Skip to content
Post Views: 153
துவைக்கும் கல்லில் ‘சரக்சரக்’கென்று சட்டைத் துணியை பிரஷ்ஷால் தேய்த்து இழுத்துக் கொண்டிருந்தார் கற்பகம்.
ஊறவைத்த துணிகள் அத்தனையும் வீட்டிற்கு வந்த மருமகனின் சட்டைகளும் கால்சட்டைகளும் தான்… மருமகனின் உடைகளை ஊற வைத்துத் துவைக்கும் நிலைக்குத் தான் வந்துவிட்டதை நினைத்து, கண்ணீர் விட்டு யாரிடமும் புலம்பவும் முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார்.
வீட்டில் மகள், மருமகனின் ராஜ்ஜியம் தான் ஓங்கி நிற்கிறது. எதிர்த்து ‘ஏன்’ என்று ஒரு கேள்வி கேட்டாலே மருமகனோ கோபம்கொண்டு வெளியேறுவது போலப் பேச, உடனே மகளோ அழுது ஒப்பாரி வைக்க… இப்படியே இருவரும் தங்கள் காரியத்தைச் சாதித்து விடுகிறார்கள்.
மதிவதனி இப்போது வாயும் வயிறுமாக வேறிருக்கிறாள். அதனாலேயே அவர்களை ஒரு சொல்கூடச் சொல்ல முடியாமல், அவர்கள் ஏவும் அத்தனை வேலைகளையும் கற்பகமே பார்க்கிறார்.
Advertisement
முன்பு மூன்று வேளை மட்டுமே சமைத்துக் கொண்டிருந்தவருக்கு, இப்போது ஆறு வேளையாகச் சமைக்க வேண்டியதாகி விட்டது.
வேலை வெட்டி இல்லாத மருமகனின் வேலைகளெல்லாம் சாப்பிடுவது, தூங்குவது, மனைவியைக் கொஞ்சுவது மட்டும்தான். மூன்று மாதங்களை இவ்வாறே ஓட்டிவிட்டு, ‘வீட்டோட மாப்பிள்ளை’யாக ஜம்மென்று இருக்கிறான் அருண்.
உடல் நோகாமல் வேலைக்கு ஆட்களை வைத்து ராணியாக இருந்த கற்பகம், இன்று வேலைக்காரி போல மகளுக்கும் மருமகனுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறார்.
Advertisement
திருமணம் முடிந்த கையோடு மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு, அருணின் வீட்டில் எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என்ற முனைப்போடு அவர் சென்றபோது, அருணின் குடும்பத்தினரோ தங்கள் மகளின் பேச்சைக் கேட்டு அருணை வீட்டை விட்டே துரத்திவிட்டார்கள்.
Advertisement
பிள்ளை பெற்றெடுத்தால் அருண் வீட்டில் மனசு மாறிவிடுவார்கள் என்ற எண்ணம் கொண்ட கற்பகம், முதலிரவு அன்று மதிவதனியை அழகாக அலங்கரித்திருந்தார்.
“இங்க பாருடி… ஒரு பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுத்தா கண்டிப்பா மாப்பிள்ளை வீட்டுல ஏத்துப்பாங்க! போனதுமே அதுக்கான வேலையை ஆரம்பிச்சிடு! மாப்பிள்ளை ‘இப்ப வேணாம், அப்ப வேணாம்’னு சொன்னா எதுவும் கேட்டுக்காத, வேலையை ஆரம்பிக்கிற! என்ன?” என்றதும் அவள் வெட்கம் கொள்ள, “என் சமத்துப் பொண்ணு” என்று நெற்றி முறித்து அனுப்பி வைத்தார்.
உள்ளே அருணோ கைகளைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தான். தான் நோட்டீஸ் பீரியடில் வேலை செய்து கொண்டிருப்பதையும், இன்னும் ஒரு மாதத்தில் வேலையை விட்டுச் செல்ல வேண்டும் என்பதையும் மதிவதனியிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கி நின்றான். அப்போது உள்ளே பால் சொம்புடன் ஓவியமாக வந்தவளை இமை கொட்ட மறந்து பார்த்து நின்றான் அருண்.
Advertisement
அவனிடம் அவள் பாலை நீட்ட, அதை வாங்கிக் குடித்தவன் மீதியை அவளுக்குக் கொடுக்க, அவளும் பருகினாள்.
