட்ட மாட்டிக்கிட்டு மானம் போகுதே’ என்று மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தான்.
மிருதுளாவும் போனை வைத்துவிட்டுப் படுக்கையில் அமர்ந்தாள். தலையணை சுவருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ரன்வீரைத் தொட்டுவிடத் துடித்தது அவளது கைகள்.
”எதுக்கு ரன்வீர் இவ்வளவு கோபம்? லூகஸ்னு நினைச்சீங்களா? அவன் ஜஸ்ட் என் பிரண்ட் தான்” என்று அவள் மெல்லிய குரலில் சொல்ல, ரன்வீர் அசையாமல் கிடந்தான். ஆனாலும் அவனது இதயத்துடிப்பு எகிறிக் கொண்டிருப்பதை அந்த நிசப்தமான இரவில் இருவருமே உணர்ந்தனர்…
நாட்கள் மெல்ல நகர்ந்தாலும் ரன்வீர் இன்னமுமே முறுக்கிக் கொண்டு தான் திரிந்தான், அவளுக்கோ பொறுமை எல்லை கடந்து போயிருந்தது. ‘இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படித் தள்ளி வைக்கப் போகிறார்?’ என்ற ஆதங்கம் அவளை வாட்டியது.
”நான் வேணும்னா உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கட்டுமா ரன்வீர்? அப்போதாவது என்னை ஏத்துக்குவீங்களா?” என்று கெஞ்சிக் கூடப் பார்த்துவிட்டாள். ஆனால் அவனோ அசைக்க முடியாத கல் மனதாகவே இருந்தான்.
”அப்போ என்னை மன்னிக்கவே மாட்டீங்களா?” என்று கண்களில் நீர் வழிய விம்மி விம்மி அழுது கேட்டாள், அப்போதும் அவனது பாறாங்கல் இதயம் மசியவே இல்லை.
”என்னைத் தொந்தரவு பண்ணாத!” அவள் வரும்போதெல்லாம் இந்த ஒற்றை வார்த்தையைத் தான் அவன் மந்திரம் போலத் திரும்பத் திரும்ப கூறினான், குழந்தையிடம் கொஞ்சுகிறான், விளையாடுகிறான், சிரிக்கிறான். ஆனால், அவள் அங்கு வந்த நாளிலிருந்து அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தையும் பேசவில்லை ஒரு பார்வையும் கூடப் பார்த்ததில்லை,
அவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்ட உணர்வு,
அவளது மனதை ரன்வீரின் இந்த அலட்சியம் மேலும் ரணமாக்கியது. எனவே, அன்றொரு நாள் உச்சகட்ட விரக்தியில்.. ”பேசாம அன்னைக்குச் சொன்ன மாதிரி நீங்க இன்னொரு கல்யாணமாச்சும் பண்ணிக்கோங்க! குழந்தையையும் நீங்களே பார்த்துகோங்க, நான் உங்களை விட்டு நிரந்தரமா விலகிப் போயிடுறேன்” என்று கூறிட, அவளைத் திரும்பிப் பார்த்த ரன்வீர், முகத்தில் எவ்விதச் சலனமும் இன்றி, “ஆல்ரெடி எனக்கு ஆள் இருக்கு! நீ சொல்லித் தான் நான் அதைச் செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை,” என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் கூறினான்.
அந்த வார்த்தைகள் அவள் இதயத்தை பிளந்துவிட்டது போல் இருந்தது, அவன் கோபத்தில் தன்னை நோகடிக்க செய்வதற்காக மட்டுமே இதைச் சொல்கிறான் என்பது அவளது அறிவுப்பூர்வமான மனதிற்குப் புரிந்தாலும், ஒரு பெண்ணாக அது அவளைத் துடிக்க வைத்தது. தன் மனதின் வலியை யாரிடம் சொல்லிப் புலம்புவது என்று தெரியாமல் நிதினிடம் தான் புலம்பினாள், காயத்ரியிடம் கூறினால் அவர் தேவையில்லாமல் வருத்தப்படுவார் என்பதால் அவரிடம் எதையும் சொல்லவில்லை.
