“இவன் என்ன ஹெச். ஓ. டி கிட்ட இப்படி பேசுறான்?”, என்று எண்ணிக் கொண்டு ஆ வென்று அவனைப் பார்த்தாள் காயத்ரி.
“ஹா, ஹா சின்ன தப்பா பெரிய தப்பான்னு நான் தான் சொல்லணும்னு நினைக்கிறேன். நீங்களா முடிவு பண்ணா எப்படி? காலைல சாப்பிட்ட ரெண்டு தோசை பத்தலை போல? ரொம்ப பசிக்குது. கொஞ்சம் சீக்கிரம் சொல்றீங்களா?”, என்றார் மரியா.
“வசந்தா மேம் உங்களை பாத்துட்டு வரச் சொன்னாங்க மேம்”
“நீங்க வந்து வந்து பாக்குறதுக்கு நான் என்ன எக்சிபிசனா டா? இந்த வசந்தாவுக்கு வேற வேலையே இல்லை. சின்ன சின்ன விசயத்துட்டு டென்ஷன் ஆகுறதே அவளுக்கு வேலை”, என்று மரியா சொன்னதும் “என்ன அந்த மேமைப் பத்தி இவங்க தப்பா சொல்றாங்க?”, என்று அனைவரும் நினைத்தார்கள்.
அவர்கள் குழப்பத்தை மரியா கண்டு கொண்டாரோ என்னவோ “டேய் பசங்களா, நான் இப்படி பேசினதை அவ கிட்ட வத்தி கித்தி வச்சிராதீங்க? அவங்களும் சீனியர்ஸ் ஸ்டாப் தான். நீங்க அவங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கணும். நானும் வசந்தாவும் குளோஸ் பிரண்ட்ஸ். அதனால அப்படி பேசிப்போம்”
“சே சே கண்டிப்பா நாங்க சொல்ல மாட்டோம் மேம்”, என்று கோரசாக பதில் சொன்னார்கள்.
“சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன். சரி, எதுக்கு என்னை வந்து பாக்க சொன்னா?”
“வசந்தா மேம் கிளாசுக்கு முந்தின பீரியட் தலை வலின்னு கேண்டீன்க்கு டீ குடிக்க போனோம் மேம்”
“அப்படியா? நல்ல விஷயம் தான். சரி ஒட்டு மொத்தமா எல்லாருக்கும் தலை வலி வந்ததா? அப்படி தலை வலி வர வச்ச புரோபஸர் யாரோ?”
“அது… அது வந்து…“
“அட சும்மா சொல்லுப்பா. நானும் அவங்க கிட்ட சொல்ல மாட்டேன். நீங்களும் நானும் ஒரு அக்ரீமன்ட் போட்டுக்கலாம்”, என்று மரியா விளையாட்டாக பேசியதும் அனைவரும் சிரித்தார்கள்.
“ரதி மேம் கிளாஸ் தான் மேம்”, என்றான் தீபக்.
“நினைச்சேன், சரி சரி டீ குடிக்க போனீங்க? அப்புறம் என்ன ஆச்சு?”
“அங்க கூட்டமா இருந்ததுனால அஞ்சு நிமிஷம் லேட்டா வந்தோம். வசந்தா மேம் வெளிய நிக்க வச்சிட்டாங்க. உங்களைப் பாத்துட்டு தான் கிளாஸ்க்கு உள்ள வரணும்னு சொல்லிட்டாங்க. அதான் வந்தோம் மேம்”
“இவ்வளவு தானா? சரி சரி என்னைப் பாத்துட்டேன்னு அவ கிட்ட சொல்லிருங்க. அப்புறம் நான் என்ன சொன்னேன்னு அவ கேட்டா ஒண்ணுமே சொல்லலைன்னு என்னை மாட்டி விட்டுராதீங்கப்பா. உங்களை நல்ல கண்டிச்சேன். திட்டினேன்னு சொல்லணும். என்ன சொல்லனுமோ எக்ஸ்ட்ராவா நீங்களே சொல்லிக்கோங்க”, என்று மரியா சொன்னதும் “மானே தேனே எல்லாம் நாங்களே போட்டுக்குறோம் மேம்”, என்று குரல் கொடுத்தான் நிர்மல்.
