Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 31

எவ்வித கவலையுமின்றி ஆரவாரமாக.. துள்ளி குதித்து ஓடிவந்து பாதங்களை தொட்டு சென்றன கடலலலைகள்..!

ஆர்ப்பரிப்பும் அடங்காத தன்மையுமாக ஒரு சிறு குழந்தையின் பிடிவாதத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்தாள் சமுத்திரா தேவி.

கடலலலைகள் ஓடி வந்து தொட்டு விளையாடும் தூரத்தில் மணற்பரப்பில் வாத்சல்யனும் சந்தான லஷ்மியும் நெருக்கமாக அமர்ந்திருந்தனர்.

மறைவிடம் அது..! மக்கள் நடமாட்டமில்லாத தனி இடம்.



Advertisement

மாலை மங்கி இருள் பருவ தொடங்கிய அந்தி நேரம்..! சடசடவென முகத்தோடு மோதிய காற்றில் லஷ்மியின் கூந்தல் கற்றைகள் முகத்தோரம் விழுந்து அவளை மென்மேலும் அழகியாய் காட்டுவதாக உணர்ந்து இமை சிமிட்டாமல் ரசித்தான் வாத்சல்யன்.

குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள் லஷ்மி..

“இந்த நேரத்துல கூட என்னை எப்படி ரசிக்க முடியுது உங்களால..?”

Advertisement

*ஏன்..! என் பொண்டாட்டி எப்பவுமே எனக்கு அழகிதான்..” என்றவனை ஆழமாக ஊன்றி பார்க்கிறாள்.

Advertisement

“என் மேல உங்களுக்கு கோபமே வரலையா..?”

அவள் கையை மென்மையாக பற்றி தன் தொடையில் வைத்துக் கொள்கிறான் வாத்சா..!

“நீ எடுத்த முடிவு சரிதான் சந்தா..! ஆனா என்னை விட்டு போகணும்னு முடிவெடுத்ததுதான் தப்பு..!” குரல் கரகரக்க கலங்கிய விழிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் வேறு பக்கம் திரும்பிக்கொள்ள.. குமிழாக ஏதோ ஒன்று உடைந்து நெஞ்சை அடைக்க.. அவன் தோள் சாய்ந்து கொள்கிறாள் சந்தான லஷ்மி..!

Advertisement

அப்படி என்னதான் நடந்தது.. இனி என்ன நடக்கப்போகிறது.. அவர்கள் நினைவுகளோடு சேர்த்து சற்று முன்னோக்கி நகர்ந்தால்..

வேலை விட்டு வீடு வந்த வாத்சல்யன்.. சந்தா.. “காபி போட்டு குடும்மா..! தலை வலிக்குது.. நான் போய் குளிச்சிட்டு வரேன்..!” அவள் முகத்தை பாராமல் சொல்லிவிட்டு.. காலர் பட்டனை அவிழ்த்தவன்.. அவளிடமிருந்து பதிலேதும் வராமல் போனதில் நிமிர்ந்து பார்க்கிறான்.

“ச..ந்..தா!” அழைக்க வழியின்றி வார்த்தைக்கு பதில் காற்றுதான் வருகிறது.

கண்கள் இமைக்க மறந்து விழியகலாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், கண்முன்னே தெரிந்த பஞ்சலோக சிற்ப அழகினிலே மூச்சடைத்து போனான்.

தங்கமும் வைரமுமாக அவள் பாட்டியின் நகைகளை அணிந்து.. கல்யாணப் பட்டுப்புடவையை உடுத்திக் கொண்டு அன்று பார்த்த புதுமணப்பெண் போல் புதுக்கருக்கு குறையாமல் பொலிவோடு நின்று கொண்டிருக்கிறாள் சந்தானலஷ்மி..!

