பொடிப்பொடியான ஹாட் வீல்ஸ் ரேஸ் கார்கள், பாம்பென வளைந்து நெளியும் தாமஸ் ட்ரெயின் செட், நூற்றுக்கணக்கான லெகோஸ் எனக் கால் வைக்கவே இடமில்லாத அளவிற்குப் பொம்மைகளைத் தரையில் பரப்பி விளையாடிக்கொண்டிருந்தனர் தருண்-உத்ராவின் ஐந்து வயது பூர்த்தியான இரட்டைப் புதல்வர்கள் வருணும் வினய்யும்.
பேரப்பிள்ளைகளைக் கண்டிக்கவும் முடியாமல் அவர்கள் இழுப்புக்கு ஈடுகொடுத்து விளையாடவும் முடியாமல் குழந்தைகளின் விஷமங்களை ரசித்துக் கொண்டிருந்தனர் திலகாவும் தாமோதரனும்.
Advertisement
“அச்சோ! ரெட் கலர் இல்ல தாமு தாத்தா. இன்ஸ்ட்ர்கஷ்ன் பாரு. இங்க ப்ளூ பீஸ் அட்டாச் பண்ணணும்,” கட்டிடக்கலை ஜாம்பவானுக்கே லெகோ ப்ளாக்ஸை எப்படி இணைக்க வேண்டுமென கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தான் வினய்.
பூகம்பமே வந்தாலும் அசரமாட்டேன் என்ற ரீதியில் சோஃபாவில் சயனித்தபடி ஐபேடில் வர்ட் பசில் விளையாடிக் கொண்டிருந்தாள் விரூபா.
Advertisement
அலுவலக ஊழியரின் திருமண வரவேற்பு விழாவிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய இரண்டு ஜோடிகளும். உறங்காமல் அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்த்து வாயைப்பிளந்தனர்.
Advertisement
ஷ்ரவனும் ரம்யாவும் உடைமாற்றிவிட்டு வருகிறோம் என நகர, பஞ்சாயத்தை எந்தப் பிள்ளையிடமிருந்து தொடங்குவது என மூவரையும் ஏறிட்டாள் உத்ரா.
ஐபேடுடன் தன்னவன் அருகில் அமர்ந்துகொண்டாள் ரம்யா. திறம்பட புதிர்களைக் கண்டறியும் ஷ்ரவனின் தனித்துவமான வழிகாட்டல் குழந்தை கையாண்டிருக்கும் யுக்திகளில் பிரிதிபலித்தது.
“உங்கள மாதிரியே விளையாடுறா ஷ்ரவன்,” எனப் பூரித்தாள்.
“உன்னை மாதிரியே ஈசியான நாலு க்ளூஸ் கோட்டை விடுறதுலயும் அவளை அடிச்சுக்க ஆளே இல்ல,” அவன் சிரிக்க,
“அப்போ சொல்லிக்கொடுக்குற உங்ககிட்டதான் தப்பு இருக்கு,” அவன் புஜத்தில் நறுக்கென்று கிள்ளினாள்.
ஐபேடின் திரையில் உத்ரா சேமித்துவைத்திருக்கும் குடும்பப் புகைப்படத்தைக் கண்டதும் மெய்சிலிர்த்து வருடினாள்.
நடுநாயகமாக திலகாவும் தாமோதரனும் அமர்ந்திருக்க, விரூபா அவர்கள் மடியிலும், அவர்களுக்குப் பின்னால் ரம்யா வினய்யையும், ஷ்ரவன் வருணையும் ஒருமாத கைக்குழந்தைகளாய் ஏந்தியிருக்கு, ஒருமுனையில் தருண் தோழியின் தோள் சுற்றி வளைத்து நிற்க, மறுமுனையில் உத்ரா அண்ணனின் கைவளையத்தில் பின்னிக்கொள்ள என இரட்டையர்களின் பெயர் சூட்டு விழா அன்று எடுத்த புகைப்படம் அது.
“நீங்க சொன்னமாதிரியே, நம்ம குழந்தைங்க நம்மகிட்டயே வந்துட்டாங்கல ஷ்ரவன்,” எனக் கணவன் தோள்சாய்ந்து கொண்டவளின் நினைவுகள் பின்னோக்கி பயணித்தன.
வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளையாகப் பிறந்து வளர்ந்த உத்ரா, இரண்டு குழந்தைகளாவது பெற்றுக்கொள்வேன் எனத் திருமணமான நாள் முதலே சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் ஷ்ரவன் ரம்யாவின் நிலை அறிந்து தம்பதிகள் வேறுசில முடிவகள் எடுத்து, புத்தி தெளிந்து என விரூபா பிறக்கவே பல வருடங்கள் ஆகியிருந்தது.
விரூபாவுக்கு மூன்று வயதாகியும் அவர்கள் அடுத்த குழந்தைக்கு முயற்சிக்கவில்லையே என ரம்யாவிற்கு யோசனையாக இருந்தது. வாய்விட்டுக் கேட்கவும் சங்கடம்.
