Skip to content
Post Views: 247
ஆனால் மல்லிகா வழக்கம் போல புலம்பி தள்ள, செல்வம் “என்னம்மா இதெல்லாம் தேவையில்லாத வேலை, அடி கிடி பட்டா கஷ்டம்மா” என செல்வம் கவலை கொள்ள, கர்ணனோ ‘நீ சொன்னதை நான் நம்பனுமா?’ என சந்தேகமாய் இவளை பார்த்து வைக்க எல்லாத்தையும் கேட்ட பிரபா மட்டுமே உச்ச பட்ச எரிச்சலில் இருந்தாள்.
பின்னே அவளும், அவள் உருவமும், அந்தரத்தில் தொங்கும் அவளது வாழ்வும் தான் பிரபாவிற்கும் அவளது அம்மாவிற்கும் பொழுது போக்கு. இனி அதற்கு அடி விழுந்தால் கவலை படத்தானே செய்வாள்.
இப்படியாக யோசித்தபடி, டிரேயில் நான்கு டம்ளர்களில் காபியை நிறைத்து எடுத்து வந்தாள் பிரபா. எப்போதும் இதெல்லாம் மல்லி தான் செய்வார். இன்று பிரபாவிற்கு மகளே பிரதானமாக தெரிந்திட, ஒரு நாள் தானே என பிரபாவிடம் காபி போடும் வேலையை சொல்லிவிட்டார்.
அதற்கு தகுந்தாற்ப்போல் பிரபாவும், மல்லி, செல்வம், கர்ணா எல்லோரிடமும் கொடுத்துவிட்டு இறுதியாய் தான் “இந்தா கமலி” என வியர்த்து போன முகத்தோடு, காபி தம்ளரை நீட்டினாள் பிரபா.
Advertisement
அதை வாங்கி கொண்டவள், “அண்ணி வாங்க, இங்க உக்காருங்க” என அவள் கை பிடித்து சோபாவில் அமர வைத்துவிட்டு, சமையலறை உள்ளே சென்றாள். அனைவரும் கமலியை பார்த்திருக்க, தன் காபியை இன்னோரு டம்ளரில் பாதியாக ஊற்றி ஒன் பை டூ வாக எடுத்து வந்தாள்.
“நீங்களும் டயர்டா இருக்கீங்க.. குடிங்க” அவள் பிரபாவின் கையில் ஒரு காபி தம்ளரை திணத்து விட்டு இவளும் அருகில் அமர்ந்து கொண்டாள். பிரபா அதிசயமாய் பார்க்க, மல்லிகா அதிர்ச்சியாய் தான் பார்த்தார்.
சற்று தள்ளி அமர்ந்திருந்த கர்ணா எழுந்து வந்து பிரபாவின் டம்ளரில் தனது காபியை வைத்து இன்னும் கொஞ்சம் நிரப்பிவிட, செல்வம் கமலியின் காபி டம்ளரில் கொஞ்சம் நிரப்பி விட, பகிர்ந்து கொண்டனர் காபியை. இந்த டிவிஸ்டை பிரபாவே எதிர்பார்க்கவில்லை. மல்லிகா தான் பே என பார்த்திருந்தார்.
Advertisement
அதன் பின் கர்ணா, கறி வாங்கிட வெளியே சென்றுவிட, மருமகனை மடியில் இருந்து இறக்காமல் மல்லிகா, செல்வமுடன் சோபாவிலேயே கதை பேசியபடி அமர்ந்துவிட்டாள்.
Advertisement
அதன் பின், காலை உணவை உண்டுவிட்டு, அறைக்குள் ஓய்வெடுக்க கிளம்பிவிட்டாள் கமலி.
அறைக்குள் வந்தவள் அந்த போட்டோவின் முன்பு தான் போய் நின்றாள். அவன் உருவத்தை வருடியது அவள் விரல்கள்.
அவன் மயங்க வைக்கும் குரலை கேட்டே ஆயிற்று மூன்று மாதங்கள். அவள் தான் அவனுடன் பேசவில்லே.. கிரி சொல்லிவிட்டானே ‘நம்பிக்கை வந்தா பேசு, அதுவரை பேசாதே’ என உறுதியாய் சொல்லிவிட்டானே.
