“யாரும் எழுப்பி விடறதுக்கு முன்னாடி எழுந்து வந்துடணும்” அம்மா திரும்ப திரும்பச் சொல்லி விட்டது, செந்தாமரையின் மண்டைக்குள் சடுகுடு ஓடிக்கொண்டிருந்ததாலோ என்னவோ… பின் தூங்கியிருந்தாலும், முன் எழுந்திருந்தாள்.
உறக்கத்திலிருந்து விழித்தது பெரிய விஷயமில்லை. அருகில் உறங்கும் கணவன் அறியாமல் கட்டிலிலிருந்து இறங்குவது தான் அவளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
பூனையின் வம்சாவளியாய் சத்தம் எழுப்பாமல் வெற்றிச்செல்வனிடமிருந்து மெல்ல விலகி, கட்டிலை விட்டிறங்கி, தனக்குத் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு, குளிக்க செல்லும் வரையும் அப்படி ஒரு கவனம்.
எதையோ சாதித்த திருப்தியும், நேற்றைய இரவுகளின் மிச்சமும் அவளையும் அறியாமல் அவளது இதழ்களில் சிரிப்பை உறைய வைத்திருந்தது. ‘ஆனாலும் ரொம்ப பிடிவாதம்’ கணவனை புன்னகையோடே கடிந்து கொண்டாள்.
குளித்து முடித்து, பாந்தமாக புடவையை அணிந்து, தலையை அரையும் குறையுமாக உலர்த்தி, காதோர முடிகளை மட்டும் கொஞ்சம் பிரித்து கிளிப்புக்குள் அடக்கி, மெல்லிய ஒப்பனையுடன் வகிட்டில் குங்குமம் வைக்கும் போது… பெண்ணவளுக்கு அப்படி ஒரு நிறைவு.
‘அத்தனை கோபம்… அனைத்தையும் தலை கீழாய் மாற்றி விட்டானே!’ என மெல்லிய சிரிப்புடனும், வியப்புடனும் எண்ணிக் கொண்டவள், கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பத்தைப் பார்த்து, “இருந்தாலும் இப்படி நீ அநியாயத்துக்கு வெற்றி பைத்தியமா இருக்கக்கூடாது” எனச் சிரிப்புடனே தன்னைத்தானே கேலி செய்து கொண்டாள்.
[the_ad id=”6605″]
அறையை விட்டு வெளியேறும் முன், கணவனுக்குப் போர்வையை சரியாகப் போர்த்தி விட்டவள், கட்டிலின் அருகிலிருந்த டேபிளில், அவன் கழட்டி வைத்திருந்த பெல்ட்டை பார்த்து எழுந்த சிரிப்பலையை… வாயை மூடி அடக்கிக் கொண்டாள்.
‘பெரிய ஊர்த்தலைவர்…’ என்று மனதிற்குள் முணுமுணுத்தவளுக்கு அப்படி ஒரு கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு. சட்டென்று ஓர் எண்ணம் தோன்றவே, அந்த பெல்ட்டையும், அவனது கப்போர்டில் இருந்த மேலும் சில பெல்ட்டுகளையும் எடுத்தவள், தனது உடைகள் இருந்த பெட்டிக்குள்… புடவைகளின் இடையே பதுக்கி வைத்தாள்.
சீப்பை மறைத்து வைத்து திருமணத்தை நிறுத்தும் விஞ்ஞானி போல, கணவனின் பெல்ட்டுகளைப் பதுக்கி வைத்து அவனுக்குப் போக்கு காட்ட நினைத்தாள் அந்த வால் முளைத்த சிட்டு. அதன்பிறகு, சமத்தாய் கீழே வந்து விட்டாள். மனதிற்குள் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.
“வாம்மா குளிச்சிட்டியா? உன்னை எழுப்பத் தான் வந்தோம்” என வயதில் மூத்த பெண்மணி ஒருவர் கூற, புன்னகையுடன் தலையசைத்தாள்.
“தம்பி எழுத்துடுச்சா?”