அருண், “வனி! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று ஆரம்பிப்பதற்குள், “ப்ச்” என்றவள் அவனை இழுத்து இதழ் பதிக்க, அவள் தன் காதலைத் தொடங்க… அதன்பின் பேச இடமில்லாமல் போனது.
அதிகாலை வரை நீண்டது அவர்களது கட்டில் யுத்தம். கற்பகமோ விடிய விடியச் சந்தோஷத்தில் உறங்கவே இல்லை. தான் நினைத்ததை நடத்திவிட்டதாக எண்ணி, இனி எல்லாம் தன் விருப்பப்படியே நடக்கும் என்று கற்பனை செய்தவருக்கு, காலம் ஒரு பேரடியைத் தரப்போகிறது என்று அப்போது தெரியாது போனது.
மறுநாள் தலைக்குளித்து வெட்கத்துடன் வந்த மகளை வாரி அணைத்துக் கொண்டார்.
“இங்க பாருடி! அப்படியே உன் புருஷனை முந்தானையில முடிஞ்சு வச்சுக்க. உன் பேச்சை மட்டுமே கேட்கணும், உன்மேல் இருக்கிற மயக்கத்துல நீ சொல்றதுதான் அவனுக்கு வேத வாக்கா இருக்கணும். நீ நில்லுன்னா நிக்கணும், உட்காருன்னா உட்காரணும். உன்னையே சுத்தி சுத்தி வரணும், சரியா!” என்றார். அவளும் வெட்கத்தில் தலை அசைத்தாள்.
அப்போது அவனோ, “வனி!” என்று அழைக்க, இவளுக்கோ வெட்கமும் தயக்கமுமாகத் தாய் முன்னே நின்றாள்.
“போடி போ! கூப்பிடுறார்ல” என்று தள்ளாத குறையாக அனுப்பி வைக்க, அவளோ உள்ளே சென்று “என்னங்க?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள். அவன் அலுவலகத்திற்குச் செல்வது போலத் தயாராகி நிற்கக் கண்டு, “என்னங்க… எங்க கிளம்பிட்டீங்க?” என்றாள்.
“வேலைக்கு வனி!”
“வேலைக்கா? ஒரு மாசம் லீவ் கேட்கலையா?”
“ஒரு மாசமா? ஒரு வாரம்கூடக் கொடுக்க மாட்டாங்க! என்ன இருந்தாலும் நாம லவ் மேரேஜ் தானே பண்ணியிருக்கோம், அரேஞ்ச் மேரேஜ் இல்லையே!” என்றதும் அவள் முகம் வாடியது. அதைக் கண்டவன் அவளை நெருங்கி வந்து, நெற்றியிலும் கன்னத்திலும் இதழ் பதித்து, “என் தலைமையில புதுசா ஒரு புராஜெக்ட் போயிட்டு இருக்கு. ஒரு லீடரா நான் அங்க இருக்கணுமே, புரிஞ்சுக்கோ! ஈவினிங் எங்கயாவது போகலாம்” என்று சமாதானம் செய்ய, அவளும் சரியென்றாள்.
ஆனால், நோட்டீஸ் பீரியடில் இருந்ததால் தான் அவனுக்கு லீவ் கிடைக்கவில்லை. ஏற்கனவே இரண்டு நாட்கள் லீவ் எடுத்ததற்கு ஈடாக இரண்டு நாட்கள் சேர்த்து வேலை பார்க்க வேண்டும்; இதில் இன்றும் லீவ் எடுத்தால் மூன்று நாட்களாகி விடுமே என்ற பயத்தில்தான் அவன் கிளம்பினான்.
“வனி! பிரேக்பாஸ்ட் எதையாவது செய்யச் சொல்லு, சாப்பிட்டுக் கிளம்பணும். இன்னைக்கு மதியம் சாப்பாட்டை அங்க ஏதாவது பார்த்துக்கிறேன். நாளையிலிருந்து காலையிலேயே எழுந்து சமைச்சிடு” என்று அவன் பேசிக் கொண்டிருக்க, இவளோ இன்னும் சோகமாகவே இருந்தாள்.