Advertisement
மீண்டும் பொய்யில் எதற்கு உறவை உருவாக்க வேண்டும். நம்பிக்கையில் கையில் தானாகவே உருவாகட்டும். அதையும் மீறி பொய் நம்பிக்கை கொடுத்து பேச இவளுக்கு மனமில்லை.
இவனது நினைவுகளே அவளை ஆக்கிரமித்திட, இது சரிவராது என நினைத்தவள், உடையை மாற்றிகொண்டு போனுடன் அமர்ந்துவிட்டாள். BTS தான் அவளின் பொழுதுபோக்கு அம்சம். கவலையோ, சந்தோஷமோ BTS உடன் தான். அதிலும் JK என்றால் அலாதி பிரியம். அவர்களின் நடனங்களை பார்த்தபடி உறங்கி போனாள்.
அதன் பின் சமையலில் உதவி செய்து கொண்டு, மல்லிகா என்ன வேலை செய்தாலும் உதவி செய்கிறேன் பேர்வழி என தானாகவே இணைந்து கொண்டாள்.
தனக்கு ஹெல்த் டரிங் தயாரித்தால் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, குட்டி என எல்லோருக்கும் செய்து கொடுத்தாள். அதுவே குடும்ப பிணைப்பை இறுக்கியது.
செல்வம் பர்னீச்சர் கடை வைத்திருக்க, காலையில் செல்வமும், மதியத்திற்கு மேல் இரவு வரை கர்ணனும் பார்த்து கொள்வர். அது இன்னும் வசதியாய் போய் விட தாயோடு கோவில், தந்தையோடு வாக்கிங், குட்டியோடு பார்க் என எப்போதும் பிசியாகவே வைத்துகொண்டாள். இத்தனைக்கு இடையிலும் ஒர்க்அவுட்டையோ, தர்ஷியினுடனான போன் பேச்சுகளையோ விடவேயில்லை இவள்.
இப்படியே இரண்டு நாட்கள் போயிருக்கும், அன்று கண்ணாடியின் முன்பு நின்று, வெயிட்டை குறச்சிடலாம், ஆனால் இந்த பல்லை என்ன செய்ய? பற்றகளை ஆராய்ந்தபடியே பார்த்திருந்தவள் “கிளிப் போட்டா சரியாகிடுமே” பட்டென சிந்தையில் உதித்தது ஐடியா..
உடனே அன்று மாலை போல தாய் தந்தையை தேடிக்கொண்டு அவர்கள் அறைக்கே சென்றாள். “வாம்மா, வா.. உக்காரு” என அழைத்து கட்டிலில் தனக்கு அருகே அமர்த்தி கொண்ட செல்வம் “சொல்லுடா” என ஊக்க
“ஏன் ப்பா.. நான் பல்லுக்கு கிளிப் போட்டா என்ன?” என கேட்க..
அவளை அதிர்ச்சியாய் பார்த்த மல்லி “ஏண்டி, திடீர்னு இந்த விபரீத ஆசையெல்லாம் வருது, உனக்கு! பேய் கீய் புடுச்சிடுச்சா என்ன?” மல்லிகா மகளின் மாற்றங்களை நினைத்து வருந்த
“ஏண்டா.. யாரும் உன்னை கிண்டல் பண்றாங்களா? கஷ்டபடுத்துறாங்களா?” தகப்பானாய் அவர் கவலை அவருக்கு.
“இல்லைப்பா.. காலேஜில் நிறைய பிள்ளைங்க போட்டிருந்ததை பார்த்தேன். எனக்கும் ஆசையா இருந்தது, அதான் உங்க கிட்ட கேட்டுட்டு” என இவள் இழுக்க
“உனக்கு ஆசை இருந்தா தாராளமா போடலாம் கமலிம்மா.. பல் வரிசை அழகாயிடும்” இரண்டே வரிகளில் செல்வம் அவளுக்கு பச்சை கொடி காட்டிட..
