Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 30

பூவே30



Advertisement

காளியம்மா, இரு மகள்களையும் கட்டிக்கொடுத்திருந்தார்.

தேவகியை போன வாரம்தான் பெண் பார்த்து, பூ வைத்து சென்றனர்.

Advertisement

Advertisement

மகன் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக, திடமாகத்தான் இருக்கிறார்.

மகன், மருமகள் படத்துக்கு விளக்கேற்றி, “எய்யா… உம் பொண்ணுக்கு கலியாணம்யா. உம் பொண்ணு என்னம்மா வளந்திருக்கா தெரியுமா? அப்படியே உன் பொண்டாட்டியைக் கொண்டு இருக்காப்பா. அவளையும் நல்லபடியா கட்டிக்கொடுத்துட்டு… நானும் உங்க கூட எப்ப வருவேன்னு இருக்கு சாமி…” என்று சொல்லும்போதே,

Advertisement

முத்தாய்யாவின் படத்திலிருந்த பூ விழுந்து, ஏற்றிய தீபம் அணைந்து போனது.

“எய்யா… என்னையா நீ இப்படி பண்ணீட்ட?” என்று சொல்லும்போதே, கண்ணாடியில் முதல் பேத்தியின் கணவன் தெரிந்தான்.

திரும்பிப் பார்த்தவர், “வாய்யா… கொரல் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று சொல்லிக்கொண்டே மருமகளுக்குக் குரல் கொடுத்தார்.

“அது ஒன்னுமில்லை அம்மாச்சு… பசங்களுக்கு காது குத்து வைக்க முடிவு பண்ணப் போறோம். அதான் உங்களுக்கு எந்த தேதி வசதிப்படும்னு தெரிஞ்சிட்டு போகலாம்னு வந்தேன்,” என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.

“வாங்க… வாங்க மாப்பிள்ளை, ஒக்காருங்க,” என்று கைவேலையில் இருந்தவர் அவசர வரவேற்பு கொடுத்தார்.

அதே நேரம் வாசல் பக்கமிருந்து பேத்தியின் குரல் கேட்க,

வாசலுக்கு வந்தவர், “என்னத்தா, இப்படி சேறும் சகதியுமா வந்திருக்கீங்க?” என்றார்.

“நா எவ்ளோ சொன்னேன் பாட்டி! இவன் கேட்காம சேத்துல இறங்கி, என் மேலயும் பூசி விட்டுட்டான்,” என்று வருத்தமாகச் சொன்னாள்.

“இப்ப என்னத்தா பண்ணுறது? உள்ள உன் பெரியாத்தாவும், தெய்வானை வீட்டுக்காரரும் இருக்காங்க. இப்படியே பின்பக்கம் வாங்க… நா துணி கொண்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

“அக்கா, இன்னும் கொஞ்ச நேரமா விளையாடி இருக்கலாம்,” என்று முகத்தைச் சுருக்கினான் வெற்றி.

“இதுக்கே பெரியம்மா என்ன சொல்லுவாங்கன்னு பயமா இருக்கு. அமைதியா வாடா,” என்று தம்பிக்குக் கிச்சு கிச்சு மூட்ட, அவனும் சிணுங்கிச் சிரிக்க, கூடவே தேவகியும் சிரித்தாள்.

சத்தம் கேட்டு திரும்பியவனுக்கு, ‘இவள் இவ்ளோ அழகா!’ என்று தோன்றியது. அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.

சில நேரம், பெண்ணின் சிரிப்பு கூட அவளுக்கு ஆபத்தை கொடுத்துவிடும்.

அதே நிலை தான் தேவகிக்கும்.

சிறிது நேரம் கழித்து, வெற்றி இடுப்பில் டவலோடு வந்தான்.

பேத்தி குளித்து வெளியே வரும்வரை, பின்பக்கமே காவலாக நின்றிருந்தார் மயிலம்மா.

தவாணி பாவாடையுடன், தலையில் துண்டு சுற்றிக்கொண்டு உள்ளே வந்தவள்.

