மண்வாசம் 29:
ஜல்லிக்கட்டு ரேக்ளா போன்ற விளையாட்டுகளில் இடம்பெறும் காளைகள் பெரிதோர் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாய் விலங்குகள் நல வாரியம் கொடுத்த புகாரின் பேரில் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கின் தீர்ப்பானது சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சு விரட்டு போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தற்போது சிங்காநல்லூர் கிராம மக்கள் ஒன்றிணைந்து அமைதி வழியில் மேற்கொள்ளும் அறப்போராட்டம் பற்றி அவர்களுடன் கலந்து பேசலாம். செய்திகள் சேகரிப்பது சிங்காநல்லூரில் இருந்து சித்திக்.
செய்தி சேகரிப்பாளர் அவரது களப்பணியை செய்துகொண்டிருந்தார்.
ஆண்கள் பெண்கள் முதியோர் இளைஞர் என அனைவரும் வீதியில் அமர்ந்திருந்தனர். ரேக்ளா போட்டியை தடை செய்ய உத்தரவிட்டதற்கு தங்களது எதிர்ப்பை வலுவாய் காட்டிக் கொண்டிருந்தனர்.
“சொல்லுங் ஐயா, உச்சநீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து எதற்காக ஒட்டுமொத்த கிராமமும் ஒருங்கிணைந்து இந்த போராட்டத்தை நடத்துறீங்க?” என ஊர்த்தலைவர் ஆறுச்சாமியிடம் கேட்க,
“வணக்கமுங்க. ரேக்ளா பந்தயம் இன்னிக்கு நேத்து நடக்குறது இல்லைங்க எங்க மண்ணுல பாரம்பரியமா பலகாலமா நடக்குறது. இப்ப நீதிமன்றம் இதை தடை பண்ணிப்போட்டா காளை வளக்க முடியாதவங்கலாம் அடிமாட்டுக்குத்தேன் விக்கோணும். பலபேரு பல்லைக் கடிச்சிட்டு தனக்கு இல்லைனாலும் மாட்டுக்கு மூணு வேளையும் பருத்திப் புண்ணாக்கு போட்டு வளக்குறான். அப்படி ஆசை ஆசையா வளத்த காளைய கறிக்கடைக்கு கொண்டுபோறதை கண்ணுல பாக்குறதுக்கு உசுர வுட்டுப்போடலாம்.
தீர்ப்பு வந்திருச்சுங்கறதால எங்கனால ரேக்ளா பந்தயம் நடத்தாம இருக்க முடியாதுங்க. நீதிமன்றம் மறுபரிசீலனை பண்ணி பிறப்பிச்ச உத்தரவை திரும்பப் பெறோணும்னு தான் நாங்க அல்லாரும் கேட்டுக்குறோம்” என்றார்.
“விலங்குகளை காட்சிபடுத்துதல் சட்டத்துக்கு கீழ காளைகளை கொண்டு வந்ததை சுட்டிக்காட்டி தான் ரேக்ளா தடை செஞ்சிருக்காங்க. இதைப் பற்றிய உங்க கருத்து என்ன?” என அடுத்து அமர்ந்திருந்தவரிடம் கேட்கப் பட்டது.
“ஒரு குடும்பத்தோட கம்பீரம் அவங்க வளக்குற காளைகளோட கம்பீரத்த வெச்சுத்தேன் சொல்லுவாங்க. அப்படி இருக்குறப்போ அதுகளுக்கு ஒரு பந்தயம் நடத்தி அதுகளோட சேர்த்து நம்ம வீரத்தையும் அதுல வெளிப்படுத்துறது நம்ம தமிழர் வழக்கம். இதைய பந்தயங்கறத தாண்டி காளைகளை கவுரவப் படுத்துற விழாவாத்தேன் நாங்க கடைப்பிடிச்சிட்டு வர்றோம்” என்றார் கந்தசாமி.
“இந்த மாற போட்டிகள்ள அதுகளுக்கு சாராயம் கொடுக்குறதா குற்றச்சாட்டுகள் வருதுங்களே?” கட்டுக் கதையை கேள்வியாய் முன் வைத்தார்.
“இப்படி பந்தயம் நடத்துறதுக்கு முன்னாடி எங்களை மாற கால்நடை மருத்துவர்கள் முறையா பரிசோதனை செய்வாங்க. தகுதி இல்லாத பச்சத்துல அதைய போட்டிக்கே அனுமதிக்க மாட்டாங்க. நீங்க வேணும்னா மருத்துவ அறிக்கையை வாங்கி பார்க்கலாம்” என்றாள் அரசி.
