Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி 09

அகல்கவி சிலையமுதே 09

அன்றே அகல்யா தன் தந்தையோடு ஊரை விட்டு சென்றிருக்க, அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், டீ கடையில் அரவிந்த்தோடு பேசியவாறு நின்றிருந்தான் யுவன்.



Advertisement

“அப்பறம் என்ன, அன்னைக்கு மாமா பொண்ணெல்லா வந்திருக்கா, சார் அதை பத்தி வாயே திறக்க மாட்டேங்குறீங்களே!” என்று அரவிந்த் கிண்டலாக சொல்ல, “அடிங்க.. தப்பா பேசாதடா! அவள நான் அப்படி யோசிச்சது கூட இல்ல” என்றவன் ஒரு மிடறு தேநீரை அருந்தியவாறு ஆழ்ந்த யோசனைக்குத் தாவினான்.

நண்பனின் முகத்தில் தெரிந்த யோசனையிவ் புருவத்தை நெறித்தவன், “என்னாச்சுடா?” என்று புரியாமல் கேட்க, “இல்ல… அது… அகல் என்னை பார்க்குற பார்வையில ஏதோ ஒன்னு இருக்குடா, அது எப்படி சொல்றதுன்னு தெரியல.. ஆன ஏதோ இருக்கு” என்றான் யோசித்தபடி.

அதில் அர்த்தப் புன்னகைப் புரிந்தான் அரவிந்த்.

Advertisement

“ஓஹோ.. அப்போ கன்ஃபார்ம் அதுதான், உனக்குதான்டா புரியல தத்தி” என்று வாயைப் பொத்தி சிரித்துக்கொண்டு அவன் சொல்ல, “முட்டாள்தனமா பேசாத முட்டாப்பயலே, அப்படியெல்லா இருக்காது” என்று சொல்லிக்கொண்டாலும் அவனுக்கும் இப்போது சந்தேகம் இல்லாமல் இல்லை.

Advertisement

அடுத்து வந்த நாட்கள் யுவன் இதைப் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை என்றாலும் அவளின் ‘குட் நைட்’ மெசேஜிற்கு நன்றாகவே பழகிப் போனான் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவளும் ஒன்றிரண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமாக பேசிக்கொள்ள மாட்டாள், அவனும்தான்.

அன்று வழக்கம் போல் இரவு மட்டுமே வரும் அல்யாவின் குறுஞ்செய்தி வரவில்லை. கட்டிலில் படுத்தவாறு அலைப்பேசியை பார்த்தவன், ‘என்னாச்சு இன்னைக்கு, ஏன் இன்னும் மெசேஜ காணோம், ஒருவேள ஏதாச்சும் பிரச்சனையா, உடம்பு சரியில்லையோ? ச்சே ச்சே இருக்காது.. ஒருவேள இருந்தா..’ என்று தானே கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லிக்கொண்டிருந்தான்.

Advertisement

சில கணங்களிலேயே தான் யோசிப்பது புரிந்து தலையில் அடித்துக்கொண்ட யுவனுக்கு தன்னை நினைத்தே கடுப்பாக இருந்தது.

அலைப்பேசியை அணைத்து வைத்தவன், ‘ஊஃப்… இதுக்குமேல ஏதாச்சும் யோசிச்சேன்னா அம்புட்டுதான்’  என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு விழிகளை மூடிக்கொள்ள, அப்போதும் அவனுக்குள் எழுந்த கேள்வியும் குழப்பமும் அவனை விட்டபாடில்லை.

அவனையும் மீறி அடிக்கடி அலைப்பேசிசை ஆன் செய்து அலைப்பேசித் திரையை பார்த்தவன் தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக தடுமாற, சட்டென ஒரு குறுஞ்செய்தி ஒலி.

அடித்துப் பிடித்து அலைப்பேசியை கையிலெடுத்த யுவனுக்கு திரையைப் பார்த்ததும் இதழில் பளிச்சென்ற புன்னகைத் தோன்றியது.

