Skip to content
Post Views: 52
ரிதம் 11
“இனி உனக்கு எல்லாம் நல்ல காலமா அமையட்டும்” என்று இரு பெரியவர்களும் வாழ்த்தினார்கள்.
Advertisement
அவளுக்கு விரக்தியான புன்னகை தான் வெளிப்பட்டது. இருந்தாலும் அடுத்த முயற்சியை மேற்கொள்வதற்காக கிளம்பி விட்டாள்.
அவர்கள் வருவார்கள் என்று முன்பே சொல்லி வைத்திருந்ததனால், பெயரைச் சொன்னவுடனே, கேட் திறக்கப்பட்டு உள்ளேயும் அவர்களுடைய வாகனம் அனுமதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அவர்கள் தயக்கத்தோடு இறங்கும்போது மகாலட்சுமி வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்றார்.
“வாங்க, வாங்க. எல்லாரும் எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சுல்ல?” என்று கூறியவர் அப்படியேதான் இருந்தார். அவரின் வரவேற்பிலும், பொலிவிலும், முகத்திலும் எந்த மாற்றமும் பெரிதாக நிகழ்ந்துவிடவில்லை. மகனின் நிலை உயர்ந்தாலும் அவரின் பாசம் குறையவில்லை, பண்பும் மாறவில்லை, புன்னகையும் மறையவில்லை.
Advertisement
வசதி வாய்ப்பு பெருகிய பிறகும், பேரும் புகழும் கிடைத்த பிறகும் அந்த வீட்டிலும் பெரிதாக மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை.
உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தார். அவன் சரியாக அந்நேரத்தில் மாடிப்படிகளிலிருந்து இறங்கி வந்தான். அவன் பார்வை முழுவதும் நத்தாஷாவின் மீதே இருந்தது.
மூன்று வருடங்களுக்கு முன்பாக பார்த்த அந்த பெண் இவள் இல்லை என்று தோன்றியது.
குறுக்கெழுத்துப் போட்டியில் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கச் சொல்வார்கள். ஆனால் அவளிடம் 6000 வித்தியாசங்கள் அவனுக்குத் தெரிந்தது.
பொலிவு இழந்து, ஒளி இழந்து, நிறம் கூட குறைந்து, வதங்கிய ஒரு மல்லிச் செடியைப் போல இருந்தாள்.
அந்த வாகனம் அவன் காம்பவுண்ட் கேட்டிற்குள் நுழையும் போதே, அவன் அறையில் இருந்த திரைச்சீலையை விலக்கிப் பார்த்தான்.
ஆராயும் பார்வையோடு இறங்கிய நத்தாஷாவைத்தான் அளவெடுக்கத் தொடங்கினான். ஆனாலும் தெளிவாக அவள் தெரியவில்லை. உடனே அவளைப் பார்க்க வேகமாக கீழே இறங்கி விட்டான். இப்பொழுது தெளிவாகத் தெரிந்தாள். ஆனால் தெரிந்து என்ன பயன்? தவறு செய்து விட்டேனா? அப்பொழுதே ஏதாவது செய்து அவளை இங்கேயே தேங்கி நிற்க வைத்திருக்க வேண்டுமா? அல்லது வற்புறுத்தியிருக்க வேண்டுமா? அவன் சிந்தனையில் ஓராயிரம் கேள்விகள்.
அவனைப் பார்த்ததும் அவர்களும் எழுந்து நின்றனர். ஆனால் அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
“எனக்கெதுக்கு இந்த மரியாதை எல்லாம்? உக்காருங்க, ப்ளீஸ்” என்று சொல்லிக்கொண்டே வந்து அவர்கள் எதிரில் அமர்ந்தான். இப்பொழுது அவள் தன்னைப் பார்க்காமல் இருப்பதை உணர்ந்து, சூழ்நிலையைச் சகஜமாக்க முற்பட்டான்.