“காளைகள் துன்புறுத்தப் படுறதை முன்வெச்சு தான் விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தாங்க. அதை பத்தி உங்க எண்ணம்?”
“நம்மல்லாம் ஒரு விவசாய சமூகம்ங்க. நமக்கு மாடு கன்னுக நெம்பவே முக்கியம். நம்ம வாழ்க்கைல மாட்டுக்கும் ஒரு பங்கு இருக்குறனாலதேன் மாட்டு பொங்கல்னு அதுகளுக்கு தனியா ஒரு விழாவே எடுக்குறோம். அப்படி தன் குடும்பத்துல ஒருத்தரா மாடு கன்னுகள போற்றி பாதுகாக்குறவன் கிட்ட வந்து மாட்டை கொடுமை படுத்துறான்னு சொல்லுறதெல்லாம் ஏற்புடையதா இல்லைங்க” என்றார் முத்துச்சாமி.
“அரசாங்கமும் பாதுகாக்கத் தானங்க செய்யுது? அதான் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தை நடைமுறை படுத்தியிருக்கு” என, விக்ரமன் முன்வந்து நின்றிருந்தான்.
“அரசாங்கம் பாதுகாக்குறேங்கற பேர்ல நாட்டு மாட்டினமே தானா அழிஞ்சு போக வழிவகுக்குதுங்க. மாட்டை பத்தி குறைஞ்சபச்ச அறிவுகூட இல்லாதவங்க எல்லாம் மாட்டுக்கு பாதுகாப்பு சட்டம் போடுறாங்க” என காரமாக உரைத்தவன்,
“அதிக பாலுக்காக இப்ப பெரும்பாலும் ஜெர்சி பசுக்களை தான் பயன்படுத்துறாங்க. அதை தான் இறக்குமதியும் செய்யுறாங்க. நாட்டு மாடுக பயன்பாடு கொறஞ்சா, இந்த ஜெர்சி பசு இன்னும் அதிக அளவுல நம்ம நாட்டுக்கு வரும். அதால அடுத்தடுத்த ஜெனெரேசனுக்கு கன்னு போட முடியாது. இப்பவே ஆர்டிபிசியல் இன்செமிநேசன் தான் அதிக அளவுல போய்ட்டு இருக்கு.
நம்ம ஒரு பைசா செலவில்லாம உற்பத்தியை பெருக்குறதோட்டம் இனி பண்ண முடியாது. நாட்டு மாட்டினம் இல்லாம போனா அடுத்த மூணாவது தலைமுறைக்கு திரும்ப வெளிநாட்டு கிட்ட இருந்து தான் ஊசி வாங்க வேண்டி வரும். அதோட சேர்த்து அனிமல் ட்ரக்ஸ் அனிமல் ஃபீட் எல்லாத்துக்கும் வெளிநாட்டு கிட்ட தான் கையேந்தனும்” என எதிர்காலம் பற்றி எடுத்துரைத்தான்.
அதற்குள் இப்படி ஒரு தொடர் போராட்டம் நடப்பதை அறிந்து விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர்கள் சிலர் அவ்விடம் வருகை புரிய, அவர்களுக்கும் கிராம மக்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
“தீஸ் தமிழ்ஸ் ஆர் லைக் திஸ்” என்று அவர்களில் ஒருவர் சொல்லவும், வெகுண்டெழுந்த அரசி
“நாங்க இப்படித்தான்யா. அன்பையும் வீரத்தையும் வெளிப்படுத்துற நாங்க உன்ர கண்ணுக்கு காட்டு மிராண்டி கூட்டமா தெரிஞ்சா அப்படியே இருந்துட்டு போறோம். எங்க கலாச்சாரத்துல மூக்க நுழைக்க நீ யாரு? உனக்கு உண்மைலையே அக்கறை இருந்தா போய் மாட்டிறைச்சி விற்பனைய தடு. மாட்டிறைச்சி ஏற்றுமதியில தான் நாடு முன்னிலைல இருக்குது. எங்க போச்சு உங்க மிருக வதை சட்டமெல்லாம்? பெருசா பேச வந்துட்டான்” என ஆங்கிலத்தில் கத்த, இம்முறை சீறும் வேங்கையைத் தடுக்கவில்லை விக்ரமன்.