“ஓ மை காட்..! சந்தா என்ன இது!” அவளைப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தவன் கட்டில் தடுக்கி தடுமாறின போதும் அதை பொருட்படுத்தாமல் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“சும்மா..! சந்தோஷமா இருந்தேன் செலபிரேட் பண்ணனும்னு தோணுச்சு..! எப்படி இருக்கேன்..?*

“உன் பாட்டியோட நகைகளா..?”

“ம்ம்..!” காற்றில் பரவும் மகரந்த தூவல்களாக திடீரென ஒட்டிக்கொண்டு வெட்கத்துடன் தலை கவிழ்ந்தாள் சந்தானலஷ்மி..

இடுப்பில் கைவைத்தபடி அவளை தலை முதல் கால் வரை அங்குலமங்குலமாக தன் விழிகளால் அள்ளிப் பருகினான் வாத்சா..

“என் கண்ணை பார்த்தா தெரியலையா..? உன் அழகை பார்த்து சொக்கி போயிருக்கேனேடி.. இதுக்கு மேல என்ன தெரிஞ்சுக்கணும்னு விரும்பற நீ ம்ம்..?” என்றபடியே அவளை இறுக்கி அணைத்தான்.

தன் கைகளை பூமாலையாக்கி அவன் கழுத்தை கட்டிக் கொண்டு கண்ணோடு கண் பார்த்தாள் லஷ்மி!

“அப்படியெல்லாம் பாக்காதடி! அப்புறம் ஒரு மாதிரியாகி போகும்.!”

“என்ன மாதிரியாகிப் போகும்..!” நாக்கை சுழற்றி கேட்க..

“அப்புறம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்ல பாத்துக்கோ..!” என்றான்‌ அவன்..!

“பொறுப்புத் துறந்தாலும் பரவாயில்லை ஆனா.. நடக்க வேண்டியது நடந்தே ஆகணும்..!” என்றவளை கண்கள் சுருக்கி ஆழ்ந்து பார்த்தான் வாத்சா..

“என்ன ஆச்சு.. என் அம்முக்கு..! பார்வை பேச்சு நடந்துக்கற விதம் எல்லாம் ஒரு தினுசா இருக்கே?”

“இப்படித்தான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க போறீங்களா? மிஸ்டர் வாத்து..! எல்லாம் பாழா போச்சு.. இன்னைக்கு வெறும் பேச்சுதான் போலிருக்கு..!” அவனை தள்ளி விட்டு போனவளை மீண்டும் இடை பற்றி தன் பக்கமாக இழுத்தான் வாத்சல்யன்.

“யார பார்த்துடி வெறும் பேச்சு மட்டுந்தான்னு சொல்ற..! என்னை பத்தி தெரிஞ்சும் அநியாயத்துக்கு வாயை விட்டு மாட்டிகிட்டியேடி என் செல்ல குட்டி..!” கண்களில்.. கன்னங்களில் உதட்டில் முத்தமிட்டு கழுத்தோரம் முகம் புதைத்தான்..

பேச்சில் மட்டும்தான் முரட்டுத்தனம்.. மற்றபடி செயல்களில் மிக மிருதுவாக அவளை அணுகினான்..

“பாருங்க பாருங்க இன்னும் கூட பேசிட்டே இருக்கீங்க..!” என்றவளை அதற்கு மேல் பேசவிடவில்லை வாத்சல்யன். இதழுக்குள் புதைந்து ஆழ்ந்து முத்தமிட்டு அவளோடு பின்னிப்பிணைந்தவன் நேரங்கள் கடந்த பின்னும் விட்டு விலகவில்லை..

இத்தனை வருடங்களில் அவன் கேட்டும் கிடைக்காத கோரிக்கைகளை நிறைவேற்றி.. காணாத இன்பங்களை அள்ளித் தந்து மூச்சு முட்ட வைத்து.. ‘சந்தா.. கண்ணம்மா.. என் அம்மு!’ நொடியும் விடாமல் அவள் பெயரை மட்டும் உச்சரிக்கும்படி வைத்திருந்தாள் சந்தான லஷ்மி..!