“வாங்க மாமா,” என்று அழைக்க,

ஸ்தம்பித்துப் போனான் அவன். ரோஜாவில் பனித்துளி போல் வந்தவளைக் கண்டு, அவனுக்குள் ஒரு பிரளயமே நடந்தது.

மூச்சு விடக் கூட மறந்த நிலைதான் அவனுக்கு.

அங்கே வந்த மயிலம்மா, இவனின் பார்வையைக் கண்டு…

“ஏத்தா, நீ உள்ள போய் தலையை காய வைத்தா,” என்று பேத்தியை அனுப்பிவைத்து,

இவன் பக்கம் திரும்பி, “வந்த வேலை என்னவோ, அதை மட்டும் பாருய்யா… கண்ணு கண்ட இடத்துக்குப் போச்சுன்னா கழுத்து சுளிக்கும்,” என்று பூடகமாகச் சொல்லிச் சென்றார்.

போகும் மயிலம்மா மனதிலும் கலக்கமாகத்தான் இருந்தது.

வந்தவன் அடுத்த மாதம் ஒரு தேதியைச் சொல்லி, “எங்க குலதெய்வ கோவில்லதான் காது குத்துறோம்,” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

தன்னை ஒருத்தன் சூறையாடக் காத்திருக்கிறான்னு கூட தெரியாமல், தம்பியுடன் கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடினாள் தேவகி.

மகளின் குலதெய்வ கோவில் காட்டுக்குள் இருந்தது.

கோவிலைச் சுற்றி சுத்தம் செய்து பந்தல் போட்டிருக்க, தாய் வீட்டு சீதனமும் சபையை நிறைத்திருந்தது.

காதணி விழாவில், பேத்தியின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டுதான் சுற்றினார் மயிலம்மா.

எங்கிருந்தாலும் தெய்வானையின் கணவன் பார்வை பேத்தி மீதே இருப்பதைக் கண்டு அவருக்குப் பயந்து வந்தது.

வெற்றி மடியில் அமர வைத்து, முதலில் ஐந்து வயது மகனுக்குக் காது குத்தி, அடுத்து மூன்று வயது மகளுக்கும் காது குத்தினார் ஆச்சாரி.

வெற்றிக்கு ஒரே இடத்தில் கட்டிப்போட்டது போலிருந்தது.

விழா முடிந்து பந்தி தொடங்கியிருக்க,

மயிலம்மா மகனை அழைத்து,

“நானும் பேத்தியும் ஊருக்குப் போறோம்,” என்று சொல்லவும்.

ராமைய்யா அதிர்வுடன் நிற்க,

அருகில் நின்ற காளியம்மாதான், “என்னத்தை நீங்க சொல்லுறது சரியா இருக்கா? பேத்தி விசேசத்துக்கு வந்துட்டு உடனே கிளம்புறேன்னு சொன்னா… மாப்பிள்ளை வூட்டுல நம்மளப் பத்தி என்ன நெனைப்பாங்க?” என்றார்.

“பேத்திக்கு வயித்து வலிக்குதுடி. நீங்க இருந்து எல்லாத்தையும் முடிச்சிட்டு வாங்க,” என்றார் தவிப்பாக.

“எங்க, அவளைக் கூப்பிடுங்க. நா பேசுறேன்,” என்றார் காளியம்மா.

மருமகளின் வாதத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பேத்தியைத் திரும்பிப் பார்க்க, பேத்தியைக் காணவில்லை.

பதறித்தான் போனார்.

பயத்துடன் பேரன் அருகே வந்தவர்,

“எய்யா! எங்கப்பா தேவகி அக்கா?” என்று கேட்டார்.

“பாட்டி, அக்கா இதுக்கு போயிருக்கு,” என்று தன் சுண்டுவிரலைக் காட்டினான்.

“யாருக்கூடப்ப போனா?” என்று கேட்கும்போதே, அவருக்கு இதயம் கீழே குதிக்காத குறைதான்.

“மாமாவோட… அக்காதான் கூட்டிப் போனாங்க,” என்றான்.

“அத்தை, எதுக்கு நீங்க இப்படி அல்லாடுறீங்க? அவ ஒதுங்கத்தானே போயிருக்கா, வரப்போறா,” என்று காளியம்மா சொல்லிக்கொண்டே நகர்ந்தார்.