“மாட்டிறைச்சி சாப்பிடுறதெல்லாம் அவரவர் விருப்பம். காளை வளத்தனும்னா நீங்க உங்க வீட்டுல வெச்சு வளத்துங்க. அதைய விட்டுபோட்டு இப்படி பொதுவெளியில எதுக்கு போட்டிகள்ள ஈடுபடுத்தணும்?” அர்த்தமற்ற அநியாயமான கேள்வி கேட்கப்பட்டது.
“மாடு மேய்க்குறவன் பூரா மாக்கானா தான் இருப்பானுங்கற நெனப்புல கெளம்பி வந்தீங்களாக்கும்?” என்று கோபமாய் வினவிய குலசேகரன்,
“புலிங்குளம் காளைய எடுத்துகிட்டா அதைய ஒழவுக்கும் ஜல்லிக்கட்டு, ரேக்ளவுக்கும் தான் பயன்படுத்த முடியும். இப்ப ஆரும் உழவுக்கு காளைய உபயோகப் படுத்துறது இல்ல. எல்லாம் இயந்திரமயமாகி போய்டுச்சு. நாங்களே ட்ராக்டர்ல தான் ஒழவோட்டுறோம். மிச்சம் இருக்குறது ரேக்ளா, ஜல்லிக்கட்டு மட்டுந்தேன். அதால மட்டுந்தேன் அந்த இனத்தை காப்பாத்த முடியும். இப்ப அதையும் தடை பண்ணிப் போட்டீங்க. எதுக்குமே பயன் படலைனா காளைகளை ஆரு வளப்பா?” என்றான்.
“பந்தயத்துல ஜெயிக்க காளைகள தான் போட்டு துன்புறுத்துறீங்க. இந்த போட்டி நடத்துறதால வேற என்ன பயன் இருக்கப் போகுது?”
“ரேக்ளாவுல ஜெயிக்குற காளைக எல்லாம் வீரியம் நெறஞ்சது அதோட விந்தணுக்களை சேகரிச்சு தான் சேர்க்கைக்கு பயன்படுத்துறாங்க. வீரியம் கொறஞ்ச கன்னுகளை வெச்சு யாரு என்ன பண்ணுறது? நம்ம நாட்டுல இருக்குற நேட்டிவ் அனிமல் ஜெனெடிக் ரிசோர்சை அழியாம தடுக்குறதும், பெஸ்ட் ப்ரீடிங் புல்லை கண்டு பிடிக்குறதும் தான் இது மாற போட்டியோட நோக்கம்.
இந்த தலைமுறைல நாங்க காப்பாத்திருவோம். அடுத்த தலைமுறைக்கு அந்த இனமே இல்லைனா நீங்க அந்த வகை கன்னுக்குட்டி எப்படி வாங்குவீங்க? உங்கள மாற ஆளுக தான் எகோசிஸ்டமையே டெஸ்ட்ராய் பண்ணுறீங்க. இதுக்கு ஒரு சொல்லுஷன் கொடுங்க நாங்க ஏத்துக்குறோம்” என்றான் விக்ரமன்.
வாக்குவாதம் முற்றிப்போய்விட காவல்துறையினர் அங்கு வருகை புரிந்தனர். உடனே விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்த ஆட்கள் எல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட, அமைதிப் போராட்டம் தொடர்ந்தது.
சோடாக்கடை சொக்கலிங்கம் அனைவருக்கும் இலவசமாய் சோடா வழங்கினார். சுற்று வட்டார மக்களும் அவர்களுடன் இணைந்துகொள்ள ரேக்ளாவிற்கு தடை நீங்கும் வரை ஒருவரும் அவ்விடத்தை விட்டு அகலப் போவதில்லை என்ற உறுதியோடு அமர்ந்திருந்தனர்.
இரண்டு தினங்கள் கடந்தும் போராட்டம் தொடர்ந்தது.
இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் போராட்டம் வலுத்ததை அடுத்து காவல் துறையினருக்கு நெருக்கடி ஏற்பட போராட்டத்தை கலைக்க அவர்கள் அவ்விடம் வருகை புரிந்தனர். இளைஞர்களே அதிக அளவில் காணப்பட,
“இப்ப என்னயா பண்ணுறது” என தலைமை காவலர் புரியாது பார்த்து நிற்க,
“இது நம்ம தமிழர் அடையாளங் சார். அடையாளத்தை அழிக்குறதால யாரோ பெறப் போற லாபம் என்னன்னும் நம்ம இழக்கப் போறதென்னனும் இளைய தலை முறை தெளிவாக தெரிஞ்சு வெச்சிருக்காங்க. சொல்லப்போனா நம்மளும் கூட சேர்ந்து போராடோணும்” என்றார் அவரருகில் இருந்த காவலர்.