“குட் நைட்” என்று மட்டும் பதிலளித்தவன், பின்னந்தலையில் தட்டி சிரித்தபடி அப்படியே கட்டிலில் படுத்து உறங்கிப் போக, அவனுடைய வாழ்க்கையையே மாற்றக் கூடிய அந்த ஒரு நாளும் வந்தது.

அன்று வேலைக்கு விடுமுறை போலும்!

நேரம் சென்றே எழுந்த யுவன் தூக்கக் கலக்கத்தோடே வந்து ஹால் சோஃபாவில் பொத்தென்று அமர்ந்துக்கொள்ள, தன் அம்மாவின் அறையில் கேட்ட சத்தத்தில் புரியாது அறை பக்கம் எட்டிப் பார்த்தான்.

‘என்ன சத்தம் இது, வழக்கம் போல ரெண்டு பேருக்கும் சண்டையோ?’ தீவிரமாக யோசித்தவன், எழுந்து அறையை நோக்கி செல்வதற்குள் அறையிலிருந்து வெளியில் வந்தார் சிவலிங்கம்.

“என்னாச்சுப்பா, ஏன் அம்மா கத்திட்டு இருக்காங்க?” யுவன் தன் தந்தையை கேள்வியாக நோக்க, “அது வந்து யுவா…” என்று சிவலிங்கம் கூற வருவதற்குள் தடாலடியாக அறையிலிருந்து வெளியே வந்து கத்த ஆரம்பித்தார் சாரதா.

“நீயே கேளுடா யுவா, எனக்கு உடம்புக்கு முடியல, மாடிக்கு போக கூட முடியாத அளவுக்கு முட்டி ரொம்ப வலிக்குது.. ஆனா உங்க அப்பாவுக்கு என் சார்பா போயிட்டு வர்றதுக்கு கூட முடியாதாம், என்னால முடிஞ்சா நான் போயிருக்க மாட்டேனா.. ஒரு ஆத்திர அவசரத்துக்கு என் அண்ணணுங்க வீட்டுக்கு கூட போக  முடியல, எல்லா இவராலதான்.. இப்போ என் அண்ணே என்னை பத்தி என்ன நினைச்சிப்பாரு?”

சாரதா பேசிக்கொண்டே போக, ஆடவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.

“ம்மா, என்ன சொல்றீங்க, எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க..” என்று அவன் கேள்வி தாங்கிய முகத்தோடு கேட்க, மகனை அதே குழப்பத்தோடு பார்த்தார் சாரதா.

“என்னடா எதுவுமே தெரியாத மாதிரி பேசுற.. நாளைக்கு காலையில அகலுக்கு கல்யாணம், ஏன் உனக்கு தெரியாதா என்ன..”

அதைக் கேட்டதுமே அவனுக்கு தூக்கி வாரப்போட, “க.. கல்யாணமா? யா.. யார் கூட?” என்று கேட்டான் அதே அதிர்ச்சி குறையாத குரலில்.

தான் கேட்டது சரிதானா என்பதை உறுதி செய்ய மீண்டும் கேட்டான் போல..

“அண்ணனுக்கு ரொம்ப பழக்கப்பட்டவராம், ஆனா என்ன முன்னாடி பார்த்த மாப்பிள்ளைய விட இரண்டு வயசு பெரியவராம்.. அவ்வளவுதான். வீட்டுலயே கல்யாணத்த நடத்துறாங்க..”

அவர் அடுத்து பேசியது எதுவுமே அவன் காதில் விழவில்லை. அகல்யாவுக்கு மீண்டும் அவளுக்கு பொருத்தமே இல்லாத ஒருவனோடு திருமணம் என்பதை அவன் மனம் ஏற்க மறுத்தது.

கூடவே, இனம் புரியாத ஒரு உணர்வு, அதற்கான பெயரெல்லாம் தெரியவில்லை அவனுக்கு. கேட்டால் காதல் இல்லை என்பான்.