மிருதுளாவின் வேதனையைக் கேட்ட நிதின், “பேசாம நீ அவன் ஆபீஸ்க்குப் போக ஆரம்பி, அவன் வீட்டை விட ஆபீஸ்ல தான் அதிக நேரம் இருப்பான், அங்கே போய் அவன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணப் பாரு,” என்று ஒரு யோசனை கூறிட, அவளும் ஒரு முடிவோடு அடுத்த நாள் ரன்வீரின் அலுவலகத்திற்குப் புறப்பட்டாள்.
கடந்த சில தினங்களாகக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஒரு கேர்டேக்கர் பெண் வர ஆரம்பித்திருந்தார், அன்று அந்தப் பெண்ணிடம் குழந்தையை நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு, ரன்வீரின் அலுவலகம் நோக்கிப் பயணித்தாள்.
நிதின் கொடுத்திருந்த அந்த முகவரி அவளை ஒரு பிரம்மாண்டமான வானளாவிய கட்டிடத்தின் முன் நிறுத்தியது. ரன்வீரின் ‘இம்போர்ட் – எக்ஸ்போர்ட்’ நிறுவனத்தின் லண்டன் கிளை அது, அதன் நவீனத் தோற்றமும் அழகும் ஒரு நிமிடம் அவளை மலைக்க வைத்தாலும், அவளது கண்கள் ரன்வீரை மட்டுமே தேடின.
நிதின் ஏற்கனவே பேசியிருந்ததால், வரவேற்பறையில் இருந்த பெண் அவளை புன்னகையோடு வரவேற்று உள்ளே அனுமதித்தாள், லிஃப்ட்டில் ஏறி அவனது அறை இருக்கும் தளத்திற்குச் சென்றபோது அவளது இதயம் வேகமெடுத்தது.
அதே சமயம், தனது அறையில் இருந்த சிசிடிவி திரையில் மிருதுளா உள்ளே வருவதைக் கவனித்த ரன்வீர்,.. ‘இப்போ இவ எதுக்கு இங்கே வந்திருக்கா?’ என்று ஆத்திரமடைந்தவனுக்குள், ஒரு வஞ்சக எண்ணம் தலைதூக்கியது.
‘உன்னை என்ன பண்ணுறேன் பாரு’ என்று வஞ்சகமாக நினைத்துக் கொண்டவன், சரியாக மிருதுளா அறைக்கதவைத் திறக்கும் தருணத்தில், அருகில் நின்ற தனது தனிச் செயலாளர் லூசியை அழைத்து, அவளுக்கு மிக நெருக்கமாகச் சென்றவன், அவளது கையை மென்மையாக வருடி, காதலோடு பேசுவது போல பாவனை செய்தான். ரன்வீரின் மேல் ஏற்கனவே ஒரு ஈர்ப்பு கொண்டிருந்த லூசி, இதைப் பொன்னான வாய்ப்பாகக் கருதி அவனது அணைப்பில் மயங்கி நின்றாள்…
அறைக்குள் நுழைந்த மிருதுளா கண்ட இந்த காட்சி, அவளை இடியாகத் தாக்கியது. தன் கணவன், இன்னொரு பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு நெருக்கமாக நிற்பதைக் கண்டவள் அப்படியே சிலையாக உறைந்தாள், இதயம் சுக்குநூறாக உடைந்தது, ஒரு வார்த்தை கூடப் பேசத் தோன்றவில்லை அவளுக்கு, அதற்கு மேல் அங்கு ஒரு கணம் கூட நிற்க விரும்பாமல், வந்த வழியே ஓடியவளின் விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
அவள் ஓடியதும், சட்டென்று லூசியை விட்டு விலகினான் ரன்வீர், அவனது நோக்கம் நிறைவேறிவிட்டது, ஆனால் அவனது மனதிற்க்குள் தவிப்பு ஆரம்பித்தது, மீண்டும் சிசிடிவி திரையைப் பார்த்தான், அவள் அழுதுகொண்டே ஓடுவதைக் கண்டதும், குற்ற உணர்வு மேலோங்கியது. விழிகளை மூடித் திறந்தவன், அடுத்த கணம் இருக்கையைத் தள்ளிவிட்டு புயலென வெளியேறினான்.