“மேலிடத்து ப்ரெஷர் வேற, இதுல நம்ம என்னயா பண்ணுறது”
“அமைதியா போராட்டம் பண்ணுறவங்க மேல என்ன நடவடிக்கை எடுக்குறதுங்? முடிஞ்ச அளவு நம்ம பாதுகாப்பு கொடுக்கோணுங் சார். இங்க இருக்குறவங்க பூரா விவசாயிகதேன். அவங்களுக்காக மட்டுமா போராடுறாங்க நமக்காகவுங்தானோ. நம்மளும் பசிச்சா சாப்பாடு தான்ங் சார் சாப்பிட முடியும்” என, தலைமை காவலருக்கு கைபேசி அழைப்பு வரவும் அதை காதிற்கு கொடுத்தவர்
“நான் ஸ்பாட்ல தான் இருக்கனுங் சார். ஒரு பிரச்சனையும் இல்லைங்க சார்” என்று பேசி வைத்துவிட்டு அருகில் இருந்த காவலரைப் பார்க்க, அவரிடம் நன்றி பேசும் புன்னகை.
அத்தனை கூட்டத்தில் அருந்தமிழும் அமர்ந்திருக்க,
“நீங்க கொஞ்ச நேரம் உள்ளார வந்து உக்காருங்க தமிழ்” என மாறன் அழைக்க, தன் வயிற்றை மெல்லத் தடவியவள்
“நம்ம அடையாளத்தை கப்பாத்த நம்ம குட்டிமாவும் நம்மளோட சேர்ந்து போராடட்டுங்க. அதான் நீங்கெல்லாம் கூட இருக்குறீங்களே. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லங்க” என்று மறுத்துவிட்டாள். அவளோடு தான் சாரதா, முத்துலட்சுமி, மரகதவள்ளி அனைவரும் அமர்ந்திருந்தனர்.
“அதாரு நாயகி சூப்புக்காரன்? நம்மூருல ரேக்ளா நடத்தக் கூடாதுனுட்டானாமா. அவன் மட்டும் என்ர கையுல மாட்டுனான் கண்ணாமுழி திருகிப் போயிரும்” என வேலாத்தாள் ரங்க நாயகியிடம் சொல்லவும், சுப்பாத்தாள் அதிர்ந்துபோய் பார்த்திருந்தார்.
“அட அது சூப்புக்காரன் இல்லையாத்தா. சுப்ரீம் கோர்ட்டு” என்று அரும்பு சொல்ல,
“எவனா இருந்தாத்தேன் என்னோ கண்ணு. அவனாரு நம்மளைய பண்ணாட்டு பண்ண?” என்றதும் அரும்பு தலையில் அடித்துக் கொண்டாள்.
“இப்படியே எத்தனை நாளைக்குத்தேன் உக்காந்திருக்குறது. போராட்டம் பண்ணுறதை விட்டுப்போட்டு அவங்கவங்க பொழப்பை பாத்தாலாச்சும் பிரயோசனம். இதுனால ஆருக்கு என்ன லாபம்?” என்று சலிப்பாய் சத்தமாய் ஒரு குரல் வரவும் அரசி திரும்பிப் பார்த்தாள்.
கோழிப் பண்ணை உரிமையாளர் மயில்சாமி தான் அதைக் கூறி இருந்தார். உடனே,
“மயில்சாமி சொல்லுறதும் சரித்தானப்பா. இதெல்லாம் காளை மாடு வெச்சிருக்குறவங்க பிரச்சனை. நமக்கு என்ன வந்தது நம்ம பொழப்பை விட்டுப்போட்டு வந்து என்னத்துக்கு நாள்கணக்கா உக்காந்திருக்கோணும்” என பாலசாமியும் சொல்ல, அவர்கள் இருவரையும் அழைத்த அரசி,
“எல்லாருக்கும் தன் குடும்பம் நல்லா இருக்கோணும் மத்தவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்னங்குற எண்ணம் தான் இல்லைங்களா? ஆருக்கு என்ன பிரச்சனைன்னு கேக்குறீங்களே, நீங்க விக்குற ஜெர்சி மாட்டுப் பாலைத் தான் மயில்சாமி வாங்குறாரு. மயில்சாமி விக்குற ப்ராய்லர் கோழி முட்டைய தான் நீங்க வாங்குறீங்க.
