Skip to content
Post Views: 202
ஆசையசையாய் மகளுக்காக வாங்கிய பொருட்கள் மீண்டும் தங்கள் வீட்டிற்கே வந்து இறங்கிட, கமலியை பெற்றவர்களுக்கோ அதை ஜீரணிக்கவே முடியவில்லை. பத்தாததற்கு எதிர்வீடு பக்கத்து வீடு என “ஏன்? என்னாச்சு?” என கேள்விகள் எழுப்பிட ‘ச்சை.. நிலைமை புரியாத இவர்களெல்லாம் என்ன மனிதர்களோ’ என தான் தோன்றியது.
“நீ பையனை கூட்டிட்டு உள்ள போ, பிரபா.. நாங்க பொருளையெல்லாம் ஒதுக்கிக்கிடுவோம்” என பிரபாவை அவன் மகனோடு உள்ளே அனுப்பிவிட்டான் கர்ணன்.
பண்டபாத்திரங்கள் அனைத்தையும் பரணில் ஏற்றி விட்டான் கர்ணா. வாஷிங் மெஷின், பிரிஜ் இரண்டையும் ஹாலின் மூலையில் வைத்துவிட்டு, எல் ஷேப் சோபாவை இரண்டாய் பிரித்து, கமலியின் அறையில் ஒன்றும், கமலியின் தாயின் அறையில் ஒன்றும் என பிரித்து போட்டு விட்டனர். மர பீரோ, டிரஸ்ஸங் டேபிள் இரண்டுமே கமலியின் அறைக்குள் இடம் பெயர்ந்தது.
விஸ்தாரமான வீடு என்பதால் பொருட்களை அடைத்து விட்ட தோற்றம் ஏதுமில்லாமல் இருந்தது.
Advertisement
“ஏண்டி.. கட்டிலை வேணாம்னு சொல்லிட்ட!” முகம், கை கால்களை கழுவி விட்டு, முகத்தை துடைத்தபடி வந்த மல்லிகா டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த கமலியிடம் கேட்டபடி இவரும் அவளுடன் அமர்ந்தார்.
அவரை நிமிர்ந்து பார்த்தவள் “அதெல்லாம் சொல்ல முடியாது. வேணும்னா கிரி கிட்ட சொல்லி புதுசா வாங்கி தரவா” கடுகடுப்போடு இவள் பேச,
“ஏன்னு காரணம் கேட்டது குத்தமா? இதுக்கு முன்னாடி நல்லா தானடி இருந்த, இரண்டு நாளா என்னாச்சு? வள்ளு வள்ளுனு விழுற!” என மல்லிகா கேட்க
Advertisement
“ம்மா.. ஆரம்பிக்காதம்மா.. முடியலை” என்ற படி அறைக்குள் எழுந்து சென்றுவிட்டாள்.
Advertisement
போகும் போது, அடுத்ததாய் இருந்த அறைக்குள் இருந்து “பொருத்தமில்லாம பண்ணினா இப்படி தான். எல்லா பொருளும் வந்திடுச்சும்மா, போற போக்கை பார்த்தா என் நாத்தனார் இனி இங்க தான் டேரா போல” பிரபா யாருடனோ போனில் பேசுவது தெள்ள தெளிவாய் கேட்டது. வேறு யார் அவளது தாயாக தான் இருக்கும்.
அதை கேட்டவளுக்கோ சந்தேகமே இல்லை, அண்ணி தன்னை பற்றி தான் பேசுகிறாள் என்பதில். ஒரு நொடி தாமதபடுத்திய இவள் நடை பின் வேகமாய் நடையை கட்ட துவங்கியது.
சென்றவளின் பார்வையில் பட்டது அவளது மர பீரோ.. தூசி அடைந்து இருந்தது. பழைய துணி ஒன்றை எடுத்து வந்து கைக்கு எட்டிய வரை துடைத்தாள். பின் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு, பீரோவை திறந்து பார்த்தாள், உள்ளே இவளது உடைகள் நிறைந்து கிடக்க, மேல் தட்டில் கிரியின் கைலி, டிசர்ட், டிராக், இரண்டு செட் உடைகள் இருந்தன.
Advertisement
கைகள் தானாகவே நீண்டு அவனது டீசர்ட்டை கையில் எடுத்து கொண்டது. கதவை பூட்டிவிட்டு, கட்டிலில் சென்று அமர்ந்தவள் அந்த டீ சர்ட்டை பார்த்த வண்ணமே இருந்தாள்.
