Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும்

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 13

“என்ன ஆச்சு நந்தினி இவ்வளவு நேரம்?”

“அத ஏன் கேக்குறீங்க டீச்சர்? வழியெல்லாம் அங்கங்க பைக்கை, லோடு வண்டியை குறுக்கால நிறுத்தி நிறுத்தி போட்டுருக்கானுங்க.

 இதில மழை பேஞ்சு சகதியா வேற இருக்கு! பயங்கர காத்து வேற! வண்டியை ஓட்டவே முடியல!

வந்துட்டேன். இருங்க. நீங்க நல்லா வேற ஏதாச்சும் மஞ்சுவைப் பத்தி அதுல கிடைக்குதான்னு பார்த்திட்டு இருங்க” என்றாள் நந்தினி தன் மொபெட்டை ஓட்டியபடியே!



Advertisement

“நந்தினி அப்படியே லைனில் இரு. என் தம்பி போன் பண்ணி இருக்கான். எதுக்கு இவ்வளவு காலையிலேயே பண்ணி இருக்கான்னு தெரியல. நான் பேசிட்டு வர்றேன்” என்று அவளை ஹோல்டில் போட்டு விட்டு,

“சொல்லுடா.. என்ன இவ்வளவு காலையிலேயே போன் பண்ணியிருக்க? அம்மாவுக்கு ஒண்ணுமில்லையே? நல்லா இருக்காங்க இல்ல?”

“ச்சே. ச்சே அம்மாவுக்கு எல்லாம் ஒண்ணும் இல்லை! நல்லா தான் இருக்காங்க.

Advertisement

நான் இப்ப தஞ்சாவூர் வந்திருக்கேன். என் சீனியரோட. நேத்து நைட்டே பேசணும்னு நினச்சேன். லேட்டாகிடுச்சு. நீ தூங்கிட்டு இருப்பன்னு தான் டிஸ்டர்ப் பண்ணல.

Advertisement

எப்படான்னு விடியும்னு இருந்து போன் பண்ணி இருக்கேன். நான் அங்க வர்றேன் அக்கா. நீ சரியான லொகேசன் அனுப்பு.

அப்புறம் அக்கா. இன்னொரு விசயம். என் சீனியரோட மச்சான் ஒருத்தர் பேர் மணி மாறன். போலிஸ் எஸ்.ஐ ஆக இருக்கார்.  ரெண்டு வருசமா எனக்கும் பழக்கம். ரொம்ப நல்ல மாதிரி!

உன்னோட போட்டோவை ஒரு நாள் என்னோட வாட்ஸப் ஸ்டேட்டஸ்ல பார்த்து இருப்பார் போல.

Advertisement

உன்னை அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருச்சு! அவங்க வீட்டுல பொண்ணு பார்க்கும் போது உன்னைப் பத்தி சொல்லி இருக்கார்.

 எல்லா விசயமும் அவங்களுக்கு தெரியும்! அவங்க வீட்டுல சம்மதம் தான்!

உன்னோட ஏழு வயசு பெரியவர் தான்க்கா. ஆனா பார்த்தா அப்படி தெரியாது! ரொம்ப யங்கா, ஹான்ட்சம்மா, ஃபிட்டா இருப்பாரு.

உனக்கு ரொம்ப பொருத்தம்க்கா. நீ என்ன சொல்ற? உனக்கு ஓகேன்னா நான் மேற்கொண்டு பேசறேன்க்கா” என்றான் கவின்.

“டேய்.. உன்னை எதுக்கு காலேஜ்ல சேர்த்து விட்டிருக்கேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க?

ஏன் என்னை பாக் பண்றதுல குறியா இருக்க? யாராச்சும் பொண்ணு கிட்ட கமிட் ஆகிட்டியா? நான் தான் உனக்கு தடையா இருக்கேனா?

நீ என்னைப் பத்தி கவலைப் படாதே! நீ உன்னோட லைஃபை பாரு முதல்ல” என்று அவள் தம்பியிடம் கோபமாக பேசிக் கொண்டிருந்த கவி,

வீட்டின் உள்ளே நுழைந்து பெட்ரூமுக்குள் போன ரகுவைக் கவனிக்க வில்லை!

அவள் பாட்டுக்கு கவினுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தாள்.