எல்லாரும் சமூகத்தை சார்ந்து தான் இருக்குறோம். நீங்க நெனச்சுக்கலாம், நம்ம குடும்பம் ஆரோக்கியமா தான் இருக்குன்னு. ஆனா நீங்க மத்தவங்களுக்கு தர்றது எல்லாம் வேற ரூபத்துல உங்களுக்கே திரும்ப வருது அது புரியுதுங்களா? அப்பறம் எப்படி உங்க குடும்பம் மட்டும் நல்லா இருக்கும்?” என இருவரிடமும் பதில் இல்லை.
“நாட்டுக் கோழில கொண்டைக் கோழி, கழுகுக் கோழி, சண்டைக் கோழி, குருவுக் கோழி, பெருவிடைக் கோழினு இத்தனை வகை இருக்கு. இப்போ எத்தனைய நம்ம காப்பாத்தி வெச்சிருக்கோம்? வெள்ளை வெளேர்ன்னு இருக்குற பிராய்லர் கோழிய பத்தி தெரிஞ்ச எல்லாருக்கும் கருங்கோழி பத்தி தெரியுமா?” என, தலையை கவிழ்த்துக் கொண்டார் மயில்சாமி.
“எல்லாத்தையும் அழியவிட்டு வேடிக்கை மட்டும் தான் பாக்குறோம். ஏன்னா இங்க எல்லாருக்கும் பணம் மட்டுந்தான் குறிக்கோள். பாரம்பரியம் பண்பாடெல்லாம் அவ்வளவு தான் இல்லைங்களா” என்றாள் கோபமாய்.
“நமக்குள்ள முதல்ல ஒற்றுமை வேணுங்க. இது உங்களுக்கோ எனக்கோ ஆனா போராட்டம் இல்ல. நமக்கானது. நாளைய தலைமுறைக்கு நம்ம பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்டு போய் சேர்க்கணும்னு தான் போராடறோம். பொதுநலமா வாழப் பாருங்க. சமூகத்து மேல அன்பும் அக்கறையும் இல்லாம போனா தனிநபர் நிம்மதியா வாழ முடியாது” என்றான் நன்மாறன்.
“அன்னமழகி, குள்ளங்கார், பொம்மி, மஞ்சள் பொன்னி, கம்பஞ்சம்பா, பிசினி, புழுதிச் சம்பா, சீரகச் சம்பா, கந்தசாலா, குருவிக்கார் இப்படி எத்தனையோ பாரம்பரிய நெல் வகைகள் இருக்கு. பலது இன்னைக்கு இல்ல. அதோட மகிமை தெரிஞ்சு சிலதை இப்போ மீட்டெடுத்துட்டு இருக்காங்க. அப்படி இருக்க, நம்ம கண் முன்னாடியே நம்ம பாரம்பரிய மாட்டு இனத்தை ஏன் அழிய விடணும்? இப்படி பாரம்பரிய இனங்களை அழியவிட்டு வேடிக்கை பார்த்து என்னத்த சாதிக்கப் போறோம்?” என்றாள் அரும்பு வருத்தமாய்.
“ஏனுங் ண்ணா!” என்று மாரிமுத்துவை அழைத்தான் முருகேசன்.
“என்னடா” என அவன் புறம் திரும்ப,
“ஒரு சின்ன விளையாட்டுக்கு போய் இவ்வளவு அக்கப்போர் பண்ணுறாங்களே வீடியோ கேம்லயே ரேக்ளா விளையாட வேண்டியது தானங்” என்று சொல்லிவைக்க, அவனை முறைத்தவன்
“ஏன் நீ வீடியோ கேம்ல சோறு தின்னேண்டா” என்றான். அதில் முருகேசன் முழிக்க,
“முடியாதல்லோ அப்போ இறுகிக் கட்டிக்கிட்டு நில்லு. இனி ஒருவார்த்த பேசுனே பொறவு பவுட்ட பேத்துப் போடுவேன்” என்றதும் கூட்டத்தில் சென்று மறைவாக அமர்ந்து கொண்டான்.
