Skip to content
Post Views: 355
அத்தியாயம் 12
திருமணத்திற்கு முன்பான பிடித்தமான பேச்சுகள், திருமணத்திற்கு பின்பான பிடித்தமில்லா நடவடிக்கைகள், அவனின் நிழல் கூட தன் மேல விழ விடாமல் பார்த்துகொண்டது.
சிறு சீண்டல்களோ, நெருக்கமோ இல்லாமல் தன்னை விட்டு தள்ளி இருந்தது, இரு மாத விடுமுறை என கூறிவிட்டு பதினைந்தே நாட்களில் மீண்டும் கத்தாருக்கே சென்றது, இன்னும் இப்படி கூறிகொண்டே செல்லலாம்.. ஆக மொத்தம் இத்தனைக்கும் காரணம் அவனின் எதிர்பார்ப்புகள் எதையுமே பூர்த்தி செய்யாத நான் தானா? போன் ஒரு ஓரமாய் கிடக்க, எதிரில் இருந்த சுவரில் பதிந்தது இவள் விழிகள்.
அழகாய் பெரிய அளவில் ப்ரேம் செய்து மாட்டபட்ட அவர்களது கல்யாண போட்டோவில் ஆணழகனாய் அவனிலும், சற்றும் பொருத்தமில்லாத அவளிலும் அழுத்தமாய் பதிந்தது அவள் பார்வை.
Advertisement
போட்டோ மாட்டியதில் இருந்து ஆசையாய் படிந்து மீளும் விழிகள் இன்று விரக்தியாய் படிந்தது.
“உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் ஏன் இல்லை கிரி.. அப்படியில்லன்னா உங்களை ஏன் நான் தேர்ந்தெடுக்கனும், இவ்வளவு கஷ்டபடுறதுக்கு, என் கண்ணில் நீங்க சிக்காமலேயே போயிருக்கலாமே.. நீங்க சொன்ன மாதிரி எனக்கு பொருத்தமானவனோட ஒழு வாழ்க்கை அமைச்சிருக்குமே!” போட்டோவில் இருந்த அவனிடம் அதை தான் கேட்டாள்.
கேட்கையில் அழுகை முட்டிகொண்டு வந்தது, ஆனால் கண்களை தாண்டி வரவில்லை. அவன் தான் சொல்லி இருக்கிறானே! ‘என் கமலி அழ மாட்டா..!’ என்று..
Advertisement
ஆமா நான் அவனோட கமலி தானே! அப்போ நான் அழ மாட்டேன்.. என கண்ணீர் நின்று விட்டது. அவன் சொன்னால் கண்ணீர் கூட அவன் பேச்சை கேட்கிறது, ஆனால் அவனையே கேட்கும் இந்த பாழும் மனதிற்கு எதை கொடுத்து சரி செய்வது?
Advertisement
அவன் போட்டோவை பார்க்க பார்க்க, கிரியை இழந்து விடுவோமோ? என்ற எண்ணமே தலை தூக்கியது.
‘கொஞ்ச நாள் டைம் கொடேன்’ என கேட்கிறான் தான், கொடுத்து விடுவாள் தான் இவளும். ஆனால் நூற்றில் ஒரு சதவீதமாய் அந்த கொஞ்ச நாளுக்கு பிறகும் இவளை பிடிக்காது போய்விட்டால்?
இருவரும் டைவர்ஸ் வாங்குவது போலவும், அவன் இன்னொரு திருமணம் செய்வது போலவும், இதோ இப்போது பார்த்து கொண்டிருக்கும் அதே போட்டோவில் கமலிக்கு பதில் இன்னொரு அழகான பெண் இருப்பது போலவும், இறுதியாய் அவனது நினைவிலேயே இவள் மட்டும் ஒற்றையாய் தனித்து நின்றுவிடுவது போலவும் தலைக்குள் குதிரை பந்தயமே ஓடியது.
Advertisement
அதற்கு மேல் அவன் போட்டோவை பார்க்க முடியாமல் கண்களை வேறு புறம் பட்டென திருப்பிட, பீரோவோடு சேர்ந்திருந்த கண்ணாடியில் பதிந்தது இவள் பார்வை.
