Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 9 2

அவசரத்திற்கு உதவுபவன் அவன் தானே, குரலை வைத்தே கண்டு கொண்டவர், முகத்தை அழுத்த துடைத்தபடி எழுந்து செல்ல,

ராஜியோ இதென்ன.. இத்தனை நாள் அம்மா நம்ப பேச்சை தான் கேட்டு ஆடுச்சு இப்ப என்ன புதுசா.. இது நல்லதுக்கில்லையே! இவளுள்ளும் குழப்பங்களோடு பயமும் சூழ்ந்தது.

“வா துரை” என அவனை வீட்டிற்குள் அழைத்த வசந்தா “இவங்கலாம் யாரு?” என அருகில் நின்றிருந்த பெரியவர், கூடவே மேலும் இருவரை காட்டி கேட்க

“கிரி வீட்டை விக்கனும்னு சொன்னாம்மா.. அதான் ஆளை கூட்டி வந்தேன், கொஞ்சம் வழி விட்டிங்கனா நல்லா இருக்கும்” என அணுகுண்டு ஒன்றை வசந்தா தலையில் இவன் இறக்க, அது ராஜியின் தலையில் விழுந்து வெடித்தது.



Advertisement

வசந்தா விரக்தியான சிரிப்போடு வழி விட்டு நிற்க, ராஜி சிலை போல் நின்று விட்டாள்.

இதை.. இதை.. தான் எதிர்பார்த்தேன் என விதி கை கொட்டி சிரித்து கொண்டிருந்தது.

வந்த நான்கு பேரும், பத்து பதினைந்து நிமிடங்களாய் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு, “வீடு புதுசா தான் இருக்கு துரை, கிரி சொன்ன விலைக்கே கொடுத்துடலாம்.” வந்தவர்களும் ஒப்புதல் அளித்தார்.

Advertisement

மோகனுக்கு தெரிந்தவர்கள் என்பதால் வீட்டை இப்போது அவர்கள் எடுத்து கொள்ளட்டும் என்றும் கிரி வந்ததும் ரெஜிஸ்டர் பண்ணி கொள்ளலாம் என்றும் ஏற்கனவே பேசி இருக்க.

Advertisement

“அடுத்த வாரம் வீட்டு சாவியை கொடுத்திட்டு, பணத்தை வாங்கிக்க துரை.. அப்போ நாங்க வாரோம்” என விடை பெற, பின் தங்கி விட்டான் துரை.

“என்னம்மா எதுவும் பிரச்சனையா, வீட்டை உடனே விக்கனும்னு நிக்கான். எவ்ளோ கஷ்டபட்டு கட்டினான். ப்ச்.. போற போக்கை பார்த்தா, எதுவும் சரியா படலை” என புலம்பியவன்

“வாடகைக்கு வீடு பாக்க சொன்னாம்மா. நான் பார்க்கிறேன். ஒரு வாரத்தில் சாவி கொடுக்கனும் அவங்க கிட்ட, அதனால நீங்க பொருளெல்லாம் பேக் பண்ணிடுங்கம்மா.. கடைல வேலை பார்க்குற பசங்க இருக்காங்க, தேவைன்னா எனக்கு போன் அடிங்க, அனுப்பி வைக்கேன்.” இவன் பேச பேச பேய் அடித்தாற்ப்போல் இருந்த இருவரையும் பார்த்து நெற்றி சுருக்கியவன்

Advertisement

“கிரி தான் சரியில்லைன்னு பார்த்தா, இவங்களும் சரியில்லை போலயே” சொல்ல வந்ததை மட்டும் சொல்லிவிட்டு, வேறெதும் அவர்களிடம் கேட்காமல் கிளம்பி விட்டான்.

அதுவரை கோபமாய் இருந்த வசந்தாவின் முகத்தில் லேசாய் புன்னகை படர்ந்தது.

“ஆக மொத்தம் வீடு யாருக்குமே இல்லை.. உன் வீட்டாளுக பண பேய்க, வீடில்லாமல் செந்திலோ, காந்திமதியோ உன்னை வீட்டுக்குள் சேர்க்க போறதில்லை. நீ கடைசி வரை இங்க தான் இருக்க போற. வா பழைய மாதிரி வாடகை வீட்டில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிப்போம். உங்கூட சேர்ந்து ஆடுனதுக்கு எனக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலயும் வேணும்”

“ஆனா ஒன்னு மட்டும்டி, எனக்கு இன்னும், மூனு வருஷமோ, நாழு வருஷமோ போய் சேர்ந்திடுவேன், ஆனால் நீ.. ரொம்ப கஷ்டம் ராஜி” மனதில் இருந்ததெல்லாம் தன் போக்கில் வார்த்தைகளாய் வந்து விழுந்தது.