“நாட்டி பாய், சரி சரி இதே மாதிரி அடிக்கடி லேட்டா வராதீங்க பசங்களா. ஒரு புரோப்பசர் கிளாஸ் பிடிக்கலைன்னா மென்மையா அவங்க கிட்ட சொல்லுங்க. புரிஞ்சிக்குவாங்க ஓகே வா? அப்புறம் வசந்தா உங்களுக்கு பர்ஸ்ட் இயர் மட்டும் தான் வருவா. அதனால ஒரு வருஷம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. கிளாஸ் எப்படி எடுக்குறா? நீ சொல்லு மா, வந்ததுல இருந்து அமைதியா இருக்க?”, என்று காயத்ரியை பார்த்துக் கேட்டார் மரியா.
திடீரென்று தன்னிடம் கேட்பார் என்று தெரியாமல் ஒரு நொடி திகைத்தவள் “அதெல்லாம் குறை சொல்ல முடியாது மேம். அவங்க கிளாஸ் சூப்பரா இருக்கும். தெளிவா புரியும். அவங்க கிளாஸ் கவனிச்சா நேரடியா எக்ஸாமே எழுதிறலாம்”, என்றாள் காயத்ரி.
“குட், இனி லேட்டா கிளாஸ்க்கு போக மாட்டீங்க தானே?”
“கண்டிப்பா மேம், இனி லேட்டா போக மாட்டோம்”, என்று கோரசாக சொன்னார்கள்.
“காலேஜ் எல்லாம் எப்படி போகுது?”
“அது எங்க போகுது? நாங்க தானே நாளைத் தள்ளிட்டு இருக்கோம்?”, என்று கவுண்டர் கொடுத்தான் மதன். அப்போதும் அவன் கைகளில் கிள்ளி வைத்தாள் நந்தினி. மீண்டும் அவளை வியப்பாக பார்க்க ஆரம்பித்தான் மதன்.
“நல்லா இண்ட்ரஸ்ட்டிங்கா போகுது மேம்”, என்றான் தீபக்.
“அப்படியா? அப்படி இருக்க விட கூடாதே. ஏதாவது செய்யனுமே?”
“மேம்”, என்று அனைவரும் இழுத்தார்கள்.
“இஞ்சினீர்யர்னா சும்மா வா? ரிலாக்சா இருந்தா எப்படி? எப்பவும் டென்சனா இருக்க வேண்டாமா?”
“மேம், உங்களுக்கு எதுக்கு இப்படி ஒரு கொலை வெறி?”, என்று கேட்டான் விக்னேஷ்.
“சும்மா சொன்னேன் டா, இதே மாதிரியே காலேஜ் முடிஞ்சு போற வரைக்கும் ஹேப்பியா இருக்கணும் ஓகே வா? நானும் இன்னும் உங்க கிளாஸ் பசங்களைப் பாக்க வரலை. வரணும்னு நினைப்பேன். அட்மிசன்ல நிறைய வேலையா போச்சு. அதான் வர முடியலை. வரேன் ஒரு நாள். இந்த பேட்ச் பசங்களைப் பாக்கலைன்னா எப்படி?”
“தாராளமா வாங்க மேம். எங்களுக்கு கிளாஸ் எடுக்க வந்தா ரொம்ப ஹேப்பியா இருக்கும்”, என்றான் விக்னேஷ்.