அன்னையின் கலக்கம் கண்டு ராமைய்யா நகராமல் நின்றார்.

“என்னம்மா ஆச்சு?” என்று சைகையில் கேட்க,

அவர், வீட்டு மாப்பிள்ளையின் பார்வையை மொத்தமாகச் சொல்லி முடித்தார்.

அதே நேரம்,

“அம்மாச்சு, சாப்பிட வாங்க,” என்று பேத்தியின் நாத்தனார் வரவும்,

“எம் பேத்தி எங்கத்தா?” என்று கேட்கும்போதே குரல் கலக்கமாக வந்தது.

“உங்க பேத்தி குழந்தையை சமாதானம் செய்யுறா பாட்டி. அதான் நா வந்தேன்,” என்றார்.

“நா என் கடைசி பேத்தி தேவகியைக் கேக்குறேன்த்தா,” என்றார்.

அவள் திருட்டு முழி முழித்தாள்.

“என்ன பாட்டி சொல்லுறீங்க?” என்று சிறு அதிர்வுடன் கேட்க,

அழுகையோடு நெஞ்சில் கை வைத்தார்.

மறுபடியும் வெற்றியைக் கூப்பிட்டு கேட்க,

“இவங்க இல்லே பாட்டி,” என்று அவர் தலையில் கல்லைப் போட்டான்.

“அப்புறம் யாருக்கூடத்தான் போனாடா?” என்று சொல்லிக்கொண்டே பேரனை அடிக்கப் போனார்.

“அத்தை, அவ போனதுக்கு எம்புள்ளைய அடிப்பீங்களா?” என்று மகனைத் தன் பக்கமாக இழுத்துக்கொண்டு காளியம்மா கேட்க,

அதே நேரம்,

“ஐய்யோ! இங்க ஒரு பொண்ணு அலங்கோலமா கிடக்குதே!” என்ற சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்து பார்க்க,

முகத்தில் இரத்தக் கீறல்களும், ஆடைகள் அலங்கோலமாகவும் இருந்தவளின் நிலையே எல்லாவற்றையும் சொல்லிச் சென்றது.

கூட்டத்தை விலக்கி மயிலம்மா பார்த்தவர்,

“என்னைப் பெத்த ஆத்தா!” என்று கூறி, கைகளால் அவளை வாரிக்கொண்டு கதறினார்.

உண்மையில் அவளைத் தூக்கும்போது, உயிர் இல்லை என்ற நிலையில்தான் இருந்தாள்.

சுற்றி நின்ற அனைவரும் உச்சுக்கொட்டிப் பார்த்தனர்.

தன் கைகளால் பேத்தியின் அங்கங்களை மறைக்க முயன்றார்.

மகளைத் தேடிச் சென்ற ராமைய்யாவும், மணியரசும் வந்து பார்த்தது கதறிக்கொண்டிருந்த அன்னையைத்தான்.

தன் வேஷ்டியைக் கழற்றி மகள் உடலில் போர்த்தியவருக்கு உயிரே நின்ற நிலைதான்.

தன் தம்பியின் இரத்தம் கிடந்த நிலையை அவர் கனவில்கூட அறியாததாச்சே.

கண்ணீரோடு மகளின் கால்களைத் தேய்த்துக்கொண்டிருந்தார்.

மணியரசு ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தான்.

முகத்தில் சுரீரென வலி தெரிய, கண்களைப் பிரித்தாள்.

கண்ணீரோடு தெரிந்த பாட்டியின் முகத்தைக் கண்டு கதறினாள்.

“பாட்டி… பாட்டி…” என்ற வார்த்தைக்கு மேல் வேறு வார்த்தை வரவில்லை அவளுக்கு.

சிறு பெண் தாங்க முடியாத அதிர்ச்சியும், தன் உடலின் வலியும் சேர்ந்து அவளைச் சோர்ந்து போகச் செய்தது.

“யாருத்தா இப்படி பண்ணது?” என்று கண்ணீரோடு மயிலம்மா கேட்க,

“பெரி…ய… மாமா…” என்று திக்கித் திணறினாள்.

