Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 26 4

“கண்டிப்பா எதேச்சையாய் தான் நடக்குது கமலி. நீ வர்றதே எனக்கு தெரியாது. நான் வேணும்னு பண்ணல” இவன் கூறிய நொடி

“நம்ப தான் முடியலை!” மேலிருந்து கீழாக இவனை பார்த்து வைத்தாள்.

“நம்புடி..”

“எப்படி நம்புறது.. ரிங் டோனில் மட்டும் என்னப்பனல்லவா’னு வைக்க வேண்டியது. ஆனால் தனியா இருக்கும் போது இப்படி ஒரு பாட்டை கேட்டுட்டு இருந்தா, நான் எப்படி நம்புறது! காலேஜில் முதல் முறையா உங்க ரிங் டோனை கேட்டுட்டு.. சரியான சாமியார்னு நினைச்சிட்டேன்.. ஆனால் நீங்க..”



Advertisement

“ம்.. நீங்க” என இவன் எடுத்து கொடுக்க, முகத்தை பட்டென திருப்பி கொண்டாள் கமலி.

அவன் மீது அவள் கொண்ட ஊடல்களாய் அவள் எண்ணங்களை அப்படியே அவளது முகம் பிரதிபலித்திட, வம்பிழுக்கும் ஆசை வந்தது இவனுக்கு “கடையில் இருந்து கோபமா போன ஸ்பீடுக்கு, திரும்பி எங்கிட்ட வர மாட்டன்னு நினைச்சேன். வந்துட்ட, அதுவும் தனியா” வெகு நக்கலாய், வாய் கொள்ளா சிரிப்போடு கேட்டான் கிரி.

சிரிப்பை பாரு.. வந்திருக்கவே கூடாது கமலி. இவனை பாவம் பார்த்து பார்த்து, இவன் முன்னாடி நீ தான் பாவமாய் நிக்கிற, இனி வந்த நானே உன்னை செருப்பால அடிப்பேன் என மனம் காண்டானது.

Advertisement

இவள் கோப முகம் கண்டு “மேடம் எதுக்கு வந்தீங்களாம்? என்னை பார்க்கவா?” இவள் பேச மாட்டாள் உன உணர்ந்து, அவளை பேச வைக்கும் முயற்சியில் இறங்கினான் கிரி. ஆனால் அதற்கும் இவள் ஒரு முறைப்பையே பரிசாய் கொடுக்க

Advertisement

“காயச்சல் வாந்தினு கிடந்தா தான் பார்க்க வருவ போல. இல்லைன்னா நீயே பார்த்துக்கோடானு போயிடுவல்ல” என இவன் இன்னும் இவளை வம்பிழுத்து வைக்க, நிறைய பேசவும் சண்டையிடவும் தயாரானது கமலியின் நாக்கு.

ஆனால் அவன் வார்த்தைகள் தான் துள்ளலோடு வந்தனவே தவிர்த்து, அவனது கரகரத்த குரலும், சோர்ந்து நின்ற முகமும் அவன் உடல் நிலை சரியில்லை என்பதை புடம் போட்டு காட்டிட, அடக்கி வைத்தாள் தன் நாக்கை. கடுகடுவென முகத்தை வைத்து கொண்டு “சாப்பாடு” என கையில் இருந்த பேக்கை அவன் முன் நீட்ட, அவளுடன் மல்லுக்கட்ட தயாராக இருந்தவனுக்கு  அவள் செயல், அவனை முழுதாய் தளர செய்தது.

அங்கிருந்த பாயை காட்டி “வச்சிட்டு போ.. நான் அப்புறமா சாப்பிட்டுகிறேன்” என இவள் கோபம் கண்டு விலகி நின்றான் கிரி.

Advertisement

ஏதாவது பேசுவான், சமாதானம் செய்வான் என இவள் எதிர்பார்த்திருக்க, இவனது விலகல் அடக்கி வைத்த நாக்கிற்க்கு வேலை கொடுக்க, “வச்சுட்டு போக சொல்றதுக்கு தான்.. வா வான்னு கூப்பிட்டிங்களா?” இவனிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என தெரியாமல் இவளுள்ளும் கோபம் எகிறியது.

அவ்வளவு தான் பற்றி கொண்டது இவனுள். அவள் கையில் இருந்த பேக்கை சுட்டி காட்டி “இப்படி கொடுத்துட்டு போக தான் நீயும் வந்தியா. இதுக்கு நீ உன் அண்ணன் கிட்டயே கொடுத்து விட்டிருக்கலாம்” இறுகி கிடந்த இதழ்கள் கூற

“வேற என்ன பண்ணனுமாம்?” முறைத்தபடியே வந்தது இவன் வார்த்தைகள்

அவளையே பார்த்திருந்தவன் ‘அதை நான் சொல்லி நீ செய்ய வேண்டிய அவசியமே இல்லை. பொண்டாட்டின்னா சொல்லாமல் செய்யனும், சொல்லாமல் கொடுக்கனும்’ மனதினுள் சொல்லி கொண்டு வெளியே பார்வையாலேயே அவளை அளந்தான் கிரி.

