நடந்ததை சொல்லி முடித்ததும்…பயத்தில் அங்கிருந்த நால்வரையும் பார்க்க , ஆரதியின் கைகள் அடிப்பதையும் மறந்து அந்தரத்தில் நின்றுக்கொண்டிருந்தது . ஆண்கள் மூவரின் கண்ணிலும் கண்ணீர் துளிகள். சில நொடிகள் அமைதியாக இருந்தது அந்த அறை. கை நடுக்கத்தில் மெது மெதுவாக ஆரதிக்கு உடல் தளர ஆரம்பித்தது. அதை கண்டுகொண்ட தினேஷ் கண்ணனிடம் சொல்ல, அவனும் வேகமாக ஆரதியிடம் சென்று பிடித்துக் கொள்ள முயல, அவனை அருகில் நெருங்க விடாமல் தடுத்தவள்.. யாரையும் பார்க்காமல் வேறு அறைக்குள் சென்று விட்டாள். சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் இருந்து அழுகை சத்தம் மட்டுமே தொடர்ந்து கொண்டிருந்தது. ஆரதியின் மனநிலையைப் புரிந்து மூவரும் அவளே வெளியில் வரும்வரை காத்திருந்தனர்.
அரை மணி நேரம் கடந்து இருக்க வெளியில் வந்தவளின் முகத்தில் அழுத தடயமே இல்லாமல் தெளிவாக இருந்தது. சமையலறைக்கு சென்றவள் நால்வருக்கும் சேர்த்து காஃபியோடு வர , புரிந்தது கண்ணனுக்கும் சித்துவிற்க்கும் ஆரதியின் மனதில் சந்திரனுக்கான தண்டனை உதித்து விட்டது என்று.
அவளே சொல்லும் வரை அமைதியாக காத்திருந்த மூவருக்கும் காஃபியை கொடுத்தவள் நேராக சந்திரன் அறைக்குள் சென்று, “காஃபி வேணுமா டீ வேணுமா?”
இவ்வளவு நேரம் இருந்த ஆரதியின் சாயல் முற்றிலும் மாறி புதிய ஆரதியாக தன் முன் நிற்பவளை கண்டு குழம்பிய சந்திரன், திறக்க முடியாமல் இருந்த வாயை வலியோடு திறந்து… “வேணாம்.. எதுவும். நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். என்ன விட்டுருங்க.”
“காஃபி வேணுமா டீ வேணுமா?” மீண்டும் அதே கேள்வியை கேட்க இருந்த குழப்பம் மேலும் அதிகமாகி பின் நின்றிருக்கும் மூவரையும் காண,
கண்ணனும் சித்துவும் சிரித்தபடி ஒருசேர, “அவ கேக்குறதுக்கு பதிலை மட்டும் சொல்லு. இல்லன்னா நீ உயிரோட இருக்குறதே சந்தேகம். ஏதோ பிளான் பண்ணி தான் வந்து இருக்கா. பார்த்து ஜாக்கிரதையா இரு.” இவர்கள் சொல்வதை வைத்து தினேஷும் ஓரளவு ஊகித்துக் கொள்ள அமைதியாக நின்றிருந்தான்.
அண்ணன் தம்பி இருவரின் வார்த்தையிலும் உள்ளுக்குள் அனல் அடிக்க, “டீ போதும் மேடம்.”
அமைதியாக தன் கையிலிருக்கும் காஃபியை குடித்துக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தவள் சந்திரன் கேட்டபடி சுவையான டீயை கொண்டு வந்தாள்.
“இந்தா வாங்கி குடி.”
அதை வாங்காமல் சந்தேகமாக பார்க்க, “பயப்படாத.. என்னோட செயல் எல்லாமே நேர்மையா தான் இருக்கும். உனக்கே தெரியாம உன்னை எதுவும் பண்ண மாட்டேன். எதுவா இருந்தாலும் சொல்லிட்டு தான் செய்வேன். இதுல எதையும் கலக்கல தைரியமா வாங்கி குடி. கொஞ்சம் தெம்பு வேணும் ல எங்க கிட்ட பேச.” என்றவள் மீண்டும் டீ அவன் முன் நீட்ட,
அதை சந்திரனும் வாங்க கையை உயர்த்த, அந்த நேரம் கையில் இருந்த டீயை அவன் முகத்தில் ஊற்றினாள் ஆரதி.