“நீங்க போயித்தான் ஆகணுமா? புதுசா கல்யாணம் ஆனவங்க எப்படி இருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று அவனது சட்டைப் பொத்தானைத் திருக… அதிலிருந்து அவள் கையை எடுத்தவன், “எனக்கு மட்டும் என்னடி… ஏண்டா போறோம்னுதான் இருக்கு. விடிய விடியக் கொஞ்சினாலும் பத்தவே மாட்டேங்குதே! இன்னும் நீதான் வேணும்னு கேக்குது மனசும் உடம்பும். இருந்தாலும் வேலை முக்கியம்டி செல்லம்!” என்று ஏதேதோ சொல்லிச் சமாதானம் செய்து, அவளைக் கைகளால் தழுவி முத்தமிட்டுவிட்டு வெளியேறினான்.
கற்பகம் காலை உணவை மருமகனுக்காக ஆசையோடு செய்து அசத்தியிருக்க, சாப்பிட்ட அருண் கற்பகத்தின் சமையலை ருசித்துத் தட்டிப் பாராட்டித் தள்ளினான். அவ்வளவுதான், கற்பகம் வான்வெளியில் பறக்க ஆரம்பித்துவிட்டார். அவன் கிளம்பும்போது, “ஏங்க… ஃப்ரீயா இருந்தா போன் பண்ணுங்க” என்று மதிவதனி சிணுங்க, அவனோ கண்ணடித்துப் பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றான்.
தூரத்திலிருந்து இதைப் பார்த்த கற்பகத்திற்கு ஒரே வெட்கமும் பூரிப்பும் தான்!
வேலைக்குச் சென்றவனுக்குப் பெரிதாக வேலை இல்லை… முடிக்க வேண்டிய வேலைகள் சில இருந்தும், அதைச் செய்யாமல் நேற்று நடந்த விஷயங்களையே தன் மனக்கண்ணில் மீண்டும் படமாக ஓட்டினான். மனைவியின் நினைவாகவே இருக்க… வேலைக்கு வந்த உடனே அழைத்தால் தவறாக எண்ணிக் கொள்வாள் என்று ஒரு மணி நேரம் கழித்து அழைத்தான். அவ்வளவுதான், அந்த அழைப்பு ஒரு மணி நேரத்திற்கு நீடித்தது. அந்த ஒரு மணி நேரப் பேச்சில் உருப்படியாக ஒன்றுமில்லை…
அதன் பின் வேலை பார்ப்பது போல் காட்டிக் கொண்டாலும், மீண்டும் வாட்ஸ்அப்பில் பேசினார்கள். அத்தனையிலும் ’18+’ பேச்சுகள்தான்! அவளை வெட்கப்பட வைத்தான். அவன் ரசித்த விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்ல, அவளுக்கு உடம்பெல்லாம் சிவந்து போனது. “அப்புறம்… எப்போ வருவீங்க?” என்று குரலில் ஏக்கமும் மோகமுமாகக் கேட்டாள்.
உடனே அவனும், “சீக்கிரமா வந்திருவேண்டி செல்லம்… எனக்கும் உன்கூட இருக்கணும் போலத்தான் இருக்கு” என்று பதிலளித்ததோடு சில பல எமோஜிகளையும் அனுப்பி வைத்தான். அப்படியே அந்த நாளை ஓட்டிவிட்டு வீட்டிற்கு வந்தவன், தலை நிறைய மல்லிப்பூவை வைத்துச் சேலை உடுத்தி வந்து வரவேற்ற பொண்டாட்டியை அப்படியே தூக்கிச் சென்று கதவை அடைத்தான்; அதன்பின் கதவு திறக்கவே இல்லை.
கற்பகமும் பூரிப்போடு இரவுச் சமையலைச் செய்து வைத்துவிட்டுத் தன் அறைக்குள் அடைந்து கொள்ள… அவர்கள் எப்போது வந்து சாப்பிட்டார்கள் என்றெல்லாம் அவருக்குத் தெரியாது.
இவ்வாறு புதுமணத் தம்பதி கொஞ்சிக் குலாவிக் கொண்டே இருந்தனர். கற்பகமும் வேலைக்குச் செல்லும் மருமகனை அத்தனை அன்போடு கவனித்துக் கொண்டார்.
சமையல் செய்வது மட்டுமே அவரது வேலையாக இருக்க… துவைக்கவும், வீட்டைச் சுத்தம் செய்யவும் ஆள் வைத்திருந்தார். மதியூரன் மட்டுமே அவனது துணியைத் தானே துவைத்துக் கொள்வான். மற்ற இரு பெண்களின் துணிகளை அவர் தான் துவைக்க வேண்டும். இரண்டு பேருக்கு என்றாலும் வேலை குறைவாகத்தான் இருந்தது. ஆனால், மருமகன் வந்த நாளிலிருந்து துணிகள் அதிகமாகக் குவியத் தொடங்கின.