அந்த கண்ணாடியிலும் ‘முன்பொரு நாள் இவள் அவனை நெருங்கி அணைத்ததும், அவன் நெஞ்சில் கை போட்டு தூங்கியதும், பட்டும் படாமல் நெற்றியில் இட்ட முத்தங்களும், அவளை இழுத்து சென்று கண்ணாடி முன் இருத்தி ‘பிடிக்கிற மாதிரி என்ன இருக்கு’ என ஆக்ரோஷமாய் அவன் கேட்டதும் நேரம் காலம் அறியாது, நான்.. நான்.. என தவ்வி கொண்டு படையெடுக்க, கொஞ்சம் அதிகமாகவே பிரஷர் ஏறியது. மூளை சூடாகியது. அதற்கு மேல் அவளையும், அவள் உருவத்தையும் கண்ணாடியில் பார்க்க பிடிக்கவில்லை. அவ்வளவு கோபம் அவள் மீதே..
தயவு செய்து யோசிக்காதேயேன், என்னால முடியல என கதறியது அவள் மூளை..
என்ன செய்கிறோம் என தெரியாது கைக்கெட்டும் தூரத்தில் நீர் நிரம்ப வைத்திருந்த, சில்வர் வாட்டர் பாட்டிலை கண்ணாடியில் விட்டெறிந்தாள்.
பாட்டில் கண்ணாடியில் நச்சென மோதி கீழே விழ, சிலீரென்ற சத்தம் அறை முழுவதும் பட்டு எதிரெலிக்க, அவள் எண்ணங்களும் சில்லு சில்லாய் சிதறியது. கண்ணாடியோ அவள் உருவத்தை உடைத்து நொறுக்கியது போல அதுவும் உடைந்து நொறுங்கி சிதறியது.
“ஏய்,.. என்னடி சத்தம்” கதவை நெருங்கி கொண்டிருந்த மல்லியின் குரலில், பேந்த பேந்த விழித்தவள், “ஒன்னுமில்லம்மா.. வாட்டர் பாட்டிலை கீழே போட்டுட்டேன்” என உள்ளிருந்தே குரல் கொடுத்தாள், “இருக்குற வேலையில நீ வேற உயிரை வாங்காத! கைல கால்ல எதுவும் போட்டுட்டியா?” என கேட்க
“அதெல்லாம் இல்லைம்மா..” என்றாள் இவள். கதவை திறக்காமலேயே உள்ளிருந்தபடியே தான் பேச்சு நடந்து கொண்டிருந்தது.
“போன் பேசுறேன்னு போய் எவ்வளவு நேரமாச்சு.. வெளிய வா கமலி.. தனியா இருக்காத” மல்லியின் குரல் தேய்ந்து கொண்டே செல்ல, கட்டிலின் தலைமாட்டில் தலை சாய்த்து அமர்ந்துவிட்டாள் கமலி.
அதன் பின் உடைந்த கண்ணாடி துண்டுகளை கை, கால்களில் படாமல், யார் கண்ணிலும் படாமல் அகற்றுவது அதை விட தலைவலியாய் போனது.
********
அங்கோ, அடுத்த இரண்டு நாட்களில் வீட்டை விற்கும் வேலைகள் துரிதமாய் நடக்க துவங்கியது. வசந்தாவிற்கு நிறைய பொருட்களை சேர்க்கும் பழக்கமில்லை என்பதால் வீட்டை காலி செய்வது பெரிதாக தெரியவில்லை. கூடவே துணைக்கு துரையும், அவன் கடையில் வேலை செய்யும் இரு பையன்களும் உதவிட, எளிதாய் பொருட்களை காலி செய்து விட்டனர்.
இவர்களது பொருட்களை ஒரு வண்டியிலும், கமலியின் பொருட்களை ஒரு வண்டியிலும் ஏற்றுவதை பார்த்து “ஏன் துரை எதுக்கு இரண்டு செலவு, ஒரே வண்டியில் ஏத்தலாமே!” என வசந்தா கேட்க
“கமலியோட பொருளெல்லாம் அவங்க வீட்டுக்கு போகுதும்மா.. கிரி்தான் அனுப்ப சொன்னான்” என்றுவிட, வசந்தா ராஜியை பார்த்தாரே ஒரு பார்வை. ஜென்மத்திற்கும் மறக்கமாட்டாள் ராஜி.
