Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-15

அத்தியாயம்-15

ஶ்ரீநிதி அங்கும் இங்கும் பதற்றமாக நடந்து கொண்டிருந்தாள். எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட திருப்பங்களால் அவள் செய்வதறியாது திகைத்துப்போயிருந்தாள். யாரோ ஒரு அந்நியன் மதியைத் தூக்கிக்கொண்டு சென்றபோது, அவளால் சட்டென்று எதிர்வினையாற்ற முடியவில்லை. பிறகு சுதாரித்துக்கொண்டு அவர்களுக்குப் பின்னால் ஓடினாள். தூரத்தில் அவர்கள் இருவரும் ஆக்ரோஷமாக வாதிடுவதைக் கண்டதும், ‘இதை மதி பார்த்துக் கொள்வாள்’ என்று நினைத்து அங்கிருந்து நழுவி வந்துவிட்டாள்.

நவீனின் வருகைக்காகக் காத்திருந்தாள். சில நிமிடங்கள் கழித்து ஆதித்யாவும், நவீனும் லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்தனர்.



Advertisement

நவீனின் முகம் பதற்றமாக இருந்தது. அவன் ஶ்ரீநிதியைப் பார்த்து ஒரு சங்கடமான ‘ஸாரி’ லுக் விட்டான். ஶ்ரீ பதிலுக்கு ஒரு கோபப் பார்வையை வீசினாள்.

“ஶ்ரீ..?” ஆதித்யா ஆச்சரியமாகக் கேட்டான் “நீ இங்க என்ன பண்ற?”

அந்தக் கேள்விக்கு அவள் தயாராக இல்லை. என்ன பொய் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள். ஆதித்யா அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து

Advertisement

“ஶ்ரீ, ஆர் யூ ஓகே?” என்று கேட்க,

Advertisement

“யா ஓகே தான்… நான் என் ஃப்ரண்டைப் பார்க்க வந்தேன்,” என்று ஒரு வழியாகச் சமாளித்தாள்.

“ஓகே.”

ஆதித்யா சென்றதும் நவீன், ஶ்ரீநிதியின் அருகில் வந்தான்.

Advertisement

“ஸாரி ஶ்ரீ…”

“ஸாரியா? எல்லாத்தையும் சொதப்பிட்டு இப்படி கூலா வந்து ஸாரி சொல்றீங்களா?”

“நான் என்ன பண்றது? உனக்கு ஃபோன் பண்ணிட்டு லிஃப்ட் ஏறப்போனப்போ, திடீர்னு விஸ்வநாதன் சார் அங்க வந்துட்டாரு. ஆதியும் அவரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. உங்களுக்கு மெசேஜ் பண்ணி அலர்ட் பண்ணலாம்னு பார்த்தா, என்கிட்டயும் பேச ஆரம்பிச்சுட்டாரு. ஒருவழியா அவங்க பேசி முடிச்சு வர்றதுக்குள்ள… ஆமா இங்க என்ன ஆச்சு? ஐயோ மதி எங்க?”

திடீரெனப் பதற்றத்தில் கத்தினான் நவீன்.

“ஆமா, இப்போ கேளுங்க… எல்லாம் கெட்டு குட்டிச்சுவர் ஆயிடுச்சு. நீங்க ஃபோன் பண்ணதை நம்பி மதி மயங்கி விழுந்துட்டா.”

“ஐயோ… அப்புறம் என்ன ஆச்சு?” அவன் பீதியுடன் கேட்டான்.

“அப்புறம் என்ன… நம்ம ஹீரோ வர்றதுக்குப் பதிலா, வேற ஒரு ஹீரோ வந்து அவளைத் தூக்கிட்டுப் போயிட்டான். அவ்வளவுதான், கிளைமாக்ஸ் அப்படியே ஆன்டி-கிளைமாக்ஸ் ஆகிடுச்சு.”

“ஓ மை காட், யாரு அந்த ஆன்டி-ஹீரோ?” நவீன் அதிர்ச்சியில் கேட்டான்.

“யாருக்குத் தெரியும்…”

“என்ன  ஶ்ரீ இப்படிப் பொறுப்பில்லாம பேசுற?”

“பொறுப்பைப் பத்தி நீங்க பேசுறீங்களா? பொறுப்பில்லாம பிளானைச் சொதப்பிட்டு…” அவனைச் சாடினாள் ஶ்ரீநிதி.

“ஸாரி… இப்படி நடக்கும்னு எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? சரி இப்போ மதி எங்க?”