இருவரும் அதிர்ச்சியில் இருக்க, மயிலம்மா தன் மீதே கோபப்பட்டார்.

“ஐய்யோ… ஐய்யோ…” என்று தலையிலே அடித்துக்கொண்டு அழுதார்.

இருவரும் அவரைச் சமாதானம் செய்து கோவில் அருகே வந்தனர்.

இவர்கள் வருவதற்குள், இங்கு தெய்வானையின் கணவன் மொத்தக் கதையையும் மாற்றிச் சொல்லி வைத்தான்.

“மன்னிச்சுடு தெய்வானை… போதையில் இருக்கும்போது தேவகி நெருங்கி வரவும்… என்னை அறியாம எல்லாம் நடந்து போச்சு,” என்று கண்ணீருடன் சொன்னதும்,

மனைவியும் மாமியாரும் அவன் சொன்னதை நம்பினர்.

“பாவி… பாவி… என் குடியைக் கெடுக்க எத்தனை நாள்டா கங்கணம் கட்டித் திரிஞ்ச?” என்று அவன் சட்டையைப் பிடித்து அறைந்தார் மயிலம்மா.

“அத்தை, சும்மா நிறுத்துங்க. மான ரோஷம் வேணாம். ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ணிருக்க நெனப்பு கூட இல்லாம மாப்பிள்ளை மேல போய் விழலாமா?” என்றார்.

காளியம்மாவுக்கு உண்மை புரிந்தாலும், மகளின் வாழ்க்கையை எண்ணி தேவகியை வார்த்தையாலேயே வதைத்தார்.

“ஐய்யோ! பெரியம்மா இல்லை… இவங்கதான்… என்னை… என்னை…” என்று சொல்ல முடியாமல் அழுதாள்.

“ஆம்பளை வந்தா தள்ளிவிட்டு வர வேண்டாமா? அப்படியென்ன ஆம்பளை சுகம் கேக்குது?” என்றதுதான் தாமதம்.

அவர் கன்னத்தில் இடியென ஒரு அடியைக் கொடுத்தார் மயிலம்மா.

“அத்த…” என்று அதிர்ச்சியோடு பார்த்தார்.

“ச்சீ… அப்படி கூப்பிடாதடி என்னை. நீயும் ஒரு பொம்பளைதானே! உன் மருமகனோட யோக்கியதை பத்தி உனக்குத் தெரியாது,” என்றார்.

“அப்பத்தா… எம்புருஷன் ராமன். அவதான் என்னவோ பேசி எம்புருஷனை மயக்கிட்டா,” என்றாள் தெய்வானை.

“ஓஓஓ… உன் புருஷன் ராமனா? அவன் ராவணனுக்கு மேலடி. அந்த மண்டோதரிக்குக்கூட தன் புருஷனைப் பத்தி ஆதியும் அந்தமும் தெரிஞ்சி வச்சிருந்தா. நீ என்னடி அவனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்ட?” என்று பேத்தியைப் பார்த்தார்.

“பூனை கண்ணை மூடிட்டா உலகமே இருண்டுச்சுன்னு நெனச்சுக்குமாம். அதே மாதிரிதாண்டி நீயும்!

ஒரு பொண்ணுக்கு புருஷனைப் பத்தி எல்லாமும் தெரியும். நீ ஒன்னுக்கு ரெண்டு புள்ளையைப் பெத்திருக்க… எங்க, அவன் ஜாதகத்தை சொல்லு பாப்போம்,” என்றார் மயிலம்மா.

“சத்தமா பேசி அவ செஞ்சதை சரின்னு சொல்லாதீங்கத்தை. இப்ப அவ என் பொண்ணு வாழ்க்கைக்கு தானே போட்டியா வந்திருக்கா,” என்றார்.

மருமகளைப் பார்த்து,

“எம்பேத்தி சாக்கடையில விழுந்தவளைத் தூக்கிவிட நா இருக்கேன். சாக்கடையில விழுந்தாலும் சந்தனம் நிறம் மாறாதுடி.

ஆனா சந்தனத்தை சாக்கடையில விழவச்சவனுக்கு… அந்த சாக்கடையே பதில் சொல்லும்.