அவன் பார்வையில் “எ..என்ன..” என இவள் தடுமாறி நிற்க

“இதை கொடுக்க தான வந்த, வச்சிட்டு போ” என கூறியவனின் குரலில் கோபம் அதிகமாகவே துளிர்த்தது.

சிறிது நேரத்தில் பாத்திரங்களின் சத்தம் இவன் கவனத்தை ஈர்க்க, கோபத்தில் இருந்த இதழ்கள் லேசாய் சிரிப்பில் விரிந்தது. பாயில் அமர்ந்து பேக்கில் இருந்தவைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தாள் கமலி.

“கொஞ்சம் பெரிய ஸ்பூன், கின்னம் வேணும். அப்புறம் தண்ணியும் வேணும்” என்ற இவள் குரலில், மாடிப்படி நோக்கி நடக்க துவங்கியவனிடம், “நீங்க போட வேண்டிய மாத்திரையையும் எடுத்துட்டு வாங்க” என்றிட, மேலும் விரிந்த சிரிப்போடு கீழிறங்கி சென்றான். சிறிது நேரத்தில் இவனும் மாடிக்கு வந்திட, தண்ணீர், மாத்திரை, ஸ்பூன், கின்னம் என அனைத்தையும் அவன் கையிலிருந்து வாங்கி கொண்டு, தன் எதிரில் இருந்த இடத்தை காட்டி, உக்காருங்க என்றாள்.

சூடாக இருந்த கஞ்சியை ஒரு கின்னத்தில் ஊற்றி ஸ்பூன் போட்டு கிளறி ஆற வைத்தபடி, சிறிய டப்பாவில் கொண்டு வந்திருந்த சிறு பருப்பு துவையலையும் அவன் முன் வைத்து, சாப்பிடுங்க என்றிட

“ஊட்டி விடுடி” என சிறு பிள்ளையாய் இவன் கேட்க, அவன் முன் இன்னும் நெருங்கி அமர்ந்து ஊட்ட துவங்கினாள்.

அரிசி, சிறுபருப்பு, மிளகு, சீரகம் வெள்ளைபூடு போட்டு செய்த அந்த கஞ்சி அத்தனை வாசமாக இருந்தது, தொண்டைக்கு இதமாக இருந்தது. பருப்பு துவையல் வாய்க்கும் இன்னும் நன்றாகவே இருந்தது.

இவள் கொடுக்க கொடுக்க வாங்கி கொண்டே இருந்தான். கொண்டு வந்திருந்த கஞ்சியை முழுதாய் காலி செய்திருந்தான் கிரி.

பின் தண்ணிரை குடிக்க கொடுத்து, பாத்திரங்களை ஒழுங்கு செய்து ஓரமாக வைத்துவிட்டு மீண்டும் பாயில் அவனருகில் அமர “நீ சாப்பிட்டியா?” என கேட்டான்

“ம்..” என்றவள் “வாந்தி மட்டும் தானா? காய்ச்சல் இல்லையே” என கேட்க

“இருக்கே” என ஒற்றை வார்த்தையில் இவன் பதில் கூற

பதறி போய், அவனருகில் மண்டியிட்டு அமர்ந்து கழுத்திலும், நெற்றியிலும் இவள் கை வைத்து பார்க்க காய்ச்சல் இன்னுமே அடித்து கொண்டு தானிருந்தது. “கிரி காய்ச்சலும் குறையல! வாந்தி எப்போ இருந்து இருக்கு? எத்தனை முறை எடுத்தீங்க” என அவசர அவரமாய் கேட்க, இவனோ, அவளையே பார்த்திருந்தான்.

இவளோ, இவன் கொண்டு வந்திருந்த மாத்திரை கவரை எட்டி எடுத்தாள். அதை பிரித்து பார்க்க, ஒரு மாத்திரை கூட விழுங்கப்படாமல் தான் இருந்தது.

“காய்ச்சல் குறையனும்னு எந்த ஸ்டைப்பும் எடுத்த மாதிரி தெரியலையே! ஏன் இப்படி பண்றீங்க” என்றாள் எரிச்சலுடன்

தன் எதிரில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவளை சுண்டி இழுத்தான் கிரி., தடதடவென இதயம் துடிக்க “கிரி” என தடுமாறி இவன் மடியில் வந்து விழுந்தாள் கமலி. அவளை நேராக பிடித்து தன் மடியில் அமர்த்தி அவள் முகம் பார்த்தான்.