போனில் பேசியபடியே தெய்வானைக்கு சைகையில் உள்ளே போய் எடுத்துக் கொண்டிரு என்று சொல்லியும் விட்டதால், அவள் கிச்சனுக்குள் போய் மீந்து போன சாதத்தை குழம்பை எல்லாம் கழுநீர் பானையில் ஊற்றிக் கொண்டு இருந்தாள்.

உள்ளே இருந்ததால் அவளும் ரகு நுழைந்ததை கவனிக்க வில்லை!

வழியெங்கும் குடித்துக் கொண்டே வந்தாலும் ரகுவுக்கு அனிச்சை செயலாகவே, அவன் வீட்டிற்கு வழி தெரிந்தது அவ்வளவு போதையிலும்!

ஆனால் அந்த வீட்டில் இப்போது மஞ்சு இல்லை என்பதையும், அவள் காணாமல் போய் விட்டதும் போதையில் இருந்த அவனின் நினைவுகளில் இருந்து மறைந்து போய் விட்டிருந்தது.

அந்த வீட்டில் இப்போது கவி குடியிருப்பதும் கூட சேர்ந்தே மறந்து விட்டிருந்தது!

அவன் பாட்டிற்கு பைக்கை வீட்டு காம்பவுண்ட் கேட் திறந்திருக்க உள்ளே வந்து நிறுத்தி இறங்கியவன் கண்களில் நைட்டி அணிந்து கொண்டு கொல்லைப்புறம் நின்று போனில் பேசிக் கொண்டிருந்த கவி, அவன் கண்களுக்கு மஞ்சுவைப் போலவே தெரிந்தாள்.

இதற்கு முன்பு ஒருமுறை மீனுக் குட்டி அம்மா என்று அழைத்துக் கட்டிக் கொண்ட போது அவள் அணிந்திருந்த அதே நைட்டி!

அவன் கண்களுக்கும் மஞ்சுவைப் போலவே தெரிந்தது!

‘அச்சோ..நாம குடிச்சுருக்கோம். அவ கண்ல பட்டா.. உண்டு இல்லைன்னு பண்ணிடுவா.

நல்ல பிள்ளையாட்டம் போய் படுத்துக்குவோம்’ என்று நினைத்து நேரே பெட் ரூமுக்கே சென்று விட்டான்.

அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மீனுவைக் கண்டதும், பாசம் பொங்க,

“மீனுக்குட்டி..” என்று அவள் அருகில் படுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த அவளைக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் பார்த்து தான் உள்ளே வந்தார்கள் அன்னமும் அவள் பக்கத்து வீட்டுப் பெண்ணும் கையில் துடைப்பக் கட்டையுடன்!

“டேய். ரமேஷ்.. ரமேஷ் எங்கடா இருக்க?” என்று சத்தம் போட்டு திட்டிக் கொண்டே காம்பவுண்ட் கேட் வழியே உள்ளே வந்தார்கள்.

அவர்கள் குரல் கேட்டு அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்கள் வெளியே எட்டிப் பார்த்தனர்.

சைக்கிளில் அந்த பக்கம் வந்த பால்காரர். கோலமாவு விற்பவர் என்று பலரும் வாசலில் கூட ஆரம்பித்து விட்டனர்.

“ஏண்டி..அன்னம் என்னடி ஆச்சு? ஏன் இப்படி கத்திட்டு இருக்க?”

“என்னது கத்திட்டு இருக்கேனா? பாருங்க இந்த அநியாயத்தை.. இந்த ரமேஷ் பய, எப்ப பாரு டீச்சர் நோட்டம் விட்டுகிட்டே இருந்தான்.

அவங்க பின்னாடியே அலைஞ்சு கிட்டு இருந்தான். டீச்சர் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும், திரும்ப திரும்ப வந்து உதவி செய்றேன்னு வழிஞ்சு கிட்டு நிப்பான்.

ஆனா இன்னிக்கு அவனுக்கு வந்த தைரியம்!

தனியா இருக்கிற  டீச்சர் வீட்டுக்குள்ளயே போய்ட்டான்” என்றாள் அன்னம்.

“இந்தா சும்மா ஏதாச்சும் சொல்லாத! அவன் என்னத்துக்கு காலங்கார்த்தால டீச்சர் வீட்டுக்கு போகப் போறான்!

