Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadai 32 1

தேன் துளி 32

 

தன் தோழிகளுக்கு தர வேண்டிய பரிசுப் பொருட்களை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்து , அவர்களுடன் எல்லாம் செல்ஃபி எடுத்துக் கொண்டவள் , உறவினர்கள் அனைவரும் ஓய்வெடுக்க கிளம்புகையில் விக்ரமிற்குரிய பார்சலை கையில் எடுத்துக் கொண்டு , அவனை வீட்டினுள் தேடிப் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

 



Advertisement

ராணி வந்தவர் , “அம்முமா நாளைக்கு பொண்ண ரெடி பண்ணி இங்கயிருந்து அழைச்சிட்டு வரவே இங்க எல்லாருக்கும் நேரம் சரியா இருக்கும் …. அதனால இப்ப நம்ம வீட்டுக்கு வந்துரு மா … நாம அங்கயிருந்து பெண்ணழைக்க வரணும் … அதுவும் நீதான் வர வேண்டி இருக்கும் … வா வந்து சீக்கிரம் தூங்கி எந்திரி ….” என கைப் பிடித்து அழைத்துச் செல்ல ,

 

 

Advertisement

” பெரியம்மா ஒரு நிமிஷம் என்றவள் … “அறையிலிருந்த லதாவிடம் சென்று ,

Advertisement

 

“அத்தை திலீபண்ணா.. ஆதி அத்தான் கிட்ட ஃபோன் பேசணுமாம்.. அவங்க ஃபோன் எடுக்கலயாம்” என , அவரோ…

 

Advertisement

” அவன் கல்யாண பந்தல் கட்டுற இடத்துக்கு போயிட்டானேம்மா … ” என்று மேலும் சொல்லிக் கொண்டேப் போக … மற்றதெல்லாம் அவள் காதில் விழவில்லை … அவன் அங்கு இல்லை என்பதே மனதில் நிற்க , தலையசைத்து விட்டு ராணியுடன் காரில் ஏறியவள் விக்ரமைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக , இரவு பத்தரை என்றாலும் அவனைக் காண ஆவல் கொண்டு,

 

” பெரியம்மா … நாளைக்கு நைட்டே அப்பா ஊருக்குப் போகணும் சொன்னாங்க … நாம கோயிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு போவோமா … ப்ளீஸ் எனக்கு கணபதி பப்பா பார்க்கணும் …”

 

இங்கு வந்ததிலிருந்து அவள் அங்கு செல்வது வாடிக்கையே என்பதால் சிரித்துக் கொண்டே சரி என்றவர் ,

 

“பெரியப்பாவும் அங்க தான் இருப்பார் .. அவரையும் அழைச்சிட்டுப் போவோம்..” அதற்காகத்தானே கேட்டதே … டிரைவரை வண்டியை அங்கு செலுத்த சொல்ல , அதுதான் அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

 

காரில் சென்று இறங்க , அங்கு கல்யாண மேடை போடப்பட்டு , அலங்கார விளக்குகள் , வண்ண மலர்கள் ,பலூன்கள் கொண்டு அலங்கரித்துக் கொண்டு இருந்தனர்.

 

வீட்டு ஆண்கள் அனைவரும் குழுமியிருந்து மேற்பார்வைப் பார்த்துக் கொண்டும் , பேசிக் கொண்டும் இருந்தனர்.

 

இந்நேரம் தங்கள் காரைக் கண்டதும் எழுந்து வந்த சிவனாதன் காரருகே வர ,இறங்கிய மனைவியையும் மகளையும் கண்டு புருவம் சுருக்கியவரிடம் ராணி விவரம் கூற , அவரும் அவர்களுடன் அருகில் இருத்த ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

 

விக்ரம் ‘மாமா’ என்றழைத்து ஏதோ விவரம் கேட்க , யோசித்தவர் அவனை அவர்களோடு அனுப்பி வைத்துவிட்டு உள்ளே சென்று விட்டார். விக்ரம் அத்தையோடு பேசிக் கொண்டு வர , வரு அவனைப் பார்ப்பதும் நடப்பதுமாக இருந்தாள்.

