அவனை முறைத்தபடியே, “போங்க. கோயிலுக்கு போகணும். போயி, குளிச்சுட்டு வந்து துணி மாத்துங்க” என மனைவி பல்கலைக் கடித்தபடி கூற,
“சரி சரி கோச்சுக்காத. போ போயி நீ சீக்கிரம் குளிச்சுட்டு வா. நீ டிரெஸ் பண்ணறதுக்குள்ள நான் குளிச்சு கிளம்பிடுவேன்” என அவளின் கோபத்திற்கு கட்டுப்பட்டு தாஜா செய்து அவளை முதலில் அனுப்பினான். இருவரும் அவசர குளியலும், பட்டாடையும் அணிந்து கீழே வந்தனர்.
வேறு புடவை மாற்றியதில் சங்கடத்துடன் செந்தாமரை வர, மஞ்சுளா அதை சரியாக புரிந்தாற்போல், “பாரு பட்டு கட்டினதும் தான் கல்யாண பொண்ணு மாதிரி இருக்கு. அதுக்கு தான் மாத்த சொன்னேன்” என அவள் எண்ணம் புரிந்து, என்னவோ அவர் தான் போய் உடைமாற்றி வரச் சொன்னது போல, அனைவருக்கும் கேட்கும் வண்ணம் சமாளிப்பாகக் கூறினார்.
அவரின் அந்த செய்கையில், மாமியாரிடம் பிளாட் ஆனாள் மருமகள். அதன்பிறகு அவரிடமே போய் ஒட்டிக்கொண்டே திரிய, வெற்றிச்செல்வன் கூட, இரண்டு மூன்று முறை முறைத்துப் பார்த்து விட்டான். அவள் அவனருகே வரவே இல்லை.
கோயிலுக்குச் சென்று வரும்போதும் போக்கு காட்டி, உணவு உண்ணும் போதும் போக்கு காட்டி அவனை வெகுவாக சீண்டி விட்டாள்.
செந்தாமரையின் வீட்டிலிருந்து மறுவீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்து விட்டார்கள். அவர்களுக்கான விருந்து உபசாரங்கள் நடந்து கொண்டிருந்தது.
வெற்றிச்செல்வன் எங்கே என்று பார்த்து அழைத்து வரும்படி மஞ்சுளா செந்தாமரையை வெளியே அனுப்ப,
[the_ad id=”6605″]
இவள் வீட்டு வாசலுக்கு வந்ததும், கண்ணில் விழுந்தது வீரமணியும், பாண்டியும் தான். வழக்கம்போல பாண்டி, வீரமணியிடம் வம்பளத்துக் கொண்டிருக்க, அவர்களை நெருங்காமல், வந்த வேலையை மறந்து சுவாரஸ்யமாக அதை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
“என்ன’ண்ணே நீங்க அயித்த கிட்ட போயி, ‘பெப்சி உமா’ மாதிரி பொண்ணு வேணும்ன்னு சொன்னீங்களாமே… அது யாருன்னே அது…”
வீரமணி எதுவும் சொல்லாமல் முறைத்தான். ‘இந்த அம்மாவை…’ எனப் பல்லைக் கடித்தான். பின்னே, ஏழு வருடம் முன்பு, பெண் தேடும் படலம் தொடங்கும் போது… தனது சிறுவயது கனவுக் கன்னியைச் சொன்னதை இன்னமும் சொல்லி மானத்தை வாங்கிக் கொண்டிருந்தால் அவனும் என்ன செய்ய முடியும்?
வீரமணியின் முறைப்பை வழக்கம்போல எருமை மாட்டின் மீது ஏற்றி விட்டு, “சொல்லுங்கண்ணே யாருன்னு…” என அடம் பிடித்தேன் பாண்டி.
பார்த்துக் கொண்டிருந்த செந்தாமரைக்குச் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெப்சி உமாவை அவளுக்கும் லேசாக நினைவிருக்கிறது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக சன் டீவியில் இருந்தவர்களாயிற்றே!