அதைப் பார்க்காம இந்த மயிலம்மா உயிர் போகாதுடி.

நா தெய்வமா வணங்குற முனிய்யா, என் பேத்திக்கு நல்ல எதிர்காலத்தைக் காட்டுவான்டி…” என்று பேத்தியின் கைகளை பிடித்து அங்கிருந்து நகர்தார்..

அவர்கூட ராமையாவும், மணியரசும் கிளம்பினர்.

“என்னங்க, நீங்க எங்க போறீங்க?” என்று கணவனை பார்த்தார் காளியம்மா.

அவர் பார்த்த பார்வையின் எரிக்கும் சக்தி இல்லாததால் காளியம்மா உயிருடன் நின்றார்.

அக்கா அழுதுகொண்டே போவதை பார்த்து வெற்றியும் அக்காவின் கைபிடித்துக் கொண்டான்.

கணவன் போவதை கண்டு சரசும் தன் மகள்களை அழைத்துக்கொண்டு நகர்ந்தாள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டுல அடுப்பு ரெண்டானது.

தேவகி அந்த தாக்கத்திலிருந்து வெளிவர முயற்சி பண்ணாலும், “நீ காலத்திற்கும் அழ வேண்டும்” என்ற கடவுள் அவள் வயிற்றில் சிசுவை கொடுத்தார்.

இரண்டு மூன்று மாதம் மாதவிடாய் வராமல் இருப்பதை கண்டு,

பேத்தியின் கையில் நாடி பிடித்து பார்க்க, இரட்டை நாடி துடிப்பு துடித்தது.

இதற்கு நடுவில் தேவகிக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டில் கல்யாணம் நிறுத்தி இருந்தனர்.

விடாது கருப்பு போல் தொடர்ந்து வந்தான் பார்த்திபன்.

“என்னய்யா!”

“பாட்டி, எனக்கு தேவகி வேணும்… எனக்கு கல்யாணம் பண்ணி தாங்க” என்று கெஞ்சினான்.

“முடியாதுய்யா, இப்ப அவ ரெண்டு உசுறா இருக்காய்யா!” என்றார் கண்ணீரோடு.

“பரவாயில்லை பாட்டி, எனக்கு அவதான் வேணும். மனசால பொண்டாட்டியா வாழ்ந்துட்டேன் பாட்டி. ரெண்டு வீடும் சேர்ந்து தானே எனக்கு அவளை நிச்சயம் பண்ணீங்க. கற்பு வேணும்னா உங்களுக்கு பெருசா இருக்கலாம்.

அவ மனசு முழுக்க நா தான் இருக்கேன் பாட்டி… ப்ளீஸ் எங்களை சேர்த்து வைங்க” என்று முட்டிப்போட்டு கையெடுத்து கும்பிட்டான்.

“என் பேத்தியை இந்த நிலமையாலும் ஏத்துக்க உங்கவூட்டுல சம்மதிச்சா குடும்பத்தோடு வாப்பா. நா கல்யாணம் பண்ணி வைக்குறேன்” என்றார் மயிலம்மா.

“சரி பாட்டி” என்று கண்களை துடைத்து,

“நா தேவகியை ஒரு தடவை பாக்கவா பாட்டி?” என்றான் பார்த்திபன்.

“அவ மயக்கத்துல இருக்காப்பா” என்றதும்,

அவன் கிளம்பினான்.

அவன் திரும்பி தன் குடும்பத்தோடு வரும்போது, தேவகிக்கு பெண் குழந்தை பிறந்து ஐந்து வயது தொடக்கத்தில் இருந்தாள்.

தன் மகனையும், மணியரசு மற்றும் வெற்றி மட்டுமே நிறுத்தி பேத்திக்கு திருமணம் பேசினார். அவள் விருப்பமே இல்லாமல்,

“உங்ககிட்ட தனியா பேசணும்னு” என்று மாப்பிள்ளை அம்மா சொல்ல,

மயிலம்மாவும் அவருடன் சென்றார்.