ஏதேதோ எண்ணங்களோடு, அவன் நினைவுகளோடு ஊர்வலம் போனாள். ஜூஸ் கடை ஒன்று தான் அவர்கள் இருவரின் நினைவுகளை சேர்த்த இடம். அதை தவிர்த்து எங்கே ஒன்றாய் சென்றார்கள். டீசர்ட்டை நெஞ்சோடு அனைத்து கொண்டவளின் நினைவுகள், அவனையே சுற்றி வந்து கொண்டிருந்தது..
************
கமலி சற்று அதிகமான உணவு பிரியை, மல்லிகா, செல்வம், கர்ணன் என அத்தனை பேருக்கும் செல்லம்.
ஆனால் அவளுக்கு அண்ணி என ஒருத்தி வரும் வரை தான். வந்த பிறகு நிலை மாறியது. கமலி பனிரெண்டாம் வகுப்பு என்பதால் கமலிக்கான சிறு சிறு வேலைகளை பிரபாவை விட்டு செய்ய வைத்தார் மல்லிகா.
“அவ தான் எப்பவுமே வேலை பார்க்குறா.. நீ திங்க தான் லாயக்கு” என மனைவியின் ஓதுதலில் சிறு சிறு நிகழ்வுகளில் பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த கமலியை காயப்படுத்துவான் கர்ணன். கூடவே “மாடு மாதிரி வளர்ந்திருக்க, டிபன் பாக்ஸை கூட பேக் பண்ணிக்க மாட்டியா.. உனக்கு இதுக்கு ஒரு ஆளு” என போகிற போக்கில் பேசிவிட்டு சென்றுவிடுவான்.
அவன் அப்படியென்றால் “இவ்வளவு சாப்பிடாத கமலி.. பிறகு நிலைகதவை இடிச்சிட்டு வேற தான் வைக்கனும்” என பிரபா போற போக்கில் கிண்டல் என்ற பெயரில் மட்டம் தட்டி செல்வாள். அதன் உள் குத்து அறியாமல், அண்ணனை போல அண்ணியும் கிண்டல் செய்கிறாள் என நினைத்து கொள்வாள் கமலி.
கூடவே அவள் உணவு ஒன்றே கவனம் என்பது போல பிரபாவின் குத்தல் பேச்சிலெல்லாம் கவனிமில்லாமல் இருக்க, மல்லிகா தான் சுதாரித்து கொண்டு பிரபாவை நிறைய வேலைகள் ஏவுவதை குறைத்து கொண்டார்.
அதுவும் மகளுக்கென வரும் போது அனைத்தையும் அவரே செய்து கொள்வார். கர்ணன் சம்பந்தபட்ட வேலைகள் என வரும் போது பிரபாவை உள்ளிளுத்து கொள்வார்.
பிரபாவையும் சாதரணமாய் எடை போட்டுவிட முடியாதளவுக்கு இருக்கும் அவளது தேன் தடவிய பேச்சுகளும், நம்பும்படியான நடவடிக்கைகளும்.
கர்ணன் இருக்கையில் வேலைகளை இழுத்து போட்டு பார்ப்பதும், அவனில்லா நேரங்களில், அத்தை எனக்கொரு காபி என ஷோபாவில் கால் ஆட்டிக்கொண்டு கேட்பதும் என முன்னுக்கு பின் முரணாகவே நடந்து கொள்வாள்.
இப்படி மல்லிகாவிற்கும், பிரபாவிற்கும் உள்கட்சி பூசல் நிறைய இருந்தாலும் செல்வம், கர்ணனின் காதுகளுக்கு செல்ல விட்டதில்லை மல்லிகா. குடும்ப நிம்மதி போய் விடுமே என அமைதி காத்துவிடுவார்.
வேலை செய்கிறாயா செய், இல்லையென்றால் நான் செய்கிறேன்.. இருக்கும் வரை செய்வேன்.. அவ்வளவு தான் அவருடைய எண்ணங்கள் இப்படியாய் மாறி இருந்தது.
இதற்கிடையில் கல்லூரி சேர்ந்தாள். கமலி.. அதன்பின் கர்ணனுக்கு இரண்டு வருடங்கள் கழித்து மகன் பிறக்க, பசியாறும் நேரம் தவிர்த்து கமலி கையில் வைத்து கொண்டே சுற்றுவாள். படிப்பு கூட இரண்டாம் பட்சாமாய் மாறிப்போக, “அத்தை பாரு.. அத்தை பாரு” என கொஞ்சி கொண்டே திரிவாள்.
படித்தது லைப்பிர்ரரி சயின்ஸ். பிரபல கல்லூரியிலேயே டெம்பரவரியாய் திருமணத்திற்கு முன்பு ஜீனியர் லைப்ரேரியனாய் வேலை பார்த்து வந்தாள்.