“ஆம்பளை பையலுக்கு இருக்க பொறுப்பு உனக்கில்லாம போச்சு.. வயசுக்கு தகுந்த மாதிரி நானும் நடந்துக்கலை.. எல்லாம் என்னை சொல்லனும். வளர்த்து வச்சிருக்கேன், மயி* மாதிரி, நான் பெத்ததும் சரியில்லை, நானும் சரியில்லை” கஷ்டபட்டு கட்டிய ஓரே வீடும் போய் விட்டது என கத்தி கொண்டே இருந்தார் வசந்தா, ராஜியின் திகிலடைந்த முகத்தை பாராது.

*******

“மாப்ள சொல்லுங்க” எப்போதும் கிரியிடம் ஆரவாரமாய் பேசுபவர், அமைதியாய் பேசினார். ‘கோபப்படாம பேசுறதே பெரிய விசயம் கிரி’ அவன் மனசாட்சி எடுத்து கூற

“கர்ணா எங்க மாமா? வேலை முடிஞ்சிட்டா, வந்துட்டாப்ளையா?” என கேட்டான்.

சற்றே யோசித்தவர் பின் “ம் வந்திட்டான். அவன் ரூமில் இருக்கான்” என செல்வம் கூற

“கொஞ்சம் இரண்டு பேர் கிட்டையும் ஒன்னா பேசனும்” இவன் தயங்கினான்.

“ஒரு ஐஞ்சு நிமிசத்தில் கூப்பிடறேன்” என வைத்துவிட்டு, கர்ணனின் அறைக்கு சென்றார். அங்கே கமலியை, கர்ணன் முறைத்தபடி ஏதோ பேசிக்கொண்டிருக்க, மல்லிகா, பிரபா இருவரும் வேடிக்கை பார்த்திருந்தனர்.

“அவளை திட்டாதடா,கமலிக்கு தான் வீடு கட்றாங்கனு நினைச்சு தான் அவளோட நகையை கொடுக்க சொன்னேன், ஆனால் அது அவங்க மகளுக்குனு இரண்டு நாளைக்கு முன்னாடி தான்டா தெரியும். ஏதோ வேணும்னே பண்ணின மாதிரி பேசாத கர்ணா” கெஞ்சலில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தார் மல்லிகா.

“நீ கொஞ்சம் பேசாம இருக்கியா!” என தாயை அதட்டியவன், கமலியை பார்த்து “கிரி பாரின் போனதில் இருந்தே நீ அந்த வீட்டில் தானே இருந்த? வீடு உனக்காகவா இல்லை அவங்க மகளுக்காகவான்னு கூட தெரியாமலேயா இருந்த? என்னத்த கவனிச்ச? கண்ணு நல்லா வேலை செய்யுதா, இல்லையா? இதை கண்டுபிடிக்க இத்தனை நாளாகி இருக்குல உனக்கு” மல்லிகாவை விட்டுவிட்டு கமலியிடம் பாய்ந்தான் கர்ணன்.

“நான் எங்க கண்டுபிடிச்சேன், அத்தை என்னைய கூப்பிட்டு சொன்னாங்க” கமலி பேச

“அடிப்பாவி, நீ நிஜமாவே மண்ணு தானா? உன் மாமியார் சொல்லைன்னா அதுவும் தெரிஞ்சிருக்காதா?” மல்லிகா தலையில் கை வைக்க

“என்னடி சொன்னாங்க” அதுவரை கட்டிலில் அமர்ந்திருந்தவன் எழுந்து நின்றான்.

“அது.. ராஜிக்கு சீர் எதுவும் செய்யலை. அதனால மாடி வீட்டில் அவ இருக்கட்டும். கிரியும் பாரினில் தானே இருக்கான், உங்களுக்கு கீழ் வீடு போதுமேனு” இவள் சொல்லி முடிக்கும் முன்

“ச்சே தப்பு பண்ணிட்ட கமலி” என கர்ணன் உச்சு கொட்டி “இப்படிபட்ட மாமியாருக்கு, நீ பதினைஞ்சை கொடுத்திருக்க கூடாது, முப்பது பவுனையும் கொடுத்திருக்கனும், உனக்கனுப்புன சீரெல்லாம் சும்மா தானே இருக்கு, ப்ரியாவே உன் நாத்தனாருக்கு கொடுத்துரு” சொல்லி முடித்தவுடனே களுக்கென சிரித்துவிட்டாள் பிரபா.