“அவ அந்த ஆளுகூட வெளிய சண்டை போட்டுட்டு இருக்கா.”

“வா, போய் பார்க்கலாம்.”

இருவரும் வெளியே சென்றார்கள், ஆனால் அங்கே யாருமே இல்லை. இருவரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“விக்கி, உனக்கு காமெடி சென்ஸ் ஓவரா தான் இருக்கு,” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் மதி. அவர்கள் கேஃபிடீரியாவில் இருந்தனர்.

விக்கி மிகவும் கலகலப்பான ஆளாக இருந்தான். அவனது நகைச்சுவை உணர்வால் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் அவளைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான். இருவரும் வாய் ஓயாமல் பேசும்  சுபாவம் கொண்டவர்கள் என்பதால், சீக்கிரமே ராசியாகிவிட்டனர்.

முதலில் மதி அவனிடம் ஒரு இடைவெளி விட்டுப் பழகினாள். ஆனால் நேரம் செல்லச் செல்ல, அவன் அவளை மிகவும் சௌகரியமாக உணர வைத்ததோடு அவனிடம் தவறான பார்வையோ அல்லது வார்த்தையோ இல்லை. சற்றுநேரத்திலேயே அவன் ஒரு நல்ல நண்பனாகத் தெரியத் தொடங்கினான்,. அவனிடம் ஒரு உண்மையான தோழமையை அவளால் உணரமுடிந்தது.

“மதி… அடுத்த முறை நான் சொன்ன ஐடியாவை ட்ரை பண்ணிப் பாரு, கண்டிப்பா  வொர்க் அவுட் ஆகும்.”

“பார்க்கலாம்… அப்பவும் உன்னை மாதிரி ஒரு அவசரக் குடுக்கை வந்து சொதப்பாம இருக்கணும்.”

“டேய் விக்கி, உனக்கு இந்த அவமானம் தேவையா? வலியப் போய் பல்பு வாங்குறதே உன் வேலையா போச்சு,” என்று அவன் நாடகத்தனமாக பாவனைக்காட்ட,

அவன் சேட்டைகளைக் கண்டு அவள் சிரித்துக்கொண்டே எதேர்ச்சையாக  கடிகாரத்தைப் பார்த்தவள் அதிர்ந்து போய்,

“ஐயோ…ஒரு மணி நேரமா அரட்டை அடிச்சிட்டு இருக்கேனா? எப்படி நேரத்தை மறந்தேன்?” என்று தன்னைத்தானே நொந்து கொண்டு,

“ஸாரி விக்கி, டைமாச்சு போகணும், பை!”என்று அவசர விடைபெறுதலுடன் தன் இடத்திற்கு ஓடிப்போனாள்.

ஆதித்யாவின் கேபின் கதவைத் தட்டுவதற்கு முன் மதி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்… ஏதோ சிங்கத்தின் குகைக்குள் நுழைவது போன்ற உணர்வு.

“எஸ்… கம் இன்…” கடுமையான குரல் பதிலளித்தது.

அவள் மிக மென்மையாகக் கதவைத் திறந்து, நடுக்கத்துடன் உள்ளே நடந்தாள்.

ஆதி தனது லேப்டாப்பில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான். அவள் வந்ததை உணர்ந்தும் அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அவன் நெற்றியில் இருந்த சுருக்கமும், இறுக்கமான தாடையும், அழுத்தமான உதடுகளும் அவன் கடுங்கோபத்தில் இருப்பதை உணர்த்தின.

அவள் ஏமாற்றத்தில் உதட்டைப் பிதுக்கினாள்.

“கடவுளே… நான் எப்போ எக்ஸ்க்யூஸ் கேட்க வந்தாலும் இந்த ஹிட்லர் இவ்வளவு கோபமாத்தான் இருக்கணுமா?”

அவள் தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருக்க, அவனது திடீர் குரல் அவளைத் துள்ள வைத்தது.

“உன்னோட மைண்ட் வாய்ஸ்ச தவிர வேற ஏதாவது சொல்ல இருக்கா? இல்ல நாள் முழுக்க இப்படியே நிற்கப் போறியா?”

‘இவன் எப்படி நிமிர்ந்து பார்க்காமலேயே எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கான்?’ என்று மனதிற்குள் முணுமுணுத்தவள்,

“ஸாரி சார்… அது…” அவள் தொடங்குவதற்குள் அவன் இடையில் மறித்தான்.

