Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் தீபம் ஏற்றினாள்

காதல் தீபம் ஏற்றினாள் 02

ஓம் சரவணபவ..

 அத்தியாயம் 2..



Advertisement

 பொள்ளாச்சியை சேர்ந்த கிணத்துக்கடவு ஊர்..

Advertisement

 பொள்ளாச்சி என்றாலே இயற்கையின் சொர்க்கபூமி..

Advertisement

இயற்கை வளங்களுக்கோ.. எழில் கொஞ்சி மனம் கவரும் இயற்கை காட்சிகளுக்கோ கொஞ்சமும் பஞ்சம் இல்லாத ஊர்..

Advertisement

 இயற்கை அழகாக இருந்து என்ன பயன் அங்கே வாழும் சில நயவஞ்சக கூட்டங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது..

 தங்கள் தேவைகளுக்காக ஓர் அப்பாவி குழந்தை மனம் படைத்தவனை போட்டு ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள்..

 இதோ அந்த நாள் முழுவதும் ஓடி ஓடி களைத்து காலை உணவை கூட மறந்து ஊர் மக்களால் சொல்லப்படும் அனைத்து வேலைகளையும் ஒரு வேலைக்காரனையும் விட மோசமாக செய்து முடிப்பான் சோழன்..

 ஒருவர் ஒருவேலையை அவனிடம் சொன்னால் அதை செய்து முடித்துவிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பான். அப்படி சின்சியராகவும் நேர்மையாகவும் வேலை செய்யும் அவனுக்கு அவர்கள் கொடுப்பதோ பழைய சோறும்.. பழைய துணிமணிகளும் மட்டுமே..

 ஏதோ அமிர்தம் போல் பழைய உணவைக் உண்டு அதுதான் அவனுக்கு அன்றைய பேஷன் உடை போல் அதையும் சந்தோஷமாக உடுத்திக் கொண்டு அடுத்தவர் கூறிய வேலையை பார்ப்பதற்காக சென்று விடுவான்..

 இதோ காலையில் அவன் குடித்த ஒரு கப் தேநீர் மட்டுமே..

 அது மட்டும் தான் மதியம் 12:00 மணி ஆகியும் அவன் பருகியது..

 வேறு எங்கும் போகும் இடங்களில் நீர் குழாய்களில் தாகம் எடுத்தால் தண்ணீர் மட்டும் பிடித்து குடித்துக் கொள்வான்..

 தினமும் காலை இரவு குளித்து அவர்கள் கொடுக்கும் உடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து உடுத்திக் கொள்வான்..

 அவனை பார்ப்பவர்கள் அரக்கர்களே ஆனாலும் ஒரு துளியேனும் அவன் மீது இரக்கம் கொள்வார்கள்.. ஆனால் அந்த ஊர் மக்களுக்கு அவன் மீது ஏன் இரக்கம் பிறக்கவில்லையோ தெரியவில்லை..

 ஒருவரேனும் ஒரு நல்ல நாள் பெருநாட்களில் அவனை அழைத்து அவர்கள் வீட்டில் சமைக்கும் சுவையான விதவிதமான உணவு பதார்த்தங்களை கொடுத்து புது உடை எடுத்து கொடுத்து அவனை சந்தோஷப்படுத்தியதில்லை இதுவரை..

 தீபாவளி, பொங்கல், புத்தாண்டு எதுவாகினும் அவனுக்கு அவர்கள் உடுத்திவிட்டு கொடுக்கும் பழைய உடைகள் தான்.. அதுதான் அவனை பொறுத்தவரையில் புத்தாடை..

 அவர்கள் கொடுக்கும் போது சந்தோசமாக வாங்கி உடுத்திக் கொள்வான்..

 ஆள் பார்ப்பதற்கு சற்று கருப்பு நிறமாக இருந்தாலும் பார்ப்பதற்கு கலையான தோற்றம் கொண்டவன்..