“நல்லா ஓபி அடிக்கலாம்னு பாக்குறீங்களா? அடுத்த வருஷம் தான் உங்களுக்கு கிளாஸ் எடுக்க வருவேன். அப்புறம் பரவால்ல, மத்த ஸ்டாப் எல்லாம் உங்க கிளாசை பாராட்ட தான் செய்யுறாங்க. ரொம்ப நல்ல பிள்ளைங்களா அடக்க ஒடுக்கமா இருக்கீங்கன்னு சொன்னாங்க”
“வந்த கொஞ்ச நாள்ல சேட்டை பண்ணா எப்படி மேம்? அதனால தான் அமைதியா இருக்கோம்”, என்று தீபக் சொன்னதும் “அதானே பாத்தேன். ஆனா உங்க சீனியர்ஸ் அதான் பா செகண்ட் இயர் பசங்க, வந்த முதல் வாரத்துலே பயங்கர சேட்டை. இப்ப வரை அவங்களை அடக்க முடியலை. என்ன சேட்டைப் பண்ணாலும் ஒற்றுமையா இருங்க. படிக்க நேரத்துல படிங்க. ஏதாவது புரோகிராம் வந்தா எஞ்சாய் பண்ணவும் செய்யணும், அதே போல எல்லாத்துலயும் கலந்துக்கவும் செய்யணும். சரி சரி பிரஷர்ஸ் டே பத்தி சீனியர்ஸ் வந்து பேசினாங்களா?”
“நோ மேம்”
“ஓ, என்னோட பெர்மிசன்க்கு தான் வெயிட் பண்ணுவாங்க. சரி நான் அவங்களை வரச் சொல்றேன். பிரஷர்ஸ் டே அன்னைக்கு உங்க கிளாஸ் பசங்களை மீட் பண்ணிக்கிறேன். நல்ல படியா செலிபிரெட் பண்ணுவோம். யாரும் ஆப்சென்ட் ஆக கூடாது. இந்த ஒரு வருஷம் கொஞ்சம் போரிங்கா போற மாதிரி இருக்கும் டா. அடுத்த வருசத்துல இருந்து நம்ம ஜாலியா நம்ம டிபார்ட்மெண்ட் சப்ஜெக்ட் படிக்கலாம் ஓகே வா? அப்புறம் பிரஷர்ஸ் டே அன்னைக்கு உங்க தனித்தன்மையைக் காட்டணும்”
“யெஸ் மேம்”, என்ற கோரஸ் வந்தது.
“ஓகே, இப்ப கிளாஸ்க்கு போங்க. இப்பவே எல்லாரோட பேரைக் கேட்டா மறந்துருவேன். அதனால பிரஷர்ஸ் டேக்கு உங்க திறமையைக் காட்டி நீங்க யாருன்னு எல்லாருக்கும் அடையாளம் காட்டுங்க. ஓகே வா?”
“ஓகே மேம், தேங்க்யூ”, என்று சொல்லி விட்டு வந்தவர்களுக்கு மரியா மேமை நினைத்து அவ்வளவு பூரிப்பாக இருந்தது.
இவ்வளவு ஜாலியாக ஸ்டுடண்ட்ஸ் உடன் பேச முடியுமா என்று வியந்து தான் போனார்கள்.
கிளாசுக்கு வந்து அமர்ந்த பின்னரும் அந்த சந்தோஷம் அவர்கள் முகத்தில் இருந்த்து கொண்டே இருந்தது.
தங்களுக்கான உணவை முடித்து விட்டு அடுத்த பீரியட் ஆரம்பமாகும் போது வசந்தா மேம் உள்ளே வந்தார்.
“போன பீரியட் லேட்டா வந்த பிரகஸ்பதி எல்லாம் எந்திரிங்க”, என்றதும் ஏழு பேரும் எழுந்து நின்றார்கள்.
“ஹெச். ஓ. டி யைப் பாத்தீங்களா?”
“யெஸ் மேம்”, என்று கோரசாக சொன்னார்கள்.
“மேடம் என்ன சொன்னாங்க?”
“பயங்கரமா திட்டினாங்க மேம். இனிமே லேட்டா வந்தா பனிஷ்மெண்ட் தான்னு மிரட்டினாங்க மேம். பிரின்சிபால் கிட்ட சொல்லிக் கொடுத்துருவேன்னு சொன்னாங்க மேம்”, என்றான் தீபக்.