“நான் குடுத்த வேலையை முடிச்சிட்டியா..? ‘யெஸ் பேங்க்’ (Yes Bank) நியூ இன்சூரன்ஸ் பிளான்ஸோட டேட்டாக்களை எல்லாம் வரிசைப்படுத்திட்டியா..?”

அவள் வாயடைத்துப் போனாள்… பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.

“ஐயோ… இன்னைக்கு நான் காலி… கரெக்டா பாயிண்ட்ட பிடிச்சு கேட்கிறாரே!”

அவள் பேசாமல் அமைதிகாப்பதை கண்டு ஆதி முதல் முறையாக அவளை நிமிர்ந்து பார்த்தான். ‘என்ன?’ என்பது போல் ஒரு புருவத்தை உயர்த்தினான்.

“சா… சார்…” அவள் திணறினாள்.

“அந்த வேலையை முடிக்க எனக்கு இன்னும் ரெண்டு நாள் வேணும் சார்…” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

அவன் வெடிப்பதற்குள் அவளே முந்திக்கொண்டாள், “அதுல ரன் பண்ணும்போது ஒரு எரர் (Error) வருது சார், அதைச் சீக்கிரம் சரி பண்ணி டெட்லைனுக்குள்ள (Deadline) முடிச்சுடுவேன்.”

“என்ன… இன்னும் ரெண்டு நாள் வேணுமா? ஆஃபீஸ் வொர்க்ன்னா வேடிக்கை விளையாட்டுன்னு நினைச்சிட்டு இருக்கியா? ஐ காண்ட் பிலீவ் திஸ்… இங்கப்பாரு சோம்பேறிங்களும் முட்டாள்களும் தான் சாக்குபோக்கு சொல்வாங்க…”

அவள் தலையைக் குனிந்துகொண்டாள். ஆதி கோபத்தில் பற்களைக் கடித்தான். அந்த விக்கியுடன் மதி கேஃபிடீரியாவில் அமர்ந்து மணிக்கணக்காகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காட்சி அவன் கண்ணுக்குள் வந்து போனது. அந்த விக்கி ஊரறிந்த ‘ஃப்ளர்ட்’ (Flirt).அவனுடன் இவளுக்கு என்ன பேச்சு..?

அவர்களை ஒன்றாகப் பார்க்கும்போது ஏன் தன் ரத்தம் கொதிக்கிறது என்று அவனுக்கே புரியவில்லை. தன்னுடன் இருக்கும்போது ஒருமுறை கூட இப்படிச் சிரிக்காதவள், அவனுடன் சிரித்ததை நினைக்கையில் அவன் இதயத்தில் ஊசிக்குத்தியது போல் வலித்தது. கம்ப்யூட்டர் திரையில் அவளது சிரித்த முகம் தெரிவது போன்ற பிரமை அவனுக்கு ஏற்பட அந்த எரிச்சலில் அவள் மேல் வெடித்தான்.

“மேடம்.. வேலையில மட்டும் கவனமா இருந்தா  இந்நேரம் முடிச்சிருக்கலாம். அதை விட்டுட்டு முழு நேரமும் காஃபி ஷாப்ல ‘தவம்’ இருந்தா வேலை எப்படி முடியும்?” என்று ஆத்திரமாகக் கேட்டான்.

ஒரு நிமிடம் குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தவள், அடுத்த கணமே ஆச்சரியத்தில் கண்களை விரித்துப் பார்த்தாள்.

“ஓ மை காட்… ஓ மை காட்… இங்க ஏதோ கருகுற  வாசனை வருதே? எனக்கு ஆதி சாரைப்பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் இந்த லுக்கை எப்படி கண்டுக்காம விட்டேன்.., இது பொசெசிவ்னெஸ்ல அவரு காட்டுற டிரேட்மார்க் கோபம்…”

தான் நினைப்பது சரிதானா என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிய எண்ணியவள்,

“சார்…” என்று கண்சிமிட்டியபடி அவனை அழைத்தாள்.

“காபி ஷாப்பா… நானா? நான் எப்ப சார் போனேன்? அதுவும் அங்கேயே தவம் இருக்கிறதா சொல்றீங்க… நான் அங்கெல்லாம் போனதே இல்லை சார்…” என்றாள் அப்பாவித்தனமாக முகத்தை வைத்து.

“பொய்…” என்றான் அவன் சுருக்கமாக,

“எப்படி அவ்வளவு கான்ஃபிடன்ட்டா சொல்றீங்க? நீங்க பார்த்தீங்களா நான் நாள் முழுக்க அங்க இருந்ததை?”