“இல்லைங்க இன்னும் தூங்கிட்டு இருக்காங்க”
“எழுப்பி விடும்மா. நீங்க கோயிலுக்கு போகணும். இன்னைக்கு மறுவீட்டுக்கு கூட்டிட்டு போக வரதுக்குள்ள கோயிலுக்கு போயிட்டு வந்துடுங்க”
மண்டையை உருட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. ‘அவருக்கு தெரியாம எழுந்து வெளிய வந்தது அவரை எழுப்பி விடத்தானா? இதை யோசிக்க மறந்துட்டேனே! சரி சமாளிப்போம்’ என எண்ணியபடி அறையினுள் நுழைந்தவள்,
தயக்கமாகக் கட்டிலின் அருகே. சென்று, “என்னங்க…” என்றாள் மென்மையாக, அவனிடம் அசைவில்லை. சில பல ‘என்னங்க…’ வரிசை கட்டி வந்த பிறகு, எந்த பலனும் இல்லாது போகப் போர்வையை விலக்கி விட்டாள். அவனது தோள் தொட்டு மெதுவாக உலுக்க விழித்துக் கொண்டான். அவன் விழித்ததும் சற்று தள்ளி நின்று கொண்டாள்.
“குட் மார்னிங் மாஹி. யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் ட்ரெஸ்” என்று கண் சிமிட்டியவன், மனைவியைக் கைநீட்டி அருகில் அழைத்தான்.
மறுப்பாக தலையசைத்தவள், “கோயிலுக்கு போகணுமாம். சமத்தா எழுந்து கிளம்பி வாங்க. நான் கீழ இருக்கேன்” என்று கணவனிடம் அவசர அவசரமாகக் கூறிவிட்டு, அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் வெளியேறி விட்டாள். அவளது செய்கை அவனுக்கு சிரிப்பாக இருந்தது.
புன்னகைத்தபடி எழுந்தவன், குளித்து முடித்து, உடையை மாற்ற நினைக்கும்போது தான், கவனித்தான் பெல்ட்டை காணவில்லை என்று. ‘ராத்திரி இங்க தானே வெச்சேன்’ என அந்த டேபிளை அலச, அது கிடைத்தபாடில்லை. கப்போர்டில் இருந்த மற்ற பெல்ட்டுகளும் காணவில்லை.
‘மேடம் அதுக்கு தான் அப்படி ஓடுனீங்களா… இருக்கட்டும்’ என எண்ணியபடி, டிராக் பேண்ட்டையும், டீ-ஷர்ட்டும் போட்டபடி கீழிறங்கி வர,
[the_ad id=”6605″]
அவனை எதிர்கொண்ட மஞ்சுளா, “என்ன வெற்றி இது, உங்க அப்பத்தா பார்த்தா எதுவும் சொல்லுவாங்க, போ போயி வேஷ்டி கட்டிட்டு வா… வீட்டுல வேற சொந்தபந்தம் எல்லாம் இருக்கு”
“ம்மா… நீங்க வேற… நிலைமை புரியாம… உங்க மருமக எங்க?”
“அவ எதுக்கு டா?”
“சொல்லுங்க மா”
“இப்பத் தான் பொறுப்பா விளக்கு ஏத்தி, சாமி கும்பிட்டு சமையலறை போனா… உன்னை மாதிரியா அவ…”
“உங்ககிட்ட ஒரு பதிலை வாங்கறதுக்குள்ள…” என முறைப்பாகக் கூறியவன் சமையலறை நோக்கிப் போனான்.
“வெற்றி என்ன செய்யற…” என அவன் சமையலறைக்குள் போவதைத் தடுக்க பார்த்தார் அன்னை.
“அச்சோ அம்மா… இருங்க வரேன்”
“எல்லாரும் இருக்கும்போது இவன் இப்படி அட்டகாசம் பண்ணறானே!” எனத் தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர மஞ்சுளாவால் வேறு என்ன செய்ய முடியும்? முத்துவிற்குத் தாயை நினைத்துச் சிரிப்பாக வந்தது.