 

அங்கிருந்த அக்கால கல் மண்பத்தைத் தாண்டிச் செல்லும் போது , அதில் அமர்ந்து இருந்தவர்கள் வருவையேப் பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் வேறு யாருமல்ல அன்றைய லாரி விபத்தில் குடிபோதையில் வண்டியோட்டியதற்காக கைது செய்யப்பட்ட இந்தி மட்டுமே பேசத் தெரிந்த அந்த வட மாநிலத்தவர்கள் தான்.

 

அவர்கள் பணி புரிந்தது  இந்திய அளவில் மிகப் பிரபலமான நிறுவனம். எனவே அவர்கள் நிறுவனப் பெயர் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை அரசாங்கத்திடம் இருந்து காப்பாற்றி அவர்களை அவர்கள் ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.

 

அந்த விபத்து விக்ரம் ஊரின் எல்லையில் நடைபெற்றது என்பதாலும் , வாகனத்தின் சேதமடைந்த பாகங்களை சரி செய்ய அங்கிருந்த ஒரு மெக்கானிக்கல் ஷாப்பில் விட்டிருந்தனர் . நாளை அது கிடைத்ததும் ஊருக்கு கிளம்புவதாக இருந்த அந்த நால்வரும் அதுவரை அந்த மண்டபத்தில் தங்கி இருக்க முடிவு செய்து அங்கு அமர்ந்து இருந்தனர்.

 

எனவே அவர்களது பார்வை அழகான இளம் பெண் அவர்களை கடக்கிறாள் என்பதற்காக அல்ல , அன்று நமக்கு மொழிபெயர்த்தவள் என்ற முறையிலயே பார்த்தனர்.

 

விக்ரமும் ராணியும் சற்றுத் தள்ளி நின்றுப் பேசிக் கொண்டிருக்க , வரு மட்டும் தனியாகச் சென்று கணபதியின் முன் நின்று கண்களை மூடிக்கொண்டாள்.

 

“கணபதி பப்பா … விக்கி கிட்ட நான் எப்படியாவது லவ்வச் சொல்லணும் … அவன் என்னையப் புரிஞ்சுக்காம… பேசுறான்.. நான் எப்படியாவது ஊருக்குப் போறதுக்குள்ள சொல்லிடணும்….” இப்படியாக வரு தன் கோரிக்கைகளை கடவுளிடம் வைத்துக் கொண்டிருக்க, அவள் காதில் இருந்த வைரத்தோடுகள் இருளில் ஒளியை சிதறச் செய்துக்கொண்டிருந்தது.

 

கனிப் பாட்டி தாவணி அணிந்த தன் ஒரே பேத்திக்கு இருந்த வைர நகைகளை எல்லாம் பூட்டி அழகுப் பார்த்தார். தோள் வரை மட்டுமே வளர்ந்திருந்த கூந்தலை ஜடை பின்னி பூ வைத்து நெத்திச் சுட்டி , ஒட்டியாணம் ,கை வங்கி என எல்லாமே வைரத்தில் ஜொலிக்க பேரழகியாக நின்றவளை இப்போது அவர்கள் வேறு கண்ணோட்டத்தோடுப் பார்க்க ஆரம்பித்தனர்.

 

அவர்களது காரைப் பார்த்தாலே அவர்களது செல்வநிலை அனைவருக்கும் தெரியுமென்பதால் அவள் அணிந்திருந்த நகைகள் மீது இப்போது அவர்களின் பார்வைப் போனது.

 

விக்ரமோ ராணியுடன் பேசிக் கொண்டு இருந்தான். அவனது பார்வையோ தன் நண்பன் விரும்பும் தன் உறவுப்பெண் என்பதிலயே இருந்தது.