ரம்யாவின் மனத்தைப் படித்ததுபோல, “என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தம்பி இல்லேன்னா தங்கை இருக்காங்க. நம்ம வீட்டுல மட்டும் ஏன் குட்டிப் பாப்பா யாருமே இல்ல,” விரூபா துருவித் துருவிக் கேட்க ஆரம்பித்தாள். அதுவே அப்பேச்சை எடுக்க ஏதுவாக அமைந்திருந்தது.
உத்ராவின் வயதை சுட்டிக்காட்டி தள்ளிப்போடுவது நல்லதில்லை என அறிவுறுத்தினாள். இம்முறை அவர்கள் மழுப்பவில்லை. நேரடியாகவே காரணத்தை உரைத்திருந்தனர்.
“உங்க மூலமா எங்களோட ட்வின்ஸ் மறுஜென்மம் எடுத்து நம்ம வீட்டுக்கே திரும்பி வந்து என்னை வாய்நிறைய பெரியப்பான்னு கூப்பிடுவாங்கன்னு நான் ரொம்ப ஆசையா காத்துட்டு இருக்கேன்,” ஷ்ரவனின் ஆதங்கம் உத்ராவின் வைராக்கியத்தை அசைத்தது.
தன் உடன்பிறவா அண்ணனுக்காக இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வேன் என உறுதியாகச் சொன்னாள். அவள் கண்மூடித்தனமான அன்பில் நெகிழ்ந்த கடவுள், இரட்டைக் கனிகளை வரமாக அளித்திருந்தார்.
மழலைச் செல்வத்திற்காக ஏங்கி தவமிருந்த தம்பதிகளுக்குத் தங்கள் குழந்தைகளே மறுஜென்மம் எடுத்து வந்துவிட்டது போல பேரானந்தம். தருண் தேர்ந்தெடுத்து வைத்திருந்த மற்ற இரண்டு பெயர்களான ‘வினய், வருண்’ என்ற பெயர்களையே சூட்டினர்.
மௌனமொழியில் உரையாடும் தம்பதிகளின் உடல்மொழியிலேயே அவர்கள் மனநிலையைக் கண்டுகொண்டாள் உத்ரா. விட்டால் விடிய விடிய சிந்தனையில் கரைந்திருப்பார்கள் என அறிந்தவள், இருவரையும் ஒருசேர உலுக்கி,
வாய்நிறைய அண்ணா என அழைத்து உறவாடும் அவள் கள்ளம் கபடமில்லாத சுபாவம் கண்முன் விரிய, “அவ எப்பவுமே அப்படித்தான்!” மென்னகையுடன் தலையைச் சிலுப்பிக்கொண்டான்.
நாட்கள் அதன் போக்கில் நகர, அந்த வருடத்திற்கான பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது.
இந்த வருடமும் தேர்வு எழுதியிருக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் எனக் கண்டதிலேயே குடும்பத்தினர் தலைகால் புரியாத சந்தோஷத்தில் மிதந்தனர்.
முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கணக்கியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய தருண், “இதுதான் ரம்யா டச்,” எனத் தோழியை மெச்சினான்.
மென்னகையுடன் முடிவுகளை ஆராய்ந்தவள், குறிப்பிட்ட பத்து மாணவர்களின் தனிப்பட்ட மதிப்பெண்களைச் சோதித்தாள். அனைவருமே எண்பதிலிருந்து தொண்ணூற்றைந்து சதவீதத்திற்குள் என மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
“ஷ்ரவன்! இப்பவே ஹாஸ்டலுக்குக் கிளம்பி போகலாம்,” எனப் பூரித்தாள்.
ரம்யா சுழித்து வைத்திருந்த பெயர்களைக் கண்டதுமே அவள் உள்ளத்தைப் படித்தான் ஷ்ரவன்.
பள்ளிக்கூடம் துவங்கிய முதல் வருடத்தில் மாணவர்களைச் சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. புது பள்ளி எனச் சிலர் நிராகரிக்க, பணம் படைத்தவர்கள் தெருவிற்கு ஒரு தனியார் பள்ளி கட்டிவிடுகிறார்கள் எனப் பலர் ஏளனம் செய்ய என அவர்கள் தவமிருந்து எழுப்பிய பள்ளிக்கூடத்தை விமர்சித்தவர்கள்தான் ஏராளம்.
அப்போதுதான் காப்பகங்களில் வளரும் குழந்தைகளை உறவினர்களுடன் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. நிதி உதவியுடன், சென்னையில் தேவையான அத்தனை உதவிகளையும் ஷ்ரவனும் ரம்யாவும் இழுத்துப்போட்டுச் செய்துவந்தனர்.
சில குழந்தைகளுக்கு சென்னையில் உறவுக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற போதிலும், நாள்கிழமையில் அழைத்து வந்து உறவாட முடியுமே தவிர, அவர்களை நிரந்தரமாகத் தங்களுடன் வைத்து வளர்க்கமுடியாது எனக் கையை விரித்திருந்தனர்.
இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு என்றார் தாமோதரன். பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதியை ஹாஸ்டலாக மாற்றி, அக்குழந்தைகள் போர்டிங்க் ஸ்கூலில் படிப்பதுபோல வசதி செய்து தரலாமே என்றார்.
இவர்கள் அந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்தார்கள் எனச் சொல்வதை விட, குழந்தைகளால் இவர்கள் பள்ளிக்கு அடையாளம் கிட்டியது என்றுதான் சொல்லவேண்டும். கலைகள், விளையாட்டுகள் எனத் திறமைகளின் குவியலாகத் திகழ்ந்த பிள்ளைகள், பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைக் குவித்திருந்தனர்.
ஏளனம் செய்தவர்கள் திரும்பிப் பார்க்க, ‘வைஷ்ணவி வித்யாஷ்ரம்’ என்ற பெயரும் பலரின் மனத்தில் பதியத் தொடங்கியது.
கலையுடன் கல்வியிலும் இன்று வெற்றி வாகை சூடியிருக்கும் இவர்களின் சாதனைதான் நமக்குக் கிடைத்த உண்மையான பிரிதிபலன் எனப் பூரித்தாள் ரம்யா.
ரம்யாவைக் கண்டுகொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும் அவர்கள் பெற்றோர்களும் , ஈ மொய்க்காத குறையாக அவளைச் சூழ்ந்துகொண்டு மதிப்பெண்களைப் பகிர்ந்தும், நன்றிகளை உரைத்தும் நெகிழ்ந்தார்கள்.
அவர்களிடம் பேசிமுடித்த கையோடு ஹாஸ்டலை நோக்கி நடந்தனர்.
“ஷ்ரவன்ப்பா!” என விளித்து உறவாடும் பிள்ளைகளின் அழகை கண்கொட்டாமல் ரசித்து நின்றாள் ரம்யா.
“ரம்யாம்மா! உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்,” பனித்த கண்களுடன் அவளைக் கட்டியணைத்து உணர்ச்சிவசப்பட்டார்கள் இரு மாணவிகள்.
எந்தச் சூழ்நிலையில் இந்தப் பள்ளிக்கூடம் உருவானது என்ற மனக்காயங்கள் கண்முன் விரிய ஒருவரை ஒருவர் பார்த்து விரக்தியில் சிரித்துக்கொண்டார்கள் ரம்யாவும் ஷ்ரவனும்.
“உங்களால முடிஞ்ச நல்லதை இந்தச் சமுதாயத்துக்குச் செய்யுங்க. அதுவே எங்களுக்குப் போதும்,” ஆத்மார்த்தமாக வாழ்த்தினான் ஷ்ரவன்.
வீட்டிற்கு வந்த பின்னும் மாணவர்கள், பெற்றவர்கள், ஆசிரியர்கள், கல்வித் துறையினர், என யாரோ ஒருவர் நேரில் வந்தும், அலைபேசியில் அழைத்தும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் பகிர்ந்துகொண்டிருந்தனர். மதியம் இரண்டு மணியாகியும் உண்ணாமல் அலைபேசியே கதியென்று இருக்கும் தம்பதிகளின் எதிரில் வந்த உத்ரா,
“அடுத்த ஒருமணி நேரத்துக்கு ஃபோன் பக்கமே போகக்கூடாது சொல்லிட்டேன்,” அலைபேசியைப் பிடுங்கிக்கொண்டு அவர்களுக்கு உணவு பரிமாறினாள்.
ஒரு வாய் சோறுக்கு இடையில் பத்து வார்த்தைகள் பள்ளியைப்பற்றி அளவளாவிக்கொண்டிருந்தனர். கட்டுக்கடங்காத சந்தோஷத்துடன் உரையாடிய போதும் அடிமனத்தில் ஆழப் பதிந்திருந்த கசப்புகளும் தவிப்புகளும் அவ்வப்போது எட்டிப்பார்க்கவே செய்தது.
வெகு நேரமாய் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த தருண்,
“நூற்றுக்கணக்கான குழந்தைகளோட அம்மாவா அப்பாவா உறவாடி, அவங்க வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தேடித் தரும் சக்தி உங்களுக்கு உண்டுன்னு தெரிஞ்சியிருந்ததுனால தான் கடவுள் உங்களுக்கு இப்படியொரு வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்ததெடுத்துக் கொடுத்திருக்காரு,” என அண்ணனையும் தோழியையும் ஆரத்தழுவிக்கொண்டான்.
நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல,
நல்லதும் கெட்டதும் நிறைந்ததுதான் இல்வாழ்க்கை;
பூவா? தலையா? சிறந்தது எது என ஆராயமல், பூவென வருடித் தரும் இன்பங்களை இன்முகத்துடன் ஏற்பதும், தலையில் இடியென இறங்கும் வலிகளை இணைந்து எதிர்கொள்வதும், தாம்பத்தியத்தின் தாரக மந்திரம் – விடை கண்டோம் காதலே! நிழலாடும் நின் நினைவில்!