அப்போது தான் கமலிக்கு வரண் பார்க்க துவங்கி, கிரியுடன் திருமணமும் முடிந்து விட்டது. திருமணத்தை காரணம் காட்டி பின்பு வேலையையும் விட்டுவிட்டாள்.
இதோ திருமணத்தின் பின்பு சற்றும் எதிர்பாராமல் மீண்டும் தாய்வீட்டிற்கே வந்து விட்டாள்.
அங்கே கிரியின் வீட்டில் இருக்கும் போது ராஜி, வசந்தாவின் நடவடிக்கைகளின் வித்யாசத்தை கண்டு கொள்ள வாய்ப்பு கிடைத்ததை போல, தாய் வீட்டிற்கு வந்த பின் பிரபாவின் நடவடிக்கைகளும் அவள் கண்ணை உறுத்த துவங்கியது.
அதுவும் சற்று முன்பு அவளது தாயுடன் தன்னை பற்றி போனில் பேசியதும் வந்து ஒட்டிகொள்ள, பிடிப்பே அற்று போனது கமலிக்கு.
மேலோட்டமாய் பார்க்கையில் வம்பளப்பது போல் தோன்றினாலும், பிரபாவின் பேச்சில் சில பல உள் குத்துகள் இருப்பதை இப்போது கண்டு கொண்டாள்.
விருந்தும் மருந்தும் எத்தனை நாளைக்கு. தன்னுடைய பிறந்த வீட்டிலேயே இப்படி ஒரு எண்ணம் எழுகிறதே! மனதே வெறுத்து போனது.
சொந்த வீட்டில் இப்படியென்றால், ராஜி, வசந்தாவின் செயல்களை எதில் சேர்ப்பது? அடுத்தவர் வீட்டிலும் இப்படி தான் இருப்பார்கள். இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா? கேவலம் பணத்திற்காக மகனது வாழ்வையேவா அடமானம் வைப்பார்கள். என்ன ஜென்மங்களோ! நல்ல வேளை இப்படி ஒரு தாய் தனக்கு அமையவில்லை. இப்படி நினைக்கையில் பிறந்த வீடு புகுந்து வீடு இரண்டுமே கசந்தது.
********
எப்படி பிரபாவின் பேச்சு கமலியின் காதுகளில் எட்டியதோ, அதோ போல் மாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்க வந்த மல்லிகாவின் காதுகளையும் எட்டியிருந்தது. சில நிமிட பேச்சுகளிலேயே கமலி அங்கிருந்து நகன்றிட, பின்னாலேயே வந்த மல்லிகா நின்று நிதானமகா கேட்டுவிட்டார். பேசி முடிக்கும் வரை பொறுமை காத்தவர், முடித்த பிறகு, அவள் அறைக்குள்ளேயே வந்து விட்டார். கட்டிலில் உறங்கி கொண்டிருந்த பேரனின் மேல் ஒரு பார்வை வைத்தவர், “யார்ட்ட பேசிட்டு இருந்த பிரபா, உங்கம்மா கிட்டயா” எடுத்தவுடனே கேட்டார்.
பிரபா பே என முழிக்க..
“இப்போ அவ பிரச்சனை எல்லாத்தையும் உன் அம்மாகிட்ட சொல்லியே ஆகனுமா பிரபா.. அதுவும் ரொம்ப சந்தோஷமா பேசுற மாதிரி இருக்கு. கமலி கஷ்டபடுறதுல அவ்வளவு சந்தோஷமா உனக்கு? என்ன பண்ணினா அவ உன்னை?அவ வீட்டில் அவ்ளோ பிரச்சனைனு தான் இங்க இருக்கா. நீயும் இப்படி அவ காதில் விழற மாதிரி பேசினா அவ எங்க போவா பிரபா” எப்போதுமே குரலுயர்த்த ‘என்ன கமலி கேட்டுவிட்டாளா’ இன்னும் பேய் முழி முழித்தாள்.
“நான், நான்.. பேசினதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்கத்தை..” திக்கி திணறியது அவள் குரல்.
“போதும்மா புரிஞ்ச வரை போதும். இனி கமலிய பத்தி பேசனும்னா, உங்க வீட்டுக்கு போய் ஆசை தீர பேசிக்கோ. நான் அங்க வந்து கேட்க போறதில்லை. என் புள்ளையும் வந்து்நிக்க போறதில்லை. என் புள்ள வாழ்க்கை நல்லா இருந்திருந்தா நான் ஏன் உன்கிட்டலாம் வந்து நிக்க போறேன்” கோபமாய் ஆரம்பித்து, கண்கலங்க பேசிவிட்டு செல்லும் மல்லிகாவை அப்போதும் குதர்க்கமாக தான் பார்த்து வைத்தாள் பிரபா.
error: Content is protected !!