“அப்புறம் ப்ரீத்தி? சொன்னது போல ரெண்டே மாசத்துல உங்க பிரண்டைக் கூட்டிட்டு வந்துட்டீங்க? உண்மையிலேயே உங்களைப் போல பிரண்ட் கிடைக்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்” என்றான் கௌதம்.
அப்போதுதான் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் நத்தாஷா. அவள் பார்வையை உணர்ந்து, அவன் பார்வையும் அவள் புறம் திரும்பியது.
இரு பார்வைகளும் ஒன்றோடு ஒன்று நேர்கோட்டில் நிற்க, உடனே பார்வையைத் தாழ்த்திக் கொண்டவள் எச்சிலை உள்கூட்டி விழுங்கினாள்.
“எப்படி இருக்கீங்க நத்தாஷா? என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? முதல் முதல்ல என்னைப் பார்க்கும்போது நம்பிக்கை இல்லாம இருந்துச்சுன்னு எனக்கு தெரியும். அதுக்கப்புறம் இந்த வீட்டுக்கு வரும்போதும் அதே நம்பிக்கை இல்லாத தன்மை இருந்துச்சு. ஆனால் இந்த வீட்டை விட்டு போகும்போது உங்களுக்கு நம்பிக்கையை நாங்க விதைச்சிருந்தோம்னு நினைச்சோம். ஆனா அப்படி இல்ல போல?” என்று அவன் கேட்க,
“அய்யோ, அப்படியெல்லாம் இல்ல சார்” என்றாள் பதட்டமாக.
“கால் மீ கௌதம். நோ சார் அண்ட் ஆல். முதல் முதல்ல பார்க்கும்போது என்னால சொல்ல முடியல. ஏன்னா நீங்க ரொம்ப பயந்திருந்தீங்க. இப்பயும் அப்படியேதான் இருக்கீங்க. என்கிட்ட போன்ல பேசும்போது ரொம்ப நம்பிக்கையா பேசினீங்க. ஆனா மூணு வருஷத்துல அந்த நம்பிக்கை குறைஞ்சிடுச்சா?” என்று கேட்டான்.
“அப்படி இல்ல சார். உங்களோட தரம் ரொம்ப உயர்ந்திருச்சு. அப்போ நீங்க பெயர் தெரியாத படங்களுக்கு மியூசிக் டைரக்டரா இருந்தீங்க. அதனால மத்தவங்களுக்கு உதவி பண்ணனும்னு நினைச்சீங்க. ஆனா என்னோட நிலைமை தான் மாறிடுச்சு. என்னோட வாழ்க்கையை புரட்டி போட்டுடுச்சு. மேற்கொண்டு என்ன செய்யுறதுன்னு தெரியல. அப்பாவுக்கு அப்புறம் இந்தக் குடும்பத்தை நான்தான் பார்த்துக்கணும். கடமைகள் இருந்ததால சென்னைக்கு வர முடியல” என்று கூறினாள்.
முதலில் இருந்த தயக்கம் இப்பொழுது மட்டுப்பட்டு விட்டது என்பது அவள் பேச்சில் தெரிந்தது.
“உங்க தங்கை என்னோட மிகப்பெரிய ஃபேன்னு ப்ரீத்தி சொன்னாங்க. அவங்களைக் கூட்டிட்டு வரலையா?” என்று கேட்டான் கௌதம்.
“இல்ல சார். அவள் வரேன்னுதான் நின்னாள். இதோ, இவள்தான் இந்த வாட்டி வேணாம்னு சொல்லிட்டாள்” என்றாள் ப்ரீத்தி.
ஏன்? என்பது போல அவள் புறம் திரும்பிப் பார்த்தான்.
“அது வந்து, அடுத்த வாட்டி கூட்டிட்டு வரதா சொல்லியிருக்கேன் சார்” என்று தயக்கமாக நிறுத்தினாள் நத்தாஷா.
“ஓகே. கண்டிப்பா கூட்டிட்டு வாங்க” என்றவன் தன் தாயின் புறம் திரும்பினான். அவர் நத்தாஷாவையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
ம் ம்ஹும் என்று தொண்டையைக் கனைத்தான். அப்பொழுதும் அவர் திரும்பாமல் இருந்தார்.