தினமும் துணி துவைக்கும் வேலைதான் அதிகமாக இருந்தது. இதுபோக, வீட்டை வேறு சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, அவர்கள் அறையைத் தினமும் ஐந்து முறை துடைக்க வேண்டும் என்பது மருமகனின் கட்டளை!
“அவருக்கு சைனஸ் இருக்காம்… அதனால அவங்க ரூமைத் தூசி இல்லாம நல்லாத் துடைக்கணும், சரியா?” என்று மகள் கட்டளையிட… “சைனஸ்” என்று அவளைப் பார்த்துவிட்டுச் சொல்லிச் சென்ற அந்த வேலைக்காரப் பெண்மணி, கற்பகத்தை விழித்து நோக்கினார்.
இதுவே தொடர்ந்தது. அதுபோலத் துணி துவைப்பதில் ஆயிரம் குறைகள் வேறு கூறப்பட்டன. இதனால் அந்தப் பெண்மணி வெறுத்துப் போய் வேலையை விட்டே நின்றுவிட்டார். அடுத்து வீட்டு வேலை செய்ய ஆட்கள் கிடைக்கும் வரை கற்பகமே அனைத்து வேலைகளையும் செய்தார்.
முதல் மாதம் தெரியவில்லை. அடுத்த மாதம் அருண் வேலைக்குச் செல்லவில்லை. காரணம் கேட்டதற்கு, “புராஜெக்ட் சக்சஸ்ஃபுல்லா முடிஞ்சதால லீவ் கொடுத்திருக்காங்க அத்தை… அதுபோக மேரேஜ் இப்போதானே முடிஞ்சிருக்கு! நானும் வனியும் சிம்லாவுக்கு ஹனிமூன் போறோம்… பதினைந்து நாளைக்கு!” என்று அவன் தன் அறைக்குள்ளிருந்தபடியே சொல்லிவிட, தாய்க்கும் மகளுக்கும் ஒரே கொண்டாட்டம்தான். இதோ, மனைவியோடு சிம்லாவுக்குக் கிளம்பியும் விட்டான். பதினைந்து நாட்கள் அவனது முழுப் பணத்தையும் தண்ணீராகச் செலவழித்து, மனைவியை ஆச்சரியத்தில் திளைக்க வைத்துக் கொண்டாடித் தீர்த்துவிட்டான். அவளும் அவன் மீது மேலும் பித்தானாள்.
பணமெல்லாம் கரைந்ததும் வீடு வந்து சேர்ந்தார்கள். மீதமிருந்த பதினைந்து நாட்கள் வேலை தேடி அலைந்தான். எந்த வேலையும் கிடைக்கவில்லை. இது தன் அக்காவின் சதி என்று உணர்ந்தவன், அவளைத் திட்டிவிட்டு வந்துவிட்டான்.
கோபமாக வீட்டிற்கு வந்தவனின் வாயில் கற்பகம் சர்க்கரையைத் திணிக்க, “என்ன இது?” என்று புரியாமல் விழித்தான்.
“நீங்க அப்பாவாகப் போறீங்க மாப்பிள்ளை!” என்று முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவர் சொல்ல… அவனோ தன் கோபத்தையும் வேலை கிடைக்காத விஷயத்தையும் சொல்லாமல் மறைத்து, மனைவியைக் கொஞ்சி முத்தங்களால் கொண்டாடித் தீர்த்தான்.
இவ்வாறே அடுத்த மாதமும் வர… இவன் வேலைக்குச் செல்லாமலே வீட்டிலேயே தூங்கி எழுவது, போன் பார்ப்பது, தின்பது என்று நாட்களைக் கடத்தினான்.
ஒருநாள் கற்பகம், “வேலைக்கு ஏன் போகவில்லை?” என்று கேட்க… அவனோ, “வேலையை விட்டு நின்னுட்டேன்” என்று அசட்டையாக அலைபேசியைப் பார்த்தபடியே சொல்ல… அதைக் கேட்டு அங்கிருந்த இரு பெண்களும் அதிர்ந்து நின்றனர்!
error: Content is protected !!