அத்தியாயம் 3
எந்தன் கண்கள் பேசும்
காதல் மொழியை
உணர்வாயா என்னவளே?!!!
கிளாசுக்கு லேட்டாக வந்ததினால் கிளாசுக்கு செல்ல முடியாமல் வெளியே நிற்க வைத்து விட்டார்களே என்ற கவலை சிறிதும் இல்லாமல் கதை பேசிக் கொண்டிருந்தார்கள் தீபக்கின் நண்பர்கள்.
ஒருவரை மாற்றி ஒருவர் காலை வாரி கலாய்த்துக் கொண்டிருக்க அவர்களுடைய சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
காயத்ரியோ அந்த சூழ்நிலையை ரசிக்க முடியாமல் இருந்தாள். தான் தேவையில்லாமல் தீபக்கை திட்டி விட்டு வந்ததால் அவனுடைய நண்பர்களும் அவளை முறைத்துக் கொண்டு இருந்தார்கள். அதுவே அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது என்றால் தீபக்கின் பாரா முகமும் அவளை கவலை கொள்ளச் செய்தது.
தன் மேல் கோபமாக இருக்கிறானோ என்று எண்ணி தீபக்கை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி. அவள் பார்க்கும் போதே அதை அவன் பார்த்து விட்டதால் “ஐயையோ, பாத்துட்டானே, ஏதாவது நினைச்சிருப்பானோ?”, என்று எண்ணிக் கொண்டு குனிந்து கொண்டாள்.
மீண்டும் அவனை அவள் பார்க்கும் போது அவன் முகத்தை திருப்பிக் கொண்டான். அதில் அவள் முகம் வாடிப் போய் அவனைப் பார்க்க மீண்டும் அவள் பார்வையைக் கண்டதும் அவள் குனிந்து கொண்டாள். இருவருக்கும் இடையே அழகான கண்ணாம்பூச்சி விளையாட்டு அங்கே நடந்து கொண்டிருந்தது.
அந்த பீரியட் முடிவதற்கான பெல் அடித்ததும் வசந்தா மேம் கிளாசி நிறுத்தி விட்டு தன்னுடைய பொருள்களை எல்லாம் எடுத்து கொண்டிருந்தார். வெளியே அரட்டை அடித்துக் கொண்டிருந்த அனைவரும் நல்ல பிள்ளைகள் போல அமைதியாக நின்றார்கள். அப்போது வசந்தா மேம் வெளியே வந்தார்கள்.
அனைவரும் பவ்வியமாக சாரி என்று கோரசாக சொன்னார்கள்.
“இன்னைக்காவது ஒரு பீரியட் தான் வெளிய நிக்க வச்சேன். இனி லேட்டா வந்தா அன்னைக்கு முழுக்க வெளிய நிக்க வச்சிருவேன். அப்புறம் முக்கியமான விஷயம். என்னோட அடுத்த கிளாஸ்க்கு வரும் போது அத்தனை பேரும் ஹெச். ஓ. டியைப் பாத்துட்டு தான் வரணும்”, என்று வசந்தா சொன்னதும் அனைவரும் பே என்று விழித்தார்கள்.
“மேம், இனி இப்படி பண்ண மாட்டோம் சாரி மேம்”, என்றான் தீபக்.
“இல்லை, மேடம்க்கு தெரியட்டும். மேடமை பாத்துட்டு உள்ள வந்தா கிளாஸ்க்குள்ள வரலாம். இல்லைன்னா என்னோட கிளாசை நீங்க அட்டண்ட் பண்ணவே முடியாது”, சொல்லி விட்டு சென்று விட்டார் வசந்தா.
“டேய், என்ன டா இப்படி சொல்றாங்க? நம்ம ஹெச். ஓ. டி எப்படி டைப்புன்னு தெரியலையே. அதுக்குள்ளே அவங்க கிட்ட கெட்ட பேர் வாங்க போறோமா?”, என்று கேட்டான் மதன்.
“அதை விடு. முதல்ல வசந்தா மேம் கிளாஸ் எப்ப டா இருக்கு?”, என்று கேட்டான் தீபக். அவனுடைய நண்பர்கள் தெரியாமல் விழித்தார்கள்.