“அம்மா, இனிமே அவங்க தினமும் வருவாங்க. நீங்க கொஞ்சம் கொஞ்சமா தினமும் அவங்களைப் பார்க்கலாம். இப்போ அவங்களுக்கு ஏதாவது குடிக்கிறதுக்கு கொண்டு வரச் சொல்லுங்க” என்றான்.
“அதெல்லாம் இன்டர்காம்ல சொல்லிட்டேன்டா. இந்தப் பொண்ணு ரொம்ப ஒல்லியாயிட்டாள். சரியா சாப்பிடறதே இல்ல போல இருக்கு. அதுதான் ப்ரூட் ஜூஸ் போடச் சொல்லி இருக்கேன். அதுக்கு கொஞ்ச நேரம் ஆகத்தான் செய்யும். இன்னைக்குத்தான் உன் ட்ரூப் ஆளுங்க யாரையும் வர வேணாம்னு சொல்லிட்டல்ல? அப்புறம் என்ன? பொறுமையா ஆற அமர பேசலாம்” என்றார்.
“ஆற அமர பேசறதுக்காக இங்க அவங்களை நான் வரச் சொல்லல. ப்ராக்டிஸ் பண்ணனும். அதுக்காக தான் கூப்பிட்டிருக்கேன்” என்றான் அழுத்தமாக.
“அப்போ இனிமே இங்க இவங்க தினமும் வருவாங்களா? நீ தனியா ஆரம்பிச்ச மியூசிக் அகாடமிக்கு இவங்களை அழைச்சிட்டு போகலையா? நீ விளையாட்டுக்குச் சொல்றேன்னு நினைச்சேன்” என்றார் மகாலட்சுமி.
அவன் பார்வையால் தன் தாயிடம் கண்டிப்பது தெரிந்தது.
தாயும் மகனும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று ப்ரீத்தி யோசனையாக பார்த்தாள். ஆனால் நத்தாஷா எதையுமே பார்க்கவில்லை. கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள்.
“அப்படியா சார்? நீங்க மியூசிக் அகாடமியை தனியா ஆரம்பிச்சிட்டீங்களா? பாருங்களேன், எனக்கு அது தெரியவே இல்லை. நாங்க பாட்டுக்கு இங்க வந்து உங்களைத் தேடிட்டிருந்தோம்” என்று கூறினாள் ப்ரீத்தி.
“இந்த ஒன் இயரா தான் ப்ரீத்தி தனியா ஆரம்பிச்சிருக்கோம். அதுக்கு முன்னாடி வரைக்கும் இங்கதான் ப்ராக்டிஸ் அன்னைக்கு போல நடந்தது. முழுக்க முழுக்க என்னோட உழைப்புலையும் , அதுல சம்பாதிச்ச பணத்திலிருந்துதான் மியூசிக் அகாடமி ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். முதல்ல வந்த சொற்ப பணம் எங்களுக்குள்ள ஷேர் பண்ணிக்கறதுக்கே சரியா இருந்தது. பட் ஹிட் மூவி கொடுத்த பிறகு என்னையும் ராசியான மியூசிக் டைரக்டரா ஒத்துக்கிட்டாங்க. தொடர்ந்து ஹிட் கொடுத்ததினால படங்களும் நிறைய வர ஆரம்பிச்சுது. பணமும் குவிய ஆரம்பிச்சுருச்சு. அதனால அகாடமி ஓபன் பண்ணிட்டேன். அதுல நிறைய பேருக்கு ட்ரைனிங் கொடுக்கிறேன். அடுத்தடுத்த படங்கள்ல வாய்ப்பு கொடுக்கிறேன்” என்றான்.
“அப்போ நான் நாளையிலிருந்து அங்க வந்துறவா சார்?” என்று கேட்டாள் நத்தாஷா.