நமக்கான கூடுதல் தகவலாக, சச்சினுடன் பெப்சி விளம்பரத்தில் இணைந்து நடிக்கக் கிடைத்த வாய்ப்பை, அவருக்குக் கொடுக்கப்பட்ட உடை பிடிக்கவில்லை என்று நிராகரித்தவர். பல திரைப்படங்களுக்குக் கிடைத்த வாய்ப்பையும் நிராகரித்திருந்தார் மக்கள் மனதை வென்ற, ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ தொகுப்பாளரான பெப்சி உமா.
“தெரிஞ்சு என்ன செய்ய போற…” என்றான் பல்கலைக் கடித்தபடி வீரமணியும். பின்னே, பெப்சி உமாவைத் தெரியாமல் ஒரு ஜந்துவா என்பது அவரது எண்ணம்.
“ஏன்னே, நான் சின்ன புள்ளையா இருக்கப்பவே… அந்த அக்கா டிவியில எல்லாம் வருவாங்க.. அவங்களுக்கே இந்நேரம் குழந்தை பிறந்து வளந்திருக்கும்… இன்னும் அவங்களை மாதிரி பொண்ணு தேடுனா எப்படி கிடைக்குண்ணே…” என்று கூறிவிட்டு வாயைப் பொத்தி சிரித்தான்.
“உன்னையை பொண்ணு பாக்க யாரும் கூப்பிடலை. நீ ஓடிப்போயிடு…”
“நீங்கி இப்படி சொல்லறீங்க. அயித்த பாவம் ஒத்தையிலையா தேடுவாங்க. நாங்களும் தான் தேடிட்டு இருக்கோம். நாங்கன்னா நான் மட்டுமில்லைண்ணே நம்ம ஊருல முக்காவாசி பேரு உங்களுக்குத் தான் பொண்ணு தேடிட்டு இருக்காங்க. உங்க பின்ன பொறந்த பசங்க எல்லாம், கல்யாணம், குழந்தை குட்டின்னு சுத்தும்போது உங்களை மட்டும் விட்டுடுவோமா… நீங்க எதுக்கும் கவலை படாதீங்கண்ணா, நான் எதுக்கிருக்கேன். நல்ல பொண்ணா தேடி கல்யாணத்தை நடத்திடாம விட மாட்டேன்” என வீராவேசமாகக் கூற,
“டேய்… கல்யாணமே நடக்கலைன்னா கூட கவலை பட மாட்டேன். ஆனா நீ பொண்ணு பார்க்கிறேன்னு சொன்ன பாத்தியா… எனக்கு மயக்கமே வருது டா…” என வீரமணி நெஞ்சில் கை வைக்க,
“அங்க வலிச்சா, அது நெஞ்சு வலிண்ணே… சரி இருங்க ஓடிப்போயி சாணியை கரைச்சு கொண்டு வரேன். அதை குடிச்சுட்டு வாந்தி எடுத்தீங்கன்னா… சரியா போயிடும்” என பின்பக்கமாக ஓடினான்.
“என்னது சாணியா…?” என்று மிரண்ட வீரமணிக்கு உண்மையிலேயே மயக்கம் வரும்போல இருந்தது.
இவர்களின் அட்டகாசத்தை ஓரமாக நின்று பார்த்தபடி செந்தாமரை கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்க,
“என்ன மாஹி, சிரிப்பெல்லாம் பலமா இருக்கு…” என்றபடி அருகில் வந்திருந்தான் வெற்றிச்செல்வன்.
“எங்க போயிட்டீங்க? அத்தை உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க” என அப்பொழுது தான் நினைவு வந்தவளாகக் கணவனிடம் சொல்ல,
“என்னை தேடி வந்துட்டு இங்க நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கியா? சரி இன்னைக்கு என்ன சொன்னான் பாண்டி?” எனக் கேட்டபடி அவளோடு உள்ளே நடந்தான்.