இருவரும் களைத்து விலகும் போது.. “ரொம்ப சந்தோஷமா இருந்தேன்டி..! இந்த நாளை என் வாழ்க்கையில மறக்கவே முடியாது..” மூச்சிறைக்க.. வாய் கொள்ளா சிரிப்புடன் அவன் சொன்ன போது.. சந்தானலஷ்மிக்கு இந்த ஜென்மம் முழுமையடைந்த திருப்தி..

மனமும் உடம்புமாய் சேர்ந்து பூரித்து போயிருந்தான் வாத்சல்யன்.. கட்டியணைத்துக் கொண்டு லேசாக இதழ் பிளந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள் லஷ்மி!

“ஐ அம் சாரி வாத்சா..! என்னை மன்னிச்சிடுங்க.. இதை விட்டா எனக்கு வேற வழி தெரியல..! எல்லாத்தையும் நிறுத்தனும்னா முதல்ல நான் இல்லாம போகணும்..!” அவள் பேச பேச விழிகளிலிருந்து வெளியேறிய கண்ணீர் துளிகள் வாத்சல்யனின் நெஞ்சை நனைத்தன.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் உடைகளை அணிந்து கொண்டாள்.. வாத்சல்யனை கருணை பொங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு மேஜைக்கு வந்தவள்.. பேப்பர் பேனாவை எடுத்து எழுத தொடங்கினாள்.

‘என் மரணத்திற்கு யாரும் காரணமல்ல.. குழந்தை இல்லாத ஏக்கம் தந்த அழுத்தத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்.’ என எழுதி வைத்துவிட்டு சத்தம் வராமல் டிராயரை திறந்து தூக்க மாத்திரை பாட்டிலை கையிலெடுத்தாள்.

உள்ளங்கைக்குள் வேர்க்கடலை போல் குட்டி கோபுரமாய் குவிந்து விழுந்த தூக்க மாத்திரைகளை ஒருகணம் வெறித்து பார்த்திருந்தவள்.. அதை வாயில் போட்டுக் கொள்ளும் நேரம்..

சடாரென ஒரு கரம் அதை தட்டி விட்டிருந்தது.. மாத்திரைகள் சிதறி விழுந்தன.

செய்தது வேறு யார்..? வாத்சல்யனே!

வெந்நீர் ஊற்றாய்.. கொதித்து தழும்பிய கண்களுடன்.. முகம் சிவக்க கடுங்கோபத்துடன் அவள் முன்னே நின்றிருந்தவன்
முரட்டுத்தனமாய் அவள் தோள்களை பற்றியெழுப்பி நிற்கவைத்து பளாரென ஒரு அறை விட்டான்.

விழிகளை மூடி புன்னகையுடன் அவன் தந்த பரிசை வாங்கிக் கொண்டாள் சந்தானலஷ்மி..!

“என்னடி இதெல்லாம்..?” அவன் ஆங்காரமான குரலில் உடம்பு உதறலெடுத்து அடங்கியது.

அவள் முடியை பற்றி தன் பக்கம் இழுத்தான் வாத்சல்யன்.

“இப்படி விட்டுட்டு போகத்தான் மொத்தமா சந்தோஷத்தை கொடுத்து என்னை தூங்க வச்சியா..? அப்படி என்னடி பாவம் பண்ணிட்டேன் நான்! இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கற அளவுக்கு..?” கனம் தாங்காமல் கண்ணீரால் நனைந்திருந்தன அவன் கண்கள்.

“பா.. பாவி நான்தான்..!” லஷ்மியின் உதடுகள் பிரிந்து நடுங்கிய குரலோடு தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

ஏற்கனவே தீராத மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருப்பவளிடம் இப்படி நடந்து கொள்வது முறையல்ல என்ற உண்மை நெற்றி பொட்டில் அடித்தாற்போல் உரைக்க.. பலத்த முயற்சியுடன் தன்னை சமன்படுத்திக் கொண்டு பிடியை தளர்த்தினான் வாத்சல்யன்.