அவன் மட்டும் புத்தி சுவாதீனம் இல்லாமல் மற்றவர்கள் போல் நன்றாகவும் நல்ல உடை அணிந்து ஆரோக்கியமாக இருந்திருந்தால் அந்த ஊர் மக்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை அவனுக்கு கட்டிக் கொடுப்பாதற்கு நான் நீ என போட்டி போட்டு இருப்பார்கள்..

அதற்கு அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்..

 இதோ அன்று மதியம் வரை அவர்கள் சொன்ன வேலைகளை முடித்துவிட்டு அப்பொழுதுதான் அவனது குடிசைக்கு வந்து அவனுடன் இருக்கும் பாட்டி சமைத்து வைத்த உணவை தட்டில் போட்டு உண்பதற்காக கீழே மண் தரையில் அமர்ந்தான்..

 ஒரு வாய் உணவு கூட எடுத்து வாயில் வைக்கவில்லை.. அந்த குடுசையின் வெளியே இருந்து “ சோழா.. டேய் சோழா.. டேய் சோழா.. செவிட்டு பயலே. எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்.. வெளிய வந்து தொலையேன்டா.. ” அந்த தெரு கடைசி வீட்டு மாரி கத்தி கொண்டு இருந்தாள்..

 அவன் நிலையை பார்த்து பாட்டிக்கு பாவமாக இருந்தது அவர்தான் தட்டி தடவி எழுந்து வெளியே வந்து நின்று என்னவென்று கேட்டார்..

“ அடியேய்.. மாரி இப்ப ஏன் குடிசைக்கு முன்னாடி நின்னு தொண்டையை தொறந்து கத்துறவ?..” என்றார்..

“ அட கிழவி நீ வந்திருக்க.. ஏன் அந்த ராசா வெளியே வர மாட்டாரோ..! நல்ல வக்கனையா சோறு குடுன்னு வாயை திறந்து கேக்க தெரியுது அதற்குரிய வேலையை செய்ய முடியாதோ..! ” என்று மாரி காத்திக் கொண்டிருக்கும் போதே சோழன் அந்த குடிசையை விட்டு வெளியே வந்தான்..

“ அட யாருடி இவ பிள்ளையை ஒரு வாய் சோறு திங்க விடாமல் இப்படி பாடா படுத்துறீங்க?.. நீங்க எல்லாரும் அப்படியே பிரியாணி சிக்கன் பீஸ் போட்டு அவனை நல்லா உடம்ப வளர்த்தி வச்சிருக்கீங்க வந்துட்டா பேசுறதுக்கு.. பழைய புளிச்ச சோறும்.. கிழிஞ்ச துணியும் கொடுக்கிறது அப்புறம் ஏதோ புதுசு எடுத்துக் கொடுத்த மாதிரி அவனை வேலையா ஏவி மாடா உழைக்க வெச்சு அவன் உழைப்புல இவங்க நல்லா ஜாலியா ஜம்முனு இருக்கவேண்டியது.. ” சென்று மாரியிடம் அவரும் சத்தம் போட்டு விட்டு சோழனிடம் திரும்பி..

“ ஏன்பா சோழா போட்ட சாப்பாட்டை போய் சாப்பிடு.. பாரு காலையிலிருந்து வயித்துக்கு ஒன்னும் இல்லாம முகமே வாடி போய் கிடக்கு..” என்றார்..

சோழன் நல்ல உணவு உண்ண வேணும்.. உடை உடுத்த வேண்டும் மற்றவர்களை போல் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒரே ஜீவன் அவர் மட்டும்தான்..

“ ஆமா அப்படியே நீ மட்டும் கறி சோறு ஆக்கி வைச்சு பிள்ளையை மடியில வச்சு ஊட்டி விட போறியா?.. நீயும் கஞ்சி வச்சு பச்சை மிளகாய் வெங்காயம் தானே அவனுக்கு கொடுக்கப் போற.. ஏதோ நீ பெத்த பிள்ளைக்கு பிறந்த பேரன் மாதிரி கொஞ்சிக்கிற.. நீ ஒரு அனாதை உன்ன அண்டி இருக்கிற அவன் ஒரு அனாதை.. ” என்றாள் மாரி..