 மல்லிகா, கமலி, கர்ணன் மூவருமே பிரபாவை முறைத்து தள்ள, வாயை இறுக்கி மூடிக்கொண்டாள் பிரிபா.

“ம்க்கும்” செருமிக்கொண்டு உள்ளே வந்தார் செல்வம். பிரபாவை விடுத்து அனைவரும் செல்வத்தை பார்க்க, “கிரி ஏதோ பேசனுமாம்.. என் ரூமுக்கு வாடா” என கர்ணனை அழைத்தார் செல்வம்.

“ஓ.. சமாதானாமா?” என நக்கலாய் கேட்டவன் “என்ன, அவன் அக்காவும், அம்மாவும் ஏமாத்துனது பத்தாதுன்னு இவனும் ஆரம்பிக்கானா? ஏமாறதுக்கு நான் கமலி இல்லை” வீம்பாய் ஆரம்பித்தவனை “அவர் அப்படியெல்லாம் இல்லை.. முழுசா தெரியாம அவர பத்தி  தப்பா பேசாத” கமலி இடையில் பேச

“நகையை கொடுத்து ஏமாந்ததும் இல்லாமல், புருஷனுக்கு சப்போர்ட் வேறையா! உனக்கெல்லாம், நல்ல புருஷன் கிடச்சிருந்தானோ.. கையில் பிடிக்க முடியாது உன்னைய” எகிறி கொண்டு வந்தான் கர்ணன்,

தங்கையின் வாழ்க்கையை நினைத்து பயம் அவனுள்.

“கமலி சொல்றதும் நியாயம் தான் கர்ணா, நடந்த பிரச்சனை முழுசா எதுவும் தெரியாமல் பேச கூடாது தானே. கமலியையும் பேசாத!” மகனை கண்டித்து “மாப்ள பேசனும் சொல்றாப்ள, வா” என இவர் இழுத்து செல்ல, பிரபா, கமலி, மல்லிகா என வால் பிடித்தபடி செல்வத்தை பின்தொடர

“மாப்ள, எங்க கிட்ட தான் பேசனும்னு சொன்னாப்ல.. நீங்க இங்கேயே இருங்க” என செல்வம் கர்ணனை மட்டும் அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.

“ஸ்பீக்கரில் தான் போட போறேன். ஏடாகூடாம ஏதாவது பேசி வைக்காத” என கர்ணனிடம் கூறி விட்டே, கிரிக்கு அழைத்து,  கர்ணனும் அருகில் இருப்பதை கூறினார்.

ஆழ மூச்செடுத்த கிரி, எந்த ஒரு முகஸ்துதிகளும் இல்லாமல் வீட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை மேலோட்டமாய் கூறிவிட்டு, இவர்களின் பதிலுக்காய் அமைதி காத்தான்.

கேட்டவர்களுக்கோ ‘இதென்ன வீட்டு ஆம்பளையிடம் சொல்லாமல் இஷ்டத்திற்கு செய்வது? என்ன பழக்கம் இது?’ என்று தான் தோன்றியது இவர்களுக்கு.

“இப்போ என்ன பண்ணலாம்.. என் பக்கம் எதுவும் உதவி தேவை படுதா மாப்பிள்ளை” என செல்வம் கேட்க, கர்ணனோ அமைதியாய் நின்றிருந்தான்.

“இல்லை மாமா, தேவைபட்டா நானே கேட்கிறேன். சில முடிவுகளை எடுத்திருக்கேன். அதற்கான விளக்கம் கொடுக்குற நிலையில் இப்போ நான் இல்லை! ஆனா நடக்குறப்போ உங்களுக்கு சங்கடம் வர கூடாதே”

“அப்படி என்ன பண்ண போறீங்க..” என கர்ணன் கேட்க

“வீட்டை விக்க  சொல்லிட்டேன்” இவன் கூற

“என்ன?” கோரசான குரல் வந்தது கர்ணன், செல்வம் இருவரிடமிருந்தும்.

“என் மேல நம்பிக்கை இல்லையா? ஏன் இவ்வளவு ஷாக் ஆகுறீங்க!” இவன் தயங்கி பேச

“அய்யோ அப்படிலாம் இல்லை..” உடனடியாக மறுத்த கர்ணன்.. “அவசர பட வேண்டாமே! வேற ஏதாவது பண்ணாலாம்” கர்ணன் அவசரமாய் பேச

“கமலி நகை தானே மாப்பிள்ளை, பேங்கில் தானே இருக்கு பார்த்துகலாம். உங்க அக்கா இப்போதைக்கு இருக்கட்டும். அப்புறமா சீர் செஞ்ச பிறகு பார்த்துகலாம்” என செல்வமும் அவசர அவசரமாய் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!