வெற்றியைப் பார்த்ததும் சமையலறையில் இருந்தவர்கள் எல்லாம் நாசூக்காக வெளியேறி விட, அவர்கள் சிரிப்பை கட்டுப்படுத்துவதைப் பார்த்து இவனுக்கும் சிரிப்பு வர, வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்று கொண்டான்.
ஒரு பெண்மணி வேறு, “தாமரை, பாரு தம்பிக்கு காஃபி கொண்டு போக சொன்னா, நேரம் கடத்திட்டே இருக்க, இப்ப தம்பி கிட்சனுக்கே வந்துடுச்சு. காஃபி கலந்து கொடு” என பொறுப்பாகச் சொல்லிவிட்டுச் செல்ல,
அவனை அங்கு எதிர்பாராதவள் பேந்த பேந்த விழித்தாள். ஒய்யாரமாக மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றபடி, அவளையே கூர் பார்த்துக் கொண்டு ‘என்ன?’ என அவன் புருவம் உயர்த்தி கேட்க,
“இங்க என்ன செய்யறீங்க? நா… நானே காஃபி கொண்டு வரேன்” என தந்தியடித்ததாள் மனையாள்.
[the_ad id=”6605″]
“பரவாயில்லை. இங்கேயே குடிச்சுக்கிறேன்” என அவளை நெருங்கி வர, மிரண்டு விழித்தவள் பின்னோக்கி சென்றாள்.
இரண்டெட்டுக்கு மேல் அவளை அனுமதியாதவன், அவளது இடையை வளைத்திருக்க, “என்னங்க இது கோயிலுக்கு போகணும்…” அவனிடமிருந்து விடுபடப் போராடியபடி, குரலே எழும்பாத வண்ணம் அவள் கெஞ்சுதலாகக் கேட்க,
“அது உனக்கு தெரியணுமே! பெல்ட்டெல்லாம் எடுத்து எங்க வெச்ச? என்ன விளையாட்டு இது” என அவளது கன்னத்தில் தன் ஆள்காட்டி விரல் கொண்டு வரைந்தபடி, அவளை ரசனையாகப் பார்த்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் சட்டென்று சமையலறை வரவும், அந்த விஷயம் எல்லாம் அவளுக்கு மறந்தே போயிற்று. இப்பொழுது தான் அவனது உடையைக் கூட கவனித்தாள். அவனோ அவளிலேயே கவனமாக இருக்க,
அவனது அடாவடியில் நொந்தவள், “என் பேக்’ல தான் இருக்கு… போங்க டிரெஸ் மாத்திட்டு வாங்க…” என அவனது நெஞ்சைப் பிடித்துத் தள்ள,
இம்மியும் அசையாதவன், சிரித்தபடியே, “நீங்க தானே ஒளிச்சு வெச்சீங்க. நீங்களே வந்து எடுத்து குடுங்க மேடம்” என அணைப்பை இறுக்கினான்.
“அச்சோ மாட்டேன் மாட்டேன். கோயிலுக்கு போகணும் விடுங்க…”
“அதெல்லாம் முடியாது. அந்த அக்கறை இருக்கிறவ, என்கிட்ட வம்பு செஞ்சிருக்கக் கூடாது” என தன் பிடியிலேயே நின்றான். வெற்றி இத்தனை இலகுவாக இருந்து வெகு நாட்கள் ஆகிறது. ஆகவே இந்த நிமிடங்களை அவன் மிகவும் ரசித்தான்.
“விளையாடாதீங்க வெற்றி”
சிணுங்கியவளைக் கண்டுகொள்ளாது, “நானா தொடங்கினேன்…” எனக் கணவன் கேட்டான்.
“கிட்சன்’ல நின்னு அட்டகாசம் செய்யறீங்க… கோயிலுக்கு வேற நேரம் ஆச்சு” என மீண்டும் சிணுங்கியவளின் கன்னத்தில் சின்ன சின்ன முத்திரைகளைப் பதித்தவன்,
“நீ தான் லேட் பண்ணற…” எனச் சரசமாகக் கண்சிமிட்டிக் கூறினான்.