அவளோ அலுவலகத்தின் பிரம்மாண்ட வாயிலைத் தாண்டி தெருவில் இறங்கிவிட்டாள், பார்வை மங்கலாகத் தெரிய, வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அந்தப் பரபரப்பான லண்டன் சாலையில் எங்கே போகிறோம் என்றே தெரியாமல் நடந்தாள், செத்து போய்விடலாம் போல இருந்தது, ஆனால் அதற்கும் அவளிடம் துணிவில்லை,..
ஓடி வந்த ரன்வீர், கூட்ட நெரிசலுக்கு நடுவே அவளது உருவத்தைக் கண்டுகொண்டான். மூச்சிரைக்க ஓடிச் சென்று, அவளது கரத்தைப் பற்றி இழுத்து நிறுத்திட, திடுக்கிட்டுத் திரும்பிய மிருதுளா, எதிரே ரன்வீரைக் கண்டதும் அவன் பற்றிய கரத்தை உதறித் தள்ளிவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினாள்…
”ஏய்… நில்லுடி!” என்று கத்தியவன், பாய்ந்து சென்று அவளுக்கு முன்னால் வழிமறைத்து நிற்க.. அவளோ.. ”ஐ ஹேட் யூ மிஸ்டர் ரன்வீர்! உங்களைப் பார்க்கக் கூட நான் விரும்பல… என் வழியை விடுங்க” என்று குரல் உடைந்து கதறினாள். அவளது கண்களில் தெரிந்த அந்தத் தீராத வலி, ரன்வீரை நிலைகுலைக்கச் செய்திட, அதற்கு மேல் அவளை துன்புறுத்த விரும்பாமல்… “பட்… ஐ லவ் யூ ஹனி!” என்று தழுதழுத்த குரலில் கூறியதோடு மட்டும் இல்லாமல் அவளது பதிலை எதிர்பார்க்காமல் அவளை அப்படியே வாரிச் சுருட்டித் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான்…
மிருதுளா இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அவனது அந்தத் திடீர் மாற்றமும், அணைப்பும் அவளை ஒரு கணம் உறைந்து போகச் செய்தது, இத்தனை நாட்கள் தன்னைத் தீண்டக் கூட யோசித்தவன், இன்று ஒரு அந்நிய தேசத்தின் வீதியில், மக்கள் மத்தியில் தன்னை இப்படி உரிமை பாராட்டுவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
அவனது இதயத்துடிப்பு அவளது காதுகளில் லயமில்லாமல் அதிவேகமாக ஒலித்தது, அந்தத் துடிப்பில் தெரிந்த பதற்றம், அவள் மீதான அவனது உண்மையான காதலை அவளுக்குச் சொல்லாமல் சொன்னது. இத்தனை மாதப் பகை, எரிமலை போன்ற கோபம், கொல்லும் அலட்சியம் என அனைத்தும் அந்த ஒரு அணைப்பில் இருந்த உஷ்ணத்தில் மெழுகுப் பொம்மையாகக் கரைந்து போனது
அந்த அணைப்பில் அவளது எதிர்ப்பு மெல்ல மறைந்தது, அவனது மார்பின் கதகதப்பில் தன்னைத் தொலைத்தவள், இத்தனை நாட்களாகத் தேக்கி வைத்திருந்த அத்தனை பாரத்தையும் இறக்கி வைக்க, அவனது சட்டையைத் தன் பிஞ்சு விரல்களால் இறுக்கப் பற்றிக்கொண்டு, அவனது மார்பிலேயே முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள்…
அந்த அழுகையில் அவளது அத்தனை ஏக்கங்களும், வலியும், தவிப்பும் வெளிப்பட்டன. ரன்வீர் அவளை இன்னும் இன்னும் நெருக்கமாகத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அவளது கண்ணீர் அவனது இதயத்தை நனைக்க, அவனது கண்களும் லேசாகக் கலங்கின.