“ஆமாடா, என்னால போக முடியல இவரயாச்சும் போக சொல்றேன், முடியாதுன்னு சொல்றாரு.. இந்த வீட்டுல என்னை யாரு மதிக்குறாங்க, எல்லாமே அவங்க இஷ்டத்துக்குதானே..”

சேலை முந்தானையை இழுத்து வராத கண்ணீரை அவர் துடைத்தபடி மூக்கை உறிஞ்ச, சலிப்பாக விழிகளை உருட்டினார் சிவலிங்கம்.

“சும்மாவே இவ அண்ணனுங்களுக்கும் எனக்கும் ஆகாது.. இதுல நான் தனியா போனேன்னா அவ்வளவுதான்” பெரியவர் பேசி முடிக்கவில்லை, “நான் உங்க கூட வர்றேன்ப்பா” என்றான் யுவன் குறுக்கிட்டு.

அவனுடைய வார்த்தைகளிலும் பார்வையிலும் ஒருவித அழுத்தம் குடியேறியிருந்தது.

“நெசமாவாடா கண்ணா! நல்லதா போச்சு.. அதான் உங்க துணைக்கு என் புள்ளயும் வர்றான்ல, அப்பறம் என்ன?” என்று சாரதா மகனின் வார்த்தைகளில் உண்டான சந்தோஷத்தில் கணவனை நோக்கி ஏளனமாகக் கேட்க, அதற்குமேல் சிவலிங்கம் மறுக்கவில்லை.

“சரி.. முடியாதுன்னா விடவா போற.. அப்போவே உங்க அண்ணனுங்க பத்தி தெரிஞ்சதும் உன்ன ப்ரேக்கப் பண்ணியிருக்கணும்டீ, என் தப்புதான்.. என் தப்புதான்…” சிவலிங்கம் மெதுவாக முணுமுணுத்தாலும் சாரதாவின் காதில் அது தெளிவாகவே விழுந்துவிட, கணவரை தீயாய் முறைத்தார் அவர்.

ஆனால் யுவனின் பார்வைக்கு அதெல்லாம் தெரியவே இல்லை. அவனுடைய சிந்தனை முழுக்க இப்போது அகல்யாதான்.

அடுத்தநாள் விடியற்காலையிலேயே சிவலிங்கத்தோடு ஊருக்கு புறப்பட்டான் யுவனாதித்.

வீட்டு வாசலில் வண்டியில் வந்து இவர்கள் இறங்க,  முத்துப்பாண்டியின் வீடு பூக்களாலும் பந்தல்களாலும் அலங்கரிங்கப்பட்டு மின்னிக்கொண்டிருந்தது.

அந்த பாரம்பரிய வீட்டின் நடுவே ஹோமகுண்டம் தயார் செய்யப்பட்டிருக்க, அதிலேயே வீட்டில்தான் திருமணம் நடக்கப் போவதை உறுதி செய்துக்கொண்டான் அவன்.

அவன் முகமே அவனின் கோபத்தின் அளவை பறை சாற்றிக்கொண்டிருந்தது.

“ஏன்டா மூஞ்ச இப்படி வச்சிருக்க, உன் மாமனுங்க எவனாச்சும் பார்த்தாங்கன்னா நான்தான் வர்ற வழியில உன்கிட்ட எதையாச்சும் சொல்லி ப்ரைன் வாஷ் பண்ணியிருக்கேன்னு உங்கம்மாட்ட போட்டு கொடுத்துருவாங்க. நல்ல சிரிச்ச மாதிரி மூஞ்ச வச்சுக்கோ!”

என்று சிவலிங்கம் சொல்ல, உள்ளுக்குள் சலித்துக்கொண்டவாறு உள்ளே நுழைந்தவனின் விழிகள் சுற்றிமுற்றி சுழன்று அகல்யாவைதான் தேடின.