“முன்ன எல்லாம் அத்தக்கருப்பன், கட்டைக்காரி, அழுக்குமறையன் குள்ளச்சிவப்பன் இப்படி தொண்ணூறுக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் இருந்தது. அதெல்லாம் அழிஞ்சு கடைசிக்கு ஆறு வகை தான் தமிழ்நாட்டுல இருந்துது. இப்ப ஆலம்பாடி இனமும் அழிஞ்சிடுச்சு. மீதம் இருக்குற இனத்தையாவது நம்ம காப்பாத்தா வேண்டாமா?
பாதுகாப்புங்கற பேர்ல பாரம்பரிய விளையாட்டை எல்லாம் அழிச்சிட்டு வந்தா அழியுறது நாட்டு மாடு மட்டுமில்ல நம்ம பாரம்பரியமும் ஆரோக்கியமுந்தான்” என்றான் விக்ரமன்.
“கலாச்சாரமும் பாரம்பரியமும் தான் மக்களை உயிர்ப்போட வெச்சிருக்கும். காலங்காலமா போற்றி பாதுகாத்து வந்த தமிழர் பண்பாட்டை அழிய விட்டுட்டு நம்ம மட்டும் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?” என்று வேங்கையரசி கேட்க,
“இது வெறும் மண்ணில்ல. நம்மள வாழவைக்குற பூமி. நம்ம மண்ணோட மண்ணா போனலுங்கூட நம்ம பாரம்பரியமும் பழக்க வழக்கமும் கலந்த இந்த மண்ணோட வாசம் நெலச்சு வீசணும். மண்வாசம் வீசும். நம்ம மண்ணுல ரேக்ளா நடந்தே தீரும். அதைய யாரு நெனச்சாலும் தடுக்க முடியாது” என்று அழுத்தமாய் கூறினான் விக்ரம பாண்டியன்.
மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தை திருத்தம் செய்யுமாறு பல தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்தது. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைய, ஒட்டுமொத்த தமிழகமும் இதற்கு ஆதரவாய் குரல் கொடுக்க, பிற மாநிலங்கள் மட்டுமின்றி உலகமே வியந்து பார்க்கும் அளவில் அமைதிப் போராட்டம் பேசப்பட்டது.
நிலைமையின் தீவிரம் உணர்ந்து அனைத்தையும் கருத்தில் கொண்டு அவசர சட்டம் பிறப்பிக்க மாநில அரசு மத்திய அரசி நாட, முடிவு என்னவென்பதை தெரிந்துகொள்ள போராட்டக் களத்தில் அனைவரும் பேராவல் கொண்டு காத்திருந்தனர்.
போராட்டத்தில் பங்கெடுத்த கல்லூரி மாணவர்களிடம் செய்தி சேகரிப்பாளர் இத்தடை குறித்து விசாரிக்க,
“சும்மா போராட்டம் மட்டும் பண்ணிட்டு நாளைக்கு எவனோ மாட்டை பாத்துக்குவான்னு போய்டக் கூடாது ப்ரோ. அதைய காப்பாத்துறதுல நமக்கும் பங்கு இருக்கு. அதான் நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ஜோடி நாட்டுக் காளைகள வாங்கி வளர்த்துட்டு இருக்கோம்” என்றான் ஒரு இளைஞன். அவனருகில் இருந்த மற்றொரு இளைஞனோ,
“சட்டம் போடுறவங்க எல்லாரும் ஏசி ரூமுல உக்காந்து என்னவேனாலும் பேசுவாங்க ப்ரோ. கிட்ட வந்த நம்ம மாட்ட தொடச் சொல்லுங்க பாப்போம். இனியும் வேடிக்கை பாத்துட்டே இருந்தா அடுத்த தலைமுறை மாடுகளை போட்டோல தான் பாத்துட்டு இருக்கும்” என, சிலிர்த்து விட்டது செய்தியாளருக்கு.
இளம் காளைகள் போராட்டக் களத்தில் கால் பதித்து விட்டனர். மேலும் ரேக்ளா பந்தயத்திற்கு தடை என்று தீர்ப்பு வந்தால்! தயாராகிக் கொள்ளுங்கள் மற்றுமோர் மாபெரும் எழுச்சிக்கு. செய்திகள் சேகரிப்பது சிங்காநல்லூரில் இருந்து சித்திக்.
அத்தோடு அவரது களப்பணியை முடித்துக் கொண்டார்.
வாசம் வீசும்..!