அவளும் அவனுக்கு விளக்கம் தந்தபடி உள்ளே வந்தாள். அதைச் சொல்லும்போதே அவளுக்கு அத்தனை சிரிப்பு, அங்கிருந்த சொந்த பந்தம் எல்லாம் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.
செந்தாமரை பேசிக் கொண்டிருந்ததிலேயே லயித்திருந்த வெற்றியிடம் நெருங்கிய முத்து, “உன் மூஞ்சியில லிட்டர் லிட்டரா வழியுது. கொஞ்சம் துடைச்சுட்டு, இங்க கவனிக்கிறயா?” எனச் சொல்ல,
செந்தாமரைக்கும் அது காதில் விழ, வெக்கமாகப் போய் விட்டது. சுற்றத்தைக் கவனித்து, கணவனிடமிருந்து விலகி, அத்தையிடம் போய் சமத்தாய் நின்று கொண்டாள்.
வெற்றிச்செல்வன் அசடு வழிந்தும், வழியாமலும் சமாளிப்பாகச் சிரிக்க, முத்து அவனிடம், “தயவு செஞ்சு இந்த மாதிரி கிறுக்குத்தனம் எல்லாம் பண்ணாத… பாக்க முடியலை” என பல்கலைக் கடித்தான்.
‘உனக்குக் கல்யாணம் ஆகாமையா போக போகுது…’ என வெற்றி மனதினில் நினைத்துக் கொண்டான்.
அப்பொழுதும் முத்து, “முதல்ல இப்படிச் சிரிக்கிறதை நிறுத்து சகிக்கலை” என்று பொரிந்து தள்ளினான்.
[the_ad id=”6605″]
“சின்னவனுக்கு என்ன இவ்வளவு கோபம் வருது?” அவர்கள் பேசியது புரியா விட்டாலும் முகபாவனை விளங்க, ராஜேஸ்வரி அம்மாள் மஞ்சுளாவிடம் மெல்லிய குரலில் கேட்க,
“வெற்றி எங்களைப் பார்க்கக் கூட வரலை தான அத்தை, அவனுக்கு அந்த கோபம்… அதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் காட்டிக்கிறான்…” என்றார் மஞ்சுளா.
அவருக்கும் மகனது இந்த செய்கை பிடிக்கவில்லை தானே! அந்த வருத்தம் அவரது முகத்திலேயே தெரிந்தது. கேட்டுக்கொண்டிருந்த செந்தாமரைக்குக் கஷ்டமாக இருந்தது.
வெற்றிச்செல்வன் முத்துவை மெலிதாக தோளோடு அணைத்துப் பிடிக்க, “உன்னை திட்டிட்டு இருக்கேன் டா” என்றான் இளையவன் கோபமாக.
“நீ எவ்வளவு வேணும்னாலும் திட்டலாம்…” எனப் புன்னகையோடே அண்ணன் சொல்ல,
“சரி சரி பார்த்து, பத்திரமா போயிட்டு வா… நேரம் ஆகுது” எனப் பெரிய மனித தோரணையோடு தம்பி கூறினான்.
மற்ற உறவினர்கள் எல்லாம், அண்ணன், தம்பி என்பதால் அவர்களது சண்டையையோ, சமாதானத்தையோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதன்பிறகு, செந்தாமரையின் உறவினர்களோடு மறுவீட்டிற்கு மாப்பிள்ளையும், பெண்ணும் கிளம்ப, நாங்கள் எங்கள் வண்டியில் வந்து விடுகிறோம். திரும்பி வர எளிதாக இருக்கும் என்று வெற்றிச்செல்வன் சொல்லிவிட்டான். கூடவே, பாண்டியையும் வேண்டாம் என்று மறுத்துவிட, முத்து முறைத்தான்.