இதை எதிர்பார்க்காத சந்திரன் அலரி சேரில் இருந்து எழுந்து நிற்கமுடியாமல் துடித்து நிற்க,
“நம்பி வாங்க வந்த… ஒரு கப் டீயே உனக்கு எதிரா நின்னா எப்படி துடிக்கிற. உயிர்… அதுவும் இரண்டு உயிர் உன்னை மட்டுமே நம்பி வந்த அந்த பொண்ண இந்த அளவுக்கு சிதைக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு. தெரியாம பண்ணியா? எது தெரியாம பண்ண… ? இனி உனக்கு நடக்கப்போறது எல்லாமே தெரிஞ்சி தான் நடக்கும். ஒழுங்கா நான் சொல்றபடி செஞ்சுடு. இல்லனா உனக்கான சாவு அனிதா சாவை விட கொடுமையா இருக்கும்.”என்றவள் சாவகாசமாக மீண்டும் கையில் இருக்கும் காஃபியை குடித்துக்கொண்டே அறையைவிட்டு வெளியில் சென்றாள்.
“இவனுக்கு நேர்மையா தண்டனை வாங்கித்தர எனக்கு விருப்பமில்லை. இவனுக்குக்கான தண்டனையை இவனை தேடிக்கனும். நம்ம தேட வைக்கனும்.”
“முடியாது ரதி. சட்டப்படி என்ன பண்ணணுமோ அதை பண்ண நான் துணை நிற்கிறேன். இவன வெளி உலகத்துக்கு காட்டுனா… கிடைச்ச தண்டனையைப் பார்த்து இனி வரவங்க பயப்படுவாங்க.”
“ஆதி சொல்றது சரி கண்ணா. இவன என்ன பண்ண முடியும். சட்டத்துக்கு முன்னாடி மாதிரி ஆயிரம் பேர் நிற்கிறாங்க. கோர்ட்ல ஒப்படைக்கிற வரைக்கும் தான் உன்னோட விசாரணை கூட நடக்கும். அதுக்கப்புறம் வர நீதியை பொருத்து தான் எல்லாமே. தப்பு பண்ணவன்னு தெரிஞ்சும் அவனுக்கு சப்போர்ட் பண்ண ஆயிரம் பேர் கூட இருப்பாங்க. அதிலும் அவனுக்காக வாதாட நிச்சயமா ஒரு வக்கீல் வருவான். இந்த கேஸ் கிட்டத்தட்ட பத்து வருஷமாது நடக்கும். எல்லா ஆதாரங்களும் இருந்தாலும், மீடியா, மக்கள் னு என்னதான் போராட்டம் நடத்தினாலும் எந்த தீர்ப்பும் சீக்கிரமா கிடைச்சதில்லை. இவன சட்டத்துக்கு முன்னாடி நிறுத்த எனக்கும் விருப்பமில்லை. கொஞ்சம் யோசிச்சு பாரு கண்ணா. இதுவே நம்ம கூட பொறந்த ஒரு பொண்ணா இருந்தா நீ போலீஸ்காரனா பேசுவியா. “
“நீ சொல்றது எல்லாமே புரியுது சித்து. எனக்கும் இவன் உயிர் வாழ்றதுல விருப்பமில்லை. ஆனா ஒரு போலீஸ்காரனா என்னை யோசிச்சு பாரு. இத்தனை வருஷம் செஞ்ச வேலைக்கு எதிரா என்னால எப்படி செய்யமுடியும். முதல் முதல்ல அந்த உறுப்பை தொடும்போது எனக்குள்ள ஏற்பட்ட நடுக்கம் இப்ப நினைச்சாலும் உணர முடியுது. ராத்திரி முழுக்க தூங்காம அந்த பொண்ணு உடம்ப தேடி கண்டு பிடிக்கிற வரைக்கும் மனசு முழுக்க பதட்டம் மட்டும்தான் இருந்துச்சு. அந்த ரிப்போர்ட் படித்ததும் நான் எதுக்காக ஆணா பிறந்தெனேன்னு வெட்கப்பட்டேன். அப்படி இருக்க நானே இவன் சுகமா வாழ்றதை விரும்புவானா. அதுவுமில்லாம இதுல நிறைய சட்ட சிக்கல் வரும். என்னோட ரதி இதுல சம்பந்தப்பட்ட இருக்கா. அவளையும் மனசுல வச்சுத்தான் சொல்றேன்.”