“என்னடி ஆச்சு உனக்கு..? ஏன் இப்படி! நான் உனக்கு என்னடி குறை வெச்சேன்..?” குரல் உடைந்து அழுதிருந்தான் வாத்சல்யன்.

“அந்த கடவுள்தான் நமக்கு குறை வச்சுட்டான். என்ன பாவம் செஞ்சேனோ தெரியல..! குழந்தை இல்லாத குறைய கொடுத்து என்னை எல்லார்கிட்டருந்தும் ஒதுக்கி வச்சிட்டான்.!” தலையிலடித்துக் கொண்டு அழுத கணம் அவன் உருகத் தொடங்கினான்.

“சந்தும்மா..!”

“வரங்கற பேர்ல என்னை குழப்பி, என் மனசுல ஆசைய விதைச்சு என் சுயநலத்துக்காக இரக்கமில்லாம ஒரு உயிரை கொல்லுற அளவு பாவியாக்கிட்டான். இந்த அசரீரி கனவுல வந்ததிலிருந்து நான் நானாவே இல்லை வாத்சா..! என்னை முழுசா இழந்துட்டேன். என் சுயத்தை தொலைச்சுட்டேன்.. இப்போ உன் கண் முன்னாடி நிக்கறது.. ஒரு சுயநலக்காரி.. பேராசைக்காரி..” குலுங்கி அழுதாள் லஷ்மி!

“சந்தா.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு.. இதுக்கு நீ மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்..?”

“ஆனா என்னால மட்டுந்தான் இதை நிறுத்த முடியும் வாத்சா..!”

“என்னடி உளர்ற..?”

எழுந்து வந்தவள் வாத்சல்யனை இருக்கையில் அமர வைத்து அவன் காலடியில் முழங்காலிட்டு அமர்ந்தாள்.

“ஏன் ஒருத்தியாலதான் மட்டுந்தான் இதை முடிச்சு வைக்க முடியும்ன்னு சொல்றேன்!”

“அறைஞ்சிருவேன் சந்தா.. பைத்தியம் மாதிரி பேசாத..! இப்படி அரையுங்குறையுமா முடிச்சு வைக்கத்தான் இதை நான் தொடங்கி வைச்சேனா..!” குரலில் கனல் தெறித்தது.

“தீப்தி என்னை அம்மான்னு கூப்பிட்டா..!” மடமடவென வழிந்த கண்ணீரோடு.. உதடுகள் துடிக்க.. அந்த இன்பத்தில் முழுமுற்றாக மூழ்கியபடி மேனி சிலிர்க்க சொன்னாள் லஷ்மி..!

“அவ அம்மா.. அம்மான்னு கூப்பிட்ட அடுத்த நொடி எனக்குள்ள இருந்த ஏக்கமெல்லாம் பனியா கரைஞ்சு போச்சு.. ஒரு தாயா நான் முழுமை அடைஞ்சிட்டேன் வாத்சா..! அந்த தாய்மை உணர்வை கொடுத்தவ தீப்திதானே..? ஒரு தாய் தன் குழந்தையை எப்படி கொல்லுவா வாத்சா..?”

“சந்துமா நான் சொல்றத கேளு..!” அவள் முகத்தை தன் கையிலேந்தினான் வாத்சல்யன்.

“அன்னிக்கு வினோத் பிறந்தநாள்ன்னு கேக் வெட்டும் போது.. எனக்குத்தான் முதல் வாய் ஊட்டினான். மீனாட்சியும் வேணுவும் நம்மகிட்ட எவ்வளவு பெருந்தன்மையாக நடந்துக்கறாங்க..! நந்தினிக்குட்டி பெத்த தாயோட பகிர்ந்துக்க முடியாத விஷயத்தையெல்லாம் என்னோட தான் ஷேர் பண்ணிக்கறா..! அந்த குடும்பத்துக்கு என்னால எப்படி துரோகம் பண்ண முடியும் வாத்சா..?” அழுகையும் கதறலுமாக அவள் குரல்.

