ஊஞ்சலாடும் முகிலே! 36
அத்தியாயம் 36
மகேஸ்வரன் ஹாலில் அமர்ந்திருக்க, மாலை வீடு வந்த அஞ்சலி அவரைப் பார்த்துவிட்டு சத்தமின்றி சமையலறை செல்ல, அங்கே தான் நின்றிருந்தார் லதா தேவியுடன்.
Advertisement
“தேவி அக்கா என்ன இந்நேரமே?“ என்று கேட்டு வந்த அஞ்சலியைப் பார்த்த லதா,
“நான் தான் சீக்கிரம் வர சொன்னேன். நைட்டு அவளுக்கு ஏதோ வேலை இருக்காம் அஞ்சலி!” என்று சொல்லவும்,
Advertisement
Advertisement
“அப்பா ஏன் ம்மா ஹால்ல இருக்காங்க?” என்று அவள் கேட்க,
“அவர் எங்க இருந்தா என்ன? ஈஸ்வர் அப்பவே வந்துட்டான் தெரியுமா?” என்ற லதா அவன் பேசியதும் மதியமே அறைக்கு சென்றவன் இன்னமும் வரவில்லை என்றும் சொல்ல,
Advertisement
“என்னம்மா இப்படி சொல்றிங்க?” என்று அஞ்சலியும் அதிர்ந்து கேட்டாள்.
“இவ்வளவு பிரச்சனை நடக்குது. இன்னும் பல்லவியை தப்பாவே பேசுறாரு உங்கப்பா. அதான் ரூம்க்கு முடிஞ்சா போகட்டும் இல்லைனா இருக்கட்டும்னு நான் கண்டுக்கல!”
“அது சரி தான்! ஆனா வீட்டுக்குள்ள வரவும் அன்கம்ஃபார்ட்டபிளா இருக்கு இல்ல? அண்ணாவை கூப்பிட்டு எல்லாரும் பேசி முடிவு பண்ணுவோம். அப்பாவை ரூம்க்கு கூட்டிட்டு போங்க ம்மா!” என்ற அஞ்சலி சொல்லில் தேவிக்கும் சிரிப்பு வந்தது.
“அதுவும் சரி தான்!” என்று லதா கணவனை அறைக்கு அழைத்து செல்ல,
‘இவ இஷ்டத்துக்கு நான் இருக்க வேண்டியதா இருக்கு. எல்லாம் என் நேரம்!’ என எண்ணிக் கொண்டு படுக்கையில் சாய்ந்த பின் தான் மகேஸ்வரனுக்கு பரவாயில்லை என்றே தோன்றியது.
மதியம் முதல் கால்களை தொங்கவிட்டபடி சோஃபாவில் அமர்ந்ததில் முதுகோடு சேர்த்து அத்தனை வலி. சாய்ந்து படுத்த பின் தான் நிம்மதியாய் இருந்தது. மனைவி மேல் அத்தனை கோபமும் வந்தது.
“இப்ப தான் பிரீயா பேச முடியுது!” என்று வந்த அஞ்சலி,
“நான் வேனா போய் அண்ணாகிட்ட பேசவா?” என்று கேட்க,
“நீ போய் பிரெஷ் ஆகிட்டு வா. ஈஸ்வர் என்ன பன்றான்னு நான் பார்த்துட்டு வர்றேன். மதியமே அவன் சாப்பிடல!” என்றவர் அவனுக்கு சாப்பிட எடுத்துக் கொள்ள உள்ளே சென்றார்.
தங்களது அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பைக் கூட பேசி வேறொருவரை கவனிக்க சொல்லிவிட்டு, அறைக்குள் மனம் கேளாமல் அங்கும் இங்கும் சுழன்று படுக்கையில் விழுந்து பின் தலையை அசைத்து என என்னென்னவோ எண்ணிக் கொண்டு ஈஸ்வர் உழன்று கொண்டே இருந்தான் பல்லவி நினைவில்.
இத்தனை வருடம் என அவன் அவள் படிப்பை முடிக்க காத்திருந்த நேரத்தில் இப்படி ஒன்றை நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.
நான்கு மணியாகி இருந்தது அலைபேசி சத்தத்தில் கவனம் கலைய, அதை கையில் எடுத்துப் பார்த்தான்.