“உனக்கு தெரியுமா நந்தினி”, என்று தீபக் கேட்டதும் “மதியம் முதல் பீரியட் மேடமோடது தான்”, என்றாள் நந்தினி.
“அப்படியா? அப்ப லன்ச் முடிச்சிட்டு எல்லாரும் சேந்து மேடம் பாத்துட்டு வந்துரலாம். நீங்களும் வந்துருங்க”, என்று நந்தினியை பார்த்து தீபக் சொன்னதும் நந்தினி சரி என்று சொன்னாள்.
“ஏன், இதை இவன் என்கிட்ட கேக்க மாட்டானோ?”, என்று எண்ணிக் கொண்டே கிளாசுக்குள் சென்றாள் காயத்ரி. அவனைத் திட்டியதால் ரொம்ப கோபமா இருக்கானோ என்று எண்ணியவளுக்கு அவன் கோபம் அதிகமாகவே பாதித்தது.
அதன் பின் அனைவரும் உள்ளே சென்று அடுத்த பீரியடை கவனித்தார்கள்.
காலை வேளை கடைசி பீரியட் முடிந்ததும் “டேய் மதன், மேடமை இப்பவே போய் பாத்துறலாம் டா. நாம சாப்பிட்டு போறதுக்குள்ள அவங்க எங்கயவாது போய்ட்டாங்கன்னா வசந்தா மேம் உள்ள விட மாட்டாங்க”, என்றான் தீபக்.
“அதுவும் சரி தான். போய் திட்டு வாங்கிட்டு வந்து தெம்பா லன்ச் சாப்பிடலாம். நான் நம்ம பசங்களை கிளப்புறேன். நீ நந்தினி, காயத்ரி ரெண்டு பேரையும் கூப்பிடு டா”, என்று மதன் சொல்லியதும் தன்னால் தீபக்கின் பார்வை அவர்கள் பக்கம் சென்றது.
எதற்கோ திரும்பி பார்த்த காயத்ரி தீபக் தன்னையே பார்க்கவும் திகைத்து போய் அவனைப் பார்த்தாள்.
அவனோ அவள் திகைப்பைக் கண்டு கொள்ளாமல் “நந்தினியைக் கூப்பிடு”, என்னும் விதமாய் சைகையில் காயத்ரியிடம் சொன்னான்.
“அவ கிட்ட என்ன பேச போறான்?”, என்று குழம்பிய காயத்ரி “நந்து, உன்னை தீபக் கூப்பிடுறான் டி”, என்றாள்.
“என்னையா, என்னை எதுக்கு?”, என்று கேட்டுக் கொண்டே திரும்பி பார்த்த நந்தினி “என்ன?”, என்று கை ஆட்டிக் கேட்டாள்.
“இப்பவே ஹெச். ஓ. டி பாக்கலாம். நாங்க கிளம்புறோம். நீங்களும் வாங்க”, என்று அவளிடமும் அவன் சைகையில் பேச அவனுக்கு சரி என்றவள் “காயு, இப்பவே ஹெச். ஓ. டி யைப் பாக்க கூப்பிடுறாங்க. போயிட்டு வந்து சாப்பிடலாம்”, என்றாள்.
“சரி டி”, என்று எழுந்து அவளுடன் நடந்த காயத்ரிக்கு “இதை அவன் என் கிட்டயே சொல்லிருக்கலாமே? எதுக்கு என்னை நந்துவை கூப்பிட வச்சு அவ கிட்ட சொல்லணும்?”, என்ற கேள்வி எழுந்தது
கூடவே “அவன் எப்படி என்கிட்ட சொல்லாம அவ கிட்ட சொல்லலாம்?”, என்ற கோபமும் வந்தது.
அவனுடன் செல்லும் போது அவனை முறைக்கவே செய்தாள். அதைப் தீபக்கும் பார்த்தான் தான். ஆனால் அவன் அவளுடைய கோபத்தை கண்டு கொள்ளாமல் சென்றது அவளுக்கு மேலும் எரிச்சலைத் தான் கொடுத்தது.