“அப்பா இல்லாத குறையை நீ தீத்து வெச்சிருவ டா… எதுக்கு சும்மா சும்மா முறைக்கிற” என் வெற்றி கேட்க,
“இப்ப எதுக்கு தனியா… நீங்க ரெண்டு பேரு மட்டும் போகணும்ன்னு சொல்லற…”
“டேய், இதுக்கெல்லாமா விளக்கம் சொல்லணும்” என வெற்றி தம்பியை முறைத்தான்.
“அண்ணி…” எனச் சத்தமாக அழைத்தான் முத்து.
என்ன, ஏது என்று புரியாமல் செந்தாமரை அருகில் வர, “இவன் கல்யாணத்துக்கு முன்ன உங்களை கண்டுக்கவே இல்லை. இப்போ இப்படி எல்லாம் ஓவரா பண்ணிட்டு இருக்கான். எதுவும் தொல்லை அதிகமானா… என்கிட்ட சொல்லுங்க, நான் உங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன்” என வெற்றியை முறைத்தபடி செந்தாமரையிடம் கூற,
அண்ணனுக்கும், தம்பிக்கும் ஏதோ விளையாட்டு சண்டை போல என்றளவு புரிந்த செந்தாமரை, “கண்டிப்பா தம்பி” என மண்டையை உருட்டினாள்.
[the_ad id=”6605″]
‘என்னை விட்டுட்டு நீ போயிடுவியா?’ என கணவன் முறைக்க, “என்ன என்ன? என் முன்னாடியே முறைக்கிறியா?” என அண்ணனிடம் எகிறியவன்,
“என்ன அண்ணி உங்களை இத்தனை நாளா அலைக்கழிச்சதை மறந்துடீங்களா? இவனை நாலு காட்டு காட்டியிருக்க வேண்டாமா?” எனச் செந்தாமரைக்கு எடுத்துக் கொடுக்க,
‘அந்த விஷயத்தை அவளை மறக்க வைக்க நான் எத்தனை பாடு பட்டேன். இவன் காரியத்தையே கெடுக்கிறானே!’ என வெற்றிச்செல்வன் நொந்தான்.
“நீங்க சொல்லிட்டீங்க தானே தம்பி, இனி பாருங்க என் கவனிப்பை…” எனச் செந்தாமரையும் கொழுந்தனோடு கூட்டுச் சேர,
கணவன் அவளது வீராவேசத்தில் நமட்டு சிரிப்பு சிரித்தான். அதைப்பார்த்து அவள் முறைக்க, பதிலுக்கு அவன் கண்ணடிக்க… அதைக் கவனித்த முத்து, “டேய் பொறுப்பா ஊர்த் தலைவர் மாதிரி நடந்துக்க டா” எனத் தலையில் அடித்துக் கொண்டான்.
அப்பத்தா தான் அதட்டி ஒருவழியாக ஊருக்குக் கிளப்பினார். “வேணும்ன்னா நீயும் வாடா இங்க போர் அடிக்கும்” எனப் போகும்போது வெற்றி சொல்ல,
“நான் வந்தா உனக்குத் தொல்லை தருவேன்னு, வேணும்ன்னே கிளம்பும்போது கூப்பிடற பாரு… அநியாயத்துக்கு நல்லவன் டா நீ…” என்று முத்து முறைத்தபடியே வழியனுப்பி வைத்தான்.
ஒருவழியாக வெற்றியும், செந்தாமரையும் ஒரு காரிலும்.. உறவினர்கள் மற்றொரு காரிலுமாக அந்தியூர் நோக்கிப் புறப்பட்டனர்.
வண்டி கிளம்பிய சிறிது நேரத்தில், “என்ன மாஹி, என் தம்பியும்…உன்னை மாதிரியே… ‘நீ ஊர்த்தலைவர்.. ஊர்த்தலைவர்’ன்னு ஏலம் போடறான்” என்றான் புன்னகையோடு.
“அதை மறந்தா ஞாபகம் தான் செய்யணும்” என்றாள் மனையாள்.
“அப்படியா… அப்ப ஊர்த்தலைவருக்கு ரொமான்ஸ் எல்லாம் வரக்கூடாதா…?” என்றான் கண்ணடித்து.
