Skip to content
Post Views: 137
அடுத்து நான்கு நாட்களுக்கு பின் கமலிக்கு போன் செய்தான் கிரி.
அவனுக்கான தனித்துவ ரிங் டோனிலேயே, டைனிங் டேபிளில் அமர்ந்து காய் நறுக்கியபடி அண்ணியோடு வாயடித்து கொண்டிருந்தவள், போனை பார்த்து முகம் மலர்ந்து போக, “அண்ணி, கிரி.. இதோ வந்திடறேன்” மேட்ச் த பாலோயிங் போல அறைகுறையாய் சொல்லிவிட்டு அவள் அறைக்கு விரைந்தோட, கர்ணனனோ நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தான்.
“சும்மா இருடா..” எதிரில் அமர்ந்திருந்த மல்லிகா அவன் தலையிலேயே ஒரு கொட்டு வைக்க, இப்போது சிரிப்பு பிரபாவை தொற்றி கொண்டது.
அறைக்குள் நுழைந்தவள் கட் ஆகும் முன்பே அட்டென்ட் செய்து “கிரி” என அழைத்து நிறுத்த
Advertisement
“என்ன பண்ற? சாப்பிட்டியா?” என்ற கிரியின் குரல் எப்போதும் போல மயக்கியது.
“இல்லை.. இனி தான்.. இப்போ தான் சமைக்க போறோம். நீங்க?” என கேட்க
“ம்.. ஆச்சு” என்றவன் “கொஞ்சம் பேசனும் ப்ரியா?” என கேட்டான்.
Advertisement
“ஆல்வேஸ் ப்ரி தான்.. பேசுங்க” துள்ளியது குரல். கதவை அடைத்துவிட்டு வந்தவள் கட்டிலில் வசதியாய் சாய்ந்தமர்ந்து கொண்டாள்.
Advertisement
“என்னை பத்தி என்ன நினைக்கிற?” என நேரடியாய் கேட்டான் கிரி
“என்ன?” என அதிர்ந்து “எதை பத்தி” நெற்றி சுருங்கியது கமலிக்கு
“என் அம்மா, அக்கா உன்னை ஏமாத்துன மாதிரி நானும் உன்னை ஏமாத்திடுவேன்னு?” முடிக்காமல் இவன் நிறுத்த
Advertisement
“இல்லை, அப்படிலாம் நினைக்கலை” உடனே மறுத்தாள் கமலி.
“அப்போ என்னை முழுசா நம்புறியா?” கேட்கும் போதே ‘ச்சே வீடியோ கால் பண்ணாம போய்ட்டேன், இவ முகத்தை வச்சே பதிலை கண்டு பிடிச்சிருக்கலாம்’ தாமதமாய் யோசித்தது அவன் மூளை.
நீ யோசிப்பதே தேவையில்லாதது என்பதை போல “நம்பாம எங்க போக போறேன்?” என்ற ஒரே பதில் அவளிடம் வேகமாய் வந்து விழுந்தது.
புன்னகை தானாகவே வந்து அமர்ந்தது அவன் முகத்தில். “அப்போ நான் சொல்றதை மட்டும் செய்றியா?” கேள்வி எழுப்பினான்.
“என்ன? என்ன செய்யனும்” கேட்டவளின் புருவங்கள் முடிச்சிட்டு கொண்டது.
“கல்யாணத்துக்கு உங்க வீட்டில் செய்த சீரெல்லாத்தையும் உங்க வீட்டுக்கே திருப்பி அனுப்ப சொல்லி இருக்கேன். துரை இன்னைக்கு வருவான், துரை என் பிரண்ட் நம்பிக்கையான ஆளு. கூட இருந்து பொருளை ஷிப்ட் பண்ண நீயும் கர்ணாவும் ஹெல்ப் பண்ணுங்க” அழுத்தந்திருத்தமாய் இவன் கூற
அதிர்ந்து விட்டாள் கமலி “ஏன்? எதுக்கு?” என்றாள் சத்தமே வராத குரலில்
“நம்பிக்கை இருக்குனு சொன்ன! இப்போ கேள்வி கேட்குற?” என்றான்.
“இல்லை அப்படியில்லை! சீரெல்லாம் இங்க அனுப்புறதா சொல்றீங்க. அப்போ நான் நம்ப வீட்டுக்கு திரும்பி போக வேண்டாமா? அம்மா வீட்டிலேயே இருந்திடவா?” இவள் கேள்வி எழுப்ப
“ஆமாம்.. நான் வர்ற வரைக்கும் அங்கேயே இரு! எக்காரணம் கொண்டும் நீ அம்மா கூட அந்த வீட்டில் தங்க வேணாம்”
“ஏன்?”
“இதென்ன கேள்வி, வீட்டை விக்கிறது தெரியாதா?” என
“ம்.. அண்ணா சொன்னான்.. ஆனால் நீங்க எதுவும் சொல்லலை”
“ஆமா.. இப்போ அதான் முக்கியம் பாரு” சொல்லியவன் சிறிது நேர இடைவெளிக்கு பின் “வீட்டை வித்தாச்சு! அவங்க கிட்ட இந்த வாரம் வீட்டு சாவியை கொடுக்கனும்ல. உன்னோட பொருள் எல்லாம் வைக்க இடமில்லை. இப்போதைக்கு அது உங்க வீட்டில் இருக்குறது தான் நல்லது. துரைக்கு ஹொல்ப் பண்ணு” என்றான்.