“இன்னும் ஒரு மாசம் பாக்கியிருக்கு.. அதுக்குள்ள நான் செத்துப் போயிட்டா.. இந்ந அசரீரி வரம் சாபம் எல்லாம் முடிஞ்சு போயிடும்..”

“அப்ப என்னை பத்தி நீ யோசிக்கவே இல்லைல..?* கரகரத்த குரலோடு பரிதாபமாய் தன்னை பார்க்கும் கணவனை கண்கொண்டு காண இயலவில்லை அவளால்.

இதுவரை அவனை கம்பீரமாய் பார்த்திருக்கிறாள்.. காதலோடு பார்த்திருக்கிறாள். ஆனால் இப்படி கண்கலங்க வைத்து பார்த்ததில்லையே..!

என்ன பதில் சொல்வதென தெரியாமல் கலங்கி நின்றாள் சந்தான லஷ்மி..! அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்ற துடிப்பிலும் தவிப்பிலும் என் வாத்சல்யனை எப்படி மறந்து போனேன்..! ஆனாலும் என் முடிவை மாற்றிக்கொள்ள போவதில்லை..! தன் முடிவை இறுக முடிச்சிட்டு வலுவாக்கினாள்

சில கணங்களாய் வாத்சல்யனிடம் தொடர்ந்திருந்த மௌனம் அவள் நெஞ்சை கிழித்து கூறு போட்டது..

“வாத்சா..!”

“எங்க போனாலும் என் துணை இல்லாம போக மாட்டேன்னு சொன்னியே சந்தா..! மரணம் கூட நம்மள பிரிக்க முடியாதுன்னு.. என் நெஞ்சில சாய்ஞ்சு சொன்னதெல்லாம் பொய்யா..!” உணர்ச்சிகளை துடைத்து கல்லாக இறுகிப் போயிருந்த முகமும் குரலும் அவளை மருட்டியது.

“நீங்க நல்லா இருக்கணும் வாத்சா..! தண்டனை எனக்குத்தான்.. உங்களுக்கு இல்லை..!”

“உன்னை இழக்கறதை விட பெரிய தண்டனை என்னடி இருக்கு..? சாக துணிஞ்சிட்ட.. அந்த குடும்பத்தை காப்பாத்தனும்னு முடிவெடுத்துட்ட..! உன் முடிவை நான் ஏத்துக்கறேன்.. ஆனா ஒரு கண்டிஷன்..! சேர்ந்து போகலாம் சந்தா..!”

“நோ.. நோ! வாத்சா..!” அவசரமாக மறந்து ஏதோ சொல்ல வந்தவளின் வாயை பொத்தினான் வாத்சல்யன்.

“கடைசி வரைக்கும் உன் கை பிடிச்சுட்டு கூட வருவேன்னு வாக்கு தந்திருக்கேன். எப்படி விட்டுடுவேன்‌ ஹான்..? சேர்ந்தே போவோம்!” என்று சிரித்தவனை பேச்சற்று வெறித்தாள் சந்தானலஷ்மி!

“எ.. என் மேல உங்களுக்கு கோ..பம் வரலையா..?” காற்றும் பேச்சுமாக குரல் வறண்டிருந்தது.

“நீ என்ன முடிவெடுத்தாலும் நான் உனக்கு துணையிருப்பேன்னு பிராமிஸ் பண்ணியிருக்கேன்.. அது மரணமா இருந்தாலும் சரி..!”

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வாத்சல்யனின் அன்பின் கனத்தை தாங்க இயலாமல் நெஞ்சு வலித்தது.. தளர்ந்து போனவனாய் அவன் மடியில் தன் தலையை சாய்த்துக் கொள்ள.. மென்மையாக அவள் கூந்தல் வருடினான் வாத்சல்யன்.