உள்ளே போனதை பார்த்த நாங்க கேன சிறுக்கிங்களா? உனக்கு சந்தேகமா இருந்தா நீயும் எங்க கூட உள்ளே வந்து பாரு!” என்று கூச்சலிட,

அந்த இன்னொருப் பெண்ணும் இவர்கள் கூட சேர்ந்து கொள்ள மேலும் கூட்டம் வேறு கூடியது!

அதற்குள் இங்கு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நகர்ந்து சென்ற பால் காரர் நேரே பண்ணையார் பரமசிவம் வீட்டுக்கு சென்றவர் அங்கு போய் இந்த விஷயத்தை சொல்ல,

 அங்கு நடப்பவற்றைக் காணும் ஆசையில், ஒரு வேடிக்கைப் பார்க்கும் ஆர்வத்தில் அவரும் கவி இருக்கும் வீடு நோக்கி சென்றார்.

அவர் போய் சென்று சேர்ந்த நேரம், சரியாக நந்தினியும் அங்கு வந்து விட்டிருந்தாள்.

கவி வீட்டின் வாசல் அருகே என்ன கூட்டம் என்று அவள் வியந்தவாறு சென்ற போது, அவள் பின்னால் தன் பைக்கை கொண்டு வந்து நிறுத்தினான் ரமேஷும்!

உள்ளே நோக்கி குரல் கொடுத்துக் கொண்டிருந்த பெண்கள், இப்போது வாசலில் நிற்கும் ரமேஷைக் கண்டு அதிர்ச்சி ஆனார்கள்!

அன்னம் குழம்பிய பார்வையோடு, அவனைப் பார்த்தவள்,

‘இவன் இங்க இருக்கான்னா.. அப்ப உள்ள இருக்கிறது யாரு? ஒருத்தன் உள்ளே போனதை தான் நாங்க பார்த்தோமோ!’

இதோ வந்தவன் நிறுத்தி இருக்கும் பைக் கூட நிற்கிறதே சாட்சியாய்! என்று திகைத்தாள்.

அதற்குள் கொல்லைப் புறம் போனில் பேசிக் கொண்டிருந்து விட்டு பாத்ரூம் சென்று இருந்த கவி, பெண்கள் சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.

அதுவரை வேறு யார் வீட்டிலோ கேட்ட சத்தம் என்றே எண்ணி இருந்தவள், வாசலில் நிற்கும் கூட்டத்தைக் கண்டு அதிர்ச்சியுடன் வெளியே வந்து

“ என்ன ஆச்சு? ஏன் எல்லோரும் இப்படி கூட்டமா வந்திருக்கீங்க? என்ன ஆச்சு நந்தினி “ என்றாள்.

“எனக்கும் ஒண்ணும் புரியல டீச்சர்” என்றாள் நந்தினியும்.

அதற்குள், “ உங்க வீட்டுக்குள்ள  நீங்க தனியா இருக்கிற நேரம் ரமேஷ் உள்ளே வந்திட்டான், எல்லோரும் வந்து நாலு சாத்து சாத்தனும்னு சொல்லி தான் அன்னம் இப்படி கத்தி ஊரைக் கூட்டுச்சு!

ஆனா இப்ப பார்த்தா ரமேஷ் இங்க வந்து வெளியே நிக்கிறான்! அப்ப உள்ள இருக்கிறது யாரு?”

“உள்ள யார் இருக்காங்களா? தெய்வானை தான் இருக்கு! வேற யார் இருக்கா?”

“உள்ள யாரோ இருக்காங்க. பைக் கூட நிக்குது பாருங்க?”

ஆமா.. இது யாரோட பைக்? என்று கவியும் கேட்க?

“அத நீங்க தான் சொல்லணும் டீச்சர்? உங்க வீட்டுக்கு வந்தது யாருன்னு உங்களுக்கு தானே தெரியும்” என்றான் ரமேஷ் நக்கலாக!

‘பெரிய உத்தமி பத்தினி மாதிரி பேசுவா.. இப்ப சொல்லட்டும் யார் உள்ள இருக்கான்னு?’ என்று நினைத்துக் கொண்டான் ரமேஷ்.

கவி வண்டியை பார்த்தாள். ஒருவேளை கவின் அதற்குள் வந்தே விட்டானா? அவன் பைக்கா இது? கவி குழம்ப, அதற்குள் அன்னம் உள்ளே போய் கவியின் அறைக்குள் எட்டிப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

அங்கு அவள் பார்த்தது மகளைக் கட்டிக் கொண்டு தூங்கும் ரகுவை!