 

இறைவனிடம் கோரிக்கை வைத்துவிட்டு விழி திறந்தவள் அவனை ஏக்கத்தோடுப்பார்த்துக் கொண்டே வந்தாள். அவனிடம் காதல் சொல்லிவிட்டு தன் உறவுகளிடம் சொல்லிவிடும் ஆவலில் இருந்தாள்.

 

சிவனாதன் வந்தவர் அவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். தன் கையில் அந்தப் பரிசுப் பொருளை வைத்துக் கொண்டே இருந்தவளைப் பார்த்த ராணி ,

 

“அம்மு எல்லாருக்கும் நீ கிஃப்ட் கொடுத்ததப் பார்த்தேன்… இது யாருக்கு மா…. ”

 

“அ …. அண்ணிக்கு பெரியம்மா… காலையில கொடுக்க வச்சுருக்கேன்” என்று சமாளித்து விட்டாள். குழந்தைகள் தனக்குப் பிடித்த ஒரு பொருளை எப்போதும் வைத்துக் கொண்டு இருப்பார்களே … அது போல் தான் அந்தக் குமரிப் பெண்ணும் இருந்தாள்.

 

மறுநாளும் அழகாக விடிந்தது , வித்யாப் போல் ,சாரு, அமுதா போல தானும் தாவணிக் கட்டிக் கொள்வதாக தான் இருந்தாள். இவர்கள் அனைவரும் தோழிகளாகக் காரணமே அனைவரும் அப்போதுதான் பள்ளி இறுதி வகுப்பை முடித்தது தான்.

 

ராணியும் “படிக்கிற புள்ள அத்தை , உடம்புவாகு அப்படி இருக்கு … சேலை கட்டுனா நம்ம ஊருல பொண்ணு கேட்டு விட்டா பதில் சொல்ல முடியாதே … ”

 

” இப்பவே கேட்டாச்சு … அதெல்லாம் நான் பார்த்துப் பேசிக்கிறேன் …நீ என் பேத்திக்கு சீலை (சேலை) கட்டி விடு … நீ பொம்பளப் புள்ளயப் பெத்தா தரதுக்கு என் நகைகள் வச்சுருந்தேன் … இப்ப அவ தான் அண்ணன் பொண்டாட்டிக்கு மூணாவது முடிச்சு போடணும்…. என் மக பேத்தி தான் மணமக … எங்கண்ணன் வீட்ல எவ்வளவு நகை நட்டு போடுவாகளோ  எனக்குத் தெரியாது. ஆனா எம் மகன் பேத்திக்கு நான் கொண்டுட்டு வந்ததை விட , என் மகளுக்கு போட்டு அனுப்பனதவிட அதிகமா போட்டுத்தான் அனுப்புவேன்…. மொத்தத்துல இந்த கனிமொழி  பேத்தினு இந்த ஊரேப் பார்க்கத் தெரிய வேண்டாமா ….” அவரிடம் என்னப் பேசினாலும் அவர் முடிவிலிருந்து மாற மாட்டார் என்பதை அறிந்ததால் அவர் தந்த நகைகளை வாங்கி வைத்துக் கொண்டார்.

 

திலீபன் மணமகனாக பட்டு வேட்டி சட்டையில் தயாராகிக் கொண்டிருக்க ,அரவிந்தும் ரெடிமேட் வேட்டியில் தயாராகினான்.ராணி முதல் நாளே வருவிடம் குளித்து தயாராகி இருக்கச் சொன்னதால் , அவர் சொன்னது போல் குளித்து மணப்பெண்ணுக்கு இணையாக தைக்கப்பட்டிருந்த ஜாக்கெட்டையும் , உள்பாவாடையும் அணிந்து முன்புறம் ஒரு துண்டைப் போட்டு அமர்ந்திருந்தவள் விக்ரமிற்கு தர வேண்டிய கிஃப்ட்டை எடுத்து வைத்துக் கொண்டு ராணி வந்து புடவைக் கட்டி விட காத்திருந்தாள்.

