Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 42

அத்தியாயம் 42

 

“ம்மா என் மேல கோவம் எதுவும் இல்லையே!” நூறாவது முறையாய் அன்னையிடம் கேட்டுவிட்டாள் பல்லவி.

 



Advertisement

இன்னுமே தானா சம்மதம்

கூறினோம் என தன்னை நினைத்தே வியந்து போய் தான் நின்றாள் பல்லவி.

 

Advertisement

‘எவ்ளோ ட்ரிக்கா என்னையையே தலையாட்ட வச்சுட்டாங்க!’ இப்படியும் ஈஸ்வரை நினைத்து தோன்றிக் கொண்டே தான் இருந்தது.

Advertisement

 

வந்தவர்கள் கிளம்பி சென்று ஒரு மணி நேரம் இருக்கும். ஆனாலும் இன்னும் அந்த தாக்கம் அம்மாவிடமும் மகளிடமும் மறையவே இல்லை.

 

Advertisement

இப்பொழுதும் மகள் கேட்கவும், “எனக்கே அதிர்ச்சியா தான் இருக்கு. ஆனா உனக்கான வாழ்க்கைனு வரும் போது அங்க நல்லாருக்கும்னு தோணுச்சு பாப்பா. லதா அண்ணியை முன்னாடி எனக்கு தெரியாது. ஆனா இப்போ இந்த ரெண்டு மூணு வருஷத்துல உன்கிட்ட எவ்வளவு பாசமா இருக்காங்கனு எனக்கு தெரியாதா? அதுவும் அந்த ஈஸ்வர் தம்பியும் அவங்களுக்கும் பிடிச்சு தான் வந்திருக்காங்க. அண்ணே தான் கொஞ்சம் அப்படி!” என்று கொஞ்சமே கொஞ்சம் வருத்தம் என்றாலும் இப்படி தங்களை பேசி சென்ற வீட்டில் இருந்தே தன் பெண்ணைக் கேட்டு வந்து நின்றார்கள் தானே என மகிழ்ச்சி அதிகமும் என முழு மனதாய் தான் சம்மதம் கூறி இருந்தார் சித்ரா.

 

அதுவுமே, “நீங்க பேசுங்க ம்மா!” என்று பல்லவி தன் சம்மதம் கூறிய பின் தான் அவரும் தெளிவாய் முடிவுக்கு வந்தது.

 

“உனக்கு ஒன்னும் வருத்தமில்லையே. லதா அண்ணிக்காக மட்டும் நீ சரினு சொல்லாத. அண்ணி நல்லவங்க. எல்லாம் தெரிஞ்சவங்க. உனக்கு வேண்டாம்னா அம்மாக்கும் வேண்டாம்!” என்று இப்பொழுதும் சித்ரா கேட்க,

 

‘லதாம்மாவிற்காக சம்மதம் சொன்னேனா? நானா?’ என நினைத்தவளுக்கு அன்னை தன்னிடம் வந்து புலம்பி கேட்கும் பொழுது கண்களுக்குள் ஈஸ்வர் முகத்தை அன்றி வேறெதுவும் தோன்றி இருக்கவில்லையே!.

 

“அதெல்லாமில்ல ம்மா. ஆனா அப்பா சொந்தக்காரங்க?” என்று மனம் அடுத்தகட்ட நிலைக்கு வந்துவிட்டது பல்லவி. இதனால் அவர்களுடன் பிரச்சனை வந்துவிடக் கூடாதே என்று.

 

“அதெல்லாம் நினைச்சு நீ வருத்தப்படாத. எல்லாம் சொன்னா புரிஞ்சிப்பாங்க. அதுவும் லதா அண்ணி இன்னைக்கு பேச தானே வந்திருந்தாங்க. சொந்தக்காரங்க எல்லாம் அழைச்சு ஒப்பு தாம்புலம் மாத்திக்க நாள் பார்த்துட்டு சொல்றேன் சொன்னாங்க இல்ல? அப்போ அவங்க என்னவோ ஒரு முடிவும் வச்சிருப்பாங்க. இவ்வளவுக்கும் நான் தான் ஈஸ்வர் தம்பியை அன்னைக்கு ரோட்ல பார்த்து உன் கல்யாண விஷயத்தை பேசினேன். அதுக்கு அப்புறம் தான் உடனே வீட்டுல பேசி இப்படி கிளம்பி வந்திருக்காங்க!” என்று சொல்லும் பொழுது சித்ரா முகத்திலும் ஒரு புன்னகை.