மறுநாள் விடியலில் தன் மடியிலிருந்து கண் விழித்த மனைவியை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன்.

“ஹாப்பி ஆனிவர்சரி..!” காற்றுக்கும் வலிக்காத அந்த மிருதுவான குரல் அவளை உலுக்கியது..

இதை எப்படி மறந்து போனேன்..? கண்களை உருட்டினாள்.

அவளை எழுப்பி நிற்க வைத்து கண்ணோடு கண் பார்த்தான் வாத்சல்யன்.

“சாயங்காலம் வரைக்கும் டைம் இருக்கு..! அதுவரைக்கும் எல்லாத்தையும் மறந்துட்டு நமக்காக மட்டும் வாழ்வோமா..?” அவன் கண்கள் இறைஞ்சின..

“ஐம் சாரி வாத்சா..! என்னாலத்தான் இவ்வளவும்..! என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்..!” அவன் நெஞ்சோடு முகத்தை முட்டி முட்டி கதறினாள் வாத்சா.!

“அழக்கூடாது..! இன்னைக்கு நோமோர் எமோஷனல் பேத்தல்ஸ்..! ஒன்லி ஹேப்பினஸ்!” துக்கத்தை நெஞ்சுக்குள் விழுங்கி கொண்டு உதட்டை கடித்து புன்னகைத்தவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டினான்.

குளித்து முடித்து தயாராகி இருவருமாக வீட்டை விட்டு புறப்பட்டனர்..

திருமணமான பிறகு எந்தெந்த இடங்களுக்கு போய் வந்தார்களோ அதே இடத்திற்கு மீண்டுமொரு முறை கைகோர்த்து பட்டாம்பூச்சியாய் வலம் வந்து பழைய ஞாபகங்களை மீட்டெடுத்துக் நெஞ்சில் சேமித்துக் கொண்டார்கள்.

மெய்யாகவே உலகம் மறந்து ஒருவரை ஒருவர் ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்ட உன்னத தருணங்கள்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இருவரும் முதன் முதலில் சந்தித்த அந்த ரெஸ்டாரன்ட்டில் தங்களது கடைசி காபியை முடித்துக் கொண்டு புறப்பட்டவர்கள் இதோ கடற்கரையில் அலைகளின் நெருக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

“உங்களுக்கு ஞாபகம் இருக்கா வாத்சா..? பெண் பார்த்துட்டு கிளம்பி போகும்போது என் ஃபோன் நம்பர் கேட்டு ஜன்னல் பக்கமா வந்து நின்னீங்களே! ரொம்ப தைரியம் உங்களுக்கு..!”

“அப்பவே நீதான் என் மனைவின்னு முடிவு பண்ணிட்டேன் அதனால வந்த தைரியம்.. ஆனாலும் நீ நம்பர் கொடுக்கவே இல்லையே.. என் நிலைமையை பார்த்து பரிதாபப்பட்டு உன் சின்னக்காதானே ஒரு பேப்பர்ல உன் நம்பரை எழுதி கொடுத்தாங்க..!” கடல் அலையை பார்த்தபடியே சிரித்துக்கொண்டு சொன்னான் அவன்.

“உங்களை ரொம்ப பிடிச்சதுனாலதான் நிச்சயதார்த்துக்கு முன்னாடி பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியும்.. நீங்க போன் பண்ணும் போதெல்லாம் தனியா வந்து பேசினேன்..!”

“ஆனா முதல் ஐ லவ் யூ சொன்னது நான்தானே? கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடி..!”

“கட்டிப்பிடிச்சு உங்க கன்னத்துல முத்தம் கொடுத்தது நான்தானே.. ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு..!” இத்தருணம் நிச்சயம் அவள் வெட்கப்படுவாள் என திரும்பி பார்த்தான் வாத்சல்யன்.. எதிர்பார்ப்பு வீண் போகவில்லை..!