“ஏன்? உங்களுக்கு இங்க ப்ராக்டிஸ் பண்றதுல ஏதாவது பிரச்சனையா?” என்று அவன் கேட்டு வைக்க, அவள் புரியாமல் பார்த்தாள் அவனை.
‘முன்பென்றால் இங்கேதான் அவனுடைய அகாடமி இருந்தது. ஆனால் தனியாகத் திறந்து அங்கே எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும் போது, தன்னை மட்டும் எதற்காக இங்கு வந்து கற்றுக்கொள்ளச் சொல்கிறான்?’ மனதினுள் சந்தேகம் எழுந்தாலும், அவளால் அதை வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை.
“சார், உங்களோட மியூசிக் அகாடமிலேயே எனக்கு ப்ராக்டிஸ் கொடுக்குறீங்களா? அங்க வந்தா நாலு பேர் கூட பழகுற மாதிரி இருக்கும். எனக்கும் நாலெட்ஜ் கெயின் பண்ற மாதிரி ஆகும். இங்க வந்தா ரொம்ப தனிமையா ஃபீல் பண்ணுவேன்னு தோணுது” என்று அவள் தயக்கத்தோடு கூறினாள்.
அவன் ஏளனமாகப் புன்னகைத்தான்.
“எனக்கு உயிர் கொடுத்த என் அம்மா என் கூட இருக்கும்போது, அப்படி உங்களை நான் என்ன பண்ணிடுவேன் நத்தாஷா? நான் எவ்வளவு போராடினாலும், உங்களுக்கு எப்பவுமே என் மேல நம்பிக்கை வராது போல?”
“ஐயோ! அப்படியெல்லாம் இல்ல சார். உங்க மேல இருக்க நம்பிக்கையில்தானே இவ்வளவு தூரம் கிளம்பி வந்து இருக்கோம். அதுவும் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன்” என்றாள்.
“என் மேல இருக்க நம்பிக்கையில நீங்க கிளம்பி வரல. உங்க தோழி மேல இருக்க நம்பிக்கையில வந்து இருக்கீங்க. உண்மையிலேயே அவங்க என் மேல வச்ச நம்பிக்கையை நீங்க வைக்கல நத்தாஷா.” அவள் பேசியபோது அருகில் இருந்து பார்த்தவனைப் போல, அப்படியே அச்சு பிசகாமல் பேசினான். அவள் பதில் தெரியாமல் தடுமாறினாள்.
“ஓகே, லீவ் இட். அங்க இருக்கவங்க எல்லாம் ஏற்கனவே ப்ராக்டிஸ் முடிச்சவங்க. கத்துக்குட்டியா உங்களை கூட்டிட்டு போய் அங்க நிறுத்த வேணாம்னு நினைச்சேன். அதனால ஒன் மன்த்துக்காவது இங்க ப்ராக்டிஸ் கொடுக்கலாம்னு யோசிச்சேன். பட் உங்களுக்கு நம்பிக்கை இல்லாத போது எதுவும் பண்ண முடியாது. நீங்க அங்கேயே வந்துருங்க” என்றவன் தன் தாயின் புறம் திரும்பினான்.
“அம்மா, போகும்போது அவங்க கிட்ட விசிட்டிங் கார்டு கொடுத்துடுங்க.”
“சார், ஐ அம் சாரி. நான் தப்பா மீன் பண்ணல. எனக்கு உண்மையிலேயே தனியா ப்ராக்டிஸ் பண்றதுல இன்ட்ரஸ்ட் இல்ல. அதனாலதான் அப்படி சொன்னேன். மிகப்பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. அப்படி தவறான எண்ணத்தில் நான் உங்களை நினைச்சதே இல்ல” என்று அவள் சிறு குரலில் கூறினாள்.
“நினைச்சதே இல்லையா? வாட் எ ஜோக்! முதல் முதல்ல நாம மீட் பண்ண நாள் ஞாபகம் இருக்கா? நான் அந்த மாதிரி பொண்ணு இல்லன்னு சொன்னீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?” கேட்டபடி அவளை ஆழமாகப் பார்த்தான்.