“ ஏய் என்னை அனாதைன்னு சொல்லு நான் இருக்கிற வரைக்கும் அவனை அனாதை சொல்லாத பல்ல ஓடைச்சிடுவேன்.. நீங்க எல்லாம் பாருங்கடி.. எல்லாம் வாய் மேல கை வைக்கிற மாதிரி சோழனுக்காக பிறந்தவ கட்டாயம் வருவா.. அவனையும் நாலு மனிதர்கள் போல நல்லபடியா மாத்தி சந்தோசமா வாழ வைப்பா அப்ப இந்த மூஞ்ச கொண்டு எங்க வைப்பிங்க நானும் பார்க்க தானே போறேன்..” என்றார்.. தாங்கிக் கொள்ள முடியாத மனத்தாங்களால் பேசி விட்டார்..

 ஊர் மக்கள் சோழனை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதெல்லாம் அவனுக்கு பெரிதில்லை.. ஆனால் அவன் அக்கா, அண்ணா, பெரியவர்கள் என்றால் அம்மா, ஆண்கள் பெரியோர்கள் என்றால் தாத்தா, அப்பா.. என்று அவனுக்கு இல்லாத உறவுகளை சொல்லித்தான் அவர்களை அழைப்பான்.. ஆனால் அவர்கள் அனைவரும் அவனை அனாதை போன்று தான் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள்..

“ டேய் சோழா.. என் புருஷனுக்கு ரொம்ப ஜுரம் அடிக்குது.. இதுல இருக்குற மருந்து கொஞ்சம் வாங்கிட்டு வா.. போ சீக்கிரம் போ எங்கயும் போய் வாய் பாத்துட்டு நிக்காம போயிட்டு வந்து சாப்பிடு..” என்று அதிகாரமாக கூறி கையில் பணத்தையும் மருந்து சீட்டையும் வைத்துவிட்டு சென்றாள் மாரி..

அவனும் மறுவார்த்தை பேசாமல் கழட்டி போட்டு இருந்த சட்டையை போட்டு விட்டு வேகமாக அங்கிருந்து பார்மசி இருக்கும் இடத்திற்கு நடக்க ஆரம்பித்தான்..

 எந்த பொருள் எங்கே வாங்க வேண்டும் என்று ஒரு அளவிற்கு பழகி வைத்திருந்தான்..

 அவனுக்கு கடை எது பார்மசி எது என்று எல்லாம் வித்தியாசம் தெரியாது பணம் கொடுத்து எது வாங்கினாலும் அது கடை தான்..

 மருந்து என்றதும் வழமையாக மற்றவர்களுக்கு மருந்து வாங்கும் மருந்து கடைக்கு சென்றான்..

அவன் கால்கள் தான் அவனுக்கு துணை..

 வேகமா நடந்து பழகியதால் அவனுக்கு நடப்பது ஒன்றும் பெரிய விஷயமாக தெரிவதில்லை..

 இதோ மாரி கொடுத்த மருந்து சீட்டை கொடுத்து மருந்து வாங்கிக் கொண்டு அதற்கு பணத்தையும் கொடுத்துவிட்டு மிச்சம் இருந்த பணத்தை சட்டை பைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு மீண்டும் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..

 அவன் வேகமாக நடந்து வந்ததால் எதிரே வந்த தண்ணி லாரியை கவனிக்கவில்லை..

 காலமே அவன் படும் துன்பம் போதும் என நினைத்து விட்டதோ என்னவோ அவன் உயிரையும் பறித்து அவன் தாய் தந்தையிடம் அவனை அனுப்ப முடிவெடுத்து விட்டது போல்..

 லாரி டிரைவர் கண் தெரியாத அளவுக்கு குடித்துவிட்டு அதிவேகமாக ஓட்டி வந்தான்..