அவள் அதிர்ச்சியாவதைக் கண்ட, மற்ற இரு பெண்களும் கூடவே நந்தினியும் உள்ளே போய் பார்த்து விட்டு அதிர்ந்தார்கள்!

‘அய்யோ..ரகு அண்ணன் எப்படி இங்கே வந்துச்சு. அதுவும் இப்படி டீச்சரோட பெட் ரூமுக்குள்!

அவங்க நம்ம கிட்ட போனில் பேசிக் கொண்டிருந்த கேப்பில் அண்ணன் இங்க வந்திருக்கு போல!

போதையில இருந்ததால பழைய ஞாபகத்துல இப்படி வந்துடுச்சு போல! அதுவும் மீனுக் குட்டி வேற இங்கயே தூங்கவும் அதுக்கு நிதானம் இல்ல போல!

அய்யோ.. ஊர் கூடி நிக்குதே! டீச்சர் தலை குனிஞ்சு நிக்கிற மாதிரி ஆகிடுச்சே!

இப்ப என்ன பண்றது?’ அவள் கையைப் பிசைந்து கொண்டு நிற்க,

இப்போது கவியும் உள்ளே வந்து பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

“அய்யோ இவர் எப்போ இங்க வந்தார்?” அவளுள் கேள்வி.

உள்ளே இருந்து வெளியே வந்த தெய்வானைக்கும் அதிர்ச்சி தான்! ஆனால் பாவம் அவளால் வாய் விட்டு புலம்பவும் முடியாது! சாட்சி சொல்லவும் முடியாது!

“என்னம்மா.. இப்படி ஆளாளுக்கு உள்ளே போய் திகைச்சு நிக்குறீங்க?” என்றபடி பண்ணையாரும் உள்ளே வர, அவரோடு கூடவே ரமேஷும் இன்னும் சிலரும் கூட உள்ளே போய் அங்கு தூங்கி கொண்டிருந்த ரகுவைக் கண்டு அதிர்ச்சி ஆகி,

அவர்களில் ஒருவன் ரகுவைத் தட்டி எழுப்ப, கூடவே மீனுக் குட்டியும் எழுந்து தன் முன்னால் நிற்கும் கூட்டத்தைக் கண்டு பயந்து போய் கவியிடம் ஓடிப்போய் நின்றுக் கொண்டது!

ரகு இன்னமும் தெளியாத போதையில் தள்ளாடி நிற்க,

“ஓ.. இது தான் விஷயமா?” என்றார் பண்ணை நக்கலுடன்!

“ரகுவும் தான் என்ன பண்ணுவான்? பொண்டாட்டி ஓடிப் போன துக்கத்துல இருப்பான்!

அதான் தோதா ஒரு துணையைத் தேடிக் கிட்டான்! தப்பு ஒண்ணுமில்ல!”

“என்ன நடந்திருக்குன்னு தெரியாம ஏங்க தப்பா பேசாதீங்க!” என்றாள் நந்தினி பல்லைக் கடித்தவாறு!

“என்ன நடந்திருக்கும்? எல்லாம் நடக்க வேண்டியது தான் நடந்திருக்கும்! நீ சும்மா இரு!” என்றான் ரமேஷ்.

“என்ன கருமம் வேணா பண்ணித் தொலைங்க. ஆனா கல்யாணமுன்னு ஒண்ணை பண்ணித் தொலைச்சுட்டு பண்ண சொல்லுங்கப்பா.

இந்தம்மா பசங்களுக்கு பாடம் எடுக்குற டீச்சர்!

இவங்க நடத்தையே சரியில்லன்னா.. இவங்க கிட்ட படிக்கிற பிள்ளைங்க எப்படி நல்லா வளரும்?

எப்பா நான் ஏன் பொண்ணை இனி இங்க படிக்க அனுப்ப மாட்டேன்!” என்றார் பண்ணை.

“என்னது கல்யாணமா? என்ன விளையாடறீங்களா? ரகு அண்ணன் ஏற்கனவே கல்யாணம் ஆனவரு!

டீச்சர கல்யாணம் பண்ணிகிட்டா, மஞ்சுவோட வாழ்க்கை என்ன ஆகுறது?” நந்தினி சீறினாள்.