“இங்க பாருங்கம்மா, எனக்கு இதை சொல்ல கஷ்டமா தான் இருக்கு. ஆனா எனக்கு வேற வழி தெரியல. நாங்க பசுவை மட்டும் தான் எங்க வூட்டுக்கு அழைச்சிட்டு போக ஆசைப்படுறோம்” என்றதும்,

“கவலைப்படாதிங்க. நானும் பசுவை மட்டும் தான் அனுப்பி வைப்பேன். கன்று எப்பவும் என்கூட தான் இருக்கும்” என்றார் மயிலம்மாவும்.

இந்த முடிவு தெரிஞ்சதும் சம்மதிக்கவே இல்லை தேவகி.

“பாட்டி, நா உங்க கூடவே இருக்கேன்” என்று கதறினாள்.

“உனக்கு தான் அவளை புடிக்கலையேத்தா. யாரும் இந்த பூமியில இவங்களுக்கு தான் பொறக்கணும்னு வரம் வாங்கி வரலத்தா. என் காலம் வரை நா பாத்துக்குறேன்” என்றார்.

“நானும் உங்களோட இருக்கேன் பாட்டி” என்று உறங்கும் மகளை பார்த்தாள்.

வயிற்றில் இருந்த பத்து மாதமும் நகரமாக தான் அனுபவித்தாள். இடுப்பு வலிகொண்டு பிறந்த முகத்தை காணும் போதே, தன் மொத்த வாழ்வுக்கும் இவள் தான் ஆதாரம் என்று எண்ணியவளுக்கு…

இப்போது! இவளை பிரிவை எண்ணி அழுகைதான்.

“இங்க பாருத்தா, நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கல. நானும் பேத்தியும் கொஞ்சூண்டு அரளி விதையை அரைச்சு அவளுக்கு கொடுத்துட்டு நானும் சாப்பிடுவேன்” என்று மிரட்டினார்.

மனமே இல்லாமல் தான் தலையாட்டினாள்.

“இங்க பாருத்தா, தனிமை எவ்ளோ கொடுமைன்னு… நானும், என் மகனும் போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு அனுபவச்சிட்டோம்! அந்த வலி உனக்கு வேணாம்த்தா. நீ சந்தோஷமா இருப்ப” என்று பேத்தியின் தலையை தடவி கொடுத்தார்.

ஊர் கோவிலில் தன்னை மதிக்கும் சொந்தத்தை மட்டும் கூப்பிட்டு பேத்திக்கு திருமணம் செய்தார்.

காளியம்மா, சரசு இருவரும் மட்டும் அதில் இல்லை.

திருமணம் முடித்து சென்றதிலிருந்து, தேவகி ஒவ்வொரு சனிக்கிழமையும் மகளை காண வந்தார்.

அடுத்து ஒரு வருடம் வராத நேரத்தில் தான்…

தாயும், மகளும் சேர்ந்து ஒன்னுக்கு ரெண்டாக வேல்விழிக்கு சொல்லிக் கொடுத்தனர்.

மயிலம்மாவுக்கு அது தெரிந்தாலும் கண்டுக்காமல், இருவரையும் பிரித்து வைத்தார்.

முதலில் வாரம் வந்தவள், அடுத்து மகள் பேசாததால் தள்ளி நின்றே அவளை பார்த்து சென்றாள்.

வெற்றி வளர்ந்த பிறகே! மகளின் குரலே போன் வழியே கேட்டு சந்தோஷம் கண்டார்.

வேல்விழிக்கே தெரியாமல் போனை கீழே வைத்து அவளிடம் பேச்சு கொடுத்தான்.

அந்த சந்தோஷத்தோடு தேவகி மயங்கி கீழே விழப்போனவளை, தன் நெஞ்சில் தாங்

கிக்கொண்டான் பார்த்திபன்.

இரட்டை குழந்தைக்கு தாயான செய்தி மருத்துவர் சொன்னதும், பார்த்திபன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத நிலை தான்.

“தேவகிக்கு சந்தோஷம் தான்… ஆனால் காலம் பிரித்த தாயும் மகளும் மீண்டும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று தெரியாமல் அந்த சந்தோஷத்திலும் ஒரு வலி மட்டும் அவள் மனதில் இருந்தது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!