அதன்பிறகு எந்த ஒரு பேச்சுமில்லை கமலி பற்றி பேசுவதற்கு. அவள் பொருட்கள் எல்லாம் அங்கே செல்கிறது என்றால், அவள் இப்போதைக்கு இங்கு வரப்போவதில்லை என்று தானே பொருள். இதை கூட அறியாதவர்களா ராஜியும் வசந்தாவும், மௌனமாய் இடத்தை காலி செய்துவிட்டனர்.
வந்துவிட்டனர் வாடகை வீட்டிற்கு. சுற்று சுவர்களுக்கு நடுவில் வீடு, இரண்டுக்கும் இடையில் செடிகள் மரங்கள் என செழிப்பாகவே இருந்தது.
கேட் கதவை திறந்தபடி உள்ளே சென்றனர். ஒன் பிஹச்கே.. ஆனால் அந்த வீட்டை போல் பெரிது இல்லை தான், ஆனால் சிறிது என சொல்லும் அளவிற்கும் இல்லை தான். தாரளமாய் நால்வர் பிழங்கும்படி அமைப்போடு இருந்தது அவ்வீடு.
ஆனால் வசந்தாவோ.. “சொந்த வீட்டை வித்து வாடகை வீட்டுக்கு வர்ற நிலமையெல்லாம் யாருக்கும் வரக்கூடாது” அடிவயிற்றில் இருந்து வந்தது அந்த வார்த்தைகள்.
ராஜியால் என்ன சொல்லிவிட முடியும்? மகளை இடுப்பிலும், மகனை கையிலும் பிடித்தபடி நின்றிருந்தாள்.
மனதும் சரியில்லை. பெயருக்கு பால் காய்ச்சி கொண்டனர் அம்மாவும் மகளும்.
பேக் செய்யப்படவைகளை கடை பையன்களின் உதவியோடு நடுஹாலில் வைத்து விட்டு சென்றிருந்தான் துரை. பேக் செய்யப்பட்ட பாக்ஸ்கள் ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
“சும்மா நின்னா எப்படி, வாடி, எல்லாத்தையும் எடுத்து வைக்கனும்” வசந்தா கத்திய பிறகு தான், மகளை தூங்க வைத்து, போர்வை ஒன்றில் படுக்க வைத்துவிட்டு “பாப்பாவை பார்த்துக்கோடா” என மகனிடம் பொறுப்பை விட்டு வந்தாள் ராஜி.
பிறகு பொருட்களை ஒழுங்கு படுத்தி அடுக்கும் வேலையில் இறங்கினர் இருவரும்.
அதே போல் கமலியின் பொருட்கள் அவளிடம் கொண்டு போய் சேர்ப்பிக்கையில், எல்லாவற்றையும் எடுத்து கொண்டவள், கட்டிலையும் மெத்தையையும் மட்டும் மீண்டும் வசந்தா வீட்டிற்கே அனுப்பி வைத்து விட்டாள்.
அதை துரை அப்படியே கிரிக்கு போன் செய்து சொல்லிட, ஏனென்று தெரியாத கிரிக்கு புருவங்கள் சுருங்கினாலும், “சரி நம்ப வீட்டிலேயே கொண்டு போய் வச்சிடு” என்றுவிட்டான்.
கட்டிலும் மெத்தையும் மட்டும் வாடகை வீட்டிற்கு மீண்டும் வந்து இறங்கியது.
கேள்வியாய் பார்த்த வசந்தாவிற்கும், ராஜிக்கும் ,கமலி சொல்லி தான் இந்த பெட்டும், கட்டிலும் வந்திருக்கிறது என்பதை துரை இவர்களிடம் பொதுவாய் கூறி, கட்டிலை எடுத்து சென்று அந்த ஒற்றை படுக்கை அறைக்குள் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
“இதென்னடி கட்டிலை மட்டும் அனுப்பி இருக்கா?” காரணம் தெரியாத வசந்தாவிற்கு குழப்பமே மிஞ்சியது.
ஆனால் ராஜிக்கு காரணம் தெரியுமே! இறுகி போனது அவள் முகம். அப்போது, அன்று ஏதோ சாதனை போல் தெரிந்த விசயம், இன்று அருவருக்க தக்கதாய் தெரிந்தது.
அந்த ஒற்றை படுக்கையறைக்குள் கிடந்த கட்டிலை பார்க்கையிலேயே எரிச்சலானது ராஜிக்கு.
*******
error: Content is protected !!