“அவ தான் லூசு மாதிரி பேசுறான்னா.. நீங்களும் சிங்சான் போட்டுட்டு இருக்கீங்க. இத்தனை வருஷமா தோணலை.. இப்போ ஏண்டி தோணுது.. யாரும் எதுவும் சொன்னாங்களா? நீ வேலையை முதலில் விடு.. வேலைக்கு போனதில் இருந்தே உன் இஷ்டத்துக்கு ஏதாவது பண்ற கமலி..” என வசவு தாளித்து விட்டார்.
“ம்மா.. ப்ளீஸ்ம்மா.. ப்ளீஸ்ம்மா, உன்பொண்ணு அழகாகாகனும்னு ஆசையில்லையா?” கமலி கேட்க
“ஏண்டி இப்ப உனக்கு என்ன குறைச்சல்” என்ற மல்லியை முறைத்து பார்த்தாள் கமலி.
“நாளைக்கு நான் டென்டல் ஹாஸ்பிடல் போறேன். நீ வர்றியா இல்லை அப்பாவை கூட்டிட்டு போகவா” என முடிவாய் இவள் கேட்க
அதற்கு மல்லிகா பதில் கூறுவதற்கு முன்பு, செல்வமே “அவ வரளா பாரு.. இல்லை நான் வரேன் கமலி, எந்த டைம், எந்த ஹாஸ்பிடல்னு சொல்லு” என்றிட.
“ப்பா.” என ஆச்சர்யமானாவள், கட்டி கொண்டாள் தந்தையை.
“அவ தான் புரியாமல் பேசுறான்னா, நீங்களுமா?” என செல்வத்திடம் பாய்ந்த மல்லிகாவை, பார்வையால் அடக்கி, “கமலியோட சந்தோஷம் தான் இங்க முக்கியம். உனக்கு வர இஷ்டம் இல்லன்னா வராத..” மல்லிகாவிடம் காயந்தவர் “நீ வாடா நாம போகலாம்” என கமலியிடம் சுமூகமாய் வெள்ளை கொடி காட்டிட,
அதன் பின் என்ன மறுநாளே, வேகவேகமாய் நல்ல டென்டல் ஹாஸ்பிடலை பற்றி செல்வமே விசாரித்து, வைத்துவிட்டு, அதற்கு மறுநாள் அப்பாயிண்ட்மெண்டும் வாங்கி வந்துவிட்டார்.
மல்லிகாவை வீட்டில் விட்டுவிட்டு, செல்வமும் கமலியும் மட்டுமே மருத்துவமணை சென்றனர்.
முதலில் பற்களுக்கு ஸ்கேன் செய்து, ஏனைய பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பின் மருத்துவர் வர சொல்ல, கமலியும், செல்வமும் ஒன்றாகவே உள்ளே சென்றர்.
“முன் பல் எல்லாமே ரொம்ப இடைவெளியோட இருக்கு சார்… அதோட பல் வரிசையே சீரில்லாமல் வளர்ந்திருக்கு. இப்போ இன்விசிபிள் கிளிப் நல்ல ரிசல்ட் குடுக்குது, ஆனால் ரேட் ஜாஸ்தி. உங்களுக்கு ஓகேன்னா இன்விசிபிளே ஓகே பண்ணிடலாம். இல்லை அமவுண்ட் கம்மியா வேணும்னா விசிபிள் போட்டுக்கலாம்” என டேபிளில் இருந்த இரு மாடல் கிளப்புகளையுமே இவர்களது பார்வைக்கு நகர்த்தி வைத்து, இரண்டை பற்றியும் அதிகமான, முழுமையான விளக்கத்தை கொடுத்து, இரண்டுக்குமே தேவைப்படும் சிகிச்சை முறைகளையும் அழகாய் விளக்கினார்.
பின் “எந்த கிளிப் யூஸ் பண்ணினாலும் பல்வரிசை சீரா, அழகா வரணும்னா குறைஞ்சது ஒரு எட்டு மாதமாவது போடனும். சொல்ற டையத்துக்கு செக்அப் வேற வரணும்” என கண்டிசன்களை சொல்ல
“அப்போ பல் சீராக எட்டு மாசம் ஆகுமா? சார்?” எட்டு மாதமா என இவளுக்கு இப்போதே கண்ணை கட்டியது.