அவள் அவனுக்கு சவால் விடுப்பது போலக் கேட்டாள்.

அவன் ‘ஆமாம்’ என்று சொன்னால், அவனும் நாள் முழுக்க காபி ஷாப்பில் இருந்து அவளை வேவு பார்த்தான் என்பது உறுதியாகிவிடும். ‘இல்லை’ என்று சொன்னால், அவன் சொன்ன குற்றச்சாட்டு ஆதாரமற்றதாகிவிடும். அதனால் இரண்டு பக்கமும் மதிக்குத்தான் வெற்றி.

ஆதி அவளுக்குப் பதிலடி கொடுக்க வேகமாக வாயைத் திறந்தவன், சரியான நேரத்தில் நிறுத்தினான்.

‘ஆமாம்’ என்று சொன்னால் அவளிடம் ஒரு முட்டாளாகத் தெரிவோம் என்று உணர்ந்தவன், தன் சங்கடத்தை மறைத்துக்கொண்டு மீண்டும் கடுமையைக் காட்டினான்.

“எதுவாக இருந்தாலும்… டெட்லைனை மனசுல வச்சுட்டு வேலையைச் சீக்கிரம் முடி. கிளம்பு.”

அவள் இதழ்களில் ஒரு வெற்றிக் புன்னகை மின்னியது.

“சாருக்குள்ள பொறாமை வந்துடுச்சு…”  அந்த உண்மையை உணர்ந்த அவளது உள்ளம்  சந்தோஷத்தில் ஆனந்த கூத்தாடியது..

அலுவலகத்தில் எல்லோரும் பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருக்க,ஆதித்யா மட்டும் தன் கணினித்திரையில் இருந்து பார்வையை விலக்காமல் தீவிரத்துடன் வேலை செய்துகொண்டிருந்தான்.திடுமென  அவன் அறைக்குள்  நுழைந்த நவீன்,

“டேய் மச்சான்.. நீ இன்னும் கிளம்பலையா?”

“எங்கடா?”

“நம்ம கௌஷிக் மேரேஜ் பேச்லர் பார்ட்டிக்கு..”

“அதுக்கெல்லாம் நான் வரணுமா.. போடா..” என்றான் மறுப்பாய்,

“டேய்.. என்னடா இப்படிச் சொல்ற? செம பார்ட்டிடா.. நியூ இயர் ஈவ்-வும் சேர்ந்து வருது.. பார்ட்டி, பப், டான்ஸ்னு சும்மா கலைகட்டும்.. அதுவும் இத்தனையும் ஓசில கிடைக்கும் போது யாராவது மிஸ் பண்ணுவாங்களா? வாடா போலாம்..”

“நீ வேணா போ.. என்னை ஆளை விடு.. எனக்கு இதெல்லாம் செட் ஆகாது.”

“சரிடா நீ சாமியாராவே இரு.. நாங்க கிளம்பறோம்.. கேர்ள்ஸ் வேற வரேன்னு சொன்னாங்க.. ரெடி ஆயிட்டாங்களான்னு பார்க்கறேன்..”

“டேய் நவீன் ..”என்று அவனை நிறுத்தினான் ஆதி,

“கேர்ள்ஸா?”

“நம்ம டீம் பொண்ணுங்க தான்..ஶ்ரீநிதி, தண்மதி..”

“அவங்களும் வராங்களா?” என்று ஆதி வியப்புடன் கேட்டான்.

“ஆமாண்டா.. பின்ன எல்லாரும் உன்னை மாதிரி பழமா இருப்பாங்களா?”

“நவீன்… அப்போ நானும் வரேன்.. உன்னையெல்லாம் நம்பி பொண்ணுங்களை தனியா அனுப்ப முடியாது…”

“என்னையா..? இந்த உத்தமன் நவீனையா சந்தேகப்படுற?” என்று அவன் மிதமிஞ்சிய அதிர்ச்சியைக்காட்ட,

“உன் மூஞ்சி.. உன்ன அப்படியே சந்தேகப்பட்டுட்டாலும்.. பார்ட்டின்னாலே நீ குடிச்சிட்டு மட்டை ஆயிடுவ.. அப்புறம் அவங்களை சேஃப்டியா எப்படி வீட்டுக்குக் கொண்டு போய் சேர்க்கிறது? அதான் என்னோட கவலை..”