 

‘ஹ்ம் நல்ல தொம்பி தான்!’ என என்ன தான் அவனை நினைக்க கூடாது என நினைத்தாலும் அவனிடம் தான் சென்று நின்றது மனது. 

 

“ப்ச் அதெல்லாம் எதுக்கு? சும்மா நாளை கடத்திட்டு இருக்கவா? இங்க என்ன இல்ல? எல்லாம் ஆளுங்க வச்சு பார்த்தா வேலை சட்டுனு முடிஞ்சிரும். பேசாம இந்த நாள்லேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்!” என ஈஸ்வரிடம் மகேஸ்வரன் அறையில் அவருக்கு முன்னேயே லதா வாதாடிக் கொண்டிருக்க, 

 

ஈஸ்வரும், “அது எப்படி ம்மா?” என்றான் குழப்பமாய்.

 

வீடு வந்து ஒரு மணி நேரம் தான் ஆகிறது. தேவி கொடுத்த ஜூஸைக் குடித்துவிட்டு மகேஸ்வரன் அறைக்கு வந்தவர்களை முகம் திருப்பி மகேஸ்வரன் புறக்கணிக்க, அதையெல்லாம் யார் கவனிக்க? 

 

கல்யாண வேலையே ஆரம்பித்துவிட்டதை போல அவர்களுக்குள் திட்டம் தீட்ட துவங்க, தனக்குள் நொந்து கொண்டார் மகேஸ்வரன்.

 

அதுவரை கோபமாய் பேசாமல் அவர்களை வெறுப்பேற்ற நினைத்தவர், “அதெப்படி இருபது நாள்ல கல்யாணம் பண்ண முடியும்? நான் எழுந்து நடடக்க வேண்டாமா? என் பிரண்ட்ஸ், தெரிஞ்சவங்க, பிசினஸ் பார்ட்னர்னு இவங்களுக்கு எல்லாம் நான் சொல்ல வேண்டாமா?” என மகேஸ்வரன் கேட்க,

 

“இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அட்ரஸ் போன் நம்பர் குடுத்தா ஈஸ்வர் போய் இன்விடேஷnன் வைக்க போறான்!” என எளிதாய் சொல்யூஷன் கூறிய லதா,

 

“அப்பாவைக் கேட்டாங்கன்னா அவரு படுத்த படுக்கையா அச்சிடேன்ட்ல வீட்டுல தான் இருக்கார்ன்னு சொல்லு!” என்றும் சொல்ல, ஈஸ்வர் புன்னகையை அடக்கிக் கொண்டு தந்தையைப் பார்த்தான்.

 

“அதெல்லாம் ஓகே தான் ம்மா. ஆனா பல்லவி?” என்றவனுக்கு அவர்களுக்கு இந்த தேது ஒத்து வருமா என்றதோடு ரொம்பவும் நெருக்குவதாய் அவர்கள் நினைக்க கூடாதே என்றும் தான் இருந்தது. மத்தபடி உடனே திருமணம் என்பதில் அவனுக்குமே சம்மதம் தான்.

 

லதாவைப் பொறுத்தவரை கணவன் எழுந்து நடமாடும் நடனமாடும் முன் திருமணத்தை நடத்தி முடித்தே ஆக வேண்டும்எனும் எண்ணம் உள்ளுக்குள தீயாய் வேலை செய்ய கூறியது.

 

நிச்சயம் எதாவது தில்லுமுள்ளு வேலைகளை செய்வார். அவர் உயரத்தைக் காட்டுகிறேன் என்று மற்றவர்களை கேலியாய் பார்ப்பார். அப்படி எதுவும் இன்றி தன் மகன் திருமணம் அனைவரின் ஆசியோடு நிம்மதியாய் நடந்தால் போதுமே என்று தான் நினைத்தார் லதா.

 

“சித்ராகிட்ட நான் பேசுறேன். பிரஷர் பண்ண மாட்டேன். எப்படி பண்ணலாம்னு பேசி முடிவு பண்ணுவோம். ஆனா சீக்கிரமா தான் பண்ணனும்!” என்ற லதா,

 

“அடுத்த வாரம் ஒப்பு தாம்புலம் மாத்திடலாம். அதுக்கும் எல்லாருக்கும் சொல்லிடுவோம். அப்புறம் கல்யாண தேதியை சொல்லிட்டா அவங்கவங்க வசதிக்கு தோதுவாகும். நான் சித்ராகிட்ட அதையும் சொல்லிடுறேன்!” என்று முடிவு செய்ய, அவர்கள் பேசுவதை கேட்க மட்டும் தான் முடிந்தது மகேஸ்வரனுக்கு.