“உங்களுக்கு கண்டிப்பா எட்டு மாசம் ஆகும். அப்போ தான் ப்யூச்சர்ல பிரச்சனை வராமல் இருக்கும். இல்லைன்னா மறுபடியும் இங்கே வர மாதிரி ஆகிடும். பரவாயில்லையா?” என டாக்டர் கமலியிடம் கேட்க, வேகமாய் மறுத்து தலையசைத்தாள் கமலி.
“அப்போ சரி, எந்த கிளிப் வேணும்” என டாக்டர் கேட்க, “இன்விசிபிளே ஓகே தான்” என கமலிக்கு தோதான பதிலை செல்வமே முடிவு செய்துவிட்டார்.
“அப்போ இன்னைக்கு 3D scan பண்ணி, பல் அளவு எடுத்திடலாம்.. பிரேஸ் ரெடி ஆனதும் ஹாஸ்பிடலில் இருந்து கால் வரும், வந்திடுங்க. அன்னைக்கு பிரேஸ் பிட் பண்ணிடலாம்” என முடிவானது. இதில் ஒரே பிரச்சனை என்னவென்றால் சிகிச்சைகான செலவு தான் சற்று அதிகமாக தெரிந்தது. இருந்தும் செல்வம் மகளுக்காக செலவு செய்ய தயங்கவில்லை்
அடுத்த இரண்டு நாட்களில் மருத்துவமணையில் இருந்து பிரேஸ் வந்து விட்டதாகவும், ஆறு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருப்பதாகவும் கூற, செல்வம், கமலியை அழைத்து கொண்டு சென்றுவிட்டார்.
சரியான நேரத்திற்கு இவர்கள் சென்றிட, மருத்துவரை உடனே பார்க்க முடிந்தது.
பற்களை சுத்தபடுத்துவதற்கே பதினைந்து நிமிடங்கள் ஆனது. அதற்கே அவளுக்கு வாயெல்லாம் வலித்து போனது. அதன் பின் இவளுக்கான இன்விசிபிள் அலைனரை எடுத்து சில பல நொடிகளிலேயே மாட்டிவிட்டார் கமலிக்கு.
அதுவரை தளர்வாய் இருந்த பற்களையும், தாடையையும் ஏதோ ஒரு மூலையில் இருந்து இறுக்கமாய் பிடித்து வைப்பது போல் உணர்ந்தாள்.
பின் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கூறி, எந்த உணவை சேர்த்து கொள்ளலாம்? எதை சேர்த்து கொள்ள கூடாது என கிளாஸ் எடுத்து அனுப்பி வைத்தார் கமலியை.
மிக அருகில் வந்து பார்த்தால் மட்டுமே அவள் பிரேஸ் அணிந்திருப்பது தெரியும். மற்றபடி எந்த வித்யாசமும் அவளிடம் தெரிவதில்லை. கர்ணாவினால் கூட கண்டு பிடிக்கமுடியாது போனது. ஒரே வாரத்தில் பற்களோடு பற்களாக பிரேஸூம் அவளுக்கு செட்டாகிப்போனது.
அடுத்த அப்பாயிண்ட் போன போது, ஏற்கனவே போட்டிருந்த பிரேஸை கழற்றி அவளிடம் பத்திரமாக வைத்து கொள்ளும்படி கூறிவிட்டு, புதிதாய் ஒரு பிரேஸை அவளுக்கு அணிவித்து விட்டார் மருத்துவர். பழைய பிரேஸை விட இது இன்னும் இறுக்கமாக இருந்தது.
இப்படியே பல்பராமரிப்பிலும், உடற்பயிற்சியிலும், வேக வேகமாக செமஸ்டர் விடுமுறை கழிந்து இவள் மீண்டும் கல்லூரி செல்லும் நாளும் வந்தது.
error: Content is protected !!