 

“விக்கி … இன்னைக்குத் தான் நான் முதன் முதலா சேலைக் கட்டப் போறேன் … அதுவும் நீ செலக்ட் பண்ணினது தான். மற்றபடி அப்பாகிட்ட சொல்லி பாட்டிய கன்வின்ஸ் பண்ணியிருப்பேன் … இன்னைக்கு உன்னையப் பார்த்து காதலச் சொல்லல … என் பேர் அமிர்தவர்ஷினி இல்ல….” என சிரித்துக் கொண்டவள்,

 

“அப்ப என்ன பேருங்கிறீயா… பம்கின்….ம்ம்…. லெட்சுமினே வச்சுக்கோ….” ராணி வந்துக் கதவைத் தட்ட , கூடவே ஒரு இளம்பெண்ணும் வர ,

 

“அம்மு இவங்க பொண்ணுக்கு மேக் அப் போட வந்திருந்தவங்க அசிஸ்டென்ட் , உனக்கு புடவை கட்டிட்டு , தலை சீவிட்டு கிளம்பிடுவாங்க ….” என்றவர் ,

 

“இந்தா மா … நீ சொன்ன துளசியும் மல்லியும் கலந்துக் கட்டினப்பூ … ”

 

அந்தப் பெண் அவளுக்கு அழகாக புடவைக்கட்டி விட்டுக் கிளம்ப , ராணி அவள் தேர்ந்தெடுத்திருந்த பச்சையும் , வெள்ளையும் கலந்த வைர கற்கள் பதித்த ஆபரணங்களை அணிவித்து பூவைச் சூட்டி அழைக்க ,

 

” பெரியம்மா ரொம்ப வெய்ட்டா இருக்கு … எனக்கு நடக்கவே பயமாயிருக்கு …” என அவர் கைப் பிடித்துக் கொண்டே கீழே வந்தாள்.

 

“என்னம்மா பண்ண பாட்டி ஆசைப்படுறாங்களே … தாலிக் கட்டி முடிச்சதும்  நீ வீட்டுக்கு வந்து மாத்திக்கோ … ”

 

விக்ரம் சேலையில் தன்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்பியவள் , “பரவாயில்ல பெரியம்மா…” என்றாள்.

 

ஆண்கள் எல்லாம் தயாராகி வந்திருக்க , பெண்கள் எல்லாம் வருவை ‘ஆ’ என்று தான் பார்த்திருந்தனர்.

 

எப்போதும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தே தன் வேலைகளை நடத்திக் கொள்ளும் கனிப் பாட்டி , மெதுவாக எழுந்து வந்து பேத்திக்கு திருஷ்ட்டி கழித்தவர் ,

 

“மகாலெட்சுமியே தான் ….” என்றார்.

 

சாருவின் அம்மா ராணியின் காதில் , ‘என்னக்கா இது சின்ன புள்ளைக்கு சேலை கட்டி விட்டுருக்கீக… மாசத்துல கணக்கு பண்ணினா சாரு தான் மூத்தவ… அவளையே படிக்கிற புள்ளைய யாராவது பொண்ணுக் கேட்டா .. உங்க கொழுந்தன் அருவாள தூக்கிட்டு வந்துருவாரு…ஆனாலும் அந்த அக்கா போலவே தான் இருக்கா ” என வருவின் தாயை நினைவு கூற , ‘ஆமாம்’ என்பதாக விமர்சனங்கள் எழ ,சாருவும் அமுதாவுமோ அவளருகிலயே வந்து ,

 

“என்னடி சேலைக் கட்டிட்டு நிக்கிற … கல்யாணப் பொண்ணுக்கும் உனக்கும் வித்தியாசமே தெரியாது போல … ” எனவும்,

 

 

“பாட்டிதான் … ” எனச் சிணுங்கினாலும் வெட்கமே அதிகம் தெரிந்தது. மனைவியையே கண்முன் நிறுத்திய மகளின் இந்த தோற்றம் பார்த்த விஸ்வனாதன் கண் கலங்கி நின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!