“கவலைப்படாத மச்சான்.. கால் டிரைவருக்கு அரேஞ்ச் பண்ணிட்டேன்.. நான் டிரைவ் பண்ணமாட்டேன் ஓகேவா?”

“நீ என்ன சொன்னாலும் சரி.. நானும் வர்றேன், அவ்வளவுதான்..” என்று முடிவாகச் சொன்னான் ஆதித்யா.

பார்ட்டியில்..

கிழக்குக்கடற்கரையை ஒட்டிய ஒரு புகழ்பெற்ற ரிசார்ட்டின் பெரிய தோட்டத்தில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வண்ணமயமான லேசர் விளக்குகள் வானத்தைத் தொட்டுக்கொண்டிருக்க,துவா லீபாவின்(Dua lipa)அதிரடி பாப் இசை காதுகளில் அதிர்ந்தது.

டிஜே மேடையைச் சுற்றி பலர் உற்சாகம் பொங்க நடனமாடிக் கொண்டிருக்க, அந்த இடமே யுவன்  யுவதியர் ஆர்ப்பரிப்பில் நிறைந்திருந்தது.

ஆதித்யா கண்களை சுழலவிட்டு தன் உள்ளம் பார்க்கத் துடிக்கும் அந்த ஒற்றை முகத்தைத் கூட்டத்தில் தேடினான்.

சற்று தள்ளி ஒரு அலங்காரத்தூணின் அருகில் வண்ண மின்விளக்கின் வெளிச்சத்தில் கண்கள் ஜொலிக்க முகம் முழுவதும் சிரிப்பாக இருந்தவளைப் பார்த்து அவன் மனம் சுணங்கினான்.

ஶ்ரீநிதியைப் பார்த்துத்தான் அவள் சிரிக்கிறாள் என்று தெரிந்தும், அவள் யாரிடம் சிரித்தாலும் அவன் மனதில் பொறாமைத்தீ மூள்வதைத் தடுக்கமுடியவில்லை. அவன் கால்கள் தானாக அவள் இருந்த திசையை நோக்கி நடந்தன.

தூரத்தில் அவனைப்பார்த்துவிட்ட நவீன்

“ஹே ஆதி..” என்று  கத்தினான். அதைக் கேட்டதும் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிற மதியின் இதயம் படபடத்தது.

அவள் தன் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மிகவும் சாதாரணமாக இருப்பது போல காட்டிக்கொண்டு அவனைப் ஏறிட்டாள்.

அலுவலக உடையில் டை மற்றும் பிளேசரை மட்டும் கழற்றிவிட்டு, சட்டைக் கைகளை முழங்கை வரை சுருட்டி விட்டிருந்தான். மேலிருந்து மூன்று பட்டன்கள் திறந்திருந்தன.

வெறும் ஃபார்மல் வெள்ளைச் சட்டை கருப்புப் பேண்ட்டில் இப்படி ஒரு பேட் பாய் கில்லர் லுக்கை அனாயசமாக இவனால் மட்டும்தான் கொடுக்கமுடியும்  என்று தோன்றியது மதிக்கு.

 அவனது முக வசீகரத்திலேயே மதி மயங்கி நின்றவள், அவனது கட்டுக்கோப்பான உடலைப் பார்த்ததும் தொண்டை வறண்டு கன்னங்கள் சிவந்து சூடேற வெட்கத்தில் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

ஆதியின் நிலையியோ அவளுக்கு மேல் இருந்தது. மதியிடமிருந்து பார்வையை அகற்ற முயன்றாலும் முடியாமல், அவன் கண்கள் அவளையே மொய்த்தன.

மதி அணிந்திருந்த வெள்ளை நிற ஷிப்பான் (Chiffon) கவுனில் கருப்பு நிறத்தில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கழுத்தை ஒட்டிய, ஸ்லீவ்லெஸ் உடை, அவளது உடல்வாகிற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தி, அழகை மெருகேற்றிக் காட்டியது.

எப்போதும் அலுவலகச் சட்டைக்குள் மறைந்திருக்கும் அவளது மெல்லிய வாழைத்தண்டு கைகள் இன்று அவன் கண்களுக்கு தாராளமாக விருந்தளித்தன. அவிழ்ந்து கிடந்த கூந்தலின் சில கற்றைகள் அவளது இளஞ்சிவப்பு கன்னங்களை வருடி, அவனது இளமையை சோதிக்க,

அந்த குளிர் இரவிலும், தனக்குள் தகிப்பை உணர்ந்தான் ஆதி.

பார்ட்டி தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!