மீண்டும் அலுவலகத்தில் இருந்து தான் அழைக்கிறார்கள் என அவன் நினைத்து அசட்டையாய் பார்க்க, அழைப்பு பல்லவி பெயர் தாங்கி வந்ததில் புருவங்கள் உயர, கோபமும் அதே வேகத்தில் உயர்ந்தது.
உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்திருந்தான். ஆனாலும் அவள் அழைப்பை அழைப்பாள் என்று நினைக்காதவனுக்கு சிறு ஆறுதலாய் மனம் உணர்வதை தடுக்க முடியவில்லை.
“ஹெலோ சார்! எப்படி இருக்கீங்க!” என சாதாரணமாய் அவள் கேட்க,
“ஹ்ம்!” என்றொரு வார்த்தை தான் ஈஸ்வரிடம்.
“இன்னைக்கு காலேஜ்ல கொஞ்சம் பிஸி. இப்ப தான் வீட்டுக்கு வந்தேன்!” என்று அவள் சொல்லவும் ‘இதென்ன புதுசா? இப்படியெல்லாம் பேசுபவள் இல்லையே!’ என ஈஸ்வர் நினைக்க,
“வந்ததும் தான் அம்மா உங்களைப் பார்த்தேன்னு சொன்னாங்க. என்னாச்சு உங்க அப்பாக்கு? ஏதோ அச்சிடேன்ட்னு சொன்னிங்களாமே!” என்றவள் பேச்சில்,
“அப்பாவை விசாரிக்கவா?” என எண்ணிக் கொண்டவன் எண்ணம் இப்பொழுது அவள் திருமண விஷயம் நியாபகம் வந்து மீண்டும் முரண்டிக் கொண்டு கோபத்தை கொடுத்திருக்க,
“ஆமா! பெட் ரெஸ்ட்ல இருக்காங்க. ஒரு மாசம் ஆகும் ரெக்கவர் ஆக!” என்றான் தகவலாய். ‘உங்க அப்பாவாம்!’ மனது அதையும் குறித்துக் கொண்டது.
“உனக்கென்ன அக்கறை? உனக்கு தான் அவரை பிடிக்காதே?” எதாவது பேசு எனும் மனதின் சொல் கேட்டு அவன் இப்படி கேட்டு வைக்க,
“பிடிக்காது தான். பின்ன அவர் பேசின பேச்சுக்கு மாலை போட்டு மரியாதை பண்ணுவாங்களா? உங்க வீட்டுல யாருக்கு என்ன ஆனாலும் லதாம்மா தானே கவனிக்கணும். அவங்க பாவமில்ல. ரொம்ப வருத்தப்படுவாங்க தானே?” என்று பல்லவி சொல்லவும் தான் லதாவிற்காக அவள் அழைத்ததே புரிந்தது.
“அம்மாவை தான் மிஸ் பண்றல்ல? ரெண்டு வார்த்தை அவங்ககிட்ட பேசினா என்ன?” என அவனும் பேச்சை வளர்த்தான். இனியும் என்ன இருக்கிறது. அவளுக்காக காத்திருந்து அமைதியாய் இருந்து என்ன கிடைத்துவிட்டது என தோன்றியதில் ஈஸ்வர் பேச்சை வளர்க்க,
“அவங்களும் தான் நிச்சயமா என்னை மிஸ் பண்ணுவாங்க. அவங்க பேசினாங்களா? இந்த கொசுரு அஞ்சலி? ஸ்டேட்டஸ் வச்சு வெறுப்பேத்துறா என்னை ஆனா பேச மாட்டளாம். நேர்ல சிக்காமலா போவாங்க?” என அவளும் கோபமாய் கேட்க,
“அப்போ நான் மட்டும் என்ன? என்கிட்ட மட்டும் பேசுற?” என்றான்.
“வேற யார்கிட்ட கேட்க முடியும் நான்? அவங்க ரெண்டு பேரும் தான் எனக்காக கவலைப்படுறவங்க!” என்றவளை நினைத்து இவன் பல்லைக் கடிக்க,
“நீங்க தானே எங்களுக்கு மீடியேட்டர்!” என்றவள் சொல்லில்,
“அடிங்க…” என வந்துவிட்டது ஈஸ்வருக்கு.