 சட்டென்று நடக்க இருக்கும் ஆபத்தை உணர்ந்து வேகமாக வந்து தளிர்க்கரம் அவனை வீதியில் இருந்து சற்று தரையில் இழுத்து வீசியது..

 அவன் கீழே விழுந்ததில் கை கால்களில் அடிபட்டதோடு மருந்து பையும் எங்கோ விழுந்து மறைந்து விட்டது..

அவனை பிடித்து தள்ளிய அந்த தேவதை பெண் சற்று நேரத்தில் அவளும் அடிப்பட இருந்தால்.. ஆனால் காலம் அவள் வாழ வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதால் வலது கையில் சிறிய அடியோடு அவளும் தப்பித்து விட்டாள்..

சட்டென நடக்க இருந்த கோர விபத்து சடுதியில் அந்தப் பெண் தேவதையால் தடுத்து நிறுத்தப்பட்டது..

 கை கால்களில் ரத்தம் வருவதை பார்த்த சோழன் மருந்து பையும் தொலைந்து விட்டதை பார்த்து தொடர்ந்து அழ ஆரம்பித்து விட்டான்..

 அழும் சத்தம் கேட்டு தான் அவள் எழுந்து அருகே இருந்த அவனை பார்த்து விழித்துக் கொண்டிருந்தாள்.. ஏனென்றால் அவள் வாழ்க்கையின் பார்த்த ஆண்கள் எல்லாம் வேறு கோர முகம் காட்டியவர்கள்..

அவனோ குழந்தை போல் அழுது கொண்டிருப்பதை பார்த்து அவளுக்கு ஆச்சரியம் வந்தது..

 கீழே விழுந்ததால் பசி மயக்கத்தாலும் அவளால் எழுந்து கொள்ளவும் முடியவில்லை ஆனாலும் அதையும் மீறி உடல் வலுவை கூட்டி எழுந்து அவன் அருகே சென்று அவனுக்கு அடிபடாத மற்றைய கையை கொடுத்து தூக்கி விட்டாள்..

 அவள் கை தூக்கி விட்டதும் குழந்தை போல் அழுது கொண்டே எழுந்து நின்றவன் சுற்றி சுற்றி தேடிக் கொண்டே இருந்தான்..

 அவன் தேடுவதை பார்த்து ஏதோ கையில் பை வைத்திருந்ததை அவளும் சற்று ஞாபகப்படுத்தி பார்த்துவிட்டு அவனோடு சேர்ந்து தேடினாள்..

 எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை..

அதனால் அவன் சட்டை பையில் இருந்த மிகுதி பணத்தை எடுத்துக்கொண்டு வேகமாக பார்மஸி நோக்கி சென்றான்..

 மாரி சொன்ன அந்த மருந்தை வாங்கி கொடுக்கவில்லை என்றால் இரவு உணவு அவள் கொடுக்க மாட்டாள்.. அவனால் பசியும் தாங்க முடியாது இன்னும் ஒழுங்காக அன்றைய நாள் சாப்பிடவும் முடியவில்லை..

 இரவும் சாப்பிடவில்லை என்றால் அவனால் தாங்க முடியாது அந்த காரணத்திற்காக அவள் சொன்ன வேலையை செய்ய வேண்டும் என்று அடிபட்ட கையையும் காலையும் பொருட்படுத்தாமல் அதில் வழிந்த ரத்தத்தையும் கணக்கில் கொள்ளாமல் பார்மசிக்கு சென்று தலையை சொரிந்து கொண்டு நின்றான்..

 அவன் அடிக்கொரு முறை அங்கே வந்து போவதால் அந்த பார்மசி நடத்துபவருக்கு சோழனை பற்றி நன்கு தெரியும் என்பதாலும் அவன் முழித்துக் கொண்டு நிற்பதை பார்த்து அவரே வாய் விட்டு கேட்டார்..

“ ஏம்பா சோழா வாங்கிட்டு போன மருந்தை தவற விட்டுட்டியா?.. அந்த மருந்து திரும்பவும் வேணுமா?..” என்றார்..