அவள் முறைத்துப் பார்க்க, “நீ என்ன வேலை செய்யற மாஹிம்மா” என்றான் கணவன்.
முந்தைய பேச்சை ஒப்பிட்டுப் பார்த்திருந்தால், சுதாரித்து பதில் சொல்லியிருக்கலாம். ஆனால், அந்த மக்கு ஆசிரியை, “ஹ்ம்ம்… சாணி தட்டறேன்” என உதட்டைச் சுளித்து கூற,
“அப்படியா…? தினமும் எத்தனை சாணியைத் தட்டுவ…” எனக் கணவன் மீண்டும் கேட்க,
“உங்க தலையில இடம் இருக்கிற அளவுக்கு…” என்று அவள் நக்கலாகப் பதில் தந்தாள்.
“அப்ப இந்த ஊர்த்தலைவர் வேலை எல்லாம் நீ செய்ய மாட்ட. அப்படித்தானே?”
“இதென்ன வம்பா இருக்கு. ஊர்த்தலைவர் நீங்க தானே? நான் எதுக்கு செய்யணும்?” என்றாள் அவன் பேச்சு சம்பந்தமே இல்லாமல் செல்வதாக நினைத்து.
கணவனோ வாகனத்தைச் சாலையை ஒட்டி, ஒரு மரத்தின் அடியில் நிறுத்தியிருந்தான்.
“ஏன் நிறுத்திட்டீங்க?” என மனைவி சுற்றம் பார்க்க,
“ஊர்த்தலைவர் நான் தானே ரொமான்ஸ் பண்ணக் கூடாது… சாணி தட்டற நீ ரொமான்ஸ் பண்ணலாம் தான?” என்று கணவன் கண்ணடித்துக் கேட்க,
“என்ன விளையாட்டு… வண்டியை எடுங்க” என்று அவனை முறைக்க முயன்று தோற்றாள்.
“கோயிலுக்கு போயிட்டு வந்து முத்தம் தருவேன்னு சொன்ன தானே?” என் கணவன் நினைவு படுத்த,
‘என்ன? எப்போ?’ என திருதிருத்தாள் மங்கையவள். “காலையில… கிட்சன் வந்தப்ப…” கணவன் விலாவாரியாக விளக்க,
அப்பொழுது சமாளிப்பதற்குக் கூறியது அவளுக்கு நினைவு வந்தது. ம்ம் ஹ்ம்ம் அவள் மறுப்பாகத் தலையை உருட்ட,
“அப்ப கார் நகராது. இங்கேயே இருக்க வேண்டியது தான்…” எனப் பிடிவாதம் பிடித்தான் கணவன்.
வேறு வழியின்றி அவனின் பிடிவாதத்திற்குத் தலைசாய்க்க வேண்டியதாகப் போக, முத்தத்தோடு கணவன் முடிக்காமல் அவளை அளக்கும் வேலையையும் கையிலெடுக்க, செல்ல அடிகளுடன் தடுத்தாள் மனையாள்.
சீண்டலும், கெஞ்சலுமாகத் தான் வீடு வந்து சேர்ந்தனர். இவள் பிறந்து வீடு வருவதை அறிந்த தோழிகள் சிலர், இவளை வீட்டிற்கு வந்து பார்த்துச் சென்றனர்.
அதிலொருத்தி, “உங்களோடது காதல் கல்யாணம் தானே” என கேலி செய்ய,
“போடி… அதெல்லாம் இல்லை…” என மறுத்துச் சொன்னாள். இல்லையேல் கேலி செய்தே ஒரு வழியாக்கி விடுவார்களே…
ஆனால், செந்தாமரையின் தோழி நம்புவதாய் இல்லை. “எனக்கு தெரியாதாக்கும்…” என்று தொடங்கியவள், அடுத்துச் சொன்ன விஷயங்களில் செந்தாமரைக்குத் தலை சுற்றியது.