“வாப்பா யுவா தம்பி, அண்ணிக்கு உடம்பு முடியல்லையாமே! இப்போ எப்படி இருக்கு.. அகலோட கல்யாணத்துக்கு அவங்களால வர முடியாம போயிருச்சே” என்று பொன்னி உண்மையான வருத்தத்தோடு பேச, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவரை முறைத்துப் பார்த்தான் யுவன்.

“அகல் எங்க?” அவனுடைய குரல் சற்று கடுமையாக ஒலிக்க, அதில் அதிர்ந்தவர் அதே அதிர்ச்சியோடு அவளிருக்கும் அறையை காண்பித்தார்.

விறுவிறுவென்று உள்ளே நுழைந்தவன் அங்கு உணர்ச்சியே இல்லாத சிலை போல் அமர்ந்திருப்பவளை தீப் பார்வைப் பார்க்க, அவள் பக்கத்தில் யோசனையில் ஆழ்ந்திருந்த அகல்யாவின் தோழி துர்கா அவனைக் கண்டதுமே வேகமாக எழுந்து நின்றாள்.

“அகலு, உன் மாமாடீ” என்றுவிட்டு அவள் வெளியில் ஓடிவிட, உள்ளே இருந்த ஒருசில பெருசுகளுக்கு ஊர்க்கதை கேட்க ஆர்வமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் அறையிலிருந்து வெளியேறினர்.

“மா.. மாமா, நீங்க இப்போவா வந்தீங்க, வர மாட்டீங்கன்னு நினைச்சேன். அத்தைக்கு உடம்பு சரியில்லன்னு அம்மா சொல்லிச்சு.. இப்போ எப்படி..” அவள் பேசி முடிக்கவில்லை, “உனக்கென்ன மூளை மழுங்கி போச்சா, என்ன நினைச்சுட்டு இருக்க நீ.. உனக்குன்னு ஆசாபாசம் எதுவுமே இல்லையா, மாமா சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி?” என்று அவளைக் குறுக்கிட்டு கத்திக்கொண்டே போனான்.

அகல்யாவோ பெக்கபெக்கவென விழித்துக்கொண்டு அவனைப் பார்த்தவள், “நா.. நான் என்ன மாமா சொல்றது, என்னை மாதிரி பொண்ண யா.. யாரு கட்டிக்குவா? அதுமட்டுமில்லாம அப்பாவ பத்தி நல்லாவே தெரியும் உங்களுக்கு.. இதை விட்டுருங்க” என்று தைரியத்தை வரவழைத்து மெல்ல சொல்லி முடித்தாள்.

ஆனால் அவளுடைய விழிகளில் தெரிந்த ஏதோ ஒரு வலியை அவன் மனம் கண்டுகொண்டது என்னவோ உண்மைதான்.

ஆழ்ந்த பெருமூச்சையெடுத்து விட்டவன், “இங்க பாரு அகல், இது உன்னோட வாழ்க்கை, நீதான் முடிவு பண்ணணும்.. ப்ளீஸ் நான் சொல்றத கேளு..” என்று சொல்லி முடித்து அவள் முகத்தைப் பார்க்க, சில கணங்கள் அவனையே வெறித்துப் பார்த்த அகல்யா, பின் அவனை கண்டுகொள்ளாதது போல திரும்பி மேசை மீதிருந்த வளையல்களை அணிந்துக்கொண்டாள்.

அதிலேயே அவளுடைய பதில் அவனுக்கு புரிய, இருபக்கமும் சலிப்பாக தலையசைத்தபடி நகரப் போன யுவனோ பின் ஏதோ ஞாபகம் வந்தவனாக அவளை நோக்கி வேகமாக திரும்பினான்.

“அகல், நெஜமாவே இதுக்கு நீ ரெடியாதான் இருக்கியா?” அவன் தன் சந்தேகத்தைக் கேட்க, இறுகிய முகமாக தலையாட்டியவளின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டிருந்தன.

அதே யோசனையோடு வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மணமேடையில் அமர்ந்திருக்க, அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தான் மணமகன் சண்முகம்.