இவளுமே அமைதி காத்தாள் பின் “சரி” என சம்மதம் கூறி “வீட்டை விக்கிறீங்க.. ஆனா எதுக்கு? அதுவும் இவ்வளவு அவசரமா?” கமலி கேட்க
“உங்கண்ணன், அப்பாக்கு தெரியுமே? சொல்லலையா?” என இவனும்.
“கேட்டேன், சொல்லைல.. கிரிகிட்ட கேட்டுக்கோனு அண்ணா சொன்னான்” இவள் கூறிட
‘என்ன குடும்பம்டா இது’ என வியந்து தான் போனான்.
‘நம்ப குடும்பம் பிரச்சனையை பாக்கெட்ல போட்டு சுத்துனா, இவ குடும்பம் காரணம் கிடச்சாலும் பிரச்சனை பண்ணாத குடும்பம் போல..’
‘நமக்கு இப்படி ஒரு குடும்பம் கிடைக்கலையே கிரி.. இருந்தா எப்படியெப்படியோ இருந்திருக்கும் உன் வாழ்க்கை’ என மூளை கேட்க
‘ஆமா இந்த குடும்பத்துக்கே இந்த ஆட்டம் போடுற! உனக்கு, அதுவும் கமலி மாதிரி குடும்பம்! ம்க்கும்! கிடைச்சிட்டாலும்!’ மனசாட்சி டங்கார் என இடித்தது அவனை..
“கிரி..” என்ற குரலில் தலைநை உலுக்கி நிதானமடைந்தான். “அக்கா வீட்டில நிறைய பிரச்சனை” என இதுவரை நடந்ததை சுருக்கமாய் கூறினான்.
வீட்டு பிரச்சனை துவங்கியதில் இருந்து, கடைசியாய் ராஜி அவளது வீட்டாருடன் சண்டை போட்டுவிட்டு, திரும்பி கிரியின் வீட்டிற்கே வந்த வரை கூறி முடித்தான்.
கேட்ட இவளுக்கோ, தலை சுற்றியது. அதை விட கிரி எப்படி இதை சமாளிக்க போகிறான் என்பதே மிக பெரும் கவலையாக தோன்றியது.
“எதுக்கு இவ்வளவு பிரச்சனையை இழுத்து வைக்கனும். எனக்கொன்னும் பிரச்சனையில்லை. மாடிபோர்ஷனை அவங்களே எடுத்துகட்டும். சின்ன குழந்தைகளோட, செந்திலண்ணே இல்லாமல் அவங்க எப்படி தனியா இருக்க முடியும்!” இவள் வேகமாய் கூற
“வேணும்னா ஒன்னு பண்ணலாமா, கீழ் போர்ஷனையும் சேர்த்தே கொடுத்துடுவோமா.. அக்கா ஒன்னும் சொல்ல மாட்டா.. வாங்கிப்பா” அமைதியாக வந்த வார்த்தைகளில் தான் எத்தனை நக்கல், எத்தனை நய்யாண்டி.
கப்பென்று வாயை மூடிக்கொண்டாள் கமலி.
“ஆனா ஒன்னுடி.. உன் குணம் எல்லாத்தையும் என் அக்கா நல்லா விசாரிச்சு தான் என் தலையில் கட்டியிருக்கா.. வந்து சேர்ந்திருக்க பாரு ஜாடிக்கேத்த மூடியாய்!” விளாசிவிட்டான் கிரி..
“அக்கா அம்மா இரண்டு பேரையும் வாடகை வீட்டில் தான் வைக்க போறேன். அவங்க மனநிலை எப்படி இருக்கும்னு எனக்கே தெரியாது! இப்படி இருக்கும் போது உன்னை எப்படி அவங்களோட அனுப்ப?” பல்லை கடித்து கொண்டு பேசியவன், “துரை வருவான், பொருளை ஷிப்ட் பண்ண ஹெல்ப் பண்ணுங்க, இதை மட்டும் தான் செய்யனும். ஏதாவது எனக்கு தெரியாம பண்ண..!” மிரட்டி நிறுத்தினான்.
அதற்கு “சரி” என்ற பதிலே வந்தது இவளிடம்.
“உன் அம்மா வீட்டில் இருந்துப்ப தானே! இல்லை.. உங்க வீட்டில் ஏதும்..!” இவன் இழுக்க
“ச்சே ச்சே அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க!” எனவும்
“ஒரு வேளை லோன்லியா பீல் பண்ணினால், நீ ஏற்கனவே பார்த்த வேலைக்கு வேனா திரும்ப போ.. டைம் பாஸ் ஆகுமே”
“ஐய்யோ அங்கையா..! என இழுத்தவள் “போகலாம் தான் ஆனால் ஹாஸ்டலில் தான் தங்கனும்”
“ஹாஸ்டலா? வீட்டில் இருந்த மாதிரி போக முடியாதா?”
“தூரம் ஜாஸ்தி கிரி, டிராவல்லையே நேரம் போய்டும்”
“சரி அப்போ வேணாம், இஷ்டம்னா உள்ளூரிலேயே எங்கையாவது வேலைக்கு போ, இல்லைன்னா விட்ரு”
“ம்..சரி” என்றாள்.
“வேற எதுவும் இல்லையே! வச்சிடவா?” என கேட்டான்.
error: Content is protected !!