கோதுமை நிறத்தில், நல்ல உயரத்தில், ஒல்லியாக இருந்தான் தீபக். அடர்த்தியான தலை முடியை அவன் சிலுப்பிய விதம் அழகாக இருந்தது.
அவனுடைய மேலுதட்டின் மீது லேசாக அரும்பிய மீசை கூட அவனுக்கு தனி அழகைத் தான் கொடுத்தது. கூடவே அத்தனை பேரிலும் அவனை தனித்துக் காட்டியது அவன் அனிநீதிருந்த மூக்கு கண்ணாடி. அந்த கிளாசிலே அவன் மட்டும் தான் கண்ணாடி அணிந்திருந்தான். அவனுடைய முகத்துக்கு அது அழகாக இருந்தது.
கிளாசுக்கு வெளியே நின்று நண்பர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
“வா டி, பசங்க கிளம்பிட்டாங்க. நாமளும் அவங்க கூடவே போயிறலாம்”, என்று அவள் கை பிடித்து அழைத்து சென்றாள் நந்தினி.
அதில் நடப்புக்கு வந்த காயத்ரி “அடியே, என்ன வேளை செஞ்சிட்டு இருக்க? காலேஜுக்கு படிக்க வந்துட்டு இப்படி ஒரு ஆம்பளைப் பையனை சைட் அடிக்கலாமா?”, என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு அவளுடன் நடந்தாள்.
“அழகா இருக்கான், அதான் பாக்கத் தோணுது போல? ஆனா சரியான திமிர் பிடிச்சவனா இருப்பான் போல? வந்த நாள்ல இருந்து என்னைப் பாத்து சிரிச்சது கூட இல்லை. பெரிய இவனாட்டம் முதல் நாளே அத்தை பொண்ணுன்னு வந்து நின்னான். ஆனா அப்புறம் என்னைக் கண்டுக்கவே இல்லை. இன்னைக்கு கூட அவனே கேண்டீன்ல வந்து மாட்டிக்கிட்டான். அவனைக் காப்பாத்த தானே அப்படி பேசினேன். ஆனா அவன் என்னை பொருட்டாவே நினைக்கலை. அந்த அளவுக்கு நான் அவனை என்ன செஞ்சேன்? அவன் தான் என்னை மதிக்கவே மாட்டிக்கானே? ஒரு வேளை அவனை நான் கரெக்ட் பண்ணப் போறேன்னு நினைச்சிருப்பானோ? அதான் ஒதுங்கிப் போறானோ? சே நான் எப்படி எல்லாம் நினைக்கிறேன். இந்த சௌமி காதல், சைட் அடிக்கிறது, கரெக்ட் பண்ணுறதுன்னு பேசி எனக்கும் அப்படியே தோணுது”, என்று எண்ணி அவனிடம் இருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டு நந்தினியுடன் சென்றாள்.
“இனி இவன் பக்கம் திரும்பவே கூடாது”, என்று முடிவெடுத்தாள் காயத்ரி.
ஆனால் அவன் மனதில் இருப்பது அவளுக்கு எப்படித் தெரியுமாம்? அவள் பார்வையின் தாக்கம் அவனுக்குள்ளும் பெரிய பெரிய அலைகளை ஏற்படுத்தி இருந்தது உண்மை தான்.
“இவளை பாத்ததுல இருந்து நான் நானா இல்லாம இருக்கேனே? காலேஜ் வந்த ஒரு வாரம் கூட இவ கிட்ட பேசாம என்னால இருக்க முடியலை. எப்படி மத்த நாளை ஓட்டுறது? கடவுளே இந்த செல்ல ராட்சசி கிட்ட இருந்து இந்த நாலு வருஷமும் என்னைக் காப்பாத்திரு”, என்று வேண்டிக் கொண்டான்.
“மரியா ஜோசப்”, என்ற பெயர்ப் பலகையைத் தாங்கியிருந்த அறைக்கு முன்னே அனைவரும் போய் நின்றார்கள்.
யார் முதலில் அனுமதி கேட்க என்று அனைவருக்கும் தயக்கம் வந்தது.
“டேய் தீபக் நீ முதல்ல போ டா”, என்றான் தினேஷ்.