கன்னத்தை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டவள், “அச்சோ… கோயிலுக்கு போகணும் தள்ளி நில்லுங்க. நான் வந்து எடுத்து தரணும் அவ்வளவு தானே, மேல போங்க வரேன்” என படபடப்பாய் கூறியவளின் செய்கையில், அவளது இதழ்களில் மென்மையாய் முத்திரை பதித்துச் சிரித்தான்.
அவள் முறைத்துப் பார்க்க, “சரி சரி இப்படி செஞ்சதுக்கு லஞ்சம் கொடு…” என தன் கன்னத்தை அவளுக்கு வாகாகக் காட்டி நின்றான்.
“அச்சோ கோயிலுக்கு போகணும். நான் மாட்டேன். போயிட்டு வந்து வேணா தரேன். இப்ப போங்களேன். எல்லாரும் என்ன நினைப்பாங்க…” எனப் பாவமாகக் கேட்டவளின் கெஞ்சலில், கொஞ்சம் மனமிறங்கி,
“சரி சீக்கிரம் வா” என மீண்டுமொரு முத்திரை தந்த பிறகே அவளை விட்டு விலகி, அவர்களது அறைக்குச் சென்றான்.
அவன் வெளியேறியதும் மஞ்சுளா முறைக்க,
“ஹனிமூன் எதுக்குன்னு கேள்வி வேற…” என அவனுக்குக் கேட்கும்படி முத்து சிடுசிடுப்பாய் முணுமுணுக்க,
அவர்களைக் கண்டும், காணாமலும் பின்னந்தலையைக் கோதியபடியே, அங்கிருந்து வேக எட்டுகளில் தன்னறைக்குப் போய் விட்டான்.
‘குட்டி ரொமான்ஸ்… அதை கூட பண்ண விட மாட்டாங்க போல…’ என அவன் மனதோடு புலம்பிக் கொண்டிருந்த நேரம், செந்தாமரை அறையினுள் வர,
“படுத்தறீங்க… எல்லாரும் இருக்காங்க… என்ன நினைப்பாங்க” எனப் புலம்பிக்கொண்டே அவளது பெட்டியில் மறைத்து வைத்த பெல்ட்டை எடுத்தாள்.
“இதை எடுத்து மறைச்சு வெச்சேன் பாருங்க… என்னை சொல்லணும்” எனக் கணவனின் விஷமப்பார்வையை கவனியாமல், புலம்பிக்கொண்டே அவனிடம் நீட்ட,
அவனது பார்வையில், “என்ன?” என்றாள் மெலிதாக மிரண்டபடி.
[the_ad id=”6605″]
அவனோ சாவகாசமாக அவளை அணைத்து, “என்ன நினைப்பாங்க, இந்த பொண்ணு சரியா புருஷனை கவனிக்கலைன்னு நினைப்பாங்க…” எனச் சொல்லியபடி அவளுள் மூழ்க,
“அச்சோ கதவு…” என்று அவள் அவசரமாகப் பார்க்க, இவள் உள்ளே நுழைந்து பெட்டியில் மூழ்கும் போதே அதை அடைத்திருந்தான் கணவன்.
“நேரமாச்சுங்க… பிளீஸ்…” என அவனைப் போராடி விலக்கியவளை அவன் இம்மியும் கண்டுகொள்ளவில்லை. அவனது இதழ்கள், அவளது முகமெங்கும் மென்மையாகப் பதிந்து, மெல்ல மெல்ல மீசையின் ஸ்பரிசம் அதிகரிக்க அவளது கண்கள் தாமாக மூடிக்கொண்டது. சிறிது நேரம் அவளது இதழ்களை இம்சித்தவன், கழுத்துக்கு இறங்க,
அதற்குள் மஞ்சுளா வெற்றியைக் கைப்பேசியில் அழைத்திருந்தார். அழைப்பை ஏற்றவுடன் எதிர்புறத்தில், “உங்க அப்பத்தா வந்துட்டாங்க. சீக்கிரம் வந்து சேரு” என கடிந்து கொள்ள,
“இதோ இதோம்மா…” என அவளை விட்டு, உடை மாற்றப் போனான். அவளது உடையலங்காரம் மெலிதாக சிதைந்திருந்தது.