 

என்ன பேசினாலும் தன்னை அவர்கள் கண்டு கொள்ள போவதில்லை கூடவே ஆளாளுக்கு வீட்டைவிட்டு வெளியேறும் ட்ராமா வேறு என்று அமைதியாய் இருந்து கொண்டார்.

 

இப்படி ஒவ்வொன்றும் திட்டமிட்டு அதை சித்ராவிடம் கொண்டு சேர்க்க, கூடவே நடுவில் இருவீட்டின் மூத்த பெரியவர் ஒருவர் மூலம் எல்லாம் ஏற்பாடாகி இருந்தது.

 

விஷயம் லாவண்யா அப்பா காதுகளுக்கு வரும் பொழுது ‘என் பொண்ணுக்கு அப்பவே அந்த பொண்ணு மேல சந்தேகம் இருந்துச்சு!’ என்று நினைத்துக் கொண்டார்.

 

அடுத்தவர்களின் எண்ணங்களுக்கு நாம் பொறுப்பாக முடியாதே! இப்பொழுது லாவண்யாவும் வேறு நாட்டில் அவளுக்கான வாழ்க்கை என வேறு ஒரு எண்ணத்தில் இருக்க, இங்கே நடப்பதை அவளிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை அவருக்கு.

 

தான் சுத்தமாய் எதிர்பார்க்காத ஒன்று தன்னை சுற்றி நடந்து கொண்டிருக்கும் பிரம்மிப்பில் தான் அந்த ஒரு வாரமும் பல்லவிக்கு ஓடி இருந்தது.

 

தினமும் ஏதேனும் ஒரு திருமணப் பேச்சு அன்னை மூலம் அவள் காதுகளுக்கு வந்து கொண்டிருக்க, அழைப்பான் என எதிர்பார்த்த ஈஸ்வர் மட்டும் அவளிடம் அழைக்கவே இல்லை. அதுவும் ஏன் என அவ்வளவு யோசிக்க வைத்துவிட்டான்.

 

இங்கே திருமண வேலைகளோடு அலுவலக வேலை சைட் வேலைகள் என அத்தனை பிஸி கீர்த்திஸ்வரன். அதற்காக அவளை நினைக்காமல் எல்லாம் இல்லை. நினைக்காத நேரமும் இல்லை.

 

இதோ அன்று போல இப்பொழுதும் தான் எதிர்பாராமல் அவள் அழைத்து விடமாட்டாளா என அத்தனை எதிர்பார்ப்பு அவனிடம்.

 

பேச அவ்வளவு இருந்தது அவனுக்கும். ஆனாலும் அழைக்கவில்லை. அவளாய் அழைத்தால் பேசலாம் என்றும் கூடவே அவளின் இறுதி கல்லூரி நாள் என்றும் ஒவ்வொன்றையும் நியாபகத்தில் வைத்திருந்தான்.

 

ஒப்பு தாம்புலம் மாற்றிக் கொள்ள மகேஸ்வரனையும் அழைத்து இழுத்துக் கொண்டு வந்துவிட்டார் லதா. கூடவே சொந்த பந்தங்களோடு.

 

சித்ராவும் தன் கணவன் பக்க சொந்தங்களுக்கு சொல்லி இருக்க, வீட்டிலேயே நிறைவாய் நடந்தேறி இருந்தது விழா.

 

அன்றே இன்னும் பதினைந்து நாட்களில் திருமணம் என்று முடிவும் ஆகி இருக்க, அத்தனையும் மனதில் குறித்துக் கொண்டு ஈஸ்வர் அருகில் புதுமணப் பெண் என்ற பெயரோடு பல்லவி.

 

அங்கே ஓரமாய் நாற்காலியில் அமர வைக்கப்படிருந்தார் மகேஸ்வரன். அவரைப் பார்த்ததும் அப்படி ஒரு முறைப்பு பல்லவியிடம் இப்பொழுதும்.

 

“ஓகே தானே பல்லவி?” பார்வையை அவள் பக்கம் திருப்பாமலேயே கழுத்தை நீவிக் கொண்டு ஈஸ்வர் அவளிடம் கேட்க,

 

கண்களை மட்டும் சுழற்றி அவனிடம் கொண்டு வந்து ஒரு பார்வை பார்த்து மீண்டும் திருப்பிக் கொண்டவளும்,

 

“என்ன ஓகே?” என்றாள் அவளைப் போலவே.

 

“அதான் கல்யாணம்?”

 

“அதை கேட்குற நேரமா இது?”