“அஸ்க்கு புஸ்க்கு, முதல் நாளே அந்த மேடம் எனக்கு ஆப்படிக்கவா?”, என்று கழண்டு கொண்டான்.
“விக்னேஷ், நிர்மல் நீங்களாவது முதல்ல போங்களேன் டா”, என்றான் மதன்.
“நாங்க மாட்டோம் பா. வேணும்னா நீ போ”, என்றான் நிர்மல்.
“சரியான பயந்தாங்கொள்ளிங்க. நானே போறேன்”, என்று கதவைத் திறந்து “எக்ஸ்கியூஸ் மீ மேடம்”, என்று கேட்டான் மதன். அவன் தைரியத்தை வியப்பாக பார்த்தாள் நந்தினி.
அப்போது தான் டிபன் கேரியரை ஓப்பன் செய்த மரியா “வந்துட்டாங்களா, நிம்மதியா ஒரு சாப்பாட்டை சாப்பிட முடியுதா? இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ?”, என்று எண்ணிக் கொண்டு “யெஸ் கமின்”, என்று குரல் கொடுத்த படியே கேரியரை மூடி வைத்தாள்.
மதன் உள்ளே செல்ல அவனுக்கு பின்னே மொத்த படையும் சென்றது. மரியா கேரியலை மூடி வைத்ததை முதலில் பார்த்த தீபக் “சாரி மேம், இப்ப போல டிஸ்டர்ப் பண்ணிட்டோம். நீங்க சாப்பிடுங்க. நாங்க அப்புறம் வரோம்”, என்றான்.
அனைவரும் அப்போது தான் அதைக் கவனித்து வெளியே செல்லப் போக “பரவால்லப்பா, நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன். என்ன விஷயமா என்னைப் பாக்க வந்தீங்க?”, என்று தீபக்கைப் பார்த்துக் கேட்டார் மரியா.
காட்டன் புடவையும், தூக்கி போட்டிருந்த கொண்டையுமாக கம்பீரமாக இருந்தார் மரியா. அதுவும் அவர் முகத்தில் இருந்த புன்னகை அனைவருக்கும் இது வரை இருந்த பயத்தை விரட்டியது.
“மேடம் சூப்பரா இருக்காங்கல்ல?”, என்று பக்கத்தில் இருந்த தினேஷிடம் கிசுகிசுத்தான் மதன்.
அவன் பேசியது அவனுக்கு மறுபுறம் நின்ற நந்தினி காதில் தெளிவாக விழுந்தது. அவன் கையை நறுக்கென்று கிள்ளி வைத்தவள் தன்னுடைய வாயில் விரலை வைத்து “சும்மா இரு”, என்று சைகை செய்தாள்.
அவள் கிள்ளியதையும் அவள் செய்கையையும் வியப்பாக பார்த்த படி நின்றான் மதன்.
“ஏய் இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பாடா? சும்மா வாயை வச்சிட்டு இரு. அவங்க நம்ம ஹெச்.ஓ.டி”, என்று சொன்ன தினேஷின் வார்த்தைகள் மதன் காதில் கூட ஏற வில்லை. அவன் பார்வை முழுவதும் பக்கத்தில் நின்றிருந்த நந்தினி மேல் தான் இருந்தது.
ஒரு தோழியைப் போல அவள் உரிமையாக செய்த அந்த செய்கை அவனுக்கு பிடித்திருந்தது. ஓரக் கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவளோ மேடம் என்ன சொல்லப் போறாங்களோ என்ற பயத்துடன் இருந்தாள்.
“என்ன பசங்களா அமைதியா இருக்கீங்க? எல்லாரும் ஏதாவது தப்பு பண்ணிட்டீங்களா? கேக்குறதுக்கும் பதிலே இல்லை. பர்ஸ்ட் இயர் தானே எல்லாரும்?”, என்று கேட்டார் மரியா.
அவருடைய புன்னகையான பேச்சு பயத்தை விரட்ட “யெஸ் மேம், பெரிய தப்பு பண்ணலை. ஆனா பண்ணது சின்ன தப்புன்னு நினைக்கிறேன்”, என்று தீபக் தைரியமாக சொன்னதும் மரியா சத்தமாக சிரித்து விட்டார்.