“அப்போ நீங்க எனக்கு ஸ்ட்ரேஞ்சர் சார். ஆனா இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பாத்துட்டுப் போனதுக்கப்புறம் எனக்கு உங்க மேல நம்பிக்கை வந்துருச்சு. அதனாலதான் உங்களுக்கு கால் பண்ணிப் பேசினேன். நான் கண்டிப்பா வருவேன்னு சொன்னேன். ஆனா என்னோட சூழ்நிலை வர முடியாம போயிடுச்சு” என்றபடி தலை தாழ்த்தினாள்.
“என்ன கௌதம் இது? வீட்டுக்கு வந்திருக்க பிள்ளைங்க கிட்ட இப்படியா பேசுறது? அவள் சொல்றதும் சரிதானே? இங்க தனியா ப்ராக்டிஸ் பண்றது சங்கடமாத்தான் இருக்கும்” என்று நத்தாஷாவிற்காகப் பேசினார் மகாலட்சுமி.
“அம்மா, புரியாம பேசாதீங்க. நான் பர்சனலா இவங்களுக்கு டிரெய்னிங் கொடுக்கணும்னு நினைச்சேன். அகாடமில பொதுவா போனா என்னால அப்படி பர்சனலா கவனிக்க முடியாது. எல்லாருமே ட்ரெய்னிங் முடிச்சு ப்ரொபஷனலா இருக்கிறவங்க. ட்ரெயினிங் சென்டர்ல புதுசா என்னால இவங்களை கொண்டு போய்ச் சேர்க்க முடியாது. அதனாலதான் ஈவினிங் மட்டும் இங்க ப்ராக்டிஸ் வச்சுக்கலாம்னு யோசிச்சேன். பட் நாம நினைக்கிறதெல்லாம் நடக்கிறது இல்லல்ல?” என்று அவன் கூற,
“திரும்பத் திரும்ப அதே பேச்சு வேண்டாம். நத்தாஷா இங்க வரலைன்னா என்ன? நான் மியூசிக் அகாடமிக்கு வந்து அவளைப் பார்த்துக்கிறேன். இன்னைக்கு எல்லாரும் இங்க லன்ச் சாப்பிட்டுத்தான் கிளம்பணும். ஒரு நிமிஷம் நான் கிச்சன்ல எல்லாம் ஆயிடுச்சான்னு பார்த்துட்டு வரேன்” என்றபடி நகர்ந்துவிட்டார் மகாலட்சுமி.
அவர் அப்படி நகர்ந்ததும் சிறிது நேரம் அங்கு அமைதி மட்டும்தான் நிலவியது. பிறகு கௌதம் ரமேஷிடம் சகஜமாகப் பேச ஆரம்பிக்க,
சிறு குரலில் தன் தோழியைக் கடிந்து கொண்டாள் ப்ரீத்தி.
“அவர்தான் கிளியரா இங்க ப்ராக்டிஸ் பண்ணலாம்னு சொல்றாருல்ல? உனக்கு ப்ராக்டிஸ் அவரே பர்சனலா கொடுக்கணும்னு நினைக்கும்போது, எதுக்கு நீ தேவை இல்லாத பேச்சு பேசுற? கூட நானும் தானே இருக்கப் போறேன்?” என்றாள் ப்ரீத்தி.
“அவர் அப்படி யோசிச்சிருப்பாருன்னு எனக்குத் தெரியாது ப்ரீத்தி. உண்மையிலேயே நான் அவரை சந்தேகப்படல. ஆனா இங்க தனியா ப்ராக்டிஸ் வேணாம்னு தோணுது.”
அப்பொழுதும் அவள் அதையே கூற, பற்களைக் கடித்தபடி தன் தோழியை முறைத்தாள் ப்ரீத்தி.
என்னதான் ரமேஷிடம் பேசிக் கொண்டிருந்தாலும், அவன் கவனம் அவர்களிடமே இருக்க, அவர்களின் பேச்சு பட்டும் படாமல் கேட்டது.
error: Content is protected !!