எத்தனை நேரங்கள் கடந்ததோ… ரன்வீர் அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவிக்கவுமில்லை, அவளது அழுகையும் நின்ற பாடில்லை. விம்மல்களுக்கு இடையே அவள் விடும் கேவல் மூச்சு ரன்வீரின் இதயத்தை உருக்கிட, மெல்ல அவளைத் தன்னிடமிருந்து விலக்கி, தன் பெருவிரல்களால் அவளது கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டவன்,.. ”ப்ளீஸ்… அழாதம்மா… டோன்ட் க்ரை!” என்று உருக்கமாகக் கூற, அவளோ கேவலுடன் “அந்த பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?” என்றாள்..
”உனக்கு அப்படித் தோணுதா? உன்னை விட்டுட்டு நான் இன்னொரு பொண்ணு கிட்ட போவேன்னு உண்மையாவே உனக்குத் தோணுதா மிருது?” என்று அவன் ஆதங்கத்துடன் வினவ…
”இ… இல்ல… ஆனா…” என்று இழுத்தவள்,.. “அப்போ எதுக்கு அவளைக் கட்டிப்பிடிச்சுட்டு இருந்தீங்க?” என்றாள்..
”எது? கட்டிப்பிடிச்சேனா? நான் ஜஸ்ட் அவ கையை மட்டும் தான்மா பிடிச்சிருந்தேன்!” அவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல…
”அதெல்லாம் எனக்குத் தெரியாது! நீங்க அவகூட ரொம்ப நெருக்கமா நின்னீங்க, அதை பார்த்து என் மனசு எப்படித் துடிச்சி போனது தெரியுமா? செத்துப் போயிடலாம்னு தோணுச்சு!” என்று அவள் மீண்டும் வெடித்து அழத் தொடங்க, ரன்வீர் மீண்டும் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டவன்,..
”ஐம் ஸாரி பேபி உன்னைக் கஷ்டப்படுத்தணும், நீ பொறாமைப்படணும்னு தான் அப்படிப் பண்ணேன். ஆனா நீ இவ்வளவு ஹர்ட் ஆவேன்னு நான் நினைக்கல. ஐம் ஸாரி… ஐம் ஸாரி!” என்று அவன் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டிட, அவள் சட்டென்று அவனிடமிருந்து விலகி, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.. “முடியாது… என்னால உங்களை மன்னிக்க முடியாது! என்னை விட்டுடுங்க,” என்று அவள் சொல்லவும், ரன்வீர் அதிர்ச்சியில் உறைந்தான்.
”ஏய்… ஏன்டி இப்படிப் பேசுற? நான் வேணும்னா உன் கால்ல விழுறேன்!” என்று அவன் கெஞ்ச…
“நானும் இப்படி எத்தனை தடவை உங்ககிட்ட கெஞ்சியிருப்பேன்? போடா… நல்லா கெஞ்சு. கொஞ்ச நாள் உன்னை அலைய விட்டுத்தான் மன்னிப்பேன்,” என்று அவள் கூறிட, அவளது அந்த செல்லக் கோபத்தை ரசித்தவன், மெல்லக் குனிந்து அவளது நெற்றியோடு தன் நெற்றியை முட்டிப் புன்னகைத்து.. ”ம்ம்… தாராளமா அலைய விடு! உன் பின்னாடி எத்தனை வருஷம் வேணாலும் அலைய நான் ரெடி தான்,” என்று அவன் காதலோடு கூற, புன்னகையோடு அவனது அணைப்பில் தஞ்சமடைந்தாள் மிருதுளா…
அதற்குப் பிறகு வந்த நாட்கள் அவர்களுக்கு ஒரு பொற்காலமாகவே அமைந்தன, இழந்த காலத்தை ஈடுசெய்ய நினைத்தாற்போல, ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் காதலால் நிரப்பினார்கள்.