முன்னிரண்டு பற்கள் விழுந்திருக்க, கிட்டத்தட்ட பாதி தலைமுடி நரைத்துப் போயிருந்தது, ஆனால் அவன் முகத்தில் ஏதோ ஒரு பதற்றம், பேயறைந்தது போல அமர்ந்திருந்தான் அவன்.

திருட்டுமுழி முழித்துக்கொண்டிருந்தவனை சுற்றியிருந்தவர்கள் கவனித்தார்களோ இல்லையோ அவனெதிரே நின்றிருந்த யுவனாதித் நன்றாகவே கவனித்தான்.

ஏனோ அகல்யாவுக்கு அருகே அவனை வைத்துப் பார்க்கவே அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

‘ச்சே! மொதல்ல இந்த முட்டாபீஸதான் போட்டு தள்ளணும். இவருக்கு பணம் தான் முக்கியம்னா அவரே அவனுக்கு ரெண்டாந்தாரமா போக வேண்டியதுதானே…’

தனக்குத்தானே புலம்பிக்கொண்டவன், தோளில் உணர்ந்த தொடுகையில் திரும்பிப் பார்க்க, அங்கு பதற்றமாக நின்றிருந்தார் பொன்னி.

“என்னாச்சு அத்தை..” என்று புரியாமல் கேட்டவன் அவர் வரும்படி சைகையால் சொல்லி முன்னே சென்றதைப் பார்த்து அவர் பின்னாலேயே சென்றான்.

அவரோ வீட்டிற்கு பின்புறம் அழைத்துச் சென்றவர், “யுவா தம்பி, உன்கிட்ட ஒன்னு சொல்லணும். இவ்வளவு தூரம் வந்தும் இதை நான் உன்கிட்ட சொல்லலன்னா என் மனசு உறுத்திட்டே இருக்கும்ப்பா.. அதான்…” என்று ஆரம்பித்து இழுவையோடு முடிக்க, அவனுடைய புருவங்களோ முடிச்சிட்டன.

“என்.. என்ன சொல்றீங்க அத்தை, என்ன விஷயம்?” என்று பதற்றமாக கேட்டவனுக்கு, அவர் சொல்ல தயங்குவதைப் பார்த்து அவனின் இதயத்துடிப்பு அவன் காதிற்கே விழுந்தது.

“அது வந்துப்பா.. அகலு.. அகலு உன்ன..” என்று அவர் திக்கித்திணற, அவனுடைய விழிகள் சுருங்க அவரை கூர்மையாகப் பார்த்தான்.

“அகலுக்கு சின்ன வயசுலயிருந்தே உன்னை ரொம்ப இஷ்டம்ப்பா.. அவளோட கபோர்ட்ல இருந்த உன் ஃபோட்டோவ பார்த்துதான் எனக்கே தெரியும்.. இதை பத்தி முன்னாடியே சொல்லியிருப்பேன், ஆனா நீ மித்துவ காதலிக்கிறப்போ என்னால எப்படிப்பா சொல்ல முடியும்?”

அவர் சொல்லிக்கொண்டே போக, இவனுக்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

“என்.. என்ன சொல்றீங்க அத்தை?” யுவன் குறையாத அதிர்ச்சியோடுக் கேட்க, கைகளைப் பிசைந்தபடி அவனைப் பார்த்தவரோ, “ஆமா தம்பி, இவங்க அப்பாக்கிட்ட இதையெல்லா சொல்லி புரிய வைக்க முடியாது. நீதான் எப்படியாச்சும் இதை நிறுத்தணும், எனக்குன்னு இருக்குற ஒரே மக.. தயவு பண்ணி இதை நிறுத்துப்பா” என்றார் கண்ணீர் மல்க.

யுவனுக் கு என்ன சொல்வது என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.

பொன்னி சொன்னதைக் கேட்டு ஆடிப்போய் நின்றிருந்தான் யுவனாதித்.

-Sheha zaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!