“சட்டப்படி தான் எல்லாமே நடக்கும் ஆழி. நான்தான் சொன்னேனே.. அவனுக்கான தண்டனை அவனை கொடுப்பான். அதுல நம்ம யாரோட பங்கும் இருக்காது. அதை பண்றதுக்கான ஒரு தூண்டுகோல் மட்டும் தான் நம்ம. ப்ளீஸ் இந்த ஒரு தடவை எனக்காக உன்னோட நேர்மையை விட்டுக்கொடு. அனிதா இடத்துல நான் இருந்திருந்தா நீ இவ்ளோ பொறுமையா இருந்திருப்பியா ஆழி!.”
“ஸ்டாப் இட் ரதி. நீ மட்டும் இல்ல எந்த பெண்ணா இருந்தாலும் ஒரு ஆணா எனக்கு ஏற்பட்ட நடுக்கம் பதட்டம் அது எல்லாமே ஒன்னா தான் இருக்கும். இந்த இடத்துல நீ இருந்திருந்தா இந்நேரம் நான் போலீஸ் காரனா இருந்திருக்க மாட்டேன். இத்தனை நாள் உன்னை விட்டும் இருக்க மாட்டேன். எதையாது பேசணும்னு பேசாத. ரொம்ப நேரம் நான் பொறுமையா இருக்க மாட்டேன். முட்டாள்தனமா பேசாம விஷயம் என்னன்னு சொல்லு. “
ஆரதி தன் திட்டங்களை மூவரிடமும் சொல்ல… சரியான தண்டனையாக பட்டது. இதில் கண்ணனுக்கும் உடன்பாடு வர நால்வரும் சேர்ந்து இருவரையும் தண்டிக்கும் நாளை நோக்கி புறப்பட்டனர்.
சந்திரனை தினேஷ் வசம் ஒப்படைத்த கண்ணன் நேராகச் சென்றது மைக்கேல் இருக்கும் இடத்திற்கு தான். தனிப்படை காவல் அதிகாரிகளிடம் அனிதா சம்பந்தமாக பேச அவர்களும் போலீஸ்காரராக இல்லாமல் சக ஆணாய், கணவன்மார்களாய், மகனாய், சிலர் தந்தையாய், சிலர் எதிர்கால தந்தையாய் கண்ணனின் திட்டத்திற்கு முழு மனதுடன் சம்மதிக்க விசாரணை எனக்கூறி மைக்கேல் தன் மகன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அன்று போல் இன்றும் தன்னை பயமுறுத்த அழைத்துச் செல்கிறார்கள் என்று தானே மனதில் நினைத்துக் கொண்ட மைக்கேல் பயமின்றி சாதாரணமாக வர, அதைக்கண்ட தனிப்படை அதிகாரிகள் மனதில் ‘இன்னும் சில நாட்களே உன் வாழ்வு’ என எண்ணிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
காலம் போல் இல்லாமல் மிக வேகமாக நான்கு சக்கர வாகனம் சுழன்று தினேஷின் வீட்டு முன்பு நிற்க, அழகாக ஆறு படை வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்டான் மைக்கேல். உள்ளே சென்றதும் ஆடை ஏதுமின்றி உடலில் ரத்த காயங்களோடு யாரோ ஒருவன் குப்புற விழுந்து கிடக்க அதை கண்ட மைக்கேல் சந்தேகமாக பின் நின்றிருக்கும் அதிகாரிகளை பார்த்தான். அதை கண்ட கண்ணன், “எல்லாம் உங்களுக்கு வேண்டப்பட்ட ஆள்தான். கிட்ட போய் பாருங்க.”என தள்ளிவிட மெதுவாய் நடந்து சென்ற மைக்கேல் சில அடிகளில் தெரிந்து கொண்டான் தன் மகன் என்று. பதட்டத்தோடு மகனை மடியில் வைத்து சில உரையாடல்களை நடத்த அதை கண்டவர்களுக்கு ஆனந்தமாக இருந்தது.
“போதும் போதும் உங்க பாச மழை. எங்களுக்கு ரொம்ப நேரம் இல்லை. கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க.” ஆரதி.