ரன்வீரின் பிடிவாதம் காற்றில் கரைந்து போக, அவனது மொத்த கவனமும் மிருதுளாவின் பக்கமே திரும்பியது. பழைய கசப்புகளை மறந்து இருவரும் மனமிட்டுப் பேசிக்கொண்டனர்.
ரன்வீரை சரியாக புரிந்துகொள்ளாமல் அவதிப்படுத்தியதற்காக அவனிடம் பல மன்னிப்பு கேட்டாள் மிருதுளா, அதேபோல, அவள் கர்ப்பமாக இருந்த அந்த காலகட்டத்தில், அவளுக்குத் துணையாக இருக்காமல் அவளைத் தவிக்க விட்டதற்காக ரன்வீரும் மனமுருகி மன்னிப்புக் கோரினான்.
இருவருமே ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தங்கள் காதலைப் புதுப்பித்துக் கொண்டனர், அலுவலகம் முடிந்து வந்ததும் குழந்தையோடு விளையாடுவது, இரவு நேரங்களில் லண்டன் வீதிகளில் கைகோர்த்து நடப்பது என அவர்கள் வாழ்க்கை வசந்தமானது.
”ஊருக்கு வர ஐடியா ரெண்டு பேருக்கும் இல்லையா?” என்று அவர்கள் ஒன்று சேர்ந்ததை அறிந்து வீட்டில் இருந்தவர்கள் கேலியாகக் கேட்க, அந்த அழைப்பினை ஏற்று அடுத்த விமானத்திலேயே அவர்கள் இந்தியா திரும்பினர்.
ரன்வீர் மற்றும் மிருதுளாவின் முகத்தில் தெரிந்த அந்த தூய்மையான காதலும் மாறாத மகிழ்ச்சியும், அந்த வீட்டை வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பித்தது. அவர்களின் வருகை அந்த வீட்டின் ஒவ்வொரு சுவரிலும் சந்தோஷத்தை நிறைத்தது. இருவரின் முகத்திலும் அந்தப் பழைய கசப்புகள் மறைந்து, ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்துகொண்ட நிம்மதி மட்டுமே தாண்டவமாடியது.
அதே மகிழ்ச்சியான சூழலில், ரன்வீர் – மிருதுளா தம்பதியின் செல்லப் புதல்வனுக்குப் பெயர் சூட்டும் விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது, மிருதுளா ஆசைப்பட்டது போலவே, ரன்வீர் தான் தனது மகனுக்குப் “ஆத்விக்” என்று பெயர் சூட்டினான்,
தன் கணவன் தன் பிள்ளைக்குப் பெயர் வைக்கும் அந்த அழகிய தருணத்தைக் கண்ட மிருதுளாவின் கண்கள் ஆனந்தத்தில் நனைந்தன, இந்த சந்தோஷமான நாளில் அனைவரின் ஆசியுடன் நிதின் – சம்யுக்தாவின் திருமண நாளும் குறிக்கப்பட்டு, அடுத்த மாதத்தில் உறவினர்கள் சூழ, மேளதாளங்கள் முழங்க அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
நிதின் மற்றும் சம்யுவின் நீண்ட நாள் காதல் ஒரு வழியாகக் கல்யாணத்தில் வந்து முடிய, இதுவரை உயிர்த் தோழர்களாக வலம் வந்த ரன்வீரும் நிதினும், இப்போது முறைப்படி மச்சான்களாக.மாறி தங்கள் உறவைப் பலப்படுத்திக் கொண்டனர்.
பிரிந்திருந்த இதயங்கள் ஒன்று சேர, புதிய உறவுகள் மலர, அந்தக் குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் நீந்தியது.
சுபம்…