இரு முகங்களும் ஒன்றோடு ஒன்றாக  உரசிக்கொள்ளும் தூரத்தில் இருந்தன. அந்த இடைவெளியையும் குறைத்து கொண்டு, மூக்கோடு மூக்குரசி “காய்ச்சல் குறையனும்னு நீயும் எந்த ஸ்டெப்பும் எடுத்த மாதிரி தெரியல!” மெதுவாய் வந்த அவன் வார்த்தைகளில் அத்தனை கூர்மை.

 “நா..நான்..” “என்ன ஸ்டெப் எடுக்கனும்” திக்கி திணறி “மாத்திரை நீங்க தான் போடனும். காலை, மாலை, இரவுன்னு மூனு வேளைனு தெளிவா எழுதி இருக்காங்க. மாத்திரை எடுத்து கிட்டா தானே உடம்பு சரியாகும்” தன் மூக்கோடு உரசி கொண்டிருந்தவனிடம் எப்படியோ பேசிவிட்டாள் கமலி.

அவள் பதிலில் மெதுமெதுவாய் நிமிர்ந்து அவள் முகத்தை, விழிகளை அழுத்தமாய் பார்த்து “என் மாத்திரையே நீ நான்டி.. இன்னுமா புரியலை? என் காய்ச்சல் எதுனாலன்னு!” இவன் மனம் திறந்த நொடி, ஸ்தம்பித்துவிட்டாள் கமலி.

“மாத்திரை மூனு வேளைலாம் வேணாம். ஒரு வேளை.. ஒரே ஒரு டோஸ் மட்டும்” என்றவனின் வாயை கை கொண்டு அடைத்து, அவனை பேசவிடாமல் செய்தாள். நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருந்தது கிரியின் முகம்.

அதற்கு மேல் அவனை, அவன் பார்வையை தாங்கும் சக்தி இல்லாதவளாய், பட்டென அவன் மடியில் இருந்து எழுந்து விட்டாள் கமலி.

பிடறியை வருடி தன்னை நிலைபடுத்துவதற்குள் இவன் பாடு படு திண்டாட்டமானது. அதை புரிந்து, தண்ணீரை அவன் பக்கமாய் நகர்த்தி, மாத்திரைகளை பிரித்து, அவன் கையில் வைத்து, மாத்திரைகளை போட வைத்தாள்.

“முதல்ல, கீழ போய் படுங்க. மாடியில் படுக்க வேண்டாம் நாளைக்கும் கடைக்கு போறேன்னு கிளம்பிடாதீங்க. ஒழுங்கா சாப்பிட்டுட்டு, மாத்திரை போட்டுட்டு தூங்கி எழுந்திருங்க. உடம்பு நல்லா ஆன பிறகு கடை வேலைய கவனிக்கலாம்” என கட்டளையிட, இவனும் மறுப்பு சொல்லாமல் தலையசைத்து, கூடவே “ம்.. அட்வைஸ்லாம் ஓகே தான்” என நிறுத்தி

“நான் கேட்டது என்ன? நீ செய்றது என்ன?” என இவன் பல்லை கடிக்க

“நேரமாச்சு, கிளம்பட்டும்மா” என வேறு பக்கம் பார்த்தபடி இவள் கேட்க

“வந்தே அரைமணி நேரம் கூட ஆகலை. அதுக்குள்ள போகனுமா.. இரு” என்றவனுக்கு கோபம் ஏறியது

“இப்போவே மணி எட்டரை ஆச்சு”

“காலைல எட்டரை ஆனாலும் எனக்கு கவலையில்லை. எவன் கேட்பான்” என்றான் கடுப்புடன்.

எவனும் கேட்க மாட்டான் தான்! என மனதினுள் நினைத்தவள்

“இப்போ என்ன தான் பண்ணனும்ங்கிறீங்க!” தடம் மாறிய வார்த்தைகளில், அவள் புறமாய் இவன் கை நீட்ட.. நீடித்த யோசனைகளுக்கு பிறகு நீட்டிய கையை இறுக பற்றினாள் கமலி. அடுத்த நொடி இழுத்து தன்னருகில் சரித்தான்.

சிறிதும் யோசிக்காமல் நெஞ்சில் முகத்தை புதைத்து அவளை இடையோடு இறுக அணைத்து கொண்டான்.

அவன் காய்ச்சல் அவளுக்கு கடத்தப்பட்டதா, இல்லை ஹை ஒல்ட்டோஜ் மின்சாரம் கடத்தப்பட்டதா என தெரியாமல், கிடுகிடுவென நடுங்கி போனது இவள் உடல்.

“கொஞ்ச நேரம் கமலி.. ப்ளீஸ்” தலையை சிறிதும் நகர்த்தாது இவன் பேச,  நெஞ்சம் குறுகுறுத்தது கமலிக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!