“எதுக்காக என் பையன இப்படி அடிச்சி இருக்கீங்க. என் பையன் என்ன தப்பு பண்ணான். நீங்க தேவையில்லாம பண்ணிட்டு இருக்கீங்க… இதை நான் சும்மா விடமாட்டேன். என் பையன் வேலை பார்க்கிறது எம்எல்ஏ கிட்ட தெரியுமா. உங்கள என்ன பண்ணப் போறேன்னு பாருங்க.”வீரமாக வசனம் பேச கண்ணனின் கவனிப்பில் மகனுக்குத் துணையாக ரத்த காயங்களோடு கிடந்தான் மைக்கேல்.
“இத்தனை நாள் விசாரிச்சும் சாமர்த்தியமா அனிதாவை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல. அந்த அளவுக்கு அழுத்தம் மனசுல. நீ அப்பவே சொல்லியிருந்தா உன் பையனுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. யாருடா அந்த எம்எல்ஏ.. அவனையும் தூக்கி உங்க கூட உட்கார வைப்பேன். மூடிக்கிட்டு நாங்க கேக்கறதுக்கு பதில் சொல்லு.”என்றவன் ஆரதியைப் பார்க்க,
“அனிதாவை கொலை செஞ்சது அப்புறம் நடந்தத சொல்லு. முழுசா எதையும் மறைக்காம சொல்லு.” இனியும் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று உணர்ந்துகொண்ட மைக்கேல்,
“அதுக்கப்புறம் நானும் என் மகனும் அங்கு இருந்து வீட்டுக்கு வந்துட்டோம். ஒரு பக்கம் ராபர்ட்டை போலீஸ் தேடிக் கிட்டு இருந்தாங்க. நானும் மணிகண்டன் சார் மூலமா என்னோட தேவையை நிறைவேற்றிக் கிட்டு இருந்தேன். எனக்கு தெரிஞ்ச எம்எல்ஏ கிட்ட ஒரு பாதுகாப்புக்காக என் பையன வேலைக்கு சேர்த்து விட்டேன். இதுக்கு நடுவுல தான் ராபர்ட்டை கொல்ல வேண்டிய சூழ்நிலை. ஏற்கனவே ஜட்ஜ் கொலையில நான் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அனிதாவை கொலை பண்ணி இரண்டு மாசம் கடந்தும் யாரும் கண்டுபிடிக்கல. அந்த தைரியத்துல தான் ராபர்ட்டை கொல்ல முடிவு பண்ணேன். அதுக்கு உதவியா என் பையன கூப்பிட்டேன். அவன் வர முடியாதுன்னு சொல்லிட்டான். அதுல ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வர ஆரம்பிச்சது. ஒருத்தர் செஞ்ச தப்ப இன்னொருத்தர் போலீஸ் கிட்ட மாட்டி விடுறதா பேசிக்கிட்டோம். இதுனால ரெண்டு பேருக்கும் பிரச்சனை னு… என் பையன் கிட்ட பேசுறதையே விட்டுட்டேன். ராபர்ட்டை கொலை பண்ணிட்டு அங்க இருந்து தப்பிச்சு போனதும் சந்திரன் கிட்ட நிறைய தடவை உதவி கேட்டு இருக்க. ஒரு தடவை கூட அவன் பண்ணல.”
“நீ எதுக்குடா உன் அப்பனுக்கு உதவி பண்ணல. எவ்ளோ பெரிய தப்பை உனக்காக பண்ணி இருக்காரு மனசாட்சி இல்ல.” என்று ஒரு அடி வைக்க,
“சார் ஏதோ நான் தப்பு பண்ணிட்டேன் அதனால அனிதாவை கொலை பண்ண வேண்டியதா போச்சு. இதான் சாக்குன்னு என்னோட அப்பா தொடர்ந்து கொலை பண்ண என்ன யூஸ் பண்ணிக்க பார்த்தாரு. அதான் அவர்கிட்ட இருந்து விலகிட்டேன். இப்ப கூட என் அம்மா அழுதாங்க அதுக்காக தான் இவருக்கு உதவி செய்யலாம்னு வந்தேன். அதான் நான் பண்ண தப்பு.”
“ஓஹோ இவ்வளவு நடந்தும்… இன்னும் நீங்க பண்ண உண்மையான தப்பு உங்களுக்கு புரியல. தானா வந்து மாட்டிக்கிட்டோம் ‘னு பீல் பண்றீங்க… அதான சந்திர தாஸ் சார் .” எனக்கேட்டு சித்து அவனை ஓங்கி மிதிக்க வலியில் மீண்டும் சுருண்டு படுத்துவிட்டான்.