“மஞ்சுவா.. அவ தான் அந்த வடிவேல் கூட ஓடிப் போயிட்டாளே! இனி எங்க திரும்பி வரப் போறா?”

“ஏன்.. திரும்பி வராம போய்டுவாளா? எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க? அப்ப.. அப்ப.. நீங்க தான் அவளை என்னமோ பண்ணி இருக்கீங்க? சொல்லுங்க அவளை என்ன பண்ணினீங்க?” நந்தினி அவரின் சட்டையைப் பிடிக்க,

“இது ஏதடா வம்பா போச்சு? ஊர் கண்ல பட்டு அசிங்கப் பட்டு நிக்க வேண்டாம். கல்யாணம் பண்ணி கவுரவமாக இருக்கட்டும்னு சொன்னா, நீ என் மேல பழிய போடுவியா? கைய எடும்மா முதல்ல”

“ஆமா.. போடுவேன். உங்க தங்கச்சி பொண்ணும் வடிவேலுவும் தான் லவ் பண்ணி இருக்காங்கன்னு எனக்கும் தெரியும்.

 மஞ்சு அதுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கா!

 அதனால நீங்க தான் மஞ்சுவை  என்னமோ பண்ணி விட்டிருக்கணும்! உண்மைய சொல்லுங்க” என்று நந்தினி அவரைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த கால இடைவெளியில் கவி அவள் தம்பி கவினை அழைத்து விட்டாள்.

“பக்கத்துல தான் இருக்கேன் அக்கா. இன்னும் அரைமணியில் வந்திடுவேன்” என்றான் கவின்.

“எங்க பொண்ணு ஒண்ணும் ஓடிப் போகல. அவ நாக்பூர் போய்ருக்கா. தேவையில்லாம எங்க பெண்களை அசிங்கப்படுத்தாதே!”

“ஏங்க.. இப்ப பிரச்சினை உங்க வீட்டுப் பெண்ணைப் பத்தி இல்லை!

டீச்சர ரகு கல்யாணம் பண்ணியே தீரனும். இல்லைனா இவங்க ஸ்கூல் பசங்களுக்கு ஒரு தப்பான எடுத்துக் காட்டா ஆகிடுவாங்க. முதல்ல ரஞ்சிதாவை வர சொல்லுங்க.

டீச்சர் உங்க அப்பா அம்மா இருந்தா அவங்களையும் வர சொல்லுங்க. நாம பேசி முடிச்சுடுவோம்” என்றார் அதற்குள் விசயம் கேள்விப் பட்டு அங்கு வந்து விட்ட  பஞ்சாயத்து பெரிய தலை ஒன்று.

“அதெல்லாம் முடியாதுங்க” என்று கவி அலறினாள்.

“எங்க வீட்டுல எல்லாம் சம்மதிக்க மாட்டாங்க இதுக்கு!”

“அப்போ ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வேற ஊருக்குப் போங்க!”

“அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாதுங்க” என்றாள் கவி கோபமாக.

“ஏங்க என்ன இது உங்களுக்கு கல்யாணம் எல்லாம் விளையாட்டா போச்சா? மஞ்சு அப்புறம் டீச்சர் ரெண்டு பேத்தோட வாழ்க்கை வீணா போய்டும்!” நந்தினியும் கத்தினாள்.

“ஓடிப் போன பொம்பளைய பத்தி நாம ஏன் கவலைப் படணும்?”

“திரும்ப திரும்ப சொல்றேன். அவ ஓடிப் போகல! நிஜத்தில் ஓடிப் போனது உங்க தங்கச்சி பொண்ணு தான்!” நந்தினி கோபத்தில் கத்தினாள்.

“வாய உடைச்சுடுவேன் பார்த்துக்க. சும்மா எங்க வீட்டுப் பெண்ணோட பேரை  ரிப்பேர ஆக்காத!”

இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் ஒரு வாடகைக் கார் வந்து நின்றது.

‘கவின் தான் வந்து விட்டான்’ என்று கவி ஆவலோடு வாசலைப் பார்க்க,

கதவைத் திறந்து கொண்டு இறங்கினான் வடிவேல்.

இன்னொரு கதவைத் திறந்து கொண்டு தன் லேசான மேடிட்ட வயிற்றோடு இறங்கினாள் அஸ்வினி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!