 

“இதில்லையா?” என்றவன் சில நொடிகள் கழித்து,

 

“அப்ப சரி. மூணு நாள்ல லாஸ்ட் டே காலேஜ் போற தானே? முடிச்சுட்டு கால் பண்ணு வெளில மீட் பண்ணுவோம். அப்ப பேசிப்போம்” என்று சொல்லியவன் சாதாரணமாய் நிற்க,

 

“அதெல்லாம் முடியாது!” என்றாள் அவன் சொல்லில் அதிர்ந்தவள்.

 

“ம்ம்ஹும்! பண்ற!” என்றவன்,

 

“இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு மேரேஜ்க்கு. சில விஷயங்கள் பேசலாம். பேசனும்!” என்றும் சொல்ல,

 

“நீங்க சொன்னா நான் கேட்கணுமா?” என்றவளுக்கு அவன் சொல்லாமலேயே தான் சம்மதமே சொல்லியதில் நினைவுக்கு வந்து தன்னை நினைத்தே தலையில் கைவைக்கும்படி ஆனது.

 

“பல்லவியை பொண்ணு பார்க்க வர்றதா சொல்லி இருந்தவங்ககிட்ட பேசிட்டோம் அண்ணி.அவங்க புரிஞ்சிகிட்டாங்க. வேற எந்த பிரச்சனைய் இல்லை. அவங்களும் கல்யாணத்துக்கு வருவாங்க!” என்று சித்ரா சொல்ல கேட்டுக் கொண்டிருந்த லதா, அவரிடம் பேசிவிட்டு பல்லவியிடம் வந்தார்.

 

“பல்லவி!” என்று அவர் அழைக்கவும்,

 

“எவ்ளோ பெரிய ஸ்கெட்ச்சு? மொத்தமா கடத்திட்டீங்க இல்ல என்னை?” என அவரிடம் கவனம் சென்றது பல்லவிக்கு.

 

“நான் கூட வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா இவன் கேட்கலையே!” என ஈஸ்வரை லதா சொல்ல,

 

“நீங்க வேனா பாருங்க! லாவண்யாவே பெட்டர்ன்னு சொல்ல போறீங்க. அப்படி அடிச்சிக்க போறோம் நாம!” என்றாள் குறும்பாய் புன்னகை வேறு.

 

“ப்ச்!” என்றவன் முறைப்பை பக்கவாட்டாய் கண்டு கொள்ள முடிந்தாலும் பல்லவி திரும்பிப் பார்த்திடவில்லை.

 

“அப்போ ஒரு பெரிய ஃபன் இருக்கு இல்ல?” என்ற லதா முகத்திலுமே அப்படி ஒரு புன்னகை. மனமெல்லாம் நிறைந்து போனது அவருக்கு. இப்படி மகனருகில் பல்லவியைக் கண்டதும் திருமண நாளுக்காக அப்பொழுதே ஆவலாய் காத்திருக்க ஆரம்பித்தார்.

 

“என்கிட்ட அந்த பொண்ணு பேசவே இல்ல!” வீட்டிற்கு செல்லும் வழியில் குற்றச்சாட்டை முன் வைத்தார் மகேஸ்வரன்.

 

“பையன் அவனுக்கு வரப்போற பொண்டாட்டி கூட உங்க கால்ல விழுந்தானே! கொஞ்சமா சிரிச்சு நாலு நல்ல வார்த்தை சொன்னிங்களா?” என லதா கேட்க,

 

“நாம பேசின வார்த்தையை பொறுத்து தான் நமக்கான மரியாதை நமக்கு கிடைக்குமே ப்பா. எல்லாம் உடனே மறந்திடனும்னு என்ன இருக்கு. அவளுக்கும் நேரம் வேணும். கூடவே நீங்களும் உங்களை மாத்திக்கணும்” என்று ஈஸ்வர் சொல்ல,

 

“என்ன சொல்றான் பாரு. இவனுக்காக இந்த நிலமைலயும் நான் வந்தா…” என அவர் ஆரம்பிக்க,

 

“இந்த மனநிலையை தான் மாத்திக்க சொல்றான். பையன் விஷேஷத்துக்கு வந்ததை சொல்லி காட்டுவீங்களா நீங்க? அந்த பொண்ணை அப்ப பேசினதுக்கு மன்னிப்பு கேட்டீங்களா? இல்லை தானே? அப்போ அவ மட்டும் ஏன் உங்ககிட்ட வந்து பேசணும். நீங்க சரியானா எல்லாம் சரியாகும்!” என்று வாயடைக்க வைத்துவிட்டார் லதாவே.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!