 அவனும் எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் அவரேக் கேட்டதும் ‘ஆம்’ என்று தலையாட்டவும் பார்மசி நடத்துபவர் அந்த மருந்தை எடுத்து அவன் கையில் கொடுக்கவும் சட்டை பையில் இருந்த மிகுதி பணத்தை கொடுக்க பணம் போதவில்லை என்று அவர் சொன்னதும்..

 கையில் காலில் இருந்த காயத்தின் வலி தாங்காமல் கண்கள் கலங்கிக் கொண்டிருந்த அவனை பார்த்து பணம் இல்லாம தான் அழுகிறான் என்று புரிந்து கொண்டு அடுத்த முறை வரும்பொழுது கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தார்..

 அவனும் அதை வாங்கிக் கொண்டு வெளியேறும் போது அவள் உள்ளே வந்தாள்..

 கதவு வரைக்கும் வந்த சோழனை எப்படி கூப்பிடுவது என்று தெரியாமல் அவன் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்று நம்பி அவன் கையை பிடித்து நிறுத்தினாள்..

 அடிபட்டதில் கொஞ்சம் பயந்துவிட்டான் போல் அதனால் அவள் நிறுத்தியதும் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்து அவளே பேசட்டும் என்று அமைதியாக இருந்தான் சோழன்..

 அவன் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு பார்மசி உள்ளே மீண்டும் சென்றாள்..

 உள்ளே இருப்பவரை பார்த்து.. “ அண்ணா இவருக்கு கை, கால் எல்லாம் அடிபட்டு இருக்கு கொஞ்சம் மருந்து போட்டு விடுவீங்களா?..” என்றாள்..

 அவள் கூறியதும் எழுந்து வெளியே வந்து பார்த்த அவர் சோழன் கை கால்களில் காயத்தோடு அதில் வந்த ரத்தத்தையும் பார்த்து “ என்ன புள்ளையோ சோழா நீ?.. இதை கூட வாய் திறந்து சொல்ல தெரியலையா உனக்கு?.. பாரு அடிபட்டு எவ்வளவு நேரம்?.. ரொம்ப ரத்தம் போய்டுச்சி ..” என்று சற்று உரிமையோடு அவனைத் திட்டி விட்டு அவன் மறு கை பிடித்து அழைத்து இருக்கையில் அமர வைத்து கை கால்களில் மருந்தை கட்டி விட்டார்..

 அதேபோல் அவளுக்கும் ஏற்பட்டிருந்த ஒரு சில காயங்களுக்கும் அவர் மருந்து கட்டிவிட்டார்..

 அதற்கு கொடுக்க கையில் பணம் இல்லை என்று தாய் இருக்கும்பொழுது அவளுக்கு இறுதியாக போட்ட மோதிரத்தை கழட்டி அதை கொடுக்கவும் அவர் அதை வாங்க மறுத்து விட்டு மீண்டும் வரும்பொழுது தருமாறு கூறி அனுப்பி வைத்தார்..

 சிரித்துவிட்டு நன்றி கூறிக்கொண்டு சோழனை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்..

 அவள் சிறுவனை அழைத்துச் செல்வது போல் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் பொழுது அவள் தன் கையை பிடித்திருந்ததை பார்த்துவிட்டு அவனும் என்ன நினைத்தானோ சற்று கையில் அழுத்தம் கொடுத்து அவளோடு நடந்து சென்றான்..

 சீக்கிரமாக வரச் சொல்லி அனுப்பிய சோழனை காணவில்லை என்று மாரி அவன் குடுசைக்கு முன்பு நின்று வசை பாடிக் கொண்டு நின்றாள்..

 அவனுக்கு தான் ஊருக்குள் போக பாதை தெரியும் அதனால் அவன் போகும் பாதையில் அவளும் போனாள்..

இந்த சிறு பயணம் அவர்கள் வாழ்க்கை பயணமாக மாறுமோ?..

 இன்று அவள் பிடித்த அவன் கையை வாழ்க்கை முழுவதும் பிடிக்க விரும்புவாளா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!