மற்ற அனைவரும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். “மச்சான் இது தான் மானே தேனே எல்லாமா?”, என்று கேட்டான் மதன்.
அவன் காலில் ஒரு மிதி மிதித்து அவனை அமைதி படுத்தினான் நிர்மல்.
“மேடமே பனிஷ் பண்ணுவேன்னு சொல்லிட்டாங்காளா? இனிமே கவனமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஆல் ஆப் யு சிட் டவுன். இனி யாராவது லேட்டா வந்தா அந்த பீரியட்க்கு மட்டும் இல்லை. புல் டே ஆப்சென்ட் தான் போடுவேன். பி கேர்புல்”, என்று சொல்லி பாடம் எடுக்க ஆரம்பித்தார்.
என்ன தான் கோபாக்கார புரபஸராக இருந்தாலும் வசந்தா மேம் பாடம் எடுக்கும் அழகே அழகு தான். மாணவர்களுக்கு தெளிவாக
நடத்துவதில் ஆரம்பித்து பரீட்சை எழுத வசதியாக நோட்ஸ் கொடுக்கும் அவரின் திறமை அபாரம் தான்.
தினேஷும் மதன் போன்ற மாணவர்கள் தமிழ் மீடியம் என்பதால் கொஞ்சம் திணறினாலும் பெரிதாக பயந்து விட வில்லை.
அன்றைய நாள் அப்படியே கழிய அன்று மாலை வீட்டுக்கு சென்ற காயத்ரி நேராக கண்ணாடி முன்னாடி தான் நின்றாள்.
“அக்கா, அம்மா வந்து உன்னை காப்பி எடுத்துக்க சொன்னாங்க?”, என்று ஒரு காப்பி கோப்பையை கையில் வைத்துக் கொண்டே அறைக்குள் வந்தாள்.
“ஏன் எனக்கும் சேத்து நீ எடுத்துட்டு வர வேண்டியது தானே?”, என்ற காயத்ரி கண்ணாடி பார்ப்பதை விடவே இல்லை.
“என்ன ஆச்சு இவளுக்கு?”, என்று எண்ணிக் கொண்டே “இந்தா இதை குடிச்சு தொலை”, என்று சொல்லி தன் கையில் இருந்ததை அவளிடம் கொடுத்து விட்டு அவளுக்கு வேறு எடுக்க சென்றாள்.
சௌமி காபி எடுத்துக் கொண்டு மீண்டும் வரும் போது கூட காயத்ரி கண்ணாடி முன்பு தான் நின்றாள். முதல் முறையாக பத்து நிமிடங்களுக்கு மேல் கண்ணாடி முன்பு நின்ற தன்னுடைய அக்காவை வியப்பாக பார்த்தாள் சௌமி.
அவள் எண்ணத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல் கண்ணாடியில் தெரியும் தன்னுடைய ஆளுயர பிம்பத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
“அக்கா, உனக்கு என்ன தான் ஆச்சு? நானும் அப்ப இருந்து பாக்குறேன். கண்ணாடியவே பாத்துட்டு இருக்க? ரொம்ப நேரம் பாத்தா ஏதாவது மேஜிக் நடக்கும்னு யாராவது சொன்னாங்களா? எனக்கும் சொல்லு. நானும் பாக்குறேன்”
“கிண்டலா பண்ணுற? நானே கடுப்புல இருக்கேன் சௌமி. தூரப் போயிரு”, என்றாள் காயத்ரி.
“அதான் உன் மூஞ்சைப் பாத்தாலே தெரியுதே? எதுக்கு இந்த கடுப்பு? உன்னை யார் என்ன சொன்னா? இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பா வந்துருவாங்க. அதுக்குள்ள முகத்தை சரி செஞ்சிக்கோ. இல்லைன்னா கேள்வியா கேப்பாங்க”
“ஆமாள்ள? சே எல்லாம் அவனால தான்”, என்று சொல்லி தளர்ந்து போய் அமர்ந்த தன்னுடைய அக்காவை வியப்பாக பார்த்தாள் சௌமியா.
காதல் தொடரும்!!!