“உங்களால தான் நான் நிம்மதியா இருக்கேனே!” என்றாள் அவன் சொல்லைக் கவனியாதவள். அதில் அவனும் அமைதியாக,
“ரொம்ப அடியா? லதாம்மா தனியா பார்த்துக்க மாட்டாங்களே! கூட துணைக்கு நர்ஸ் மாதிரி ஒரு ஆளை வச்சுக்கலாம் இல்ல?” என்று கேட்க,
“அம்மா தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்க!” என்றான் அவனும்.
“ஹஸ்பண்ட் செண்டிமெண்ட்டா. டூ பேட் லதாம்மா!” என்றவள்,
“சரி நான் கேட்டேன்னு லதாம்மாகிட்ட மட்டும் சொல்லுங்க!” என்றாள்.
“அவங்க ஒன்னும் என்னை தேடலை தான். ஆனாலும் அவங்களை மிஸ் பண்றேன். அதனால நான் போன் பண்ணினேன்னு மட்டும் சொல்லுங்க!” என்றாள்.
“அப்போ எப்ப தான் நீ பேசுவ? உன் கல்யாணத்துக்கு கூப்பிடுவியா இல்ல அதுவும் இல்லையா?” என்றான் கீர்த்திஸ்வரன்.
எங்கே வைத்துவிடுவாளோ என மனதில் அலைப்புறுதலை அவன் கேட்டுவிட, சில நொடிகள் அமைதி பல்லவி பக்கம்.
அவளே பேசட்டும் என ஈஸ்வரும் பேசாமல் இருக்க,
“அம்மா சொன்னாங்களா?” என்றாள் மெதுவாய்.
“லதாம்மாகிட்ட சொன்னிங்களா? என்ன சொன்னாங்க?”
“என்ன சொல்லணும்?” என்ற ஈஸ்வர் பதில் கேள்வியில்,
“அதான் அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வர்றாங்களே!” என்றவள் சொல்லியதில் பல்ஸ் எகிறியது ஈஸ்வருக்கு.
‘அடுத்த வாரமா?’ என மனதுக்குள் குமைந்து கொண்டவன்,
“என்னவோ சின்ன அம்பானி ஆகப் போறேன்னு சொன்ன?” என்றான் புகைச்சலை காட்டாமல் காட்டி.
“ஆகாம? கல்யாணமாகிட்டா சாதிக்க முடியாதா?” என்றவள் தலையில் பலமாய் கொட்ட, கைகள் பரபரத்தது.
“எனக்கு புரியுது. அவ்வளவு வீர வசனம் பேசிட்டு கல்யாணம் பண்ணிக்க போறாளேனு தானே இப்படி கேட்குறீங்க!” என்றதும் ஈஸ்வர் சத்தமின்றி இருக்க,
“உங்க கடனை எப்பாடுபட்டாவது அடைச்சுடுவேன்!” என்றவள்,
“அப்பாவோட சொந்தத்துல தான் மாப்பிள்ளை. அவங்களே கேட்டு வந்தாங்க. அம்மாக்கு அப்பான்னா இஷ்டம். அவங்க குடும்பத்தோட டச்ல இருக்கணும்னு ஆசை. அதான் அம்மாக்காக சரினு சொல்லிட்டேன். சொந்தம் விட்டுடக் கூடாதுனு நினைக்குறாங்க. சரி தானே?” என்றவள் சொல்லில் இறுதி வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டவன்,
“அப்போ எங்க சொந்தம் விட்டுப் போனா பரவாயில்லை இல்ல?” என்ற ஈஸ்வர் கேள்வியில் தூக்கிவாரிப் போட்டது பல்லவிக்கு.
“சார்?” என பதறிவிட்டாள். இத்தனை பதட்டம் அதுவும் அவள் குரலில் தெளிவாய் தெரிந்தது.
“லதாம்மாவை போய் நான் விட்டுக் குடுக்குறதா?” என அப்போதும் அவள் சொல்ல, கண்களை இறுக மூடி நெற்றியை நீவிக் கொண்டான் ஈஸ்வர்.
தான் ஒன்று நினைத்து சொல்ல, அதை லதாவைக் கொண்டு மட்டுமே அவள் அளவீட, எப்படி நேரடியாய் அவளிடம் சொல்வது என்று மட்டும் அவனுக்கு விளங்கவே இல்லை.
“இங்க பாரு பல்லவி. நீ எனக்கு பணம் தர்றது எல்லாம் நான் நினைக்கவே இல்லை.ஆனா இப்ப சொல்றேன். நீ தர்ற பணம் ஒண்ணு நீ எனக்கு தர்றதா இருக்கனும். இல்ல அது என்னோட பணமே எனக்கு வர்றதா இருக்கனும். வேற யார் பணமும் எனக்கு வேண்டாம்” என்று அவன் சொல்ல, சுத்தமாய் புரியவில்லை பல்லவிக்கு.
“படிப்பு முடிய எவ்வளவு நாள் இருக்கு?” ஈஸ்வர் கேட்க,
“இன்னுமொரு இருபது நாள்” என்றவள் சொல்லில்,
“என்ன?” என அதிர்ச்சியைக் காட்டினான்.
“ரெண்டு மாசம் இருக்கணுமே? ஏப்ரல் வர இல்லையா?”
“மார்ச் லாஸ்ட்க்கு முன்னவே ப்ராஜெக்ட் முடிஞ்சிடுமே. ஏன் சார்?” என்றதில் தான், தானாய் ஒரு கணக்கிடு வைத்தது நியாபகம் வந்தது.
“ஓகே! நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நாளைக்கு ஆபீஸ் வந்துடுறியா?” ஈஸ்வர் கேட்க, என்னவோ பலமாய் யோசித்தது பல்லவி மனது.
‘கோபப்பட்டு விட்டானோ! திருமணம் முடிந்தால் பணம் தர மாட்டேன் என நினைத்துவிட்டானோ! எதுவும் அக்ரிமெண்ட் கேட்பானோ!’ என அவள் என்னத்தில் அவள் திகைத்து நிற்க,
“ஹெலோ கேட்குதா!” என்றவன் குரலில் அத்தனை கோபமும் கண்டிப்பும் தெரிய, அப்படித்தான் என முடிவே செய்துவிட்டாள்.
போதும் இத்தனை நாட்களை தள்ளிவிட்டு காத்திருக்க, இங்கே அனைத்தும் அவனுக்கு எதிராய் நிற்க, இன்னும் காத்திருப்பதில் அர்த்தமே இல்லை என்று புரிந்து போனது கீர்த்திஸ்வரனுக்கு.
அதுவும் அடுத்த வாரம் பெண் பார்க்க வருவதாய் பல்லவி சொல்லியது இன்னுமே கோபமானது. அதை எல்லாம் சித்ரா சொல்லவே இல்லை. இவள் சொல்லி தான் அவனுக்கு தெரியும்.
அதற்குமுன் தான் பேசி சுமுகமாய் இதை கொண்டு சென்றுவிடலாம் என முடிவுக்கு வந்தவன் அன்னையிடம் கூட கூறிடாமல் தானே அவளை அழைத்துவிட்டான் பேச என்று.
“அன்னைக்கு வந்த அதே டைம் வந்தாலும் ஓகே. ஆனா கண்டிப்பா வர்ற!” என பேசிவிட வேண்டும் எனும் வேகத்தில் அவளிடம் இப்பொழுது இவன் உத்தரவை பிறப்பிக்க, அங்கே அவளுக்கு என்னவோ போலானது அவனின் இந்த பேச்சு.
‘தன் மீது நம்பிக்கை இல்லை போல’ என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.
“ஹ்ம்!” என அவள் இப்பொழுது கம்மியாகிவிட்ட குரலில் சொல்ல, அதில் மூச்சை இழுத்துவிட்டவனும் இப்பொழுது கொஞ்சம் அமைதியாகி இருந்தான். ஆனாலும் தெளிவாகி இருந்தான்.
“ஓகே! வரும் போது டெக்ஸ்ட் பண்ணிடு!” என்று சொல்லி அவன் வைத்துவிட, அவனுக்கு நம்பிக்கை கொடுக்க என்ன செய்யலாம் என சிந்திக்க ஆரம்பித்தாள் பல்லவி.