“அன்னிக்கு உன் முகத்துல பார்த்த சிரிப்பை காலம் முழுக்க தக்க வச்சுக்கணும்னு மனசுக்குள்ள சங்கல்பம் எடுத்திருந்தேன்.. எல்லாம் வீணா போச்சு சந்தா..!”

அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் அவள்..

“இப்பவும் நான் சந்தோஷமாத்தான் இருக்கேன் வாத்சா..! அப்ப பிடிச்ச கையை இப்ப வரைக்கும் நீங்க விடவே இல்லையே..!” என்ற நேரம் இருவரின் கரங்களும் பிரியாமல் கோர்த்திருந்தன..!

“காதல்ன்னா என்ன‌ வாத்சா..?”

“சந்தோஷத்துல பங்கு கொள்றது மட்டுமில்ல.. துக்கத்திலயும் துணை நிக்கறது.. இல்லையா சந்தும்மா..!”

உண்மை காதல் யார் என்றால் உன்னையும் என்னையும் சொல்வேனே..!
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே..!

“இந்த வரிகள் நமக்குத்தான் பொருந்தும் வாத்சா..!”

“உனக்கு பயமில்லையா கண்ணம்மா..?”

“இறுதிவரை துணைக்கு நீங்க வரும்போது எனக்கென்ன பயம்..!”

இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கடி சந்துமா..!” என்றதும் நிமிர்ந்தாள் சந்தான லஷ்மி!

“இதுக்கப்புறம் இதைச் சொல்ல எப்பவும் வாய்ப்பு கிடைக்காது இல்லையா..?” அவன் சிரித்தான்.

“எப்படி நான் எது செஞ்சாலும் கண்மூடித்தனமாக சப்போர்ட் பண்றீங்களே..! நான் செய்யறதேல்லாம் பைத்தியக்காரத்தனம்னு உங்களுக்கு தோணல..?”

“கண்ண மூடிக்கிட்டு சப்போர்ட் பண்ணலடி.. கண்மூடித்தனமான அன்புல.. நீ எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு நம்பிக்கையில சப்போர்ட் பண்றேன்.. நீ சொன்னது சரிதான் சந்தா.. நாம ஆரம்பிச்சதை நாமதான் முடிச்சு வைக்கணும்..! நேரமாச்சு போகலாமா..?” என்று எழுந்தவனின் கைப்பற்றி இழுத்தாள் சந்தான லஷ்மி!

“என்னடா..?” என்றவனின் கண்களுக்குள் கலந்தாள்.

“ஐ லவ் யூ வாத்து..! இனி இப்படி கூப்பிட வாய்ப்பு கிடைக்காதே!” சிரிக்க முயன்றாள்.. ஆனால் அழுகைதான் வந்தது.

மனைவியை இழுத்து மூச்சு முட்ட ஆசை தீர முத்தமிட்டான் வாத்சல்யன்..

ஒருவரை ஒருவர் விழுங்கும் பார்வையுடன் கடைசி முத்தம்..!

“ஹாப்பி ஆனிவர்சரி வாத்சா..”

“ஹாப்பி ஆனிவர்சரி சந்துமா..!”

கைகோர்த்துக்கொண்டு இருவருமாய் எழுந்தனர். கடலின் ஆழம் நோக்கி சென்றனர்.. புள்ளியாய் உருகி மறைந்தனர்.

தொடரும்.

One thought on “பாறையில் மலர்ந்த தாமரையே! 31

  • Krishnaveni

    இல்ல இல்ல இப்படி பண்ணாதீங்க என்னால தாங்க முடியல 😭😭😭
    நிஜமாகவே உண்மை காதல் ன்னா அது நீங்க தான் சாந்